கள்ள உபதேசத்திற்கு பதில்

திரித்துவத்தை நிரூபித்தல்
ஆசிரியர்: G. பிபு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 31 நிமிடங்கள்

திரித்துவக் கோட்பாடு - கேள்விகளும் பதில்களும்

I. திரித்துவக் கோட்பாட்டைக் குறித்த சில கேள்விகளும், பதில்களும்

கேள்வி 1: தேவன் திரித்துவர் (திரியேகர்) என்றால் என்ன? பதில்: தேவன் ஒருவரே என்று வேதம் மிகத் தெளிவாகச் சொல்லுகிறது. அந்த ஒரே தேவனின் பூரண தேவத்துவ நாமங்களையும், குணங்களையும், செய்கைகளையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று வெவ்வேறு ஆட்களைக் (Persons) குறிக்கிறது. 'தேவன் ஒருவரே' என்ற சத்தியத்தைச் சமரசம் செய்யாமல், இந்த மூவரின் பூரண தேவத்துவத்தை ஏற்றுக்கொள்வதே 'திரத்துவக் கோட்பாடு' என்று அழைக்கப்படுகிறது.

தேவன் ஒருவரே! இந்த ஒரு தேவன் மூன்று நபர்களில் இருக்கிறார். மூன்று தனித்தனி தேவர்கள் சேர்ந்து ஒரு நபர் என்பதல்ல; அல்லது மூன்று தனித்தனி நபர்கள் சேர்ந்து ஒரு தேவன் ஆவதும் அல்ல. தேவனை மூன்று பகுதிகளாகப் பிரித்தால், அந்த மூன்றில் ஒவ்வொரு நபரும் ஒரு பகுதி என்றும், அந்த மூவரையும் இணைத்தால் பூரண தேவன் வருவார் என்றும் அர்த்தமல்ல. பிதா பூரண தேவன், குமாரன் பூரண தேவன், பரிசுத்த ஆவியானவரும் பூரண தேவன். ஆனாலும், இவர்கள் மூன்று தேவர்கள் அல்ல, ஒரே தேவன்.

எனவே, பிதாவே குமாரன் என்றும், குமாரனே பரிசுத்த ஆவியானவர் என்றும் பலர் தவறாக எண்ணிக்கொள்கிறார்கள். அதாவது, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பிதாவாகவும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் குமாரனாகவும், தற்போதைய காலத்தில் பரிசுத்த ஆவியானவராகவும், ஒரே நபர் வெவ்வேறு காலகட்டங்களில் வெளிப்படுகிறார் என்று நினைக்கிறார்கள். இந்தத் தவறான எண்ணத்திற்கு வேதத்தில் இடமில்லை. பிதா குமாரன் அல்ல, குமாரன் பரிசுத்த ஆவியானவர் அல்ல, பரிசுத்த ஆவியானவர் பிதா அல்லது குமாரன் அல்ல. பிதா பிதாவாகவும், குமாரன் குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த ஆவியானவராகவும் இருக்கிறார்கள்.

அதனால் தான் இந்த மூவரும் ஒரே நபர் என்று சொல்வதோ, அல்லது மூன்று தேவர்கள் என்று சொல்வதோ, தேவனில் மூன்று பகுதிகள் என்று சொல்வதோ, அல்லது தேவன் வகிக்கும் மூன்று வெவ்வேறு பாத்திரங்கள் என்று சொல்வதோ திரித்துவக் கோட்பாடு என்னும் சத்திய உபதேசம் அல்ல. தேவன் ஒருவரே; அந்த ஒரு தேவன் மூன்று ஆட்களில் (Persons) இருக்கிறார், இதுவே திரித்துவக் கோட்பாடு.

