"பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக..." (மத்தேயு 6:9).
உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்றில், எத்தனை பேர் இந்தப் பரலோக ஜெபத்தை ஏறெடுத்திருப்பார்கள் என்பதை நம்மால் கணக்கிட முடியாது. கர்த்தர் கற்பித்த இந்த ஜெபத்தைப் பலர் செய்திருக்கலாம். ஆனால், நாம் எப்படி ஜெபிக்கக் கூடாது என்பதையும் கர்த்தர் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். எனவே, ஜெபத்தை எப்படிச் செய்யக்கூடாது என்பதை முதலில் விளக்கிவிட்டு, அதன்பிறகு எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை அவர் போதித்திருக்கிறார்.
1. பரிசேயரின் ஜெபம் - ஆர்ப்பாட்டமான ஜெபம்
முதலாவதாக, பரிசேயரின் மாய்மாலத்தைக் குறித்துப் பேசிய கர்த்தர், 'பரிசேயன் தேவனிடம் ஜெபிப்பது அவன் விருப்பமல்ல; தான் ஜெபிப்பதை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதே அவனின் விருப்பம்' என்று சொன்னார். ஒரு பறவை மற்றொரு பறவையுடன் இணைந்து நடனமாடுவதற்கு, அந்தப் பறவையை உற்சாகப்படுத்தச் சில பறவைகள் ஒரு பகுதியாகப் பாடுகின்றன; சில பறவைகள் ஆடுகின்றன. ஆனால், எங்கேயோ பாடிவிட்டு வேறு எங்காவது நடனமாடினால் எப்படி இருக்கும்? எங்கு ஆடுகிறார்களோ அங்குதான் இவையெல்லாம் முன் செய்யப்பட வேண்டும். அதுபோலவே, பரிசேயர்களும் மக்கள் கூட்டம் எங்கே கூடியிருக்கிறதோ, எந்தத் தெருவின் முனைகளில் மக்கள் பார்க்கிறார்களோ, அங்கே நின்று ஜெபிக்கிறார்கள். இது மக்கள் பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செய்யப்படும் வெளிப்படையான ஜெபம். கர்த்தர் இவர்களைச் சுட்டிக்காட்டி, எப்படி ஜெபிக்கக் கூடாது என்பதைச் சீஷர்களுக்குக் காண்பிக்கிறார்.
கர்த்தர் இவ்விதம் சொல்கிறார்: "அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்" (மத்தேயு 6:5). இப்படிப் பரிசேயர்களைப் போல ஜெபிப்பவர்கள், மக்கள் தங்களைப் பாராட்ட வேண்டும் என்றும், புகழ வேண்டும் என்றும் விரும்பியே இத்தகைய ஜெபத்தைச் செய்கிறார்கள். எனவே அவர்கள் தங்களின் அனைத்து மொழித் திறன்களையும் பயன்படுத்தி மேடையிலும், முடிந்தால் ஒலிபெருக்கியிலும் (மைக்கிலும்), தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தங்களை ஒரு பெரிய பக்திமான் போன்ற தோற்றத்தில் அனைவருக்கும் முன்பாகக் காட்டிக்கொள்ள மிகவும் முயற்சிப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் பார்ப்பவர்களை ஏமாற்றலாம்; ஆனால், தேவனை ஏமாற்ற முடியாது.
2. ஜெபத்திற்கு ஒரு நல்ல உதாரணத்தைக் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்னார்
"இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்தில் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்" (லூக்கா 18:10-12).
இந்தப் பரிசேயன், தன்னைச் சுற்றி யாரும் இல்லாவிட்டாலும் தன்னை எவ்வளவு உயர்த்திக் கொள்கிறான் என்பதைப் பார்க்கிறீர்களா? அவனுடைய எண்ணம் இவ்விதமாக இருக்கிறது: 'தேவனே, உம்முடைய பார்வைக்கும், என்னுடைய பார்வைக்கும் நான் எவ்வளவு உயர்ந்தவனாக இருக்கிறேன்! இந்த வரி வசூலிப்பவனை யூதர்களும், புறஜாதிகளும் வெறுப்பார்கள். இவனைப்போல அல்லாமல், என்னை நீர் ஒரு அதிசயத்தைப் போலப் படைத்தீர். வாரத்திற்கு இரண்டு முறையாவது உமக்காக என் வயிறு பசியாயிருக்கிறது. நான் சம்பாதித்தவற்றில் தவறாமல் தசமபாகம் கொடுக்கிறேன்.' இதுவே அந்தப் பரிசேயரின் ஜெபம்.
