"இழிவானவன்" என்ற தலைப்பைக் கண்டவுடனேயே இந்தக் கட்டுரையை வாசிப்பதைத் தவிர்க்கும்படி உங்கள் மனம் உங்களைத் தடுக்கலாம். ஆனால், அப்படி நடக்கக்கூடாது என்பதே என் விருப்பம். இந்தக் கட்டுரை உங்களைப் பிரியப்படுத்தாது என்பது உண்மைதான். இத்தகைய பிரசங்கங்கள் இன்றைய திருச்சபைகளில் கேட்கப்படுவது மிகவும் அரிது என்றும் சொல்லலாம். இருப்பினும், இந்தச் செய்தி வேத வசனத்தின்படியானது.
வீழ்ச்சியடைந்த மனிதன் "இழிவானவன்". அது எந்த அளவிற்கென்றால், அவன் "பாதி மிருகம், பாதி சாத்தான்" என்று சொல்லக்கூடிய அளவிற்கு இழிவானவன். இந்த விளக்கம் உண்மைக்குப் புறம்பானது அல்ல. ஏனெனில் வேதம் சொல்லுகிறது: “மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும்...” (யோபு 11:12). மேலும், அவன் "பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிறான்" (2 தீமோத்தேயு 2:26).
ஒருவேளை, "மறுபிறப்பு அடையாதவனுடைய நிலை வேண்டுமானால் அவ்விதமாக இருக்கலாம்; ஆனால், மறுபிறப்படைந்த (மீட்கப்பட்ட) மனிதனுக்கு அது பொருந்தாது" என்று நீங்கள் பதிலளிக்கத் தயாராக இருக்கலாம். ஒரு வகையில் அது உண்மைதான். ஆனால், மற்றொரு வகையில் அது முழுமையான உண்மையல்ல. சங்கீதக்காரன் இவ்விதமாகச் சொல்லுகிறார்: "நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்" (சங்கீதம் 73:22). இதை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லையா? நான் கற்றுக்கொள்ளாதவனாகவும், கீழ்ப்படியாதவனாகவும், தேவனுடைய கட்டளைகளுக்கு மாறாக நடக்கிறவனாகவும், ஒரு பரிசுத்தவானைப் போல அல்ல, குறைந்தபட்சம் ஒரு மனிதனைப் போலக்கூட நடந்துகொள்ளவில்லை என்று சங்கீதக்காரன் இங்கே ஒப்புக்கொள்கிறான்.
மேலும், "மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை" என்று யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் ஒப்புக்கொள்கிறான் (நீதிமொழிகள் 30:2). இப்படிப்பட்ட புலம்பல்கள் மறுக்கமுடியாத உண்மைகள். ஆனால், "பெந்தெகோஸ்தே அனுபவம்" அல்லது "இரண்டாம் ஆசீர்வாதம்" பெற்றுவிட்டதாகச் சொல்பவர்களிடமிருந்தோ அல்லது நாங்கள் "வெற்றியுள்ள வாழ்க்கை" வாழ்கிறோம் என்று பெருமைபாராட்டுபவர்களிடமிருந்தோ இத்தகைய புலம்பல்களைக் கேட்க முடியாது. யார் ஒருவர் தங்கள் இருதயங்களில் உள்ள கொடிய நோயை அடையாளம் கண்டு துக்கப்படுகிறார்களோ, அவர்களுடைய ஆவிக்குரிய நிலையை இந்தப் புலம்பல்கள் தெளிவாக விவரிக்கின்றன.
சமீபத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் எனக்கு இவ்விதமாக எழுதியிருந்தார்: "எனக்குள் பட்சபாதமும், தீய எண்ணமும் இருப்பதால் நான் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறேன். சில சமயங்களில் என் காயங்கள் அழுக்காகவும், அழுகினதாகவும் உள்ளன." எனவே வாசகரே! சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் ஆகியவற்றின் இந்த விளக்கத்தை நீங்கள் ஏற்காமல், "நாம் புதிய ஏற்பாட்டுக் காலத்தைச் சேர்ந்தவர்கள்; நாம் அதைவிடச் சிறந்த நிலையில் இருக்கிறோம்" என்று சொல்கிறீர்களா? ஒருவேளை யாராவது உங்களிடம் அவ்விதமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால், தேவனுடைய வசனமும் அதையே சொல்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அப்படியானால், ஒரு உன்னதமான கிறிஸ்தவனின் கூக்குரலைக் கேளுங்கள்: "நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்" (ரோமர் 7:14). நீங்கள் எப்போதாவது இப்படி உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால், உங்களுக்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன். வீழ்ந்த மனிதன் 'பாதி சாத்தான்' என்று விளக்குவதை நியாயப்படுத்தி, இயேசு கிறிஸ்து மறுபிறப்படைந்த பேதுருவிடம்: "எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்" என்று சொல்லவில்லையா? (மத்தேயு 16:23). உங்களுக்கும் எனக்கும் பொருந்தக்கூடிய இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லையா? இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால், நான் வெட்கத்துடன் தலைகுனிந்து, "ஐயோ! என்னிடமும் உண்டு" என்பேன்.
