இரட்சிப்பு

இரட்சிப்பின் அனுபவம்
ஆசிரியர்: A.W. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 11 நிமிடங்கள்

நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பைப் பலவேறான கண்ணோட்டங்களில் பார்க்கலாம்; மேலும் வெவ்வேறு விதங்களாகப் பிரித்தும் சிந்திக்கலாம். ஆனால், நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், "இரட்சிப்பு கர்த்தருடையதே" என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். உலகத்தோற்றத்திற்கு முன்பே, தேவன் தாம் முன்குறித்தவர்களுக்காகவே இந்த இரட்சிப்பை ஏற்படுத்தினார். மனித ரூபமாய் இந்த பூமிக்கு வந்து, பாவமில்லாத பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்து, முன்குறிக்கப்பட்டவர்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்த அவருடைய நேசகுமாரன் மூலமாகவே இந்த இரட்சிப்பைச் சம்பாதித்தார். அப்படிப்பட்ட இரட்சிப்பை முன்குறிக்கப்பட்டவர்கள் பெற்றுக்கொள்வதற்குப் பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார். அவர்கள் வேதவாக்கியங்களைப் படிப்பதன் மூலம் உணர்த்தப்பட்டு, விசுவாசத்தினால் அந்த இரட்சிப்பு அவர்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படுகிறது; மேலும் திரித்துவ தேவனுடன் உறவு கொள்வதன் மூலம் அவர்கள் நித்திய மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள்.

இவ்விஷயத்தில் நாம் அச்சப்படவேண்டிய ஒரு காரியம் உண்டு. இன்றைய கிறிஸ்தவ உலகில் பலர் தாங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள்; ஆனால் உண்மையாகவே அவர்கள் தேவனின் கிருபைக்கு முற்றிலும் புறம்பாகவே இருக்கிறார்கள். தேவன் மற்றும் சத்தியத்தை குறித்த தெளிவான, அறிவார்ந்த புரிதல் இருப்பது ஒரு விஷயமென்றால், அந்தச் சத்தியத்தைப் பற்றிய தனிப்பட்ட அனுபவத்தைப் பெறுவது மற்றொரு விஷயம். பாவம் எவ்வளவு கொடிதானது என்று தேவனுடைய வசனம் சொல்லுவதை நம்புவது ஒரு விஷயமென்றால், உள்ளுக்குள் அதைக்குறித்த பரிசுத்தமான பயமும் வெறுப்பும் இருப்பது மற்றொரு விஷயம். தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது மனந்திரும்புதல் மட்டுமே என்று நம்புவது ஒரு விஷயமென்றால், நாம் பாவத்திற்காக உண்மையாகவே துக்கப்படுவதும் புலம்புவதும் மற்றொரு விஷயம். பாவிகளின் மீட்பர் இயேசுகிறிஸ்து ஒருவர் மட்டுமே என்று நம்புவது ஒரு விஷயமென்றால், அவரை முழு இருதயத்தோடும் விசுவாசிப்பது மற்றொரு விஷயம்.

இயேசுகிறிஸ்து உன்னதமானவர் என்று நம்புவது ஒரு விஷயமென்றால், மற்ற எல்லாரையும் காட்டிலும் அவரை அதிகமாக நேசிப்பது மற்றொரு விஷயம். கர்த்தர் பெரியவர், பரிசுத்தர் என்று நம்புவது ஒரு விஷயமென்றால், தேவனிடம் பயபக்தியோடு இருப்பது மற்றொரு விஷயம். இரட்சிப்பு கர்த்தருடையதே என்று நம்புவது ஒரு விஷயமென்றால், அவருடைய கிருபையான செயல்களின் மூலம் அந்த இரட்சிப்பில் நாம் பங்குகொள்வது மற்றொரு விஷயம். பரிசுத்த வேதத்தில் மனிதனின் பொறுப்பை வலியுறுத்துவது எவ்வளவு உண்மையோ, அவ்வாறே ஆதாமின் சந்ததியார் அனைவரும் தங்கள் பொறுப்பையும், கடமையையும் நிறைவேற்றத் தவறிவிட்டனர் என்று தேவனுடைய வார்த்தை மீண்டும் மீண்டும் கூறுவதும் உண்மையே. எல்லோரும் பொறுப்புணர்வு இல்லாததினால் பாவத்தில் வீழ்ந்தார்கள் என்பது மிக முக்கியம். எனவே, ஒரு பாவி தனக்குத்தானே இரட்சிப்பைத் தேடிக்கொள்ள முடியாது என்பதால், மனிதனுக்குத் தேவனின் உதவி அவசியமாகிறது. "மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்" (ரோமர் 8:8), "நாம் பெலனற்றவர்களாய் இருக்கிறோம்" (ரோமர் 5:6), "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" (யோவான் 15:5).