கேள்வி 2: "திரித்துவம்" என்ற வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் இல்லாதபோது, அது எப்படி வேதத்தின் உபதேசமாக இருக்க முடியும்? பதில்: வேதத்தில் உள்ள உபதேசங்களை நம்முடைய சொந்த வார்த்தைகளில் விளக்குவதில் தவறில்லை. இது ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு திருச்சபையிலும் நடக்கிறது. வேத வசனங்களைப் போதிப்பதற்கும், பிரசங்கிப்பதற்கும் அதிகாரத்தைத் தேவனே கொடுத்திருக்கிறார். பிரசங்கிப்பவரின் சில சொந்த வார்த்தைகளைக் கொண்ட பிரசங்கம் தவறல்ல; ஏனெனில் அவைகளின் மூலம் தேவனுடைய வார்த்தையின் அடிப்படை சத்தியங்களே அறிவிக்கப்படுகின்றன.

மேலும், "திரித்துவம்" என்ற வார்த்தையின் மூலமாக ஒரு சத்தியத்தைத் திறம்பட வெளிப்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? அவ்வாறு சொல்லப்படுபவைகளின் கருத்து வேத வசனத்தில் உள்ளதா, இல்லையா என்பதைத்தான் சரிபார்க்க வேண்டும். அதைச் செய்யாமல், அந்த வார்த்தை வேதத்தில் இல்லை என்பதால், அது வேதத்தின் அடிப்படையில் தவறு என்று விமர்சனம் செய்பவர்களின் அறியாமையையே இது காட்டுகிறது.

கேள்வி 3: இந்தத் திரித்துவக் கோட்பாட்டைக் குறித்த விவாதம் நமக்கு ஏன்? பதில்: தேவன் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்ட அறிமுகம் வேதத்தில் உள்ளது. "என்னைத் தவிர வேறு தேவன் உனக்கு இல்லை" என்று நமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைக்கு அர்த்தம் தருவது, தேவன் தன்னைப் பற்றிச் சொன்ன விளக்கம் தான். தேவனைப் பற்றிய நமது விளக்கங்கள் அவருடைய சுய வெளிப்பாட்டிலிருந்து வேறுபட்டால், நாம் ஆராதிப்பது வேதம் வெளிப்படுத்தும் தேவனை அல்ல. நம்முடைய சுய கற்பனையில் நாம் உருவாக்கிக்கொண்ட தேவனை ஆராதிக்கும் ஆபத்திற்கு அது வழிநடத்தும்.

தேவன் திரித்துவர் என்று வேதம் வெளிப்படுத்துகிறது. ஆனால், மற்ற ஏகத்துவக் கோட்பாடுகளைப் போல 'தேவன் ஒரு நபர் மட்டுமே' என்று நம்புவதோ, அல்லது 'தேவன் ஒன்றுக்கு மேற்பட்ட தேவர்கள்' என்று நம்புவதோ, பலதெய்வ வழிபாட்டாளர்களைப் போல 'தேவன் பலர்' என்று நம்புவதோ, அல்லது வேறு ஏதேனும் கோட்பாட்டை தேவனுக்குக் கொடுக்க முயல்வதோ, "உனக்கு வேறு தேவன் இருக்கக்கூடாது" என்ற கட்டளையை மீறுவதாகும். எனவேதான், வேதம் தேவனை எவ்விதமாக வெளிப்படுத்துகிறதோ, அவற்றை ஆராய்ந்து, "திரித்துவம்" என்ற வார்த்தையின் விளக்கம் சரியா, தவறா என்று தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கண்டிப்பாக உள்ளது.

கேள்வி 4: திரித்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்று எல்லா திரித்துவவாதிகளும் சொல்கிறார்கள் அல்லவா? புரிந்துகொள்ள முடியாத ஒன்றுக்கு ஏன் முயற்சி செய்ய வேண்டும்? பதில்: எந்த ஒரு மனிதனும் தேவனை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், 'தேவன் எல்லையற்றவர்' என்பது அவரது பல பண்புகளில் மிக முக்கியமான ஒன்றாகும். எல்லையற்றவர் என்றால், அவர் நம்முடைய கற்பனைக்கும், உணர்வுகளுக்கும், புரிந்து கொள்ளுதலுக்கும் அப்பாற்பட்டவர் என்று பொருள். இருப்பினும், நாம் தேவனை எந்த அளவுக்கு அறிந்துகொள்ள முடியுமோ, அந்த அளவுக்கு தேவன் தன்னை நமக்கு வேதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