ஆனால், அந்த ஆயக்காரனோ "பாவியாகிய எனக்கு இரக்கமாயிரும்" என்று வேண்டிக்கொண்டான். இறுதியாக அந்த ஆயக்காரனே நீதிமானாகத் தீர்க்கப்பட்டான். இப்படிப்பட்ட நீதிமான்கள் எல்லாம் “நீதிமான்கள்” என்ற நகரத்தில் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பரிசேயர் இருக்கும் நகரம் இதிலிருந்து வெகு தொலைவில் இருக்கும். பல கிலோமீட்டருக்கு அப்பால் ‘சுயநீதிக்காரர்கள்’ என்ற நகரத்தில் பரிசேயர்கள் இருக்கின்றனர். ‘சுயநீதிக்காரர்’ என்ற அந்த நகரத்துக்கும் ‘நீதிமான்கள்’ என்ற இந்த நகரத்துக்கும் இடையில் வெகுதூரம் உள்ளது. பரிசேயர் அந்த நகரத்தை விட்டு கிறிஸ்துவிடம் திரும்பினால் ஒழிய, 'நீதிமான்களின்' இந்த நகரத்தை அடைய முடியாது.
அன்புள்ள வாசகரே, உன்னுடைய ஜெப வாழ்க்கையை ஆராய்ந்து பார். மற்றவர்களைப் பிரியப்படுத்தவும், அவர்கள் முன்பாக உன்னை உயர்ந்த பக்திமானைப் போலக் காண்பித்துக்கொள்ளவும் நீ ஆர்வமாக இருக்கிறாயா? உன் தனிப்பட்ட ஜெப வாழ்க்கை எப்படி உள்ளது? திருச்சபைகளிலும், மற்ற பொதுக் கூட்டங்களில் நடக்கும் ஜெபங்களிலும் உன்னுடைய இருதயம் எப்படி உள்ளது? மற்றவர்கள் உன்னைக் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா?
கர்த்தராகிய இயேசு கூறுகிறார்: "அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்... அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 6:5). தேவன் இனி அவர்களுக்குக் கொடுப்பதற்கு எதுவுமில்லை. அவர்கள் எதைப் பெற வேண்டும் என விரும்பினார்களோ, அந்த மக்கள் பாராட்டை அவர்கள் இந்த உலகத்திலேயே பெற்றுவிட்டார்கள். பின்பு அவர்கள் தேவனிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? மேலும், "நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்" (மத்தேயு 6:6).
3. புறஜாதிகளின் ஜெபம் - அர்த்தமற்ற ஜெபம்
சிலர் நீண்ட நேரம் ஜெபித்து 'ஆமென்' சொல்லிவிட்ட பிறகு, அவர்கள் எந்தக் காரியத்துக்காக ஜெபித்தார்கள் என்பதையே மறந்துவிடுவார்கள். அவர்கள் உதடுகளால் மட்டும் கர்த்தரை மகிமைப்படுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் இருதயம் தேவனுக்குத் தூரமாக இருக்கிறது. ஏதோ மனப்பாடம் செய்து ஒப்புவித்தது போல, ஜெபத்தில் பலவிதமான வார்த்தைகளைச் சொல்கிறார்கள், அவ்வளவுதான். நீங்கள் எப்படி ஜெபிக்கக் கூடாது என்று இயேசுகிறிஸ்து இவ்விதமாகக் கூறுகிறார்:
"அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்" (மத்தேயு 6:7).
“வீண்வார்த்தைகள்” என்றால் மூல மொழியான கிரேக்கத்தில் 'அர்த்தமற்ற வார்த்தைகள்' என்று பொருள். பிற மதத்தவர்கள் மந்திரங்களை உச்சரிப்பது போலவும், அவற்றின் அர்த்தம் தெரியாமல் திரும்பத் திரும்ப உச்சரிப்பது போலவும் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட ஜெபங்களைச் செய்கிறார்கள். அத்தகைய ஒரு ஜெபத்தைப் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பார்ப்போம். "தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்" (1 இராஜாக்கள் 18:26).
