திருச்சபை

அப்போஸ்தலனாகிய பவுலின் ஏழு விருப்பங்கள்
ஆசிரியர்: ஜேம்ஸ் ஸ்மித் – 1856
தமிழாக்கம்: தமாஸ் எடிசன்
வாசிப்பதற்கான நேரம்: 10 நிமிடங்கள்

பொதுவாக ஒன்றை விரும்புவது பலனற்றது; சில சமயங்களில் அது பாவமானதும்கூட. எதையாகிலும் விரும்புவதைக்காட்டிலும் அமைதியாயிருப்பதே சிறந்தது. அதைவிட, தேவனுடைய சித்தத்தை ஏற்றுக்கொண்டு அமைதியாயிருப்பது எல்லாவற்றையும்விட மேலானது. ஆனால், நாம் நன்மையானதாகக் கருதுவதை விரும்புவது மனித இயல்பு. தேவ கிருபை மட்டுமே இயல்பாகவே இந்தப் பயிற்சியை ஒழுங்குபடுத்திப் பரிசுத்தப்படுத்துகிறது.

ஆசை என்பது பெரும்பாலும் அறிவின் விளைவு; அது ஜெபத்தின் ஆத்துமா. நம்மிடம் எது இருந்தாலும், நமக்குத் தேவையானவை இன்னும் நிறைய உள்ளன; இதன் விளைவாக, நாம் விரும்ப வேண்டியதும் அதிகம்.

அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பாக ஏழு காரியங்களை விரும்பினார். அவைகள் அனைத்தும் கிறிஸ்துவைப் பற்றியதே. அவைகள் அனைத்தும் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சற்று ஆராய்ந்து பார்க்க ஆசைப்படுகிறேன்.

நாம் இதைச் சிந்திக்கும்போது, நம்முடைய ஆசைகளைப் பவுலுடைய ஆசைகளோடு ஒப்பிடுவோம். இந்த விஷயத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சுருக்கமான இந்த ஆய்வை ஆசீர்வதிப்பாராக.

முதலாவதாக, “நான் அவரை அறியும்படி!” (பிலிப்பியர் 3:10)

கிறிஸ்து பவுலுக்குத் தரிசனமானார்; கிறிஸ்து பவுலினிடத்தில் வெளிப்படுத்தப்பட்டார்; தொடர்ந்து கிறிஸ்து பவுலால் பிரசங்கிக்கப்பட்டார்.

பவுலின் நம்பிக்கையின் பொருளாகவும், பவுலின் ஊழியத்தின் பொருளாகவும், பவுலினுடைய இருதயத்தின் மகிழ்ச்சியாகவும் கிறிஸ்துவே இருந்தார். ஆனாலும், கிறிஸ்துவைக்குறித்துத் தான் அறியாததும் நிறைய உண்டு என்பதை அவர் அறிந்திருந்தார். பவுல் அறிந்தது ஒரு பகுதி மட்டுமே. எனவே, மேலும் பலவற்றை அறிய அவர் விரும்பினார்.

அதாவது கிறிஸ்துவின் மகிமை, கிறிஸ்துவினுடைய கிருபையின் ஐஸ்வரியம், அவருடைய ராஜ்யத்தின் கம்பீரம் என கிறிஸ்துவில் உள்ள அனைத்தும் பவுலுக்கு ஆர்வமூட்டின.

படைப்பு நன்றாக இருந்தது; அதைக்காட்டிலும் பவுலுக்குக் கிறிஸ்துவின் கிருபை அருமையாய் இருந்தது. ஆனால், கிறிஸ்து எல்லாவற்றிலும் சிறந்தவராய் இருந்தார். பவுல் ஒருபோதும் கிறிஸ்துவைப் பற்றிச் சிந்திக்கவோ, கிறிஸ்துவைப் பற்றிப் பேசவோ, கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவோ சோர்வடையவில்லை. “நான் அவரை அறியும்படி!” என்ற வாஞ்சையைத் தொடர்ந்து தன்னுடைய இருதயத்தில் எழுப்பியவாறே, அவர் தனது பாதையில் ஓடினார்.

