உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

நோயுற்ற ஆத்துமாவிற்கான ஒரே மருத்துவர்
ஆசிரியர்: ஜோன் ப்ளேவெல் (1627 - 1691)
வாசிப்பதற்கான நேரம்: 7 நிமிடங்கள்

"இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்று சொன்னார்." (மத்தேயு 9:12)

நோயுற்ற ஆத்துமாக்களுக்கான ஒரே மருத்துவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. இந்த உலகம் மிகப் பெரியதொரு மருத்துவமனை. இது நோயுற்றவர்களாலும், மரித்துக் கொண்டிருக்கும் ஆத்துமாக்களாலும் நிரம்பியிருக்கிறது. 'பாவம்' என்கிற ஆயுதத்தால் அனைவரும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். சிலர் தங்களுடைய வேதனைகளைப் பற்றிக் கவலைப்படாமலும், தங்கள் வலியைக் குறித்த உணர்வுகூட இல்லாமலும் இருக்கிறார்கள். மற்றவர்களோ தங்கள் உணர்வுகளையும், ஆபத்துக்களையும் அறிந்தவர்களாய், தங்கள் நிலையைக் குறித்து முணுமுணுத்துக்கொண்டும் வருத்தத்துடனும் இருக்கிறார்கள்.

இரக்கம் நிறைந்த தேவன், அழிந்து கொண்டிருக்கும் உலகத்தின் மீது கொண்ட மிகுந்த மனதுருக்கத்தினால் பரலோகத்திலிருந்து ஒரு மருத்துவரை (மீட்பரை) அனுப்பினார். அந்த மருத்துவர் செய்ய வேண்டியவைகளைக் குறித்து எல்லாவற்றையும் விளக்கிக் கூறியிருந்தார்: "கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நறுங்குண்டவர்களுக்குக் காயக்கட்டுப்போடவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்..." (ஏசாயா 61:1; லூக்கா 4:18). அவர் ஜீவவிருட்சமாயிருக்கிறார்; "அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைவதற்கு ஏதுவானவைகள்" (வெளிப்படுத்தல் 22:2). அவர் "யெகோவா ரஃப்பா" - அதாவது 'நான் உன்னைக் குணமாக்குகிற கர்த்தர்'. அவர் "யெகோவா சித்கேனு" - அதாவது 'கர்த்தர் நமது நீதியாயிருக்கிறார்'.

வனாந்தரத்திலே உயர்த்தப்பட்ட வெண்கலச் சர்ப்பமானது ஜனங்களைக் குணப்படுத்தியது; அது நமக்கு ஒரு மிகச் சரியான முன்னுதாரணமாக இருக்கிறது. நம்முடைய மிகப் பெரிய மருத்துவர் இயேசு கிறிஸ்து. "சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும் உயர்த்தப்படவேண்டும்" (யோவான் 3:14). தம்மிடம் வருகின்ற எவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைவரையும் அவர் குணமாக்குகிறார். முக்கியமாக, கிறிஸ்து குணமாக்கும் நோயுற்ற ஆத்துமாக்களின் வியாதிகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

முதலாவது, குற்றம் என்கிற பாவம்: இது ஓர் ஆவிக்குரிய காயம். ஏழைப் பாவியாகிய ஒருவனுடைய இருதயத்தில் விழுந்த கத்திக்குத்து இது. ரோமன் கத்தோலிக்கர்களும் (மற்றும் பிரிவினை சபையைச் சேர்ந்தவர்களும்) தங்கள் இஷ்டத்திற்கு ஆதாரமின்றி, 'மரணத்துக்கு ஏதுவான பாவம்', 'மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம்' என்று வகைப்படுத்துகிறார்கள். ஆனால், எல்லாப் பாவங்களும் அதனுடைய சொந்த இயல்பில் மரணத்துக்குரியவையே என்பதை மறந்து விடக்கூடாது. "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23). பாவம் அதன் தன்மையில் மரணத்துக்குரியதாயினும், கிறிஸ்து தன்னுடைய அதிகாரமுள்ள விசேஷித்த இரத்தத்தினாலே (நறுமணமுள்ள மருந்து) அதைக் குணமாக்க வல்லமையுள்ளவராகவும், குணமாக்குகிறவராகவும் இருக்கிறார். "அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது" (எபேசியர் 1:7). உலகத்திலே மனிதனின் ஆத்துமா ஆழமாகவும், மரணத்துக்கு ஏதுவாகவும் உணரக்கூடிய காயம் இதுவே.