நாமும் அதுபோல ஜெபிக்கக் கூடாது என்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். கல்லையோ, மரத்தையோ, சூரியனையோ, மிருகங்களையோ, திசைகளையோ நாம் வணங்கவில்லை என்றாலும், உண்மையான தேவனை ஆராதிக்கிறோம் என்பதற்காக, நாம் வீண் வார்த்தைகளைக் கொண்டு ஜெபிக்கக் கூடாது. சில சமயங்களில் உணவை உண்ணும்போது செய்யும் ஜெபத்தில் நம்முடைய உதடுகள் பக்தியான வார்த்தைகளை உச்சரித்தாலும், நம்முடைய எண்ணம் வேறு எங்கோ இருக்கும். அப்படிப்பட்ட ஜெபத்தை தேவன் ஏற்றுக் கொள்வதில்லை; சொல்லப்போனால் அது ஜெபமே அல்ல.
இத்தகைய ஜெபங்களின் மற்றொரு அம்சம் என்னவென்றால், மீண்டும் மீண்டும் ஜெபத்தில் கேட்பதினால் தேவன் தங்களின் விண்ணப்பங்களைக் கேட்பார் என்றும், தங்களின் ஜெபத்திற்குப் பதிலளிப்பார் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். புறஜாதிகளுக்குத் தங்களின் தேவன் யார் என்றும், அவர் எப்படி இருக்கிறார் என்றும், அவருடைய எதிர்பார்ப்பு எப்படிப்பட்டது என்றும் தெரியாது. அதனால்தான், அவர்கள் பலவிதமான வார்த்தைகளால் ஜெபிக்கிறார்கள். கடுமையான தவம் செய்தாவது, விரதம் இருந்தாவது, பல மந்திரங்களைச் சொல்லியாவது, தங்களின் உடல்களை வருத்திக்கொண்டாவது, அவர்களின் தேவன் விண்ணப்பத்தைக் கேட்கும்படியாகவும், அவருடைய கவனத்தை ஈர்க்கும்படியாகவும் எதையாவது செய்கிறார்கள். எனவேதான் அவர்களின் பிரார்த்தனை முறைகள் ஏராளமாக உள்ளன. மேலும், 'எங்களுடைய விண்ணப்பங்கள் அவருக்குக் கேட்கிறதா இல்லையா' என்ற சந்தேக உணர்வும் அவர்களுக்கு உண்டு. சில கிறிஸ்தவர்கள் ஒரு காரியத்துக்காகப் பலமுறை ஜெபிப்பதும், எப்போதும் அந்த காரியத்தைக் குறித்தே ஜெபம் செய்து கொண்டிருந்தால், தங்களுடைய விண்ணப்பம் கேட்கப்படும் என்று நம்புகிறார்கள்.
"அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்" (மத்தேயு 6:8). நீங்கள் உங்கள் பிதாவின் சிம்மாசனத்திற்கு அருகில் செல்வதற்கு முன்பே, அவர் உங்களுடைய தேவைகள் அனைத்தையும் நன்கு அறிவார். அவருடைய பார்வை உன்னை விட்டு விலகாது. புறஜாதிகள் அறியப்படாத தேவனை வணங்குகிறார்கள்; ஆனால் நீங்கள் உங்கள் பரம பிதாவை வணங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படியாக இயேசுகிறிஸ்து எப்படி ஜெபிக்கக் கூடாது என்று சொல்லிய பிறகு, எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தார்.
4. கிறிஸ்தவனின் ஜெபம் - கிறிஸ்துவைப் பிரியப்படுத்தும் ஜெபம்
நீங்கள் ஜெபிக்க வேண்டிய விதமாவது என்று சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பு, பரிசேயர்களைப் போலவும் புறஜாதிகளைப் போலவும் செய்யக் கூடாது என்று சொன்ன கர்த்தர், நிச்சயமாக அதற்கு முற்றிலும் மாறாகவே ஜெபிக்கச் சொல்லியிருப்பார். எனவே கர்த்தர் கற்பித்த இந்த ஜெபத்தை, அவர் கற்பித்த விதமாகவே புரிந்துகொள்வோம்.
முதலில், மாயக்காரனின் ஜெபத்திற்கு மாறாக ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். "நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக" (மத்தேயு 6:9-10).