சுவிசேஷத்தைக் கேட்கும் அனைவருக்கும் அந்த வசனம் ஒரு அழைப்பையும், கட்டளையையும் வெளிப்படுத்துவது உண்மையாக இருந்தாலும், அனைவரும் அந்த சுவிசேஷ அழைப்பைப் புறக்கணித்து தேவனுடைய கட்டளையை மீறுகிறார்கள். "அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள்" (லூக்கா 14:18) என்று வேதம் கூறுகிறது. தேவன் ஒரு பாவியின் தேவைகளை அறிந்து அவனுக்கு ஏற்ற ஒரு மீட்பைக் கொடுத்தாலும், அந்தப் பாவி மிகவும் கொடிய பாவத்தையே செய்கிறான். "அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார்" (ஏசாயா 53:3). பாவியாய் இருக்கிற மனிதன் தன்னை ஒருபோதும் திருத்திக்கொள்ள முடியாத முரடனைப்போல் இருந்து, நித்திய நரகத்திற்குத் தகுதியானவன் என்று நிரூபிக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தேவன் தம்முடைய உன்னத இறையாண்மையை வெளிப்படுத்துகிறார். தேவன் தாம் முன்குறித்தவர்களுக்கு இரட்சிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்த இரட்சிப்பை தேவனே அவர்களுக்குக் கொடுக்கிறார்.

இவ்விதமாக இரட்சிப்பு வழங்கப்படுவதென்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் இரட்சிப்பு இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவிப்பது மட்டுமல்ல; கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக விசுவாசிக்கப் பாவிகளுக்கு விடுக்கப்படும் வெறும் அழைப்பு மட்டுமல்ல இது. தேவன் தம்முடைய மக்களை உண்மையாகவே இரட்சிப்பதற்கு, எந்தவிதத் தகுதியும் இல்லாத, நன்மையை நோக்கி ஒரு அடியும் எடுத்து வைக்காத, மற்றும் எடுத்து வைக்க முடியாத மனிதனின் வீழ்ச்சியடைந்த நிலையை அறிந்த தேவன், அவர்களை இரட்சித்தது அவருடைய இரக்கமுள்ள கிருபையின் வெளிப்பாடாகும். உண்மையாகவே இரட்சிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய கற்பனைக்கும் எட்டாத தேவனுடைய கிருபைக்குக் கடனாளிகளாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து அவர்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக மரித்தார் என்பதற்காக மட்டுமல்ல, அந்த இரட்சிப்பை அவர்களுடைய வாழ்வில் நிகழ்த்திய பரிசுத்த ஆவியானவரின் செயலுக்காகவும் அவர்கள் தேவனுக்குக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். சரியாகச் சொன்னால் பல போதகர்கள் இந்த மென்மையான சத்தியத்தைச் சொல்வதற்குத் தவறிய இடம் இதுதான்.

"இயேசுகிறிஸ்து மட்டுமே பாவிகளின் மெய்யான மீட்பர்" என்று அவர்களில் பலர் சரியாகப் போதித்தாலும், நாம் நமக்குள் இடமளித்தால்தான், அதாவது நாம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, இயேசுகிறிஸ்து நம்முடைய இரட்சகராக மாறுகிறார் என்று அவர்கள் கற்பிக்கிறார்கள். மேலும் "மனிதனின் சம்மதத்தால் மட்டுமே இரட்சிப்பு" என்று அவர்களுக்குப் போதிக்கிறார்கள். அதே சமயம் பாவத்தை ஒத்துக்கொள்ள வைப்பது பரிசுத்த ஆவியானவரின் செயல் என்றும், அவர் மட்டுமே நமது இழந்த நிலையைப் பற்றியும், கிறிஸ்து நமக்கு எவ்வளவு தேவை என்பதைப் பற்றியும் நமக்குத் தெரிவித்துக்கொண்டே, இரட்சிப்பில் மனிதனுடைய பங்களிப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள். ஆனால், "இரட்சிப்பு கர்த்தருடையதே" (சங்கீதம் 3:8) என்று பரிசுத்த வேதம் நமக்குக் கற்பிக்கிறது. தேவனிடமிருந்து தோன்றியதைத் தவிர வேறு எதுவும் தேவனுக்குப் பிரியமானதல்ல. "ஒரு பாவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிப்பு என்பது தனிப்பட்ட முறையில் அந்தப் பாவிக்குக் கொடுக்கப்படுகிறது" என்பது உண்மைதான். ஆனால் பரிசுத்த ஆவியானவரே இரட்சிப்புக்கு ஏற்ற விசுவாசத்தை அவனிடத்தில் உருவாக்குகிறார். "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" (எபேசியர் 2:8).

இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், பாவ சுபாவம் கொண்ட மனிதன் கிறிஸ்துவில் "விசுவாசம்" வைக்கிறான், ஆனால் அது இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அல்ல. அது எப்படிப்பட்ட விசுவாசமென்றால் பௌத்தர்கள் புத்தரை எப்படி நம்புகிறார்களோ அப்படியே, கிறிஸ்தவ உலகில் கூட பலர் கிறிஸ்துவை நம்புகிறார்கள். மேலும், அப்படிப்பட்ட "விசுவாசம்" அறிவுசார்ந்தது அல்ல. அந்த "விசுவாசம்" அடிக்கடி கவனத்தையும், உணர்ச்சிகளையும் ஈர்க்கும்படியாக மட்டுமே இருக்கிறது. விதைக்கிறவனைப் பற்றிய உவமையில் நாம் பார்க்கிறோம், "ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்" (மத்தேயு 13:21) என்று கர்த்தர் கூறினார்.

இது இன்றும் தொடருகிற நிதர்சனமான உண்மை. ஏரோது மன்னன் யோவானின் வார்த்தைகளை "மகிழ்ச்சியுடன் கேட்டான்" என்று வேதம் கூறுகிறது. எனவே, பிரியமான வாசகரே! ஒரு நபர் தலைசிறந்த சுவிசேஷகரின் போதனைகளைக் கேட்பதால் மட்டும் அந்த நபர் மறுபிறப்பு அடைந்தவர் என்று பொருளல்ல. யோவான் ஸ்நானகன் பரிசேயர்களிடம், "சிறிது காலம் நீங்கள் அவருடைய வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்" (யோவான் 5:35) என்று சொன்னதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் கிருபையின் செயல்பாடு ஒன்றுமில்லை என்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம். இவை அனைத்தும் பரிசுத்த வேதத்தில் உறுதியுடனும் நம்முடைய எச்சரிக்கையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கூறிய வேதவசனப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. மாற்கு 6:20-ம் வசனத்தில் யோவானிடம் பேசும்போது தனிப்பட்ட பெயரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைக் கவனியுங்கள்: "ஏனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்." இந்த வசனப்பகுதியில் ஏரோது "யோவானுக்குப் பயந்து" என்று உள்ளதே தவிர, தேவனுக்குப் பயந்தவனாக இல்லை. மேலும், யோவானுடைய வார்த்தைகளைக் கேட்டதும், என்ன செய்வது என்று தெரியாமல் மகிழ்ச்சியுடன் கேட்டான். யோவானின் தனிப்பட்ட குணம் ஏரோதை ஈர்த்தது. இன்றைய நாட்களில் இது எவ்வளவு உண்மையாக உள்ளது! போதகனின் தனிப்பட்ட ஆளுமையாலும், நடை, உடை, பாவனை ஆகியவற்றாலும் மக்கள் மிகவும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் காரியத்தில் அவரது சுய நேர்மையால் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், இதற்கு மேல் அவர்களைச் சொல்வதற்கு எதுவும் இல்லை; அவர்கள் எல்லோரும் ஒரு நாள் தூக்கத்திலிருந்து திடீரென விழித்தெழும் நாள் வரும்.