"இந்த ஆத்துமா நித்திய தண்டனைக்கும் துயரத்துக்கும் ஏதுவாக இருக்கிறது" என்கிற குற்ற உணர்வானது, ஆத்துமாக்களைத் தேவனின் நித்திய கோபத்தின் தண்டனைக்கு உட்படுத்துகிறது. பெரிதும் பயங்கரமுமான இந்தத் தேவனின் ஆக்கினைத் தீர்ப்பைவிடக் கொடூரமானது வேறொன்றுமில்லை; இது தாங்க முடியாதது. 'தண்டனை' என்கிற இந்த நோயைக் குணப்படுத்துவதற்குச் சிறந்த மருத்துவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. அவர் குற்றங்களை மன்னிப்பதன் மூலம் குணமாக்குகிறார். அதாவது, நமக்கு வரவேண்டிய அந்தத் தண்டனையிலிருந்து நம்மை விடுவித்து, தேவனுடைய கோபத்திற்கும் கண்டனத்திற்கும் ஆளாகியிருக்கிற நம்முடைய ஆத்துமாவை மீட்கிறார். "இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது" (கொலோசெயர் 1:13,14).

மேலும், "அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்" (மீகா 7:18-19). மேற்குறிப்பிட்ட வசனப்பகுதியில் இவ்விதமான நிவாரணங்கள் செய்யப்படுவதால், ஆத்துமாவானது தண்டனைக்கான அனைத்துக் கடமைகளிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறது. "கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாய் இருப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை" (ரோமர் 8:1). அனைத்துப் பாவக் கட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, பாவங்களின் நோயிலிருந்து குணமாக்கப்பட்டு, கிறிஸ்துவின் இரத்தத்தால் ஆத்துமாக்கள் மீது இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோயைக் குணப்படுத்தக்கூடிய வல்லமை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு மாத்திரமே உண்டு; அது வானத்திலும் பூமியிலும் வேறெங்கும் காணப்படவில்லை. "இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது" (எபிரேயர் 9:22). கிறிஸ்துவின் காயங்களிலிருந்து சிந்தின இரத்தத்தைத் தவிர வேறு எந்த இரத்தமும் இச்செயலைச் செய்ய முடியாது. "அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5). அவருடைய இரத்தம் மாத்திரமே குற்றமற்றதும் விலைமதிப்பற்றதுமாகும். "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே" (1 பேதுரு 1:19). அது தேவனுடைய இரத்தமாக இருப்பதால் எல்லையற்ற மதிப்புடையதாய் இருக்கிறது (அப்போஸ்தலர் 20:28). இந்த நோக்கத்திற்காகவே அந்த விசேஷித்த இரத்தம் ஆயத்தம் செய்யப்பட்டது (எபிரேயர் 10:5). இந்த இரத்தம்தான் நோயுற்ற ஆத்துமாவைக் குணப்படுத்தும். இது எவ்வளவு பெரிய சிகிச்சை! இந்தச் சிகிச்சைக்காக விசுவாசிகளின் ஆத்துமாக்கள் என்றென்றும் பரலோகத்தில் உள்ள தங்கள் ஒப்பற்ற மருத்துவரைப் புகழ்ந்து உயர்த்திக்கொண்டிருக்கும்: "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்" (வெளிப்படுத்தல் 1:5-6).

அடுத்து, நோயுற்ற பாவிகளின் ஆத்துமாவிற்கு ஒரே மருத்துவர் இயேசு கிறிஸ்துவே. அவரைத் தவிர வேறொருவரும் இல்லை என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன். இது பலவிதங்களில் அவருக்கு மகிமையைக் கொண்டு வருகிறது.