தேவனைக்குறித்து முழுமையாகப் புரிந்துகொண்டோம் என்று சொல்பவர்கள் அறியாமையில் உள்ளார்கள். தேவன் தன்னைப் பற்றிய அறிமுகத்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் நாம் புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்குக் கொடுத்திருக்கிறார்; அதற்குள் நம்மைத் தாழ்த்துவது நம்முடைய பொறுப்பு. "திரித்துவம்" என்ற இந்தக் கோட்பாட்டின் ஆய்வில் நாம் செய்வது, தேவனின் முழு இரகசியத்தையும் வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சி அல்ல; மாறாக, தேவனைப் பற்றிய நமது புரிதல் அவருடைய வசனத்தின் அடிப்படையில் சரியானதா என்று சரிபார்த்து, அதையே பின்பற்றுவதற்கான ஒரு முயற்சி மட்டுமே. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இது திரித்துவத்தின் இரகசியத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான பயிற்சி அல்ல, திரித்துவக் கோட்பாடு வேதத்தின்படி சரியா, தவறா என்பதைத் தீர்மானிக்கும் முயற்சியாகும்.

கேள்வி 5: திரித்துவத்தை விசுவாசிக்கவில்லை என்றால் நாம் பரலோகத்திற்குச் செல்ல முடியாதா? பதில்: இது, "புண்ணியங்களைச் செய்தால் பரலோகத்திற்குச் செல்ல முடியுமா?" என்ற கேள்வியைப் போன்றது. இரட்சிப்பு என்பது புண்ணியங்களைச் செய்வதின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாதது போல, சரியான கோட்பாட்டை விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே இரட்சிப்பு இல்லை. ஏனெனில், இரட்சிப்பு என்பது தேவனின் இலவசமான கிருபையால் மட்டுமே என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது (எபேசியர் 2:8,9).

ஆனால், அந்த இலவசமான கிருபை என்னுள் இரட்சிப்பின் பணியைச் செய்துள்ளது என்பதற்கு என்ன ஆதாரம்? நிச்சயமாக இதற்குச் சான்றாக இரண்டு ஆதாரங்களைக் கூறலாம். முதலாவது, தேவன் முன்னதாக ஏற்படுத்திய நற்கிரியைகளின் மீது பிரியமாயிருந்து அவைகளில் நாம் நடப்பது (எபேசியர் 2:10, தீத்து 2:14). இரண்டாவது, தேவன் வெளிப்படுத்திய பூரண சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சத்திய உபதேசத்தைப் பின்பற்றுவதாகும் (யோவான் 8:47, 10:26,27 மற்றும் 1 யோவான் 4:6). புண்ணியங்களைச் செய்வதினால் இரட்சிப்பு இல்லை, ஆனால் இரட்சிக்கப்பட்டவர்கள் அவற்றைச் செய்யாமல் இருப்பதில்லை. அதுபோலவே, திரித்துவக் கோட்பாட்டையோ அல்லது வேறு எந்தச் சத்தியத்தையோ விசுவாசிப்பதின் மூலம் இரட்சிப்பு கிடைப்பதில்லை என்றாலும், அவைகளை வேண்டுமென்றே நிராகரிப்பவர்களும் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.


II. தேவன் திரித்துவராக இருக்கிறார் என்பதற்கு ஆதாரம்

தேவனைப் பற்றி வேதம் போதிக்கும் மூன்று அடிப்படையான சத்தியங்களை ஒரே வார்த்தையில் சுருக்கி அவர் "திரித்துவர்" என்று சொல்கிறோம். எனவே தேவன் திரித்துவர் என்பதை நிரூபிக்க, அந்த மூன்று அடிப்படையான சத்தியங்கள் வேதத்தில் உள்ளன என்பதை நிரூபித்தாலே போதும்.

