இந்தியா மிகவும் அழகிய நாடு. விண்ணை முட்டும் மலைச் சிகரங்கள், அடர்ந்த காடுகள், எழில்மிகு நதிக்கரைகள் மற்றும் பசுமையான சமவெளிகள் கொண்ட நாடு இது. ஆனால், கோபாலுக்கு இந்த அழகிய காட்சிகளைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை. காரணம், கோபால் பிறவியிலேயே கண்பார்வையற்றவர். மேலும், சிறு வயதிலேயே தன் பெற்றோர் இருவரையும் இழந்தவன். கோபாலுக்கு எஞ்சியிருக்கும் ஒரே அடைக்கலம் அவனுடைய பாட்டி மட்டுமே. ஏழ்மையாலும், முதுமையாலும் தளர்ந்துபோன அவனுடைய பாட்டியால் கோபாலை எப்படிப் பராமரிக்க முடியும்? ஆனால், "திக்கற்றவர்களுக்குத் தேவனே துணை!"
அது ஒரு மலைப்பிரதேசம் என்பதால், ஒரு சிறிய குகையையே கோபால் வீடாகப் பயன்படுத்தி வந்தான். அதில் கோபால், அவனது பாட்டி மற்றும் ஒரு வயதான நாய் வசித்து வந்தனர். பாட்டி கைராட்டையைப் பயன்படுத்தி நூல் நூற்று வந்தார். கோபால் பார்வையற்றவராக இருந்தாலும், கர்த்தர் அவருக்குச் சிறந்த ஞானத்தைக் கொடுத்திருந்தார். அந்த நாயின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி, மறுமுனையைத் தன் கையில் பிடித்துக்கொண்டு, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்வான். சில காலம் அவர்களுக்கு உணவுக்குப் பஞ்சமில்லாதிருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களுடைய வாழ்க்கை கடினமானது. அக்குகையில் தினமும் இந்த மூன்று ஜீவன்கள் மட்டுமே வசித்து வந்தன.
இப்படியே சில வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் கருணை நிறைந்த தேவனின் கண் கோபால் மீது பட்டது. அன்று வெயில் கொடுமையாக இருந்தது. வீடு திரும்புவதில் சோர்வாக இருந்த அந்த வயதான நாய், அன்று கடைசி முயற்சியாகக் கோபாலைக் கூட்டிக்கொண்டு, சற்றுத் தொலைவில் மரங்களுக்கு நடுவே இருந்த ஒரு பங்களாவிற்கு அழைத்துச் சென்றது.
வீட்டு கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு, வெள்ளை உடை அணிந்த ஒரு மனிதர் வெளியே வந்தார். அவர் ஒரு பெரியவர் என்பதை உணர்ந்த நாய் மெதுவாகக் குரைத்தது. தேவனின் அன்பையும், கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பையும் அறிவிக்க வந்த அந்த மிஷனரியின் உள்ளம், கோபால் படும் அவலத்தைக் கண்டு உருகியது.
"ஐயா! எனக்குப் பசிக்கிறது, நானும் என் பாட்டியும் நேற்று முதல் உணவு எதுவும் உட்கொள்ளவில்லை, உதவுங்கள்," என்று கோபால் கெஞ்சினான். இவன் உண்மையாகவே பார்வையற்றவனா என்பதை அறிய விரும்பிய மிஷனரி, ஒரு நாணயத்தை அவன் முன்பாகப் போட்டார். ஆனால் கோபால் அதைக் கண்டுகொள்ளாமல் அப்படியே நின்றான்.
அவன் பார்வையற்றவன் என்பதை உறுதி செய்துகொண்ட மிஷனரி, கோபாலை தான் நடத்தும் பள்ளிக்கு வந்து கடவுளுடைய வார்த்தையைக் கேட்கும்படி அழைத்தார். கோபால் தினமும் அந்தப் பள்ளிக்குச் சென்று, வராண்டாவில் அமர்ந்து தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொண்டான். அவன் தினமும் ஒரு வேத வசனத்தை மனப்பாடம் செய்து மிஷனரியிடம் ஒப்பிப்பான். மிஷனரி அவர்களின் வாழ்வாதாரத்திற்காகக் கொஞ்சம் பணமும் கொடுத்தார். இப்போது கோபால் பிச்சை எடுக்கும் வேதனையிலிருந்து விடுபட்டான்.
"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையுமுள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." (எபிரெயர் 4:12)
ஆரம்ப நாட்களில் கோபால் உணவுக்காக அந்த வேத வசனங்களை மனப்பாடம் செய்தாலும், படிப்படியாக அந்த வசனத்திலுள்ள சத்தியத்தை உணர்ந்துகொண்டான். மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவன் அசாதாரண ஞாபக சக்தியை அருளுகிறார்! சில நாட்களில் கோபால் வேதத்தின் பல பகுதிகளை மனப்பாடம் செய்து, அதன் ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் உள்ளத்தில் பிரகாசித்த தேவ வார்த்தையின் வெளிச்சத்தில், தான் ஒரு பாவி என்பதை கோபால் உணர்ந்தான். எனவே, கோபால் தேவனுக்கு முன்பாகத் தனது பாவங்களை அறிக்கையிட்டு, கர்த்தராகிய இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டான். அந்த எளியவன் விவரிக்க முடியாத பரலோக மகிழ்ச்சியை அனுபவித்தான்.
