வாக்குத்தத்த அட்டைகள்: வேதப்பூர்வமானதா அல்லது நவீன மூடநம்பிக்கையா?
அநேக திருச்சபைகளில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில், பரிசுத்த வேதாகமத்திலுள்ள ஆசீர்வாதமான வசனங்களை மட்டும் சிறிய வண்ணத் துண்டுச் சீட்டுகளில் அச்சடித்து, 'வாக்குத்தத்தங்களாக' கொடுப்பது வழக்கமாகிவிட்டது. "எனக்கு என்ன வாக்குத்தத்தம் வருகிறதோ, அதை தேவன் இந்த ஆண்டிற்கான தீர்க்கதரிசனமாக எனக்குக் கொடுத்திருக்கிறார்" என்பதே இன்றைய நவீன கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
"வருத்தப்படுகிறவர்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும் இந்த ஊழியத்தையும் நீங்கள் விமர்சிக்கிறீர்களா? இது தவறு, அது தவறு என்று சொல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வேலை இல்லையா?" என்று கூறி, இப்பழக்கத்தை வேத வசன வெளிச்சத்தில் ஆராயாமல் நிராகரிக்கும் ஒரு கூட்டமும் உண்டு. ஆனால், இன்று இந்த வாக்குத்தத்த அட்டை முறையை வேத வசனத்தின் அடிப்படையில் நான் அணுக விரும்புகிறேன்.
இவை திருச்சபைக்குள் ஒருவித மூடநம்பிக்கையை நுழைப்பது மட்டுமல்லாமல், தேவனுடைய வார்த்தையை நாம் வாசிக்க வேண்டிய முறைக்கே ஆபத்தை விளைவிக்கின்றன. இதில் உள்ள தவறுகளைப் புரிந்துகொள்ளப் பின்வரும் காரியங்களைப் பகுப்பாய்வு செய்தால், உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனவே, இந்தக் கட்டுரையை நீங்கள் ஜெபத்தோடு ஆராய வேண்டும் என்பதே எங்களின் விண்ணப்பம்.
1) வாக்குத்தத்தங்கள் அட்டைகளினால் அல்ல, கிறிஸ்து இயேசுவுக்குள் அருளப்பட்டவை (2 கொரிந்தியர் 1:20)
பரிசுத்த வேதத்தில் உள்ள அனைத்து வாக்குத்தத்தங்களும் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கே பொருந்தும். ஒருவருக்குக் கிடைக்கும் வாக்குத்தத்த அட்டையினால் வருவதுபோல, அனைவருக்கும் அனைத்து வசனங்களும் பொருந்தாது. வேதத்தின் எல்லா வாக்குத்தத்தங்களும் கிறிஸ்துவுக்குரியதாக இருக்கும்போது, நம் சூழ்நிலைக்கு ஏற்ற வசனத்தை மட்டும் வாக்குத்தத்தமாக எடுத்துக்கொண்டு, ஜெபத்தில் தேவனைச் சார்ந்திருப்பது வேடிக்கையானது.
ஆசீர்வாதம் என்பது வாக்குத்தத்த அட்டைகளில் இல்லை; நாம் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதாலேயே கிடைக்கிறது! அதுவே தேவனுடைய கிருபையின் சிங்காசனத்தை அணுகுவதற்கான தைரியத்தை நமக்குத் தருகிறது. தேவனுக்குக் கீழ்ப்படிவதே ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை. ஆனால், இந்த அடிப்படை உண்மையை வாக்குத்தத்த அட்டைகள் நிராகரிப்பதால், இது தேவனால் அங்கீகரிக்கப்பட்ட முறை அல்ல. "கிறிஸ்து இயேசுவில்" என்ற அடிப்படை காரணத்தை மாற்றி, "வாக்குத்தத்த அட்டை கிடைத்ததால்" என்று ஏமாற்றுவது தேவனின் செயல் அல்ல. இரட்சிப்பின் மூலம் கிடைக்கும் இந்த வாக்குத்தத்த மேன்மையை, வேறு எந்த வழியிலும் கொடுக்கும் அதிகாரத்தை தேவன் யாருக்கும் வழங்கவில்லை.
2) வாக்குத்தத்தங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே
வாக்குத்தத்த அட்டைகளை விநியோகிப்பது என்பது பிள்ளைகளின் அப்பத்தை நாய்க்குட்டிகளுக்கு வீசுவதைப் போன்ற ஒரு தவறான முறையாகும். கிறிஸ்து இயேசுவுக்குள் இல்லாமல், அவருக்குப் புறம்பே உள்ளவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பே உண்டு (ரோமர் 8:1). அவர்களின் பங்கு தேவனின் கோபமே தவிர, தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தம் அல்ல.