சத்திய வசனத்தைப் போதிக்கும் போதகர்களை நேசிப்பது அல்ல, சத்தியத்தை நேசிப்பதுதான் முக்கியம். இந்த வித்தியாசம் மட்டும்தான் உண்மையான தேவ மக்களுக்கும், நவீன போதகர்களுடன் எப்போதும் பழகும் "கலப்புற்ற கூட்டத்திற்கும்" (Mixed multitude) உள்ள தனித்துவமான வித்தியாசம். யோவான் 5:35-ல், யோவான் ஸ்நானகனைக் குறித்து இயேசுகிறிஸ்து பரிசேயர்களிடம் இவ்விதமாகச் சொன்னார்: "நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்." "உண்மையான ஒளியில்" அல்ல "அவனுடைய ஒளியில்". அதேபோல்தான் இன்றைய நாட்களிலும், தேவனுடைய வார்த்தையின் இரகசியங்களையும், அற்புதங்களையும் தெளிவாக விளக்கும் திறமையுள்ள பிரசங்கிமார்கள் பலர் இருளில் இருந்தாலும், அவர்களையே மக்கள் பின்தொடருகிறார்கள். இதற்குக் காரணம் "அவருடைய ஒளி"; அவர்கள் தனிப்பட்ட முறையில் "தேவனால் அபிஷேகம் செய்யப்படவில்லை". "நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்" (1 யோவான் 2:20). சத்தியத்தை விசுவாசிப்பவர்கள் யாரென்றால் தேவனுடைய கிருபையைப் பெற்றவர்களே (2 தெசலோனிக்கேயர் 2:11). சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படுவார்கள். அவர்கள் அடைவது வேத வசனத்தின்படியானது அல்ல. "உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது" (எரேமியா 15:16). அவர்கள் வேதத்தை விரும்புகிறவர்கள்; எனவே சத்தியமாக இல்லாததை ஒரு கொடிய விஷமாக வெறுப்பார்கள். வேத வசனத்தை அருளியவரைத் தேடுகிறவர்கள், வசனத்தைப் போதிக்கும் போதகனை மேன்மையாக எண்ணமாட்டார்கள். தன்னுடைய எதிர்கால நிலையை அவர்களே வசனத்தினால் சரிசெய்துகொள்வதால் மனிதனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். "கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே" (ஏசாயா 26:12).

உண்மையான தேவனுடைய மக்களான நேர்மையானவர்களின் வாக்குமூலம் இங்கே காணப்படுகிறது. "எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே." இந்த வசனத்தைக் கவனியுங்கள். இது ஒரு உண்மையான விசுவாசியின் இருதயத்தில் தேவ கிருபையின் செயல்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இது சத்தியத்தை வெளிப்படுத்தும் ஒரு வேதவசனப் பகுதி மட்டுமல்ல. பின்வரும் வசனங்களைக் கவனமாகச் சிந்தியுங்கள்:

"அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது" (கலாத்தியர் 1:15, 16).

"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு..." (எபேசியர் 3:20).

"உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி..." (பிலிப்பியர் 1:6).

"ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்" (பிலிப்பியர் 2:13).

"என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எபிரேயர் 10:16).

"சமாதானத்தின் தேவன், இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக" (எபிரேயர் 13:20,21).

தேவனுடைய கிருபை எவ்வாறு செயல்படுகிறது என்பதை மேலே குறிப்பிட்ட வசனங்கள் நமக்குத் தெளிவாக்குகின்றன. வேறுவிதமாகச் சொன்னால், அவை இரட்சிப்பின் அனுபவத்தைத் தெரியப்படுத்துகின்றன.

"கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே" (ஏசாயா 26:12). பிரியமான வாசகரே! இந்த வார்த்தைகளுக்கு உன் இருதயத்தில் எவ்விதமான பதில் இருக்கிறது? உன்னுடைய மனந்திரும்புதல் கண்ணீருடன் உள்ளதா? அல்லது உண்மையான துக்கமா? அதனுடைய தொடக்கம் பரிசுத்த ஆவியானவர் உன் உள்ளத்தில் உண்டாக்கிய தேவ கிருபையா? கிறிஸ்துவின் மீதுள்ள உனது நம்பிக்கை அறிவுப்பூர்வமானதா? உன்னோடு அவருக்கு ஏற்பட்ட உறவு அவரால் கிடைத்த நன்மையின் அடிப்படையில் உண்டானதா? அல்லது பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டினால் கிடைத்ததா? கிறிஸ்துவின் மீதுள்ள உனது அன்பு எப்படிப்பட்டது? தேவன் உன்னில் புதிதாகப் பிறந்த இருதயம் உனக்கு உண்டா? "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை" என்று சங்கீதக்காரனோடு சேர்ந்து நீ சொல்ல முடியுமா? (சங்கீதம் 73:25). நீ செய்கிற பணி உண்மையாகவே அமைதலோடும், தாழ்மையோடும் உள்ளதா? "நான் ஒரு கேடுள்ளவன், எதற்கும் உதவாதவன்" என்று உன்னை நீயே அழைத்துக்கொள்வது மிகச் சுலபமானதுதான். நீ அப்படிப்பட்டவன் என்ற உணர்வு உனக்கு உள்ளதா? அப்போஸ்தலனாகிய பவுல் அவ்விதம் சொன்னார்: "பாவிகளில் பிரதான பாவி நான்" (1 தீமோத்தேயு 1:15). மேலும், அப்படிப்பட்ட சிந்தை உன்னில் இல்லை என்றாலும், வேறு யாராவது தங்கள் பாவங்களை முறையிட்டு, தங்கள் பலவீனங்களை தேவனிடம் ஒப்புக்கொண்டு, "ஐயோ, நான் நிர்ப்பந்தமான மனுஷன்" (ரோமர் 7:24) என்று புலம்பும் கிறிஸ்தவர்கள் மத்தியில், "நான் எல்லாரையும் காட்டிலும் உயர்ந்தவன்" என்று சொன்னால், எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி நீ தேவனுக்கு அந்நியனாக இருக்கிறாய் என்பதை மறந்து விடாதே! உண்மையான தேவபக்திக்கும், மனிதனால் உண்டான மதத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான்: ஒன்று புறம்பானது, மற்றொன்று உள்ளானது. இயேசுகிறிஸ்து பரிசேயர்களிடம் இவ்விதம் சொன்னார்: "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது" (மத்தேயு 23:25). உலகப்பிரகாரமான மதம் என்பது சடங்குகளைப் பின்பற்றுவதாகும். தேவன் இருதயத்தைப் பார்க்கிறவர்; இருதயத்தையே பரிசோதிக்கிறார். தம்முடைய மக்களை நோக்கி தேவன் இவ்விதமாகச் சொல்கிறார்: "நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்" (எபிரேயர் 10:16).

"கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே" (ஏசாயா 26:12). மனிதனின் ஆணவத்தை அவமானப்படுத்தக்கூடிய வார்த்தை இது. மனிதனுக்குத் தேவையான அனைத்தும் நானே பார்த்துக்கொள்வேன் என்ற ஆணவம் உலகெங்கும் உள்ள மனிதனிடத்தில் உள்ளது. லவோதிக்கேயா சபையார் சொல்லுவது: "நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்..." (வெளிப்படுத்துதல் 3:17). இந்த வசனத்தில் நம்மைத் தாழ்மைப்படுத்தி நம்முடைய பெருமைகளை அடக்கும் காரியம் ஒன்று உண்டு. தேவன் நம் சார்பாக இருந்து நம்முடைய எல்லா பணிகளையும் செய்துள்ளார், எனவே நம்மை நாம் பெருமை பாராட்டிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை. "அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன் போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?" (1 கொரிந்தியர் 4:7). இந்த வசனத்தின்படி பார்த்தால் தேவன் யாரைக்கொண்டு தன்னுடைய பணிகளைச் செய்கிறார்? தேவனுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர் முன்குறிக்கப்பட்ட, அல்லது மீட்கப்பட்ட மக்கள்; ஆனால் மனிதக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அவர்கள் தேவனை ஒருபோதும் கண்ணோக்காதவர்கள், கேடுள்ளவர்கள். மேலும், தேவனுடைய பரிசுத்த கோபத்தைத் தூண்டுவதற்குக்கூடத் தயங்காதவர்கள்; தங்களுடைய வாழ்வில் படுதோல்வி அடைந்தவர்கள்; துன்மார்க்கமான மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களைக் கொண்டவர்கள். ஆனால், பாவம் பெருகிய இடத்தில், கிருபையும் அதிகமாகப் பெருகி, அவர்களால் செய்ய முடியாததையும் செய்யும்படி செய்தது. ஆம், தேவன் தம் மக்களின் எல்லா வேலைகளையும் அவரே நடப்பிக்கிறார்.