அவையாவன:

  1. தேவன் ஒருவரே.

  2. தேவனில் பன்முகத்துவம் (Plurality) உள்ளது.

  3. தேவனில் உள்ள பன்முகத்துவம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று நபர்கள் மட்டுமே.

இந்த மூன்று கோட்பாடுகளும் வேத வசனங்கள் போதிக்கும் சத்தியம் என்றால், தேவன் மூன்று நபர்களில் இருக்கும் ஒரே தேவன் என்பது நிரூபணமாகிறது. அதுவே திரித்துவக் கோட்பாட்டின் சாராம்சம். இப்போது இந்த மூன்று கோட்பாடுகளும் வசனத்தில் உள்ளதா இல்லையா என்று பார்ப்போம்.

1) தேவன் ஒருவரே! "யெகோவாவாகிய நானே தேவன், என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்" (யாத்திராகமம் 20:3) என்ற முதல் கட்டளையே தேவன் ஒருவரே என்பதையும், அந்த இடத்தையும் கனத்தையும் வேறு எவருக்கும் கொடுக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இந்தச் சத்தியத்தையே வேதத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

  • "எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை" (ஏசாயா 43:10).

  • "நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிர தேவன் இல்லை" (ஏசாயா 44:6).

  • "என்னைத் தவிர வேறொரு தேவன் உண்டோ? என்னைத் தவிர வேறு புகலிடம் இல்லை. இருப்பதை நான் அறியேன்" (ஏசாயா 44:8).

  • "நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை" (ஏசாயா 46:9).

  • "நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ?" (மல்கியா 2:10).

இது பழைய ஏற்பாட்டில் மட்டும் காணப்படும் கோட்பாடு அல்ல. புதிய ஏற்பாட்டிலும் அதே சத்தியம் மிகத் தெளிவுடன் சொல்லப்படுகிறது:

  • "இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்" (மாற்கு 12:29).

  • "ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிப்பதே நித்திய ஜீவன்" (யோவான் 17:3).

  • "தேவன் ஒருவரே" (ரோமர் 3:30).

  • "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. அவரே கிறிஸ்து இயேசு" (1 தீமோத்தேயு 2:5).

  • "தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லது" (யாக்கோபு 2:19).

எனவே, தேவன் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒருவரே என்ற சத்தியத்திற்கு வேதம் உறுதி கூறுகிறது. இந்தச் சத்தியத்தை மறுக்கும் எந்தவொரு உபதேசமும் வேத வசனத்தின்படியானது அல்ல.

2) தேவனில் பன்முகத்துவம் தேவன் ஒருவரே என்று வேதம் உறுதியாகக் கூறுவது போல், தேவனில் பன்முகத்துவம் இருப்பதாகவும் அதே வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. 'ஒரு நபர் என்றால் அவர் ஒரே ஆளாகத் தான் இருக்க வேண்டும்' என்ற மனித விதிமுறை தேவனுக்குப் பொருந்தாது. தேவனுடைய இருப்பை இந்தப் படைப்பில் உள்ள எதனுடனும் ஒப்பிட முடியாது. அவர் ஒருவரே, ஆனால் மூன்று நபர்களில் இருக்கிறார் என்பதை வேதம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறது. தேவனில் பன்முகத்துவம் உள்ளது என்பதை நிரூபிக்கும் நான்கு சான்றுகளை நாம் கருத்தில் கொள்வோம்:

A) தேவனைக்குறித்துப் பயன்படுத்திய பல வேத வசனங்களில் அவர் பன்முகத் தன்மையோடு இருப்பதை நிரூபிக்கிறது: "இஸ்ரவேலே, கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்" (உபாகமம் 6:4). இங்கு "ஒருவரே" என்ற சொல் "எகாத்" (Echad) என்ற எபிரேய வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "எகாத்" என்ற வார்த்தை பன்மையில் ஒற்றுமையைக் குறிக்கப் பயன்படும் சொல். உதாரணமாக, திருமணத்தில் இணைந்த ஆணும் பெண்ணும் "ஒரே உடல்", அதாவது இருவரும் ஒருவர் என்ற கருத்தை "எகாத்" என்ற வார்த்தை சரியாக விளக்குகிறது. "நாம் அனைவரும் இந்தியர்கள், எனவே நாம் அனைவரும் ஒன்று" என்று சொல்வதைப் போல, இங்கே "ஒன்று" என்ற கருத்தைச் சரியாக வெளிப்படுத்தக்கூடிய எபிரேய வார்த்தை "எகாத்" ஆகும்.