ஆனால், வாக்குத்தத்த அட்டையை வாங்கிக்கொண்டவர்கள் இரட்சிக்கப்படாதவர்களாய் இருந்தால், அவர்களுக்குப் பொருந்தாத அந்த வாக்குத்தத்த அட்டையினால் பொய்யான நிச்சயத்திற்குள் அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை அந்தப் பொய்யான உறுதியால் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியவர்களே அதற்குப் பொறுப்பாவார்கள். உதாரணமாக, இயேசு கிறிஸ்துவைத் தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுலொள்ளாத ஒருவர், "கர்த்தர் உன் பாவங்களை நீக்கிவிட்டார்" என்ற வாக்குத்தத்த அட்டையைப் பெற்றால், அது சுவிசேஷத்திற்கு எப்பேர்ப்பட்ட தடையாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்!
ஒரு பாவியை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்வதுதான் அவருக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய நன்மையாக இருக்கும். அந்தப் பாவிக்குச் சொந்தமில்லாத அல்லது பொருந்தாத வாக்குத்தத்தங்களினால், அவனுக்குள் இருக்கும் இருளை ஒளியாகக் காண்பித்துத் தவறான வழியில் நடத்துவது, நாம் அவனுக்குச் செய்யும் மிகப் பெரிய தீமையாகும்.
"யாருக்கு என்ன வாக்குத்தத்தங்கள் கிடைக்கும் என்பதைத் தேவனே தீர்மானிப்பதால், இரட்சிக்கப்படாதவர்களுக்கு அப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் வராமல் தேவன் பார்த்துக்கொள்வார்" என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். ஆனால், வாக்குத்தத்தங்கள் எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற தேவ வசனத்தை மறைத்து, அனைவருக்கும் இனிப்புகளை வழங்குவதைப் போல வசனங்களைக் கொடுத்துவிட்டு, "தேவனே பார்த்துக்கொள்வார்" என்று நினைப்பது எவ்வளவு முரண்பாடானது என்பதைச் சிந்தியுங்கள்! வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறோம் என்ற போர்வையில் பாவியை ஏமாற்றாதீர்கள்; தேவனுடைய வார்த்தைக்கு அநீதி இழைக்காதீர்கள்.
3) நிபந்தனைக்குட்பட்ட வாக்குத்தத்தங்கள் என்றால் என்ன?
பரிசுத்த வேதத்தில் உள்ள பல வாக்குத்தத்தங்களுக்குச் சில நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுபவர்களுக்கு வெகுமதியாக வழங்கப்படுவதே வாக்குத்தத்தங்கள். அவற்றைப் பற்றித் தெரியாதவர்களுக்கும், அதைப் பற்றிக் கவலைப்படாதவர்களுக்கும் குலுக்கல் சீட்டைப் போல வாக்குத்தத்தங்கள் வழங்கப்படுவது, அது தேவனின் வழிநடத்துதல் இல்லை என்பதற்கு உறுதியான சான்றாகும்.
நிபந்தனைகளை நிறைவேற்றுபவர்களுக்கே வாக்குத்தத்தங்கள் உண்டு. தேவனுடைய நிபந்தனைகளுக்கு முரணான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ஆசீர்வாதமான வாக்குத்தத்த அட்டையைக் கொடுப்பது கேலிக்கூத்தாகும். உதாரணமாக, "பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு..." என்பது உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுகிறவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம். மாறாக, பெற்றோங்களைக் கனம்பண்ணாத ஒருவனுக்கு அப்படிப்பட்ட வாக்குத்தத்த அட்டை கிடைப்பதால் எந்தப் பலனும் இல்லை. அந்த நிபந்தனைக்குக் கீழ்ப்படிகிற எவருக்கும், வாக்குத்தத்த அட்டை இல்லாமலேயே அந்த வாக்குத்தத்தத்தைத் தேவன் அவர்கள் வாழ்வில் நிறைவேற்றுவார். வெறும் வாக்குத்தத்த அட்டையைப் பெற்றுக்கொண்டேன் என்பதால் மட்டுமே ஒருவன் அதற்குத் தகுதியானவன் என்று அர்த்தமல்ல.
4) வாக்குத்தத்தங்கள் "கிளி ஜோதிடம்" அல்ல
கிறிஸ்து இயேசுவுக்குள் நிலைத்திருப்பதன் மூலமும், அந்தந்த நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் நாம் பெற்றுக்கொள்வதே வாக்குத்தத்தங்கள். ஆனால், வரவிருக்கும் புதிய ஆண்டில் தேவன் என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய, கிளி ஜோதிட அட்டைகளாக வேத வசனத்தைப் பயன்படுத்தலாம் என்று நினைப்பது மிகவும் ஆபத்தான யோசனை. தேவனின் முன்குறித்த நோக்கத்திற்குப் புறம்பாக அவருடைய வார்த்தையைப் பயன்படுத்த தேவன் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.