"இதோ, நான் நீசன் (இழிவானவன்)" (யோபு 40:4) — இது ஆபேலைக் கொன்ற பிறகு வேதனையில் காயீன் சொன்ன வார்த்தையல்ல; இயேசு கிறிஸ்துவை எதிரிகளின் கைகளில் ஒப்புக்கொடுத்த பிறகு யூதாஸ்காரியோத்து சொன்ன வார்த்தைகளும் அல்ல. "உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை" என்று தேவனே யாரைக் குறித்து சாட்சி கொடுத்தாரோ, அந்த யோபு சொன்ன வார்த்தைகள் இவை (யோபு 1:8). இந்த வார்த்தைகள் யோபுவின் ஆழ்ந்த சோகத்தின் காரணமாகவும், மிகுந்த துன்பங்களிலிருந்தும் பிறந்தவையா? அல்லது இது தன்னைத்தானே குற்றம் சாட்டும் மொழி நடையா? அப்படியென்றால் இன்றைய கிறிஸ்தவர்கள் அவற்றை எதிரொலிப்பது சரியா? இந்தக் கேள்விக்கான சரியான பதிலைத் தெரிந்துகொள்ள, மற்றுமொரு கேள்வியைக் கேட்க வேண்டும்.
"நான் இழிவானவன்" என்று யோபு எப்போது சொன்னார்? அவருடைய செல்வத்தின் அழிவுப்பற்றிய செய்தி முதலில் வந்தபோதா? இல்லை, அதற்கு யோபு, "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்" என்றே பதிலளித்தார். யோபுவினுடைய நண்பர்கள் அவனிடம் தர்க்கம் செய்தபோதா? இல்லை, அப்பொழுது அவன் தன்னை ஒரு அப்பாவியைப் போல் காண்பித்து, தனது நல்ல குணத்தைக் குறித்துப் பெருமை பாராட்டினார். அப்படியானால், "நான் நீசன்" என்று யோபு எப்போது அறிவித்தார்? கர்த்தர் அவருக்குத் தரிசனமானபோது! தேவன் தமது அற்புதமான பரிபூரணங்களை ஆச்சரியமூட்டும் விதத்தில் வெளிப்படுத்தியபோது யோபு சொன்ன வார்த்தைகள் அவை. தேவனின் மாசற்ற பரிசுத்தத்தின் ஒளியில் நின்று, அவருடைய மாபெரும் வல்லமையை உணர்ந்தபோது யோபு கூறிய வார்த்தைகள் அவை.
ஒரு நபர் ஜீவனுள்ள தேவனின் முன்னிலையில் இருக்கும்போது, "நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்" (தானியேல் 10:8) என்றும், "ஐயோ! அதமானேன்" (ஏசாயா 6:5) என்றும் நம்முடைய நிலை புலம்புவதாக இருக்கிறது. தேவன் தம்முடைய மகிமையுள்ள பரிபூரணங்களை ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தும்போது, அந்த மனிதன் தன்னுடைய பாழ்ப்பட்ட, இழிவான நிலையை உணருகிறான்.
தேவனின் விவரிக்க முடியாத மகிமையை எவ்வளவு அதிகமாக நம்முடைய சிந்தனையில் நிறுத்துகிறோமோ, அவ்வளவு அதிகமாக நம்மைப் பற்றிய மேன்மையான எண்ணத்தை நாம் இழக்கிறோம். அது தேவனுடைய ஒளியில் மட்டுமே சாத்தியம்! "உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்" (சங்கீதம் 36:9). தேவன் நம் மனதிலும், இருதயத்திலும் பிரகாசித்து, "மறைக்கப்பட்டுள்ள இருளை" வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்போதுதான், நம்முடைய இயல்பான தீய குணத்தை அறிந்து நம்மை நாமே வெறுக்கிறோம். "உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்" (ரோமர் 12:3). தேவனுடைய குணாதிசயத்தின் பரிசுத்த மேன்மையைப் பார்க்கும்போது, "இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன்..." (ஆதியாகமம் 18:27) என்று சொல்லத் தோன்றுகிறது. உண்மையான மனந்திரும்புதல் என்பது ஒரு மனிதனுக்கு அவனுடைய வீழ்ந்த நிலையைப் புரிய வைக்கிறது.