அப்படியில்லாமல், ஒரே ஒரு நபர் அல்லது ஒரு பொருள் இருப்பதைக் குறிப்பிட "யாகித்" (Yachid) என்ற எபிரேய வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே" எனத் தனித்துவம் வாய்ந்தவர் என்று அழைக்க முடிந்தாலும், பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்று பொருள்படும் "எகாத்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதால், தேவன் தனது ஐக்கியத்தைப் பன்முகத்தன்மையில் வெளிப்படுத்த விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. இதுவே தேவனில் பன்முகத்துவம் உள்ளது என்பதற்கு ஆதாரம்.

B) தேவன் தனக்குச் சமமானவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது அவர் பன்முகத் தன்மையோடு உள்ளார் என்பது நிரூபணமாகிறது. தேவன் தனக்குச் சமமானவர்களுடன் தொடர்பு கொண்டாரா? முதலாவது "தேவனுக்குச் சமம்" என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தலாமா? "தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணவில்லை" என கர்த்தரைக் குறித்து பிலிப்பியர் 2:6-ல் எழுதப்பட்டுள்ளது. எனவே, தேவனுக்கு இணையானவர்கள் யாராவது இருந்தால், அவர்களும் தேவனாகத்தான் இருக்க வேண்டும்! தேவன் தனக்குச் சமமானவர்களிடம் பேசிய சில சந்தர்ப்பங்களைக் கவனியுங்கள்:

"நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" (ஆதியாகமம் 1:26). "என் சாயலாகவும் என் ரூபத்தின்படி" என்று சொல்லாமல், "நமது சாயல், நமது ரூபம்" என்கிறார். ஒரு சிலர், இங்கே பயன்படுத்தப்பட்ட "நமது" என்ற வார்த்தைப் பிரயோகம் பன்மை அல்ல, அது மரியாதைக்குரிய வார்த்தை என்றும், அரசர்கள் தங்களைத் தாங்களே மரியாதையுடன் "நாங்கள்" என்று அழைப்பது போல தேவனும் பயன்படுத்துகிறார் என்றும் கருதுகிறார்கள்.

ஆனால், சரியான கண்ணோட்டத்தில் அந்தப் பகுதியை வாசித்துப் பாருங்கள். "நமது சாயலாக" செய்வோம் என்கிறார். தேவன் இந்தச் சிருஷ்டியை உருவாக்குவதற்குத் தன்னோடு கூட வேறொருவரை அழைக்கிறார். படைப்பின் காரியங்கள் தேவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. அதேபோல தேவனைத் தவிர வேறு ஒரு தேவனை வேதம் குறிப்பிடவில்லை. எனவே இது தெய்வீக நபர்களுக்கு இடையிலான உரையாடல்.

தேவன் தேவதூதர்களுடனோ அல்லது உண்டாக்கப்பட்ட படைப்புகளுடனோ இப்படி உரையாடவில்லை. ஏனெனில், சிருஷ்டிகர்த்தர் பிதா மட்டுமல்ல (எபேசியர் 3:9), இயேசு கிறிஸ்துவும் தான் (யோவான் 1:1-3); மேலும் இயேசு கிறிஸ்து மட்டுமல்ல, பரிசுத்த ஆவியானவரும் தான் (ஆதியாகமம் 1:2, யோபு 33:4) என்று வேத வாக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