திருமணம், வேலை, அல்லது குழந்தை பாக்கியம் எனப் பல தேவைகளை மனதிற்குள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சிலருக்கு, "கர்த்தர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்" என்ற வாக்குத்தத்த அட்டை வந்தால், அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் நடக்குமென்று நம்புகிறார்கள். அந்த வருடத்தில் அது நிறைவேறவில்லை என்றால், "தேவன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை" என்று கூறும் விசுவாசமற்றவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். வாக்குத்தத்த அட்டைகள் கொடுக்கும் இப்பழக்கம், தேவனுடைய வசனத்தின் மீது விசுவாசத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, அவிசுவாசத்தின் விதைகளை விதைப்பதற்குச் சமம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
5) இது வேத வியாக்கியான விதிகளுக்கு முற்றிலும் எதிரானது
வேத வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை, அதாவது தேவன் சொல்ல வருகின்ற செய்தியை மாற்றி, தொடர்பில்லாத வேறொரு புதிய செய்தியை என் வாழ்க்கைக்குக் கற்பிப்பது, தேவனுடைய வார்த்தைகளுக்குப் புதிய அர்த்தங்களைக் கொடுப்பதாகும். அந்தப் புதிய அர்த்தங்கள் அவருடைய வார்த்தைகள் அல்ல. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தேவன் சொன்ன வார்த்தையின் உட்கருத்து மட்டுமே, உண்மையான தேவனுடைய வார்த்தை. அந்த உட்கருத்திலிருந்து பிறந்த விதிகள்தான் தேவன் நம்முடைய வாழ்க்கைக்குக் காட்டும் சரியான பாதை.
தேவன் இத்தகைய வசன அர்த்தத்தில்தான் பேசுவாரே தவிர, சந்தர்ப்பத்திற்குத் தொடர்பில்லாமல் அவருடைய வசனத்தின் பாதிப் பகுதிகளை வாக்குத்தத்த அட்டைகளாகப் பிரித்து, நம்முடைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப பேசுகிறார் என்று நினைப்பது வேத வார்த்தையின் தன்மையை அழிப்பதாகும். வேத வசனத்தைப் புரிந்துகொள்வதற்கு முறைப்படுத்தப்பட்ட ஒரு ஒழுங்கு உள்ளது என்ற உண்மையை அறியாமலிருக்கிறார்கள் அல்லது தெரிந்தே அதைப் புறக்கணித்துத் தங்கள் திருச்சபைகளை ஆபத்தான பாதையில் வழிநடத்துகிறார்கள்.
முடிவுரை
மேற்சொல்லப்பட்ட விஷயங்களை ஆழமாக ஆராய்ந்து, திருச்சபையைச் சரியான வழிமுறைகளில் நடத்தவும், மூடநம்பிக்கைகளுக்கு வழிவகுக்கும் எந்தப் பழக்கவழக்கங்களுக்கும் ஒத்துழைக்காமல் இருக்கவும் தேவனின் நாமத்தினால் உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
"நாங்கள் தேவனுடைய ஊழியர்கள்" என்று சொல்லிக்கொள்பவர்களும் கூட இந்த வாக்குத்தத்த அட்டை முறைகளைக் கடைப்பிடிப்பதையும், அதை ஊக்குவிப்பதையும் நாம் அறிவோம். அப்படிப்பட்டவர்களால் நிறுவப்பட்ட "பெரிய திருச்சபைகளில்" இந்தப் பழக்கங்கள் இன்றும் தொடர்கின்றன. கிறிஸ்தவ சமூகத்திற்கு முன்பாகத் தங்களை எவ்வளவு மேன்மையானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்களின் பொறுப்பும் பெரிதாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தேவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டிய பயங்கரமான பொறுப்பில் உள்ளனர்.
நாம் வேதத்திற்குப் பொருந்தாத இந்தக் கிளி ஜோதிடத்திற்கு விலகியிருப்போம். முழு வேதப் புத்தகமும் எனக்குரியதாக இருக்கும்போது, வேறு யாரோ ஒரு மனிதன் மூலமாக அச்சடித்த வாக்குத்தத்த அட்டைக்கு நாம் ஏன் அடிமைப்பட்டிருக்க வேண்டும்? கிறிஸ்து இயேசுவில் உள்ள வாக்குத்தத்தங்கள் அனைத்தும் எனக்கு வேண்டும் என்பதையும், நிபந்தனைகளோடு கூடிய வாக்குத்தத்தங்கள் என்னை வேத வசனத்திற்குக் கீழ்ப்படிவதற்குத் தூண்ட வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும். வேத வசனத்தின் உறுதிகளைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கு இதுதான் ஒரே வழி என்பதை மறந்துவிடாதீர்கள்.
அப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களை, அவை தேவனால் கொடுக்கப்பட்ட விதமாகவே கடைப்பிடிப்பதற்குத் தேவன் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென்.