கட்டுரைகள்

ஆபாச படம் பார்ப்பதை எதிர்த்து போராடுதல்
ஆசிரியர்: Dr. ஓவன் ஸ்ட்ரசன்
தமிழாக்கம்: தாமஸ் எடிசன்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

இன்றைய வாழ்வின் நிதர்சனமான உண்மைகளில் ஒன்று: நாம் பாலியல் மயம் (Sexualized culture) சூழ்ந்ததொரு கலாச்சாரத்தில் வாழ்கிறோம். ஆண்களாகிய நாம் இதைத் தெளிவாக உணர்கிறோம். சராசரியாக, பெண்களை விட ஆண்களாகிய நமக்கு வலுவான பாலியல் உந்துதல் (Sex drive) உண்டு. மேலும், நாம் காட்சிகளால் அதிகம் ஈர்க்கப்படுபவர்களாக இருக்கிறோம். இன்றைய சூழலில், வெட்கக்கேடான பாலுணர்வைத் தூண்டி, அதில் ஆதாயம் தேடுபவர்களுக்கு இது சாதகமாக அமைந்துள்ளது. நாமும் சில வேளைகளில் இதற்குத் தொடர்புடையவர்களாகி விடுகிறோம். நீங்கள் வெளியே கடைகளுக்குச் செல்லும்போதோ அல்லது உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லும்போதோ, ஒவ்வொரு திருப்பத்திலும் ஒழுக்கக்கேட்டை எதிர்கொள்வது உண்மையே. உங்கள் அலைபேசியையோ அல்லது தொலைக்காட்சியையோ திறக்கும் ஒவ்வொரு முறையும் பாலுறவு சார்ந்த காட்சிகள் கடந்து போவதை நாம் காண்கிறோம்.

ஆனால் ஆபாசப் படங்களைக் (Pornography) கருத்தில் கொள்ளும்போது இது இன்னும் அச்சுறுத்தும் உண்மையாக இருக்கிறது. ஆபாசப் படங்கள் நம் கலாச்சாரத்திலும், அன்றாட அனுபவத்திலும் ஊடுருவிவிட்டன. நாம் ஓர் "ஆபாச கலாச்சாரத்தில்" வாழ்கிறோம் என்று கூறுவது மிகையல்ல. புள்ளிவிவரங்களின்படி, ஒரு மாதத்தில் 50 முதல் 100 சதவிகித ஆண்கள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதில் ஈடுபடுகின்றனர். இதற்குக் காரணம், நான் முன்பே கூறியது போல், நமது டிஜிட்டல் உலகின் எல்லா மூலைகளிலும் ஆபாசம் "ஊடுருவி" உள்ளது. கடந்த காலங்களில், ஆபாசப் படங்களைக் காண நீங்கள் அதைத் தேடிச் செல்ல வேண்டியிருந்தது; ஒரு கடைக்குச் சென்று, அலமாரியில் இருந்து ஒரு கவர்ச்சியான பத்திரிகையை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இக்காலத்திலோ, நீங்கள் இன்ஸ்டாகிராமில் எதையாவது தேடச் சென்றால், ஆபாசமான, கவர்ச்சிகரமான காட்சிகள் உங்களைச் சோதிக்கும்படியாகக் குப்பைகளைப் போல வந்து விழுகின்றன. சொல்லப்போனால், ஆபாசம் இப்போது உங்களைத் தேடி வருகிறது.

நம்மைப் போன்ற இருதயமுடைய மக்கள், இத்தகைய கலாச்சாரத்தை எதிர்த்துப் போராட, முதலில் இந்தப் பிரச்சினையைப் பற்றிச் சரியான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். அந்த நோக்கத்தில், ஆபாசப் படங்களை அணுகுவது குறித்த நான்கு உண்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை உங்களுக்குத் தெளிவை உண்டாக்கும் என்றும், பெரிதும் உதவும் என்றும் நம்புகிறேன்.