அப்படியானால், இன்று ஒரு கிறிஸ்தவன் "நான் இழிவானவன்" என்று சொல்வது நியாயமானதா? கிறிஸ்துவில் தனக்கிருக்கும் நீதியை விசுவாசத்தினால் பார்க்கும்போது அல்ல, மனிதன் தன் சுபாவத்தோடு என்னவாக இருக்கிறான் என்பதை வேத வசனத்தின் வெளிச்சத்தில் கண்டறியும்போது, அத்தகைய ஒப்புதல் வாக்குமூலம் சரியானது. மிகுந்த பணிவை வெளிப்படுத்துவதன் மூலம் 'மிகத் தாழ்மையானவன்' என்ற பெயரைப் பெறுவதற்காக அல்ல; அப்படிப்பட்ட வார்த்தைகளை இதயப்பூர்வமான கீழ்ப்படிதலுடனும், உடைந்த நொறுங்கிய இதயத்துடனும் தேவனிடம் வரும்போது சொல்ல வேண்டும். மேலும், அப்போஸ்தலனாகிய பவுல் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது போல் விசுவாசிகளுக்கு முன்பாக நாமும், "நிர்ப்பந்தமான மனுஷன் நான்!" (ரோமர் 7:24) என்று ஒப்புக்கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும். தேவன் நமக்குத் தெரியப்படுத்தியதை ஒப்புக்கொள்வதும், அதிலும் தேவ பயமுள்ளவர்களுக்கு முன் ஒத்துக்கொள்வதும் நமது சாட்சியின் ஒரு பகுதியாகும்.
கட்டுரை ஆசிரியர் "நான் இழிவானவன்" என்று சொல்வதற்கான நான்கு காரணங்கள்:
1. "என் கற்பனையில் நான் இழிவானவன்": உணர்வுகள் எனக்குள் கொதித்தெழும் போது எத்தனையோ துக்கமான காட்சிகள் என் கற்பனையில் காணப்படுகின்றன; எத்தனையோ தவறான எண்ணங்கள் உள்ளுக்குள் கிளர்ந்து எழுகின்றன. தேவனின் பரிசுத்த வேதத்தில் நம்முடைய சிந்தனையை ஈடுபடுத்திக்கொண்டாலும், மனம் அலைந்து திரிந்து, எண்ணங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. வேதம் சொல்வது போல: "உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது" (ஏசாயா 1:6). ஆயினும், "அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்" (சகரியா 13:1).
2. "என் சொந்த விருப்பத்தினால் நான் இழிவானவன்": தேவன் என் திட்டங்களைச் சீர்குலைக்கும்போது நான் எவ்வளவோ வருத்தப்படுகிறேன்! தேவனின் தீர்மானங்களை நான் விரும்பாதபோது, என் பொல்லாத இருதயத்தில் கலகம் எவ்வளவாய் பொங்கி எழுகிறது! குயவன் கையில் களிமண்ணைப் போல் இல்லாமல், எத்தனை முறை பின்னங்கால்களில் முரண்டுபிடிக்கிற கழுதையைப் போல் என்னுடைய வழியைத் தேர்ந்தெடுக்கிறவனாக இருந்தேன்! ஐயோ! சாந்தமும் மனத்தாழ்மையும் கொண்ட தேவனிடமிருந்து நான் கற்றுக்கொண்டது எவ்வளவு குறைவு! என் மாம்சம் சுத்திகரிக்கப்படுவதற்குப் பதிலாக அழுகுகிறது. ஆத்துமாவின் மீதான அதன் வைராக்கியம் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொரு ஆண்டும் உறுதிப்படுவது போல் காண்கிறது. "ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்!" (சங்கீதம் 55:6).