முதலாவது, ஆத்தும நோய்களின் தன்மை, அது எவ்வளவு தூரம் ஊடுருவி, எவ்வளவு ஆழம் சென்று இருக்கிறது என்பதையும், அதனால் உண்டாகக்கூடிய ஆபத்து என்ன என்பதையும் புரிந்துகொள்வதற்கு இயேசு கிறிஸ்துவைப் போல ஞானமும் விவேகமும் உள்ளவர்கள் யாரும் இல்லை. தங்களுடைய ஆத்துமா பாவத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிற நிலையை அறியாமலிருப்பவர்களின் நிலை எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது! "இளைப்படைந்தவனுக்குச் சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்" (ஏசாயா 50:4). பாவத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகளின் ஆழத்தை அவர் மட்டுமே புரிந்துகொள்கிறார்.

இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட ஆத்துமாக்களின் காயங்களைக் குணப்படுத்தக் கிறிஸ்துவைத் தவிர வேறெவராலும் முடியாது; நோய்வாய்ப்பட்ட ஆத்துமாவைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் அவரிடம் மட்டுமே உள்ளன. பரலோகத்திலோ பூமியிலோ கிறிஸ்துவின் இரத்தம் அல்லாமல் வேறு எதுவும் நடுங்கும் மனசாட்சியின் மீது குற்ற உணர்வு ஏற்படுத்தும் மரணக் காயங்களைக் குணப்படுத்த முடியாது. பிசாசினால் தயாரிக்கப்பட்ட மயக்க மருந்துகளால் மனசாட்சி மரத்துப்போகலாமே ஒழிய, கிறிஸ்துவின் இரத்தத்தினால் அன்றி வேறு எதினாலும் ஒருபோதும் சமாதானப்படுத்த முடியாது. "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபிரேயர் 9:22).

நோயுற்றுக் கொண்டிருக்கிற, மரித்துக் கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்காக இந்தக் கிறிஸ்துவைப் போன்றதொரு வைத்தியரை அருளிய தேவனுடைய கிருபையை எப்படி விவரிப்பது! "கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? வைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?" (எரேமியா 8:22). பிசாசுகள் தங்களுடைய சாபக் கேடுகளால் மாண்டுபோனதுபோல இவர்களின் பிரச்சனைகள், அவநம்பிக்கைகள் மற்றும் துரதிஷ்டமானவை பரிகாரமற்றதாய் இருப்பதில்லை! இவைகளுக்கு நிச்சயம் பரிகாரம் உண்டு.

இருந்தாலும் குணப்படுத்தமுடியாத நோய் ஒன்று உள்ளது. "எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை" (மத்தேயு 12:31). ஆனால், பாரத்தைச் சுமந்துகொண்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து, குணமடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் அவரிடம் சேருகிற எந்த ஆத்துமாவும் சுகமடையாமல் திரும்பிச் சென்றதில்லை. ஓ, விலைமதிக்க முடியாத இரக்கம்! நோயுற்ற பாவி பூரண குணமடையக்கூடியவனாய் மாறியது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! 'தங்களுடைய நிலையைவிட மிக ஆபத்தானது, மிக நம்பிக்கையற்றது ஒன்றில்லை' என்று ஒருகாலத்தில் சொல்லிய ஆத்துமாக்கள் இன்று பரலோகத்தில் ஆயிரங்கள் பதினாயிரங்கள் உண்டு. மிகப் பெரிய பாவிகள் கிறிஸ்துவால் பரிபூரணமாக மீட்கப்பட்டுள்ளனர். "பாவிகளை இரட்சிக்கக் கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது; அவர்களில் பிரதான பாவி நான்" (1 தீமோத்தேயு 1:15). "நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்" (1 கொரிந்தியர் 6:11). ஓ, ஒருபோதும் குறைவாக மதிப்பிட முடியாத அவருடைய இரக்கமே!

பாவத்திலிருந்து விடுதலை பெற்று குணமடையத் தேவன் எவ்வளவு அற்புதமான வழியை நிர்ணயம் செய்திருக்கிறார்! "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5). நோயாளி பிழைக்க வேண்டுமானால் மருத்துவர் மரிக்க வேண்டும். கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தைத் தவிர வேறு எதுவும் வானத்திலோ பூமியிலோ நம்மைக் குணப்படுத்தக்கூடியதாகக் காணப்படவில்லை. "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது... அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்" (எபிரேயர் 9:22, 26).