டாக்டர் ஜான் கில் என்பவர் திரித்துவக் கோட்பாட்டைக் குறித்து எழுதிய தனது புத்தகத்தில் ஒரு முக்கியமான உண்மையை ஆதாரத்துடன் குறிப்பிடுகிறார். "நமது சாயலாகவும்..." (ஆதியாகமம் 1:26) என்ற வசனத்திலிருந்து தேவனில் பன்முகத்துவம் கொண்ட கொள்கை உறுதியாகிறது என்பதை உணர்ந்த யூதர்கள், இதை எதிர்க்கும்படி ஒரு கதையைச் சேர்த்தனர். அந்தக் கதை என்னவென்றால், மோசே இந்த வசனத்தை எழுதுவதை நிறுத்திவிட்டு, "சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே, இப்படி எழுதுவது சத்தியத்தை எதிர்ப்பவர்களுக்குச் சாதகமாக அமையும் அல்லவா?" என மோசே கேட்டாராம். அதற்கு தேவன், "நீ எழுது, இடறுகிறவன் இடறட்டும்" என்று சொன்னாராம். இக்கதை நகைப்பிற்குரியது என்றாலும், இந்த வசனத்தில் பன்மைத்துவ உணர்வு எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதையும், கள்ள உபதேசத்தைப் போதிக்கிறவர்கள் அதைத் தவிர்க்கச் செய்யும் முயற்சிகளையும் இது காட்டுகிறது.

இவ்விதமாக தேவன் தனக்குச் சமமானவர்களுடன் உரையாடிய வேறு சில வேத வசனங்களைப் பார்ப்போம்:

  • ஆதாம் ஏதேன் தோட்டத்தில் நன்மை தீமை அறியத்தக்க பழத்தைப் புசித்த பிறகு தேவன் இவ்விதம் பேசுகிறார்: "மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்" (ஆதியாகமம் 3:22). 'என்னில்' அல்லது 'என்னைப்போல' என்று சொல்லாமல் "நம்மில்" என்று பயன்படுத்தியதைக் கவனியுங்கள்.

  • பாபேல் கோபுரத்தில் பல மொழிகள் உருவாகும் சந்தர்ப்பத்தில் கூட, "நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்" (ஆதியாகமம் 11:7).

எனவே, தேவன் தன்னோடு இணைந்து படைக்கும் தன்மையுடைய மற்றவர்களிடம் பேசும் நிகழ்வுகள், அவர் பன்முகத்தன்மை கொண்டவர் என்பதை நிரூபிக்கின்றன.

C) 'கர்த்தருடைய தூதனானவர்' தோன்றிய சந்தர்ப்பங்களும் தேவனில் பன்முகத்தன்மை இருப்பதை நிரூபிக்கின்றன. பழைய ஏற்பாட்டில் ஒரு நபர் தோன்றுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். தேவனிடமிருந்து செய்திகளைக் கொண்டுவருபவராக அவர் "தேவ தூதனானவர்" என்று அழைக்கப்பட்டார். ஆனால் இந்தத் தூதரின் பெயர் காபிரியேல், மிகாவேல் அல்ல. அவரை அனுப்பிய தேவனின் பெயர் அவருக்கு இருப்பதால், அவர் "யெகோவா" அல்லது "தேவன்" என்றே அழைக்கப்படுவதை நாம் கவனிக்கிறோம்.

  • ஆகார் தன் எஜமானியிடமிருந்து தப்பியபோது "கர்த்தருடைய தூதனானவர்" ஆகாருக்குத் தரிசனமானார் (ஆதியாகமம் 16:7). ஆனால் மோசே இதை எழுதுகையில், "அவள் தன்னை நோக்கிப் பேசின கர்த்தருக்கு: நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்" (ஆதியாகமம் 16:13) என்று குறிப்பிடுகிறார். இங்கு தோன்றிய கர்த்தரின் தூதர் "கர்த்தர்" என்றும் "காண்கிற தேவன்" என்றும் குறிப்பிடப்படுகிறார்.

  • யாக்கோபு ஆசீர்வதிக்கும்போது, "என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்ட தேவனும்... என்னை மீட்ட தூதனுமானவர்" (ஆதியாகமம் 48:15-16) என்று அழைப்பதைப் பார்க்கிறோம்.