3. "என் மாறுபாடான நிலையில் நான் இழிவானவன்": "மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள்" (கலாத்தியர் 6:12) என்று சொல்லப்பட்டது போல, மற்றவர்களால் உயர்த்தப்படுவதற்கு நான் எத்தனையோ முறை ஆர்வமாக இருந்துள்ளேன்! ஆவிக்குரிய காரியங்களில் உயர்ந்தவனாக வேண்டும் என்ற விருப்பத்தால் நான் ஏமாற்றுக்காரனாய் இருந்தேன். உண்மையை மறைத்து, நான் சிறந்தவன் என்று மற்றவர்கள் நினைக்கும்படி நான் எத்தனை முறை செயல்பட்டிருக்கிறேன்! தற்பெருமையும், சுயநலமும் என்னுள் நிறைந்திருக்கின்றன. பிரசங்க பீடத்தில் நான் எவ்வளவு நேர்மையற்றவனாக இருக்கிறேன்! தேவனுக்குப் பதிலாக மனிதர்களின் பார்வையில் மெச்சிக்கொள்ளும்படியான ஜெபத்தை ஏறெடுக்கிறேன்; ஆவிக்குரிய உள்ளத்தில் சுத்தமாக இராமல் வெளிவேடத்தில் சுத்தமாக இருப்பது போல் நடிக்கிறேன்; நான் அனுபவிக்காத மற்றும் உணராத விஷயங்களைப் பற்றிப் போலியாகப் பேசினேன்! தொழுநோயாளியின் இடத்திற்குத் தகுதியான நான், என் உதடுகளை மூடிக்கொண்டு, "அசுத்தன், அசுத்தன்" என்று சத்தமாக அழுவதற்கு மேலும் மேலும் காரணங்கள் என்னில் கண்டுபிடிக்கிறேன்.
4. "என் நம்பிக்கையின்மையால் நான் இழிவானவன்": நான் பலமுறை சந்தேகங்களினாலும், தவறான புரிதல்களினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்! பலமுறை தேவனுக்குப் பதிலாக என்னுடைய சுயஞானத்தைச் சார்ந்திருக்கிறேன். "நான் கேட்டதை நான் பெற்றுக்கொண்டேன்" என்று நம்பி, பலமுறை ஏமாற்றம் அடைந்திருக்கிறேன் (மாற்கு 11:24). சோதனை நேரம் வரும்போது, இதற்கு முன்பு பெற்ற விடுதலையைப் பலமுறை மறந்துவிட்டேன்! துன்பங்கள் நெருங்கும்போது, காணப்படாத அவருக்கு நேராய் கண்ணோக்காமல், காணப்படுகிற சிரமங்களால் பலமுறை நான் மூழ்கியிருக்கிறேன். தேவனால் எல்லாம் கூடும் என்று உணராமல், "தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?" (சங்கீதம் 78:19) என்று நான் பலமுறை சொல்லத் தயாராக இருந்தேன். பரிசுத்த ஆவியானவர் விசுவாசத்தின் கிருபைக்கு ஜீவனைத் தருகிறார் என்பது உண்மைதான்; ஆனால் துன்ப நேரங்களில், தேவன் செயல்படவில்லை என்றால், பலமுறை என் ஆண்டவரை, "ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று? உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?" (மாற்கு 4:40) என்று சொல்ல வைப்பேன்.
பிரியமான வாசகரே! உங்களுடைய அனுபவம் மேற்கூறியவற்றுடன் எந்தளவிற்கு ஒத்துப்போகிறது? "தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்" என்பது உண்மையாகத் தோன்றுகிறதா? (நீதிமொழிகள் 27:19). இந்த நோய்வாய்ப்பட்ட இருதயத்தின் அறிகுறிகளை நான் விவரித்திருக்கிறேனா? நீ எப்போதாவது தேவனிடம், "மன்னியும் ஆண்டவரே, நான் இழிவானவன்" என்று ஒப்புக்கொண்டிருக்கிறாயா? எவ்வளவு தாழ்மையை உண்டாக்குகிற இந்த உண்மையை, கிறிஸ்துவுக்குள் உன் சகோதர சகோதரிகளிடம் நீ ஒப்புக்கொண்டாயா? அதை வாய்மொழியாக மட்டுமே ஒப்புக்கொள்வது எளிதானது; ஆனால் நீ மனதளவில் உணர்ந்துள்ளாயா?
"என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று" (எஸ்றா 9:6) என்று இரகசியமாகத் தேவனுக்கு முன்பாக உன் ஆத்துமா புலம்புகிறதா? அல்லது "நான் இழிவானவன்" என்ற வலிமிகுந்த அடையாளம், பரிசுத்தமான தேவனை அடைவதற்கு அது போதுமானது அல்ல என்பதை உன்னை உணர வைக்கிறதா?