முதலாவதாக, நமது கலாச்சாரம் பாலுறவை (Sex) மையமாகக் கொண்டுள்ளது. நமது கலாச்சாரம், 'பாலுறவு நமக்கு முடிவில்லா மகிழ்ச்சியை அளிக்கும்' என்று வாக்குத்தத்தம் பண்ணுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், எது கண்ணுக்கு அழகாகவும், நலமாகவும் தெரிகிறதோ—அதாவது பெண் உடலின் வடிவமைப்பு மற்றும் உடலுறவு—அதுவே நமது வாழ்க்கைக்குப் பிரதானம் என்று போதிக்கிறது. இதைத்தான் ஆபாசமும் கற்பிக்கிறது. இதன் மூலம், வாழ்க்கையின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளிலும் ஒரு பெண்ணை நேசித்து, அவளோடு உடன்படிக்கை செய்வதற்குப் பதிலாக, ஆபாசத்தை நுகரும் ஒரு ஆண், பெண்ணைத் தனது இச்சைகளுக்கான ஒரு பொருளாகத் தனிமைப்படுத்துகிறான். தொழில்நுட்பத்தைத் தனது வடிகாலாகப் பயன்படுத்துவதால், திரையில் வரும் பெண்களைத் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவன் பொருத்திக்கொள்கிறான். அவனுடைய சரீரமும், அவனுடைய இச்சைகளுமே அவனுடைய கடவுளாக மாறுகின்றன. எனவே, அவன் தன் இஷ்டத்தின்படியே அந்தக் கடவுளை வழிபட்டுச் சேவிக்கிறான்.

ஆபாசத்தை ஊக்குவித்து, திருமணத்திற்கு வெளியே உடலுறவை ஒரு பெரிய விஷயமாகக் கொண்டாடும் கலாச்சாரம், உங்களிடம் ஒரு பெரிய பொய்யைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க வேண்டும் என்று தேவன் நினைத்ததற்கு முற்றிலும் மாறான வடிவத்தில், அது உங்களுக்கு மகிழ்ச்சியை விற்கிறது (ஆதியாகமம் 2:18-25).

இரண்டாவதாக, ஒரு பெண் நமது இச்சைகளைத் தீர்க்கும் பாத்திரம் அல்ல (திருமணத்தில் கூட). முதல் உண்மைக்குப் பதில் கூறும் விதமாகச் சிலர், "எனக்கு உண்மையில் ஒரு மனைவி தேவை – ஏனென்றால், நான் விரும்பும் போதெல்லாம் உடலுறவு கொள்ளலாம், அதன் மூலம் என் இச்சைகளை வெல்லலாம்!" என்று நினைக்கலாம். திருமணமான தம்பதிகளுக்குத் தேவன் உடலுறவு (Sex) என்ற ஈவைத் தருகிறார் என்பது உண்மை; அது பெருமைக்குரியது. இது ஒரு சிறிய ஈவு அல்ல, கணவன்-மனைவி இடையேயான உடல் பந்தம் ஒரு அற்புதமான விஷயம். மேலும், நீங்கள் நேசிக்கக்கூடிய, காதலில் திளைக்கக்கூடிய ஒரு மனைவியைப் பெறுவது தேவன் அருளும் துணையும் ஆசீர்வாதமுமாகும் – அதில் எவ்வித அவமானமும் இல்லை.