பிரியமானவர்களே, உங்களுடைய நிலைமை எப்படி இருக்கிறது? பவுலின் இருதய ஆசைக்கு நீங்கள் இசைந்திருக்கிறீர்களா? இயேசுவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வது உங்கள் அன்றாட ஆசையாகவும், தீவிர வாஞ்சையாகவும், நிலையான நோக்கமாகவும் இருக்கிறதா? நித்தியம் முழுவதும் நாம் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்வோம்! இவ்வுலகத்திலும், பரலோகத்திலும் அவர் நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள பாடமாயிருக்கிறார். கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ள நமக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ள நித்தியமும் நமக்கு வழங்கப்படும்.

நித்தியத்தில் அவரைக்குறித்துக் கற்றுக்கொள்ளும் காரியத்தைக்காட்டிலும் வேறே விருப்பமில்லை. அது கிறிஸ்துவைக் கற்றுக்கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும், கனப்படுத்துவதற்கும் செலவிடப்படும்!

இரண்டாவதாக, “நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படி!” (பிலிப்பியர் 3:8)

கிறிஸ்துவை அறிந்துகொள்வதில் மாத்திரம் அவர் திருப்தி அடையவில்லை; பவுல் கிறிஸ்துவைத் தனது சொந்தமாக்க விரும்பினார்! பவுல் கிறிஸ்துவை ஒரு இலவசமான பரிசாகப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை; கிறிஸ்துவையே ஒரு பரிசாக வெல்ல விரும்பினார்.

கிறிஸ்துவைப் பெறுவதற்கு ஓட வேண்டுமானால் அவர் நிச்சயமாக ஓடுவார். கிறிஸ்துவைப் பெறப் போராட வேண்டுமானால் அவர் நிச்சயமாகப் போராடுவார். கிறிஸ்துவைப் பெறுவதற்கு வழி எதுவாக இருந்தாலும்—அது எவ்வளவு வேதனையானதோ, எவ்வளவு விலை உயர்ந்ததோ, எவ்வளவு கடினமானதோ—பவுல் அவற்றைப் பயன்படுத்துவார்!

பவுல் விசுவாசித்தாரா? கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளவே! பவுல் ஜெபித்தாரா? கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளவே! அவர் பிரசங்கித்தாரா? கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளவே! பவுல் தனக்குள் உள்ள பழைய மனுஷனைச் சிலுவையில் அறைந்தாரா, மாம்சத்தை அழித்தாரா, சரீரத்தை அடிமையாக்கினாரா? கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளவே! அவர் எல்லாவற்றையும் இழந்தாரா? எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையுமாக எண்ணினாரா? கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளவே! பவுல் பல அடிகள், சிறைவாசம், பசி, குளிர், நிர்வாணம் மேலும் தன்னை இரத்த சாட்சியாக மரிக்கவும் ஒப்புக்கொடுத்தாரா? அவர் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளவே! கிறிஸ்துவைச் சொந்தமாக்க வேண்டும் என்பதே பவுலினுடைய எண்ணம். அவரை ஆட்கொள்ளும் ஆசை அது!

இதை வாசிக்கிற எனக்கு அருமையானவர்களே! இதுவே உங்கள் நோக்கமும் ஆசையுமாய் இருக்கிறதா? கிறிஸ்துவுக்காக அனைத்துக் காரியத்திலிருந்தும் பிரிந்து செல்ல நீங்கள் தயாரா? பேர், புகழ், சொகுசு, செல்வச் செழிப்பு இவற்றுக்குப் பதிலாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வீர்களா? போராட்டங்கள், உபத்திரவங்கள், பாடுகள், ஏன் மரணமே சந்தித்தாலும், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வீர்களா? பவுல் இவ்வாறாக இருந்தார்; நீங்கள் இவ்வாறு இல்லையென்றால், நீங்கள் கொண்டிருக்கும் கிறிஸ்துவின் பார்வையும், பவுல் கொண்டிருந்த பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது.

என் ஆத்துமாவே, நான் உன்னிடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். இதுவே உன் எண்ணமாக இருக்கட்டும், இதுவே எப்போதும், எல்லா இடங்களிலும் உன் நோக்கமாக இருக்கட்டும்: “கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வது!”