  • "கர்த்தருடைய தூதனானவர்" ஒரு முட்செடியின் நடுவிலிருந்து அக்கினிஜூவாலையிலே நின்று மோசேயிடம் பேசினார் (யாத்திராகமம் 3:2). அவரே "ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் (யாத்திராகமம் 3:6). மேலும், "இருக்கிறவராக இருக்கிறேன்" என்றும் மோசேயுடனே சொன்னார் (யாத்திராகமம் 3:14).

கர்த்தர் என்று பெயர் கொண்ட இந்தத் 'தேவ தூதனானவர்' யார்? தேவன் இஸ்ரவேலர்களை எச்சரித்து, "இதோ, வழியில் உன்னைக் காக்க... ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்... என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது" (யாத்திராகமம் 23:20, 21) என்று சொன்னார். இஸ்ரவேலர் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் மன்னிக்க மாட்டார் என்றும் தேவன் கூறினார். அப்போஸ்தலனாகிய பவுல், "அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து... நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக" (1 கொரிந்தியர் 10:9) என்று எழுதுகிறார். ஆகவே, கர்த்தரின் தூதராகவும், தேவனின் பெயரை உடையவராகவும் தொடக்கத்திலிருந்து தோன்றிய இவர் கர்த்தராகிய "இயேசு கிறிஸ்து" என்று வேதம் உறுதிப்படுத்துகிறது. மீகா 5:2-ல் உள்ள தீர்க்கதரிசனமும், "அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது" என்று சாட்சியமளிக்கிறது.

D) ஒரே சந்தர்ப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் "கர்த்தர்" என்றும் "தேவன்" என்றும் அழைக்கப்பட்ட நிகழ்வுகள்:

  • "அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணினார்" (ஆதியாகமம் 19:24). இங்கு பூமியில் நின்ற கர்த்தர், வானத்திலிருக்கிற கர்த்தராலே அக்கினியை ஊற்றினார்.

  • "சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்... என்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஆமோஸ் 4:11).

  • "தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது... ஆதலால் தேவனே, உம்முடைய தேவன்... உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்" (சங்கீதம் 45:6-7). இங்கே அபிஷேகம் செய்தவரும் தேவனே, அபிஷேகம் செய்யப்பட்டவரும் தேவனே.

  • "நான்... யூதாவின் வம்சத்தாருக்கோ இரக்கஞ்செய்வேன்... அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன்" (ஓசியா 1:6).

  • சகரியா 2:10-11 ல், "நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்... அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்."

  • "கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: ...நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்" (சங்கீதம் 110:1).

யோவான் 1:1 சொல்வது போல, "வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." தேவனோடு இருந்த வார்த்தையும் தேவனாக இருக்கும்போது, இரண்டு தனித்தனி நபர்கள் தேவனாக அடையாளம் காணப்படுவதை, தேவனில் பன்முகத்துவம் உள்ளது என்றுதான் புரிந்து கொள்ள முடியும்.

3) தேவனில் உள்ள பன்முகத்துவம் என்பது பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று நபர்களுக்கு மட்டுமே! தேவன் ஒருவரே என்பதையும், இந்த ஒரே தேவனில் பன்முகத்துவம் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளோம். இந்தப் பன்முகத்துவத்தில், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று நபர்களுக்கு மட்டுமே சமமான தேவத்துவப் பெயர்களும், குணங்களும், செய்கைகளும் பொருந்துகிறது என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது.

தேவத்துவ நாமங்கள் இந்த மூன்று நபர்களுக்குச் சமமாகப் பொருந்தும். ஆனால் அதற்காக பிதா என்ற நாமம் குமாரனுக்கும், குமாரன் என்ற நாமம் பரிசுத்த ஆவியானவருக்கும் பொருந்தும் என்பதல்ல. இந்த மூவரையும் வெவ்வேறாகக் காண்பிக்கவே வேதம் இந்தப் பெயர்களைப் பயன்படுத்துகிறது.