நம்முடைய ஆத்துமாவின்மீது உண்டாகும் ஒவ்வொரு புதிய காயத்தின்மீதும் கிறிஸ்துவின் இரத்தம் புதிதாகத் தடவப்பட வேண்டும். "ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்" (1 யோவான் 2:1-2). ஓ..! சாத்தானின் வேண்டுகோளுக்கு எளிதில் இணங்குகிறீர்களே, இதை மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள். நீங்கள் நினைப்பதுபோல பாவம் செய்வது அவ்வளவு எளிதானதா? மலிவானதா? ஆத்துமாக்களின் சுகப்படுத்தலுக்கு எந்தச் செலவும் ஆகாதா? ஆம், நமக்கு அது இலவசம்தான். ஆனால் கிறிஸ்துவுக்கு அது இலவசமல்ல. நீங்கள் அறியாவிட்டாலும் அதின் விலை என்ன என்பதை அவர் அறிவார்.

நீங்கள் உங்கள் பாவங்களிலிருந்து கழுவப்பட்டுப் புதுப்பிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மனந்திரும்புதலும் பாவத்தின் மீதான வருத்தமும் தொடர வேண்டும். "என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்" (சங்கீதம் 51:2). "அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவத்தை நீங்கச்செய்தார்" (2 சாமுவேல் 12:13). உங்கள் கலங்கின ஆவியின் வலியையும், வேதனையையும் நீங்கள் மீண்டும் உணர வேண்டும். அப்படித்தான் பரிசுத்தவான்கள் உணர்ந்து வாழ்ந்தார்கள். அதையே அவர்கள் சபையாக இப்படிச் சொன்னார்கள்: "என் சிறுமையையும், என் தவிப்பையும், எட்டியையும் கசப்பையும் நினைத்துக்கொள்ளும். என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது" (புலம்பல் 3:19-20). ஆம், உங்கள் கண்காணிப்பில் நீங்கள் தவறிப் புதிய பாவத்தில் விழுந்துவிட்டால், கிறிஸ்துவின் இரத்தத்திலுள்ள மன்னிப்பு உங்கள் ஆத்துமாக்களைக் குணப்படுத்தினாலும், பிதாவின் கரத்தில் உள்ள தடியினாலே உங்கள் சரீரத்திலோ அல்லது உங்கள் வெளிப்புறச் சுகவாழ்விலோ சில சிட்சைகளைப் பெற்றுக்கொள்ள நேரிடும் (சங்கீதம் 89:32).

பிணியாளியான ஆத்துமாவிற்கு ஒரே மருத்துவர் கிறிஸ்து என்றால், மனிதர்கள் கிறிஸ்துவின் வேலையை அவருடைய கைகளிலிருந்து எடுத்துக்கொண்டு தாங்களே மருத்துவராக முயற்சிப்பது எவ்வளவு பாவமும் முட்டாள்தனமானதுமாக இருக்கிறது! இவ்வாறு மூடநம்பிக்கையுடன் தங்கள் சரீரத்தைத் துன்புறுத்திக் கொள்வதின் மூலம் தங்களைக் குணப்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்; கிறிஸ்துவின் வழியாக அல்லாமல் தங்களுடைய சொந்த (அழுக்குபடிந்த) நீதியென்னும் துணியால் காயத்தைக் கட்ட முயற்சிக்கிறார்கள். குருடான ரோமன் கத்தோலிக்கர்களைப்போல் அறியாமையிலிருக்கும் அநேக மாம்சத்திற்குரிய பிரிவினை சபையினர் கூட, அறிக்கை செய்வதன் மூலமாகவோ, சடங்குகளை மறுசீரமைப்பதன் மூலமாகவோ, சீர்திருத்துவதன் மூலமாகவோ, கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வதன் மூலமாகவோ பாவம் அவர்கள் ஆத்துமாவில் ஏற்படுத்திய காயங்களை ஆற்றிவிடலாம் என நினைத்துப் போராடுகிறார்கள். ஆனால், அவர்கள் கிறிஸ்துவின் விசேஷமான இரத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இப்படிச் செய்வதால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. இவை ஒருவேளை சிறிது காலம் பாவத்திலிருந்து உங்களைத் திசை திருப்பலாம். ஆனால், பாவத்தினால் உண்டாகிற காயங்கள் அப்படியேதான் இருக்கும்: தோலோடு ஒட்டிப்போன காயங்கள் மறுபடி வெடித்து இரத்தத்தைக் கசியச்செய்யும். மெய்யான ஒரே பரிகாரியாகிய மெய்யான தேவனிடம் நெருங்கும்போது அவர் தரும் சுகம் இப்படி இல்லாமல் பூரணமாகக் குணப்படுத்தும்.