கோபாலின் விசுவாசம் சோதனைக்குள்ளானது. கோபாலை இரண்டு மாதங்கள் விடுதியில் தங்க வைத்துவிட்டு, மிஷனரி தன் சொந்த நாட்டுக்குச் சென்றார். இதற்கிடையில், "வயிற்றுப் பிழைப்புக்காக நம் மதத்தையும், குலதெய்வத்தையும் விட்டு வெளியேறுவது வெட்கக்கேடு" என அயலார் பழித்துரைத்ததை பாட்டியால் தாங்க முடியவில்லை. அந்த அழுத்தத்தின் காரணமாகப் பாட்டி கோபாலை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தாள். பின்னர் உணவு சரிவரக் கிடைக்காததாலும், பாட்டியின் மனக்கசப்பாலும் கோபால் உடல்நலம் குன்றி, காய்ச்சலால் படுத்த படுக்கையானான். படுக்கையில் கிடந்தாலும் மகிழ்ச்சியுடன் தேவனைத் தியானித்து, மெல்ல மெல்ல தேவ பாடல்களைப் பாடி, வேத வார்த்தைகளைத் தனக்குள் அசைபோட்டுக் கொண்டிருந்தான். ஆனால், நாளுக்கு நாள் நோய் முற்றியதால் கோபால் எழுந்திருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான்.
மிஷனரி திரும்பி வந்தபோது, சில வாரங்களுக்கு முன்பே கோபால் தன் பாட்டியுடன் குகைக்குச் சென்றுவிட்டதை அறிந்தார். உடனே அந்த நல்ல உள்ளம் கொண்ட மிஷனரி, குகையைத் தேடி வந்து மிகவும் சிரமப்பட்டு குனிந்து உள்ளே சென்றார்.
"அன்புள்ள கோபால், உனக்கு உடல்நிலை எப்படி உள்ளது?" என்று கேட்டார். யாருடைய குரல் என்று உடனே நினைவுகூர முடியாமல் தவித்த கோபால், பின்னர் அவரை அடையாளம் கண்டு, "பாட்டி, நான் மரிக்கப்போகிறேன். இந்த இருண்ட உலகில் என்னால் இனி தனியாக இருக்க முடியாது. ஆனால் மேலே பாருங்கள், எவ்வளவு பிரகாசமான வெளிச்சம்! பள்ளியில் ஐயா சொன்னது போல் பரலோகம் எவ்வளவு பிரகாசமாக ஜொலிக்கிறது என்று பாருங்கள். அதுதான் என்னுடைய ராஜ்யம். அங்கு நான் செல்கிறேன். அங்கேயே..." என்று உறுதியாகச் சொல்லிவிட்டு, மீண்டும் மெதுவாக வழக்கம் போல் சில வேத வாக்கியங்களை உச்சரித்தான். இதையெல்லாம் கேட்ட மிஷனரிக்கு அடக்க முடியாத துக்கமும், அதே வேளையில் ஆத்தும மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
கோபாலின் வார்த்தைகள் மிஷனரியின் இதயத்தைத் தொட்டன.
"என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்." (யோபு 19:25,26)
கோபால் அப்படியே குகையின் தரையில் சாய்ந்தான். மிஷனரியின் கண்கள் குளமானது; சட்டை கண்ணீரால் நனைந்தது.
இறுதியாக கோபால், "பாட்டி, என்னால் பார்க்க முடிகிறது! நான் பார்வையற்றவன் அல்ல, என்னால் இப்போது நன்றாகப் பார்க்க முடிகிறது. அங்கேதான் அந்தப் பெரிய ஒளியில் என் இரட்சகர் தோன்றுகிறார்! மிஷனரியிடம் சொல்லு பாட்டி, பார்வையற்ற கோபாலனுக்குப் பார்வை கிடைத்தது என்று சொல்! தேவ மகிமை! தேவ மகிமை!" என்று முழங்கியவாறே கோபால் உயிர் நீத்தான்.
மிஷனரி அவன் சடலத்திற்கு அருகில் மண்டியிட்டு, "தேவனே, பார்வையற்ற ஏழை கோபாலுக்கு உம் மகிமையைக் காண்பித்தீர். உம்மை விசுவாசித்து அவன் ஆத்துமா இரட்சிக்கப்பட்டு உம் மகிமைக்குள் பிரவேசித்தது. பிதாவே, தங்கள் கண்களால் சத்தியத்தைக் காண முடியாத இன்னும் பலரின் மனக்கண்களைத் திறந்தருளும்," என வேண்டினார்.
"தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை." (1 கொரிந்தியர் 2:9)