கர்த்தர் கற்றுக்கொடுத்த இந்த ஜெபத்தில் 'உம்முடைய நாமம்', ‘உம்முடைய இராஜ்யம்', ‘உம்முடைய சித்தம்' என்ற வார்த்தைகளால் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குக் கற்பிக்க விரும்புகிற காரியம் என்னவென்றால், 'உங்களைப் பற்றி அல்ல, உங்களுக்குரியதைக் குறித்து அல்ல, எல்லாவற்றையும் விட தேவனையே அதிகமாக மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்' என்பதே ஆகும். நம்மை உயர்த்திக் கொள்வதிலும், நம்முடைய இராஜ்யங்களைக் கட்டிக்கொள்வதிலும், நம்முடைய நீதியை நிலைநாட்டுவதிலும் நம்முடைய காலத்தை வீணாக்காமல், நம் எண்ணங்கள் அவைகளில் இல்லாமல், தேவனை அதிகமாக மகிமைப்படுத்துவதிலும் அவரைத் துதிப்பதிலும் நம்முடைய ஜெபங்கள் இருக்க வேண்டும். வெறும் வார்த்தைகளாலும் உதடுகளாலும் அல்ல, இருதயத்திலிருந்து நம்முடைய ஜெபங்கள் எழும்ப வேண்டும். அப்படிப்பட்ட ஜெபத்தை மாயக்காரர்கள் கேட்டால், ஒருவேளை அவர்களும் தேவனை ஆராதிக்கிறவர்களாக மாற்றப்படலாம். நம்முடைய ஜெபங்கள் எப்போதும் நம்மைக் குறித்து அல்ல, தேவனைக் குறித்தே இருக்க வேண்டும். நீங்கள் கர்த்தரை மட்டுமே மகிமைப்படுத்த விரும்பினால், உங்கள் தனிப்பட்ட ஜெபத்தை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.
இரண்டாவதாக, புறஜாதிகளின் ஜெபத்திற்கு மாறாக ஜெபிக்கும்படி இயேசுகிறிஸ்து சொன்னார்.
"எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்... எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்" (மத்தேயு 6:11-13).
ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தேவனை எழுப்புவது போலவோ, அல்லது புறஜாதி மக்கள் அவர்களின் தேவனிடம் மன்றாடுவது போலவோ இல்லாமல், உங்கள் பரலோக பிதாவிடம் உரிமையுடன் கேட்பதுபோல் கேட்க வேண்டும். பலமுறை கேட்டால் தேவன் தருவார் என்றோ, அதிகமான வார்த்தைகளால் தேவனைப் பிரியப்படுத்த முடியும் என்றோ எண்ணாமல், சிறு குழந்தைகளைப் போல நாம் செய்யும் சுருக்கமான ஜெபங்களைக் கூட அவர் கவனிக்கிறார் என்பதை அறிய வேண்டும். (கிரேக்க மொழியில் மத்தேயு சுவிசேஷத்தில் வருகிற பரலோக ஜெபம் மொத்தம் 57 வார்த்தைகளையும், லூக்கா சுவிசேஷத்தில் வருகிற பரலோக ஜெபம் மொத்தம் 38 வார்த்தைகளையும் கொண்டுள்ளது). அவர் நம்முடைய தேவைகள் அனைத்தையும் முன்கூட்டியே அறிந்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆனால், தம்முடைய பிள்ளைகள் அவர்களின் மன விருப்பங்களுக்காகவும், தேவைகளுக்காகவும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் தம்மிடம் வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
முடிவுரை
எப்படி ஜெபிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், எப்படி ஜெபிக்கக் கூடாது என்பதையும் கற்றுக்கொள்வது மிக அவசியம். நம்முடைய சுயநீதிக்காக நம்மை உயர்த்திக் கொள்வதற்காக அல்லாமல், தேவனை உயர்த்தும்படியாக நாம் அந்தரங்கத்தில் ஜெபிப்போம். அவரை மட்டும் மகிமைப்படுத்துவோம். வீண் வார்த்தைகளால் அல்ல, பலவிதமான வார்த்தைகளாலும் அல்ல; அன்றாட உணவுக்காகவும், பாவ மன்னிப்புக்காகவும் ஜெபிப்போம். தேவன் நம்முடைய தேவைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார், கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்குப் பாவ மன்னிப்பைக் கொடுத்திருக்கிறார் என்ற புரிதலுடனே நாம் அவரிடம் ஜெபிப்போம்.