இதோ, மூன்று காரியங்களைக் கவனியுங்கள்:
-
நீ தேவனுக்கு நன்றியுள்ளவனாக இருப்பதற்குப் பெரிய காரணம் இருக்கிறது: பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய மோசமான நிலையைக் காண்பித்ததற்காகவும், உன்னுடைய பாழடைந்த நிலையை நீ உணரும்படி வெளிப்படுத்தியதற்கும் நீ நன்றி சொல்ல வேண்டும். கோடிக்கணக்கான பெயர் கிறிஸ்தவர்கள் இருளில் இருக்கிறார்கள்; அதிலிருந்து உன்னைக் காப்பாற்றியதற்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும். கடலளவு அநியாயத்தை உன்னில் கண்டு துக்கத்தில் தவிக்கிற என் சகோதரனே! உன் அசுத்தமான உதடுகளால் கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தை உச்சரிப்பதற்குக்கூடத் தகுதியற்றவன் என்று நினைக்கிறாயா? அப்படியானால், அருவருப்பான செயல்களைச் செய்தும் வெட்கப்படாதவர்களைப் பார். "அவர்கள் அவமானம் அடைந்தோம் என்று உணரவில்லை; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்... என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரேமியா 8:12). அப்படிப்பட்ட சுயநீதியுள்ள மக்களில் நீ ஒருவனாக இல்லாததற்குத் தேவனுக்கு நன்றி சொல்வதற்கு கடனாளியாக இருக்கிறாய். பாவத்தால் குருடாக்கப்பட்ட உன் கண்களை இரக்கமுள்ள தேவன் திறந்தார் என்றும், இப்போது உன் அருவருப்பான அசிங்கத்தைக் கொஞ்சமாவது அவருடைய பார்வையில் பார்த்து, "நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்" (உன்னதப்பாட்டு 1:5) என்று சொல்லிக்கொண்டு தேவனைத் துதிப்பாய்.
-
கர்த்தருக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் நடக்க உனக்குப் பெரிய காரணம் இருக்கிறது: உனது இழிவான நிலையை குறித்த உணர்வு, அவருடைய முன்னிலையில் தாழ்மையான பணிவுடன், "தேவனே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்" என்று மார்பில் அடித்துக்கொண்டு உன்னை அழ வைக்கிறதா? ஆம், உண்மையான விசுவாசத்தில் உள்ள எவருக்கும் தேவனிடம் அத்தகைய விண்ணப்பமே இருக்கும். ஏனென்றால், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை தொடங்கியதைப் போலவே தொடர வேண்டும். "ஆகையால், நீ கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவனாகவும், அவர்மேல் கட்டப்பட்டவனாகவும், அவருக்குள் நடந்துகொள்ளுங்கள்" (கொலோசெயர் 2:6,7). "ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக..." (வெளிப்படுத்துதல் 2:5). ஐயோ, எவ்வளவு சீக்கிரமாகவும், எவ்வளவு எளிதாகவும் நமது தாழ்மையான உணர்வு நம்மை விட்டு விலகுகிறது! பெருமை என்பது நம்மை அடிக்கடி மேற்கொள்கிறது! அதனால்தான், "நீ எப்பேர்ப்பட்ட பாறையிலிருந்து வெட்டப்பட்டாய் என்பதையும், எப்பேர்ப்பட்ட குழியிலிருந்து எடுக்கப்பட்டாய் என்பதையும் நினைத்துக்கொள்" (ஏசாயா 51:1). தேவனுடைய முன்னிலையில் தாழ்மையோடு உன் குறைகளை உணர்த்தும்படி அவரிடம் கேட்க வேண்டும்.
-
உன்மீது திரியேக தேவனின் உன்னத அன்பைக் கண்டு நீ வியக்கப் பெரிய காரணம் இருக்கிறது: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய திரியேக தேவன், இப்படிப்பட்ட மோசமான ஒருவரின் மீது தங்கள் இருதயங்களை வைத்தது ஆச்சரியமான அதிசயம். மேலும், நம்முடைய சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் நாம் பாவங்களைச் செய்வோம் என முன்னறிந்த பிதாவாகிய தேவன் "உங்களை நித்திய அன்பினால் நேசித்தார்" என்ற உண்மை உங்களை ஆச்சரியத்தால் நிரப்ப வேண்டும். பாவ அழுக்கும் துர்நாற்றமும் வீசும் உன்னைப் போன்ற ஒரு நபரை மீட்க, குமாரனாகிய தேவன் தனது மகிமையான ஆடைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பாவ மாம்ச சாயலை ஏற்றுக்கொண்டார் என்பது மெய்யான அன்பே. இப்படிப்பட்ட இழிவான மனிதனின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்க வேண்டும் என்பதும், "பாவம் எங்கு பெருகுகிறதோ, அங்கே கிருபை எல்லையில்லாமல் பெருகும்" (ரோமர் 5:20) என்ற வேத சத்தியத்தை நிரூபிக்கிறது.
"நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மை கழுவி, நம்மை விடுவித்தவருக்கு... மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாவதாக. ஆமென்" (வெளிப்படுத்துதல் 1:5,6).