மூன்றாவதாக, “கிறிஸ்துவை மகிமைப்படுத்த!” (பிலிப்பியர் 1:20)

“நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.” (பிலிப்பியர் 1:20)

பவுல் கிறிஸ்துவை வெளிப்படுத்தவும் உயர்த்தவும் விரும்பினார்! அவர் எழுதினாரென்றால், கிறிஸ்துவைப் பற்றியே எழுதினார். அவர் பேசினாரென்றால், கிறிஸ்துவைப் பற்றியே பேசினார். அவர் பாடுபட்டாரென்றால், கிறிஸ்துவுக்காகப் பாடுபட்டார். அவர் துக்கமடைந்தாரென்றால், மதத்தலைவர்கள் கிறிஸ்துவை அவமதித்ததால்தான். கிறிஸ்து தன்னுடைய கண்ணின் மணியைவிட அவருக்கு மிகவும் பிரியமானவர்; பூமியிலோ பரலோகத்திலோ உள்ள எல்லாவற்றையும்விட விலைமதிப்பற்றவர்! வாழ்வோ சாவோ, எது அவருக்கு அதிக கனத்தைக் கொடுக்குமோ அதையே அவர் செய்ய விரும்பினார்.

பவுல் தனது கடமையை உணர்ந்தார். இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்டவராய்க் காணப்பட்டார். கிறிஸ்துவின் பலிபீடத்தின்மேல், தன்னையே பலியாக வார்த்தார். அவருடைய கனத்திற்குப் பாத்திரராகக் காணப்பட்டார். பவுல் கிறிஸ்துவைக் கனப்படுத்த எங்கும் செல்வார், எதையும் செய்வார். மனப்பூர்வமாக அவர் கூறுவார், “கிறிஸ்துவின் பெயரை மகிமைப்படுத்த முடிந்தால் பவுலின் பெயர் அழிந்துபோகட்டும்!”

உண்மையாகச் சொல்லப்போனால், கிறிஸ்துவானவர் பவுலுக்கு எல்லாமும் எல்லாமுமாய் இருந்தார். அவர் கிறிஸ்துவுக்காக வாழ்ந்தார், மரித்தார். தன்னுடைய வாழ்வில் கிறிஸ்து ஒருவரே உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகத் தன்னையே அர்ப்பணித்தார்.

எனக்கு அருமையான சகோதரனே! உன்னுடைய நிலைமை எவ்வாறு இருக்கிறது? “ஓ, நான் கிறிஸ்துவைக் கனப்படுத்த வேண்டும்” என்று உங்கள் இதயம் கதறுகிறதா? “அந்த மனிதன் கிறிஸ்துவைக் கனப்படுத்துகிறான்!” என்று அநேகர் உன்னுடைய வாழ்க்கையைப் பார்த்துச் சொல்ல முடிகிறதா? உங்கள் தினசரி வேண்டுதலும் ஜெபமும் இவ்விதமாக, “கிறிஸ்து என்னிடத்தில் மகிமைப்படட்டும், என்னால், என் மூலமாகவும்—வாழ்க்கையிலும், மரணத்திலும், எக்காலத்திலும், என்றென்றும்!” என்று இருக்கிறதா?

ஓ, என் ஆத்துமாவே! இது என் நிலையான ஆசையாகவும் ஜெபமாகவும் இருக்கட்டும்—இயேசு, என் இயேசு என்னால் மகிமைப்படுத்தப்பட வேண்டும்!

நான்காவதாக, “கிறிஸ்துவுக்குள் காணப்பட வேண்டும்.” (பிலிப்பியர் 3:9)

பவுல் கிறிஸ்துவில் இருக்க விரும்பினார்... நோவா பேழையில் இருந்ததுபோல, மனிதனைக் கொன்றவன் அடைக்கலப் பட்டணத்தில் இருந்ததுபோல, கிறிஸ்து பிதாவில் இருப்பதுபோல. பவுல், கிறிஸ்துவோடு நெருங்கி ஜீவிப்பதையும், அவரோடு அதிக அதிகமாக ஐக்கியம் கொள்வதையுமே வாஞ்சித்தார்.

அவர் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்றால், அவர் இயேசுவின் பெயரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிறார். பவுல் நீதிமானாக்கப்பட்டார் என்றால், அது இயேசுவின் நீதியில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பவுல் பரிசுத்தமாக்கப்பட்டார் என்றால், அவர் இயேசுவின் ஆவியினால் அவ்வாறே காணப்படுவார். அவர் பவுலை ‘ஒன்றுமில்லை’ என்றும், இயேசுவே ‘எல்லாமுமாய்’ இருக்க வேண்டும் என்பார்.