A) தேவன்: பிதாவை மட்டுமல்ல (யோவான் 17:3), குமாரனையும் (யோவான் 1:1-14), பரிசுத்த ஆவியானவரையும் (அப்போஸ்தலர் 5:3-4) வேதம் 'தேவன்' என்று அழைக்கிறது. B) கர்த்தர்: பிதா (யாத்திராகமம் 23:20), குமாரன் (ஏசாயா 48:12-16) மற்றும் பரிசுத்த ஆவியானவர் (2 சாமுவேல் 23:2-3, 2 கொரிந்தியர் 3:17) ஆகிய மூவரையும் வேதம் 'கர்த்தர்' என்று அழைக்கிறது. C) சிருஷ்டிகர்த்தர்: பிதா (எபேசியர் 3:9), குமாரன் (யோவான் 1:2-3) மற்றும் பரிசுத்த ஆவியானவர் (யோபு 33:4, சங்கீதம் 33:6) ஆகிய மூவரும் படைப்பாளர்கள். D) இரட்சகர்: பிதாவானவர் (2 தெசலோனிக்கேயர் 2:13), குமாரன் (தீத்து 2:13) மற்றும் பரிசுத்த ஆவியானவர் (தீத்து 3:5) ஆகிய மூவரும் இரட்சிப்பை அருளுகிறார்கள். E) இயேசுவின் ஞானஸ்நானம்: பிதாவின் குரல், குமாரனின் திருமுழுக்கு, ஆவியானவர் புறாவாக இறங்குதல் என மூவரும் செயல்பட்டனர் (மத்தேயு 3:13-17). F) ஞானஸ்நானக் கட்டளை: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற திரியேக நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கத் தேவனே கட்டளையிட்டார் (மத்தேயு 28:19). சிலர் அப்போஸ்தலர் நடபடிகளில் "இயேசுவின் நாமத்தில்" என்று இருப்பதைச் சுட்டிக்காட்டிக் குழப்புகிறார்கள். ஆனால் "இயேசுவின் நாமத்தில்" என்பது இயேசுவின் அதிகாரத்தில் அல்லது அவரை விசுவாசித்து என்று பொருள்படுமே தவிர, மத்தேயு 28:19-ஐ அது ரத்து செய்யாது. G) ஆசீர்வாதம்: அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், பிதாவின் அன்பும், பரிசுத்த ஆவியின் ஐக்கியமும் உண்டாவதாக என்று மூவரையும் சமமாக வைத்து ஆசீர்வதித்தார்கள் (2 கொரிந்தியர் 13:14).

முடிவுரை பரிசுத்த வேதாகமம் நமக்கு வெளிப்படுத்தும் தேவன் மூன்று நபர்களாக இருக்கும் ஒரே ஒரு தேவன். நம்முடைய அறிவுக்கும், தத்துவ ஞானத்துக்கும், தர்க்கங்களுக்கும் எட்டாத தேவன் இவர். திரித்துவக் கோட்பாட்டை விளக்க எந்தவொரு உதாரணமும் (முட்டை, தண்ணீர், சூரியன்) முழுமையானது அல்ல. தண்ணீர் பனிக்கட்டியாகவும், திரவமாகவும், நீராவியாகவும் மாறுவது போல, பிதா குமாரனாக மாறுவதில்லை.

பரிசுத்த திரித்துவத்தை விளக்குவது கடினமானது. ஆனால் வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவன் திரித்துவர் என்பது சத்தியம். வேதம் தெரியப்படுத்தும் இந்த மூவொரு தேவனை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும், அவரே உண்மையான தேவன். வேதத்திற்கு விரோதமாகச் சொல்லப்பட்ட எந்தக் கருத்தும் பொய்யானது. சத்திய தேவனான பரிசுத்த திரித்துவத்தை ஒருவர் நம்பி, முழுமனதுடன் ஆராதிக்க வேண்டும். ஆமென்!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.