முதலாவதாக, தேவன் அவர்களை உயிர்ப்பிக்கிறார்; "மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது" (யோவான் 6:63). "நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்" (யாக்கோபு 1:18).

இரண்டாவதாக, தேவன் அவர்களுக்கு மனமாற்றத்தைக் கொடுக்கிறார். "இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்" (அப்போஸ்தலர் 5:31). "அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார்" (அப்போஸ்தலர் 11:18), "சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்..." (2 தீமோத்தேயு 2:25).

மூன்றாவதாக, தேவன் அவர்களுக்கு விசுவாசத்தை ஈவாகக் கொடுக்கிறார்: "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" (எபேசியர் 2:8). "தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்" (கொலோசெயர் 2:12).

நான்காவதாக, தேவன் அவர்களுக்கு ஆவிக்குரிய தெளிவான புரிதலைக் கொடுக்கிறார்: "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 5:19).

ஐந்தாவதாக, தேவன் நம்முடைய முயற்சிகளை வெற்றியடையச் செய்கிறார்: "அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது" (1 கொரிந்தியர் 15:10).

ஆறாவதாக, தேவன் நம்முடைய இரட்சிப்பைப் பாதுகாக்கிறார்: "இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது" (1 பேதுரு 1:5).

ஏழாவதாக, தேவன் நம்மை வளரச் செய்கிறார்: "என்னாலே உன் கனியுண்டாயிற்று" (ஓசியா 14:8). "ஆவிக்குரிய கனிகள்": அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவை (கலாத்தியர் 5:22,23).

தேவன் எதற்காக நம்முடைய பட்சத்திலிருந்து நம் பணிகளை நிறைவேற்றுகிறார்? ஏனென்றால் நம்மால் நம்மை மீட்டுக்கொள்ள முடியாது. "சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்" (ரோமர் 9:29).

முதலாவதாக, நாம் பலவீனமுள்ளவர்கள்; தேவனுடைய நீதியை நிறைவேற்ற முடியாதவர்களாக இருக்கிறோம். இருப்பினும், நம்மால் செய்ய முடியாத அனைத்தையும், தேவன் தனது இறையாண்மையால் நமக்குள் நடப்பிக்கிறார்.

இரண்டாவதாக, இவையெல்லாம் அவருக்கே கனமும், மகிமையும் உண்டாகும்படி தேவனே செய்தார். "நான் எரிச்சலுள்ள தேவன்" என்று அவரே சொன்னார். அவருடைய மகிமையை அவர் யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டார். இவ்விதமாக அவர் நம்முடைய துதியைப் பெற்றுக்கொள்கிறார். இதில் நாம் பெருமை பாராட்டிக்கொள்வதற்கு ஒன்றுமேயில்லை.

மூன்றாவதாக, நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை விருத்தியாக்கவும், பாதுகாக்கவும் தேவன் நம்மிடமே விட்டுவிட்டால் அது ஒருபோதும் பலனளிக்காது; அது மேம்படாமல் மோசமானதாக இருக்கும். தேவன் சீர்படுத்திய எல்லாவற்றையும் மனிதன் சீர்குலைக்கிறான். "தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்" (பிரசங்கி 3:14).

ஆனால், என் சார்பாகவே எல்லா பணிகளையும் தேவனே செய்தார் என்று நான் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? முதன்மையாக, அவற்றின் முடிவுகளால் சொல்ல முடியும். நீ மறுபிறப்பு அடைந்திருந்தால், உனக்குள் அந்தப் புதிய குணம் இருக்கும். இந்தப் புதிய குணம் ஆவிக்குரியது. சரீர ரீதியான குணம் (மாம்சம்), ஆவிக்குரிய குணத்திற்கு எதிரானது. இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று விரோதமானவை.