கிறிஸ்துவில், அவர் பாதுகாப்பாக இருப்பார் என்று அறிந்திருந்தார். கிறிஸ்துவில், அவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்று உணர்ந்தார். கிறிஸ்துவில், அவர் திருப்தி அடைவார் என்று நம்பினார். பவுலில் கிறிஸ்து அவருடைய வாழ்க்கையாய் இருந்தார். கிறிஸ்துவில் பவுல் அவருடைய கனமாய் இருந்தார்.

அன்பு நண்பரே, நீங்கள் கிறிஸ்துவில் இருக்கிறீர்களா? கிறிஸ்துவுக்குள் காணப்படுவது உங்கள் லட்சியமா? மரணம் உங்களைக் கண்டால், அது உங்களைக் கிறிஸ்துவில் காணுமா? நீதி உங்களைக் கண்டால், அது உங்களைக் கிறிஸ்துவில் காணுமா? தீர்ப்பு உங்களைக் கண்டால், அது உங்களைக் கிறிஸ்துவில் காணுமா?

கிறிஸ்துவில்—நீங்கள் கடவுளை ஒரு தந்தையாகக் காண்பீர்கள். கிறிஸ்துவில்—நீங்கள் எல்லாப் பரிசுத்தவான்களையும் உங்கள் சகோதரர்களாகச் சந்திப்பீர்கள். கிறிஸ்துவில்—தேவதூதர்கள் உங்களுக்கு ஊழியம் செய்வதை நீங்கள் காண்பீர்கள். கிறிஸ்துவில்—மரணத்திற்குக் கூர் இல்லை. கிறிஸ்துவில்—கல்லறைக்குப் பயங்கரங்கள் இல்லை. கிறிஸ்துவில்—நியாயப்பிரமாணம் உங்களிடம் உரிமை கோர முடியாது. கிறிஸ்துவில்—உங்களுக்கு எதிராகத் தேவனுடைய வார்த்தையில் எந்த அச்சுறுத்தல்களும் இல்லை. கிறிஸ்துவில்—எல்லா வாக்குறுதிகளும் உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கிறிஸ்துவில் இருப்பது எவ்வளவு மகிமை! என் ஆத்துமாவே, இது உங்கள் அன்றாட ஜெபமாக இருக்கட்டும்: நியாயப்பிரமாணத்திலிருந்து வரும் என் சுயநீதியைக் கொண்டிராமல், கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் தேவனிடத்திலிருந்து உண்டாகிய நீதியைப் பெற்று, அவரிடத்தில் காணப்பட வேண்டும்.

ஐந்தாவது, “கிறிஸ்துவுக்கு ஒப்பானவராக வேண்டும்.” (பிலிப்பியர் 3:10)

கிறிஸ்துவை அறிவது, கிறிஸ்துவை ஆதாயப்படுத்துவது, கிறிஸ்துவை மகிமைப்படுத்துவது, அல்லது கிறிஸ்துவில் இருப்பது போதாது; பவுல் கிறிஸ்துவைப் போல இருக்க விரும்புகிறார்!

அவரது ஆவியைச் சுவாசிக்க, அவரது சிந்தையை வெளிப்படுத்த, அவரது மாதிரியைப் பின்பற்ற, மற்றும் கிறிஸ்துவைப் போலவே இருக்க விரும்புகிறார். வறுமையில் கிறிஸ்துவைப் போல, துன்பத்தில் கிறிஸ்துவைப் போல, மரணத்தில் கிறிஸ்துவைப் போல அவர் இருக்க விரும்பினார்.

பவுல் இயேசுவைப் போலவே இருக்க விரும்பினார்! சாந்தகுணம்—இயேசு சாந்தகுணமுள்ளவர் போல. பொறுமை—இயேசு பொறுமையாக இருந்தது போல. அன்பு—இயேசு அன்பாக இருந்தது போல. பயனுள்ளவர்—இயேசு பயனுள்ளதாக இருந்தது போல. ஒவ்வொரு காரியத்திலும் அவரையே ஒத்திருக்க வாஞ்சித்தார்! கிறிஸ்துவைப் போற்றும்படியான காரியம் இங்கே எவ்வளவாய் உள்ளது! கிறிஸ்துவின் மீது காட்டும் அன்பு எவ்வளவாய் உள்ளது! எவ்வளவாய் சுயத்தை மறுக்கும்படியான காரியமாய் இருக்கிறது! கிருபையின் வல்லமை எவ்வளவாய் உள்ளது! என்ன ஒரு அற்புதமான மாற்றம்!