ஆனால் இங்கே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமணத்தை ஒரு நுகர்வோராக (Consumer) அணுகக்கூடாது. ஆம், கணவனும் மனைவியும் காதல் ரீதியில் ஒன்றாகச் செயல்பட வேண்டும்; ஒரு மனைவி, தான் விரும்புவதை விட அதிகமாகத் தாம்பத்திய உறவில் தன் கணவனுக்காகத் தன்னை ஒப்புக்கொடுக்கிறாள் என்பது உண்மைதான். இது இரு வழிகளிலும் செயல்படுகிறது. உண்மையில், கிறிஸ்தவ திருமணத்தில், நம் சரீரம் நம்முடையதல்ல (1 கொரிந்தியர் 7:1-5). ஆனால், இவ்வழியாய்த் தனது கணவனை ஆசீர்வதிக்க ஒரு மனைவி உறுதியளித்தாலும், அந்தப் பெண் ஒருபோதும் நமது இச்சையைத் தீர்க்கும் பாத்திரம் அல்ல. அவள் உயிருள்ள ஜீவன்; தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்ட ஒரு நபர்; ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக இருந்தால், அவள் தேவனுடைய குமாரத்தியும், கிறிஸ்துவின் உடன் சுதந்திரவாளியுமாய் இருக்கிறாள். அவளை அன்புடனும், மென்மையுடனும், புரிதலுடனும், இரக்கத்துடனும் அணுக வேண்டும். ஆபாசப் படங்கள் உங்கள் மனைவியை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதில்லை. மாறாக, அவளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்றும், அவளை எப்படி இழக்கலாம் என்றும் தான் சொல்லிக்கொடுக்கும்.

மூன்றாவதாக, நீங்கள் காம இச்சையைச் சாகடிக்க வேண்டும், அதை வளர்க்கக்கூடாது. நமது இச்சைகளை மதிக்கும்படி இன்றைய கலாச்சாரம் நம்மைத் தூண்டுகிறது. "நமது வலுவான இயற்கை ஆசைகளே நாம் யார் என்பதைத் தீர்மானிக்கின்றன" என்றும், "உனக்குப் பிடித்ததைச் செய்" என்றும் அது கூறுகிறது. ஆனால் இயேசுவானவர் மிகவும் வித்தியாசமான ஒன்றைக் கூறுகிறார்: தேவனுடைய பரிசுத்தத்தின் வெளிச்சத்தில், பாவம் எது என்பதை அடையாளம் கண்டு, பின்னர் அதைக் கொல்ல (Mortify) வேண்டும் என்று சொல்லுகிறார். மத்தேயு 5:29-ல், அவர் இந்தக் கடுமையான வார்த்தைகளை நமக்குத் தருகிறார்: "உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்."

நாம் நமது பாவ இச்சைகளையும் ஆசைகளையும் வளர்த்துக் கொள்ளக்கூடாது என்பதே இதன் பொருள். நம் மனைவியல்லாத ஒருவரிடம் நாம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்பட்டால், அது நம் சிந்தையில் தோன்றினாலும் கூட, அதற்காக நாம் மனந்திரும்பி தேவனிடம் பாவ அறிக்கை செய்து ஒப்புரவாக வேண்டும். நாம் பாலுறவு சம்பந்தப்பட்ட இச்சைகளைச் சாகடிக்க வேண்டும், அதை வளர்க்கக்கூடாது. இந்த நேரத்தில் உங்களுக்கு ஆபாசப் படம் பார்க்கும் பழக்கம் இருக்கலாம்; துரதிர்ஷ்டவசமாக, பல ஆண்கள் இதைச் செய்கிறார்கள். வேதம் உங்களுக்கு உதவ இங்கே உள்ளது, ஆனால் உங்கள் பாலுறவு இச்சைகளை வெறுமனே 'நிர்வகிப்பதற்கு' (Manage) அது உதவாது. ஆபாசத்தைக் கட்டுப்படுத்தும் உத்தி எதுவும் இல்லை; நம்மிடம் அதை அழிக்கும் உத்தி மட்டுமே உள்ளது (கொலோசெயர் 3:1-18). பரிசுத்த ஆவியின் வல்லமையால், நாம் நமது பாவ இச்சைகளை அழித்து, அதினால் விடுதலையைப் பெறுகிறோம்.