குணப்படும்படி கிறிஸ்துவின் கரத்தின்கீழும் அவரது பராமரிப்பிலும் இருக்கும் மக்கள் தங்களைப் பரிசோதித்துப் பார்க்கையில், தங்கள் காயங்களும் நோய்களும் குணப்படுகிறது என்பதை அறிந்து, பூரண குணத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கியவர்களாக இருப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்! சாதாரண உடல்நலக் குறைவு குணமாகிவிட்டால் நமக்கு எவ்வளவு பெலனும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது! இயற்கையானது அதன் வழியிலேயே சுகத்தைத் தருகிறது. அப்படியானால், நம்முடைய ஆத்துமாக்களும் தங்களைச் சீர்படுத்திக்கொண்டு எல்லாவிதங்களிலும் சௌகரியமாகவும் பெலனுள்ளதாகவும் இருக்கும்போது நாம் மகிழ்ச்சி அடையமாட்டோமா? இது எப்போது நடக்கும் என்றால், அறியாமையிலும் இருளிலும் இருக்கும் புரிதலில் ஜீவ வெளிச்சம் உதிக்கும்போது நடக்கும். (1 யோவான் 2:27)-ல் இதைக்குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.

உன் சித்தம் தேவனுடைய சித்தத்திற்கு எதிராக முரட்டாட்டமுள்ளதாகவும், கடினமானதாகவும் இருக்குமானால் அதனை மாற்ற, "ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?" (அப்போஸ்தலர் 9:6) என்று தேவனிடம் கேள்.

தன்னுடைய நேசத்திற்குரிய ஒரேபேறான குமாரனுக்காக ஒரு தகப்பன் துக்கிப்பது போலக் கடினமானதும், பிடிவாத குணமுடையதாகவும் இருந்த இதயமானது இப்போது பாவத்தைக் குறித்த உணர்வடைந்து, தன்னுடைய பாவநிலையைக் குறித்த மனமார்ந்த துக்கமுடையதாக மாறும். தேவனைப் புறக்கணித்த அது, தேவனைப்பற்றிய சிந்தனையால் நிறைந்து காணப்படும். அது ஆத்துமாவுக்கு இனிமையானதாகக் காணப்படும். செயல்படுத்த வேண்டிய காலம் வந்தபோதும், இதைவிட மேலாக ஒருபோதும் மகிழ்ச்சி அடைந்திருக்காது; இருதயத்தில் இருந்த மாய்மாலங்கள் வெளியேற்றப்பட்டுத் தூய்மையடைகிறது. இனி மனிதனுக்காக அல்ல, ஆண்டவருக்காக எல்லாவற்றையும் செய்வதற்கு நம்முடைய இருதயம் ஆரம்பிக்கும். "நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து" (கொலோசெயர் 3:24); "மனுஷருக்குப் பிரியமானவர்களாயிருக்க விரும்பாமல், நம்முடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமானவர்களாய்ப் பேசுகிறோம்" (1 தெசலோனிக்கேயர் 2:4). இரகசியமான பாவங்களைக் குறித்து மனதில் குத்தப்பட்டு, "வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்" (சங்கீதம் 119:113) என்று சொல்லும். கடமைகளில் மாய்மாலக்காரரைப் போல் இருப்பதை விரும்பாமல் இருக்கும் (மத்தேயு 6:5,6); "உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்" (சங்கீதம் 119:8) என்று சொல்லும். அவருடைய பரிசுத்தமும் பயங்கரமுமான கண்ணின் முன் வாழ்கிறேன் என்பதை உணர்ந்து வாழ வேண்டும். "நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு" (ஆதியாகமம் 17:1).

ஓ! குணமாகும் ஆத்துமாக்களின் இனிமையான அடையாளங்கள் இவைகள் எல்லாம். நிச்சயமாக, இப்படிப்பட்டோர் சிறந்த மருத்துவரின் கரங்களில் உள்ளனர். மேலும் அவர்கள் இன்னும் அடைய வேண்டிய பரிபூரணத்தை நோக்கிச் சென்றடைவர்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.