தர்சு பட்டணத்துச் சவுல், சபையைத் துன்புறுத்துபவர், பரிசேயர்களின் பரிசேயர், நசரேயனைத் தூஷித்தவர்! ஆனால் இப்போது கிறிஸ்துவைப்போல அல்லாமல் வேறு எதுவும் இருக்க விரும்பவில்லை.

ஒருமுறை அவர் கிறிஸ்துவில் எந்த அழகையும் காணவில்லை; இப்போது அவர் அழகைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. ஒருமுறை பவுல், கிறிஸ்துவின் பெயரைக் குறிப்பிடுவதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; ஆனால், இப்போதோ அப்பெயரை உச்சரிக்காமல் இருந்தால் மகிழ்ச்சியே இல்லை.

ஒருமுறை அவர், அவருக்கும் அவரது மக்களுக்கும் எதிராக வெறித்தனமாக இருந்தார்; இப்போது அவரது இதயப்பூர்வமான வேண்டுதல்:

“இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்...”

அன்புள்ள வாசகரே, இதுபோன்ற மாற்றத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா? நீங்கள் இயேசுவைப் போல இருக்க முயற்சிக்கிறீர்களா? நீங்கள் இயேசுவைப் போலவே இருக்க விரும்புகிறீர்களா? அவருக்கு ஒப்பானவர்களாய் காணப்பட, அவருக்காகப் பாடுகளையும், மரணத்தையும் கூட அனுபவிக்க நீங்கள் தயாரா?

என் ஆத்துமாவே, இது மிக உயர்ந்த சாதனை—இதை அடைய ஆசைப்படு! அவரில் இன்னுமாய் அன்புகூர, இன்னுமாய் அவரைப் போற்ற, இன்னுமாய் அவரை வணங்க, வாழ்விலும், மரணத்திலும், எப்பொழுதும் அவருக்கு ஒத்திருக்க, கிருபாசனத்தண்டையில் நாளுக்கு நாள் சென்று அக்கிருபையைத் தேடுங்கள்.

ஆறாவதாக, “கிறிஸ்துவுடன் இருக்க வேண்டும்.” (பிலிப்பியர் 1:23)

பவுல் தனது ஊழியத்தை மிகவும் நேசித்தார். அவர் சபையுடன் பெரிதும் இணைந்திருந்தார்; அதற்கு அவருடைய ஈடுபாடு, தாலந்துகள் மற்றும் உழைப்பு தேவைப்பட்டது. நற்செய்தி தேவைப்படும், அழிந்துபோகும் ஏழைப் பாவிகளிடம் அவர் ஆழ்ந்த அனுதாபத்தைக் காண்பித்தார். ஆனால், இயேசுவிடம் அவர் கொண்டிருந்த அன்பு என்னவென்றால்,

“ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்.”

அவர் இடம், வேலை, துக்கம் இல்லாதது, அல்லது மகிழ்ச்சியை வைத்திருப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை; அவருடைய இருதயம் கிறிஸ்துவின் நபர் மீது நிலைபெற்றது. கிறிஸ்துவுடன் இருக்க வேண்டும்—இதுவே அவருடைய விருப்பம். கிறிஸ்துவுடன் எங்கும் இருக்க—அதுவே போதுமானது. கிறிஸ்துவுடன் என்றென்றும் இருப்பது—அதுவே போதுமான பரலோகம்.

பவுலுக்கு, மரணத்திற்குப் பிறகு ஆத்துமாவானது கிறிஸ்து இல்லாத இளைப்பாறுதல் பற்றியோ, நடுநிலையான ஸ்தலம் பற்றியோ எந்த எண்ணமும் இல்லை. அவருக்கு, இத்தேகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்கும்படியான எண்ணம் ஒன்றே இருந்தது. ஆதலால், கிறிஸ்துவோடு என்றென்றும் தங்கியிருக்க, இத்தேகத்தை விட்டுப் பிரிந்து போகவே விரும்பினார். வாழ்க்கையின் அனைத்துச் சுகபோகங்களையும் பெற்று வாழ்வதைவிட, கிறிஸ்துவுடனே கூட இருக்கவே விரும்பினார்.