மேலும், ஐக்கியத்திலும், ஜெபத்திலும் வலிமை உள்ளது. உங்கள் மனைவியிடமும், உங்கள் நெருங்கிய நண்பர்களிடமும் கணக்கு ஒப்புவிக்கிறவர்களாய் (Accountability) இருப்பது நல்லது. தேவன் நம்மை விசுவாசிகள் என்ற சமுதாயக் கூட்டத்தில் இருக்கும்படியாகவே வடிவமைத்திருக்கிறார். நம் வாழ்வில் உள்ள பாவங்களை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் உதவ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஆபாசப் பழக்கத்தை இரகசியப் பாவமாக இருக்க விடாதீர்கள். அதை எதிர்கொண்டு, அதைக் கொன்று, உங்கள் மனைவி மற்றும் நண்பர்களுக்குக் கணக்குக் கொடுக்கிற பொறுப்பாளியாக இருங்கள்.

நான்காவதாக, மீட்பின் நம்பிக்கை. உங்களுக்கு ஆபாசப் படங்களைப் பார்ப்பதில் பிரச்சனை இருந்தால், நீங்கள் அதன் நச்சுத்தன்மையினால் பாதிக்கப்பட்ட நபராகவே இருக்க வேண்டிய அவசியமில்லை; மாறாக நீங்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, உங்கள் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளலாம். இன்று ஆபாசப் படத்தின் பயன்பாடு மற்றும் அதன் அடிமைத்தனம் பற்றி நாம் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். குறிப்பிட்டுள்ளபடி, நமது டிஜிட்டல் கலாச்சாரத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதால், பாவத்தைத் தூண்டும் ஒரு கருவியை நாம் எப்போதும் சுமந்து செல்கிறோம். இத்தகைய சூழலில், பல ஆண்கள் பெரிய அளவில் காம இச்சையை எதிர்த்துப் போராடுகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், நான் உங்களுக்குச் சொல்லுவது: நீ ஒரு 'நச்சுத்தன்மை கொண்ட' (Toxic) மனிதன் அல்ல, மாறாக, நீ ஒரு 'பாவி'. ஒரு நச்சுத்தன்மையுள்ள மனிதனுக்கு உண்மையான மதிப்பு இல்லை என்று இன்று நம் கலாச்சாரம் பொதுவாக ஆண்களிடம் கூறுகிறது. ஆனால் வேதம் சொல்லுகிறது: ஒரு பாவியான மனிதனும் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டுள்ளான்; அவனுக்கு உண்மையான மதிப்பும் கனமும் இருக்கிறது. ஆனால், அவனுடைய பாவ மன்னிப்புக்குக் கிறிஸ்துவின் இரத்தம் தேவைப்படுகிறது (எபிரேயர் 9:22). நீ கிறிஸ்துவை விசுவாசித்தால், உன்னுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் – தேவனுடைய இரக்கத்தினாலும் கிருபையினாலும் நீ மீட்கப்பட்டுப் புதுப்பிக்கப்படுவாய்.

இப்படியாக, மாற்றப்பட்ட உன் வாழ்வில், ஒரு காலத்தில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்கும், உன் இச்சைகளை நிறைவேற்றுவதற்கும் செலவழித்த நேரம், பலன், கவனம் ஆகியவற்றை நன்மையான காரியங்களுக்கு உபயோகப்படுத்தலாம். நீ திருமணமாகாத நபராக இருந்தால், உன்னுடைய சொந்தச் சபைக்காக நீ உழைக்கலாம்; வேலையில் கடினமாக உழைக்கலாம்; இருளில் வெளிச்சமாக இருக்கலாம். நீ திருமணமானவராக இருந்தால், நீ ஒரு நல்ல, தேவபக்தியுள்ள கணவராக வாழலாம். உன்னுடைய நாட்களை வீணடிப்பதை நிறுத்திவிட்டு, உன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை நேசிக்கவும், அவர்களோடு உன் நேரத்தைச் செலவு செய்யவும் ஆரம்பிக்கலாம். நீ மாம்சத்தால் ஆளப்படுவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாகப் பரிசுத்த ஆவியானவரால் ஆளப்படலாம் (ரோமர் 8:9). இதைத்தான் தேவன் உங்களிடத்தில் விரும்புகிறார்.