ஆகையால், இவைகளுக்கு இடையே தொடர்ந்து போராட்டம் உள்ளது. இதுப்போன்ற மோதல்களை உன் உள்ளத்துக்குள் நீ அனுபவிக்கிறாயா? உன்னுடைய மனந்திரும்புதல் தேவனால் உண்டாயிருந்தால் உன்னை நீயே வெறுப்பாய். உன் மனந்திரும்புதல் ஆவிக்குரியதாய் இருந்தால் தேவன் உன்னை எப்போதோ நரகத்தில் தள்ளியிருக்க வேண்டும், ஆனால் அப்படி நடக்கவில்லை என்று நீ ஆச்சரியப்படுவாய். உன்னுடைய மனந்திரும்புதல் கிறிஸ்துவின் ஈவு என்றால், ஒவ்வொரு நாளும் தேவனின் அற்புதமான கிருபைக்குப் பதிலாக நீ செய்யும் மோசமான காரியங்களுக்காக நீ வருத்தப்படுவாய். நீ பாவத்தை வெறுப்பாய். நீ செய்த பல அக்கிரமங்களுக்காக நீ இரகசியமாக தேவனிடம் மனந்திரும்புவாய். இது இரட்சிப்பின் ஆரம்ப நாட்களில் மட்டுமல்ல, இப்போதும் உன்னுடைய மனந்திரும்புதல் இவ்விதமாக இருக்கும். உன் விசுவாசம் தேவனுக்குரியது என்பதற்கான சான்று, உலக சம்பந்தமான எதிலும் உன் விசுவாசத்தை வைக்க நீ விரும்பமாட்டாய். நீ உன் சுயமரியாதையையும், சுய நீதியையும் வெறுப்பாய்; நீ செய்த அனைத்து செயல்களில் பெருமை கொள்ளமாட்டாய். உன் விசுவாசம் "தேவன் தெரிந்துகொண்டவர்களின் விசுவாசமென்றால்" (தீத்து 1:1), நீ தேவனை உடையவனாக இருப்பதற்கு கிறிஸ்துவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பாய். ஒருவேளை உன் விசுவாசம் தேவன் தெரிந்துகொண்டவர்களின் விசுவாசமென்றால், நீ தேவனுடைய வார்த்தையை ஆழமாக விசுவாசித்து, சமாதானத்துடன் ஏற்றுக்கொள்வாய்; உன் சொந்த எண்ணங்களைச் சிலுவையில் அறைந்துவிட்டு, தேவன் சொல்வதையெல்லாம் ஒரு குழந்தையைப் போல ஏற்றுக்கொள்வாய். "கிறிஸ்துவை உடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்" (கலாத்தியர் 5:24, 25).

கிறிஸ்துவின் மீதான உங்கள் அன்பு ஆவியின் ஈவாக இருந்தால், அதற்கு ஆதாரம் நீ தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களிலிருந்து விலகியிருந்து, எப்போதும் தேவனுக்குப் பிரியமான காரியங்களைச் செய்வதில் ஈடுபடுத்திக்கொள்வாய். ஒரு வார்த்தையில் சொன்னால், நீ பணிவுடன் செயல்படுவாய். கிறிஸ்துவுக்குள் உன் அன்பு "புதிய மனிதனின்" அன்பாக இருந்தால், நீ அவருக்காக ஏங்குவாய், மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய உறவில் விருப்பம் கொள்வாய். இயேசுகிறிஸ்து உன் மீது வைத்திருக்கும் அன்பு எப்பேர்ப்பட்டதோ அதே வகையான அன்பை நீ கொண்டிருந்தால், கர்த்தருடன் என்றென்றும் இருக்கும்படி, அவர் தம்முடைய மக்களை அழைத்துச் செல்ல இரண்டாவது முறையாக வரும்போது அவருடைய மகிமையின் தோற்றத்தைக் காண நீயும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பாய்.

பிரியமான வாசகரே! உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை உண்மையானதா? அல்லது போலியானதா? உங்கள் நம்பிக்கை கிறிஸ்து என்ற பாறையின் மீது கட்டப்பட்டதா? அல்லது மனித தீர்மானங்கள், முயற்சிகள், முடிவுகள் மற்றும் உணர்வு என்ற மணலின் மீது கட்டப்பட்டதா? சுருக்கமாகச் சொன்னால், உன் இரட்சிப்பு தேவனால் உண்டானதா? அல்லது மாயமான உன் இருதயத் தோற்றத்தினால் உண்டானதா? என்பதை ஆராயும் ஞானத்தைத் தேவன் உனக்குக் கிருபையாகத் தருவாராக. தேவனுடைய கிருபை நம் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.