இதுவே ஆனந்தத்தின் மலர், மகிமையின் கிரீடம், மகிழ்ச்சியின் முழுமை. கிறிஸ்துவுடன் இருக்க! இதைத் தாண்டி எதையும் பவுல் விரும்பவில்லை!

என் சகோதரனே, பவுலோடு நீங்கள் சேர்ந்து சொல்ல முடியுமா? சில நேரங்களில் இயேசுவானவர் உங்களைச் சந்திக்கிறார் இல்லையா? அச்சந்திப்பு உனக்கு இனிமையாய் இருக்கிறதில்லையா? இவ்விதமான அனுபவம், இன்னும் அவரோடு தங்கியிருக்கும்படியான வாஞ்சையைத் தருகிறதில்லையா?

ஒரு அந்நியனுக்கும், விசுவாசிக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் இங்கே பார்க்கலாம். அந்நியனுக்கு, அவரோடு என்றென்றும் தங்கியிருக்கும்படியான வாஞ்சை இருக்காது.

இதை ஒருவன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? கானானின் திராட்சையை ஒருவன் சுவைத்தால், அவன் அந்தத் திராட்சைத் தோட்டத்தையே பார்க்க விரும்புவான். அவ்வண்ணமாக, ஒரு கிறிஸ்தவன், அவரண்டை சென்று, அவரை நித்திய பொக்கிஷமாகத் தனக்குரியதாக்கிக்கொள்ள விரும்புவான்.

என் ஆத்துமாவே, நீ இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து இயேசுவோடு நீண்ட நேரம் இருக்க வாஞ்சிக்கிறாயா?

இது அடிக்கடி என் இனிமையான அனுபவமாய் இருந்திருக்கிறது. “நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்” என்ற வாக்குறுதி அனைத்துப் பரிசுத்தவான்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், அனைத்துப் பரிசுத்தவான்களும் இதை உணர்வர். பவுலின் ஆசை இப்போது நிறைவேறியுள்ளது; அவர் விரும்பியதைப் போல நாம் விரும்பினால்—நம்முடைய ஆசையும் நிறைவேறும்!

ஏழாவது, “கிறிஸ்துவின் நாளில் சந்தோஷப்பட...” (பிலிப்பியர் 2:16)

பவுல் தொடர்ந்து கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்; அதைக்குறித்து விசுவாசிகள் மத்தியிலும் சுட்டிக்காட்டினார். அவர் பெரிய விஷயங்களை எதிர்பார்த்தார். ஆகவே அவர் அதற்காக ஏங்கினார், அதை எதிர்பார்த்து மகிழ்ந்தார், மேலும் அதன் எல்லா மகிமைகளிலும் சந்தோஷங்களிலும் நுழையத் தயாரானார்.

கிறிஸ்துவின் நாள் என்பது அவருடைய மகிமைக்காக விசேஷமாக ஒதுக்கப்பட்ட நாள். அவர் வெளிப்படையாகத் தனது சபையாகிய மணவாட்டியை ஏற்றுக்கொள்வார். சாத்தானையும் அவனுடைய எல்லா எதிரிகளையும் தன் காலடியில் நசுக்கி, தன் மகிமையிலும், பிதாவின் மகிமையிலும் தோன்றுவார். அத்தகைய ஒரு நாள் இதுவரை காணப்படவில்லை; இனி ஒருபோதும் இருக்காது.

அப்போது அவர், கிறிஸ்துவுக்குள் வந்த அனைவரையும் சந்தித்து, தம்முடைய புகழ்பெற்ற எஜமானரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே பவுலின் விருப்பம். ஏனென்றால், அவரே நம்முடைய நம்பிக்கையும், மகிழ்ச்சியும், கிரீடமுமாய் இருக்கிறார், இல்லையா? மேலும், (பிலிப்பியர் 2:15-16)-ல்:

“நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு...” என்று கூறுகிறார்.

இயேசு தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படுவதற்கும், விசுவாசிக்கிற அனைவரிடமும் போற்றப்படுவதற்கும் வருகிறார்; பவுல் தன் பிள்ளைகளை அங்கே பார்க்க விரும்பினார். எவ்வாறாக என்றால், இயேசுவின் மகிமையைரைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவும், அவரது வெற்றிகள் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இது அவரது மகிழ்ச்சியை அதிகரிக்கும். இது விவரிக்க முடியாத இன்பத்தின் ஊற்றுகளைத் திறக்கும். இது நேர்த்தியான மகிழ்ச்சியைத் தரும். மகிழ்ச்சியான பவுலே! கிறிஸ்துவின் நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்! இயேசுவின் வருகை உங்களுக்கு ஒரு மகிமையான நிகழ்வாக இருக்கும்!