முடிவுரை

ஆண்களுக்கு இது கடினமான காலம். ஆனால் நம்மில் பலருக்குச் சவால்கள் நிறைந்த இந்நாட்கள் ஆசீர்வாதங்கள் நிறைந்ததாகவும் மாறக்கூடும். நம்மில் யாரும் பரிபூரணமானவர்கள் அல்ல. நாம் அனைவரும் பல வழிகளில் தடுமாறுகிறோம்; ஒவ்வொரு விசுவாசியும் தன் ஓட்டத்தில் இன்னும் முன்னேறிக்கொண்டிருக்கிறான் (யாக்கோபு 3:2). ஆனால் ஆபாசத்திற்கு எதிரான நல்ல செய்தி இதுதான்: அது கடவுள் அல்ல. அது சர்வ வல்லமை வாய்ந்தது அல்ல. அதை நீ வணங்கி, அதற்கு இணங்கத் தேவையில்லை. தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை நீ பார்க்கும்போதும், பாவம் எவ்வளவு கொடூரமானது என்பதை நீ உணரும்போதும், கிறிஸ்து எவ்வளவாய் மன்னிக்கிறவர் என்பதை நீ அறிந்துகொள்ளும்போதும், நீ மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராக இருப்பாய்.

உங்களுக்கான அடுத்த படி இதுவே: சுயாதீனமாக (சுதந்திரமாக) வாழுங்கள். உங்கள் தொழில்நுட்ப சாதனங்களைப் புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் கையாளுங்கள். உங்கள் இச்சைகளால் உங்களை ஆள விடாதீர்கள்; மாறாக, தேவனுடைய சத்தியத்தாலும், தேவ ஆவியானவராலும் ஆளப்படுங்கள். அனாவசியமாக ஒரு பெண்ணைக் குறித்து டிஜிட்டல் திரையில் (ஸ்மார்ட் போன், டிவி) ஆராய்ச்சி செய்வதை நிறுத்துங்கள்; மாறாக, உங்களுக்கு முன்னால் இருக்கும் உங்கள் சொந்த மனைவியை நேசிக்கத் தொடங்குங்கள்; உங்கள் கால்களை வந்து கட்டிப்பிடிக்கும் உங்கள் சொந்தப் பிள்ளைகளை நேசியுங்கள். இதை முக்கியமாக அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் கடந்த காலத்தில் எத்தகைய பாவம் இருந்தாலும், தேவனுடைய கிருபை அதைவிட வலிமையானது. தேவன், போராடுபவர்களையும், தடுமாற்றம் உள்ளவர்களையும், நம்பிக்கையற்றவர்களையும் எடுத்துக்கொண்டு, அவர்களைத் தன் கிருபையின் பாத்திரங்களாக மாற்ற விரும்புகிறார்.

நாம் பாலுறவு வெறிபிடித்த ஒரு கலாச்சாரத்தில் இருக்கலாம், ஆனால் விசுவாசிகள் அதை விட மிகப் பெரிய ஒன்றின் அங்கத்தினராக உள்ளனர்: அதாவது பரிசுத்த ஆவியானவரால் நிறைந்த கலாச்சாரம். முதலாவது சொல்லப்பட்ட காரியம், மாம்சத்தைத் திருப்திப்படுத்தி அழிவுக்கு வழிவகுக்கிறது; ஆனால் இரண்டாவது, தேவ ஆவியின் மூலம் தேவனால் ஆளப்பட்டு, அவரது மகிமைக்காக வாழச் செய்கிறது.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.