நற்செய்தி

நான் இரட்சிப்படைய வழி என்ன?
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

நீங்கள் பசியாய் இருக்கிறீர்களா? சரீரத்தில் அல்ல, உங்கள் ஆத்துமாவில் ஏதேனும் பசி இருப்பதை உணர்கிறீர்களா? உங்களுக்குள் ஏதோ திருப்தியடையாத ஆழ்ந்த பசி இருக்கிறதா? அப்படியானால், இயேசுவே அதற்கு ஒரே வழி. இயேசு சொன்னார்: "ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்" (யோவான் 6:35).

நீங்கள் குழம்பியிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைக்கான பாதையையும், அர்த்தத்தையும் இன்னும் கண்டுகொள்ளவில்லையா? யாரோ மின்விளக்குகளை அணைத்தது போலவும், 'ஸ்விட்ச்' எங்கே இருக்கிறது என்றே தெரியாமலும் தேடித் தவிக்கிறீர்களா? அப்படியானால், இயேசுவே உங்களைக் காப்பாற்ற (இரட்சிக்க) ஒரே வழி. இயேசு சொன்னார்: "நான் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்" (யோவான் 8:12).

உங்களுடைய வாழ்க்கை பூட்டப்பட்டது போல் உணர்கிறீர்களா? பல கதவுகளைத் தேடி அலைந்தும், அதைத் திறந்து பார்க்கும்போது மறுபக்கம் வெற்றிடமாகவும் (வெறுமையாகவும்), அர்த்தமற்றதாகவும் உள்ளதா? அர்த்தமுள்ள ஒரு வாழ்வுக்கான நுழைவாயிலைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இயேசுவே மீட்புக்கான ஒரே வழி! இயேசு சொன்னார்: "நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான்" (யோவான் 10:9).

உங்களை மற்ற மனிதர்கள் கீழே தள்ளுகிறார்களா? உங்கள் உறவுகள் வெறுமையாக, அதாவது காலியாக உள்ளனவா? உங்களை மற்றவர்கள் பயன்படுத்திவிட்டுத் தூசியைப் போல எறிகிறார்களா? அப்படியானால், இயேசுவே உங்களை விடுவிக்க ஒரே வழி! இயேசு சொன்னார்: "நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கிறான்... நானே நல்ல மேய்ப்பன்... நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்" (யோவான் 10:11,14).

வாழ்க்கைக்குப் பின்னர் என்ன நடக்கும் என உங்களுக்குத் தெரியவில்லையா? கெட்டு அழிந்துபோகிற, நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையை வெறுக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா என்று அதிகமாக யோசிக்கிறீர்களா? நீங்கள் மரித்த பின்பும் (நித்தியமாக) வாழ விரும்புகிறீர்களா? என்றால், அதற்கு இயேசுவே வழி. இயேசு சொன்னார்: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" (யோவான் 11:25-26).

எது வழி? எது சத்தியம்? எது ஜீவன்? இயேசு சொன்னார்: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6).

உங்களுக்கு இருக்கும் பசி ஆத்தும பசி. அந்தப் பசியை ஆற்ற இயேசு கிறிஸ்துவால் மட்டுமே முடியும். அந்த காரிருளை அகற்ற வல்லவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. நிறைவான மற்றும் திருப்தியான வாழ்க்கையின் திறவுகோல் இயேசு ஒருவரே. நீங்கள் தேடும் உற்ற நண்பனும், நல்ல மேய்ப்பனுமாக இயேசு இருப்பார். இப்பூமியிலும், மறுமையிலும் இயேசு உங்களுக்கு வாழ்வாக இருப்பார். இயேசுவே உங்கள் மீட்பர் (இரட்சகர்).

நீங்கள் பசியாக இருப்பதற்குக் காரணம், இருளில் நீங்கள் உங்களைத் தொலைத்துவிட்டீர்கள். நீங்கள் தேவனை மறந்து, அவரை விட்டு விலகிச் சென்றதால், அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்கிறீர்கள். பரிசுத்த வேதம் சொல்கிறது, நாம் எல்லோரும் பாவம் செய்தபடியால், தேவனை இழந்தோம் (பிரசங்கி 7:20; ரோமர் 3:23). உங்கள் இருதயத்தில் காணப்படும் வெற்றிடம், தேவன் உங்கள் வாழ்க்கையில் இல்லாததாலேயே உண்டானது. நம் பாவத்தினிமித்தமாகத் தேவனுடன் இருக்கும் உறவை இழந்தோம். நம் பாவமே, நித்தியமாக இம்மையிலும் மறுமையிலும் தேவனை நாம் இழக்கக் காரணமாகிப் போனது (ரோமர் 6:23; யோவான் 3:36).

இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது? மீட்படைய (இரட்சிப்படைய) இயேசுவே வழி! நம் பாவத்தையெல்லாம் இயேசு தம்முடைய சரீரத்தில் சுமந்து ஏற்றுக்கொண்டார் (2 கொரிந்தியர் 5:21). நாம் மரிக்க வேண்டிய இடத்தில் இயேசு மரித்தார் (ரோமர் 5:8). நாம் அடைய வேண்டிய தண்டனையை அவர் அனுபவித்தார் (ஏசாயா 53:5). மூன்றாம் நாள் நம்முடைய ஆண்டவர் இயேசு பாவத்தையும் மரணத்தையும் ஜெயித்து, உயிர்த்தெழுந்தார் (ரோமர் 6:4-5). இவைகளையெல்லாம் ஏன் செய்தார்? இயேசுவே அதற்கான பதிலைக் கூறினார்: "ஒருவன் தன் சிநேகிதனுக்காக ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவனிடத்திலுமில்லை" (யோவான் 15:13).

இயேசு மரித்தது நாம் வாழ்வடையவே. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்தார், மரித்துப் பின் உயிர்த்தெழுந்தார் என்பதைச் சந்தேகமின்றி நம்பினால், உங்கள் பாவங்கள் அனைத்தும் சுத்தமாகக் கழுவப்பட்டு நீங்கள் புதிதாவீர்கள். பின் உங்கள் ஆத்தும பசி நீங்கியதை உணர்வீர்கள். வெளிச்சம் உதிக்கும். உண்மையான சந்தோஷம் கிடைக்கும். அர்த்தமுள்ள வாழ்வைக் காண்பீர்கள். உங்கள் உற்ற தோழனும், நல்ல மேய்ப்பனுமாக இயேசு உங்கள் வலதுபுறம் இருப்பார். மரணத்தைக் குறித்த பயமில்லாத வாழ்வு கிடைக்கும். இன்று மரித்தாலும், அடுத்த வினாடி இங்கே மூடிய கண் பரலோகில் இயேசுவின் அருகில் திறக்கும் என்ற நிச்சயம் கிடைக்கும்.

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.