இதைப் படிக்கும் எனக்கு அருமையானவர்களே! உங்களுடைய நிலை என்ன? “நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்” என்ற வசனத்தின் நிறைவேறுதலை எதிர்பார்க்கிறீர்களா?

என் ஆத்துமாவே! கிறிஸ்துவின் நாளில் நீங்கள் சந்தோஷப்படுவதற்காக, வாழவும், உழைக்கவும், துன்பப்படவும், விசுவாசிக்கவும், மரிக்கவும் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். அதை எதிர்பார்த்திருங்கள்.

பவுலின் ஏழு விருப்பங்களை நாம் இவ்வாறு பார்த்தோம். அவருக்கு மற்ற விருப்பங்களும் இருந்தன என்பதில் சந்தேகமில்லை; ஆனால் இவைகள்தான் பிரதானமானதாயும், நிலையானதாயும் இருந்தன.

நிறைவுப் பகுதியாக, தேவனுக்கு முன்பாக ஒரு மனிதனின் நிலை எவ்வாறு காணப்படலாம் என்றால், அவனது ஆத்துமாவின் நிலையான விருப்பங்களையும், குணங்களையும் கொண்டு அறியப்படலாம். சாலொமோன் சொன்னதுபோல், “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்;” ஆகவே, “அவன் மனதில் விரும்பியபடி—அவனும் அப்படித்தான்” என்று நாம் கூறலாம்.

நம்முடைய ஆசைகள் கிறிஸ்துவில் மையமாக இருந்தால், நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்துவை அறிந்துகொள்வது, கிறிஸ்துவை ஆதாயப்படுத்துவது, கிறிஸ்துவை மகிமைப்படுத்துவது, கிறிஸ்துவில் காணப்படுவது, கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்பது, கிறிஸ்துவுடன் இருப்பது, கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் நாளில் சந்தோஷப்படுவது—இவையெல்லாம் நம் ஆத்துமாவின் ஆசைகளானால் நாமும் பவுலைப் போலவே உண்மையான கிறிஸ்தவர்களே!

நீங்கள் பார்க்கிற பவுலின் வாழ்க்கை கிறிஸ்துவுடன் தொடங்கி, கிறிஸ்துவோடு சென்று, கிறிஸ்துவுடன் முடிவடைகிறது. கிறிஸ்து அவருடைய அல்பாவும் ஒமேகாவுமாகக் காணப்பட்டார்.

கிறிஸ்துவின் கிருபை அவரை மாற்றியது, கிறிஸ்துவின் பிரசங்கம் அவரை ஊழியத்திற்கு அமர்த்தியது, கிறிஸ்துவின் வல்லமை அவரைத் தாங்கியது மற்றும் கிறிஸ்து வாக்களித்த மகிமை அவரை ஈர்த்தது. கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் அவருக்கு நிம்மதியைக் கொடுத்தது, கிறிஸ்துவின் மேல் கொண்ட அன்பு அவரை உற்சாகமாய் ஊழியம் செய்ய வைத்தது, கிறிஸ்துவுக்கான வைராக்கியம் அவரை விடாமுயற்சியுடன் தூண்டியது, மற்றும் கிறிஸ்துவால் வாக்குறுதியளிக்கப்பட்ட மகிமையின் நம்பிக்கை, இடைவிடாத தீவிரத்துடன் முன்னேற அவரைத் தூண்டியது. அப்படியானால், நம்முடைய பக்தி பவுலைப் போலவே இருக்கிறதா?

கிறிஸ்துவானவர்... நம்முடைய அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறாரா? நமக்கு ஆதியும் அந்தமுமாய் இருக்கிறாரா? நமக்கு வாழ்வின் மையமும் அனைத்துமாய் இருக்கிறாரா?

பரிசுத்த ஆவியானவரே, எங்களில், எங்களாலும், எங்கள் மூலமாகவும், ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் இயேசுவை மகிமைப்படுத்துங்கள்!

“என்னைப் பொறுத்தவரை, கிறிஸ்து எனக்கு ஜீவன்; சாவு எனக்கு ஆதாயம்!”

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.