உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

பணத்தைப் பற்றிய வேதத்தின் பார்வை...
ஆசிரியர்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்

"தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன். ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன். ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான். சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்."

ஒரு கிறிஸ்தவனுக்குப் பணத்தைக்குறித்த இந்த அறிவு மிக அவசியம். யாக்கோபு இதைப் பற்றி நமக்குத் தெளிவாகக் கூறுகிறார். பணம் என்பது நிலையற்றது; பணத்தை நம்பி நாம் எதையும் செய்ய முடியாது. தேவனுடைய பார்வையில் பணம் என்பது காய்ந்த புல்லுக்கும், உதிர்ந்த பூவிற்கும் ஒப்பானதாகும்.

உலகக் கண்ணோட்டத்தில் பணம் மட்டுமே முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது; எல்லாமே பணத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. ஆனால், ஒரு கிறிஸ்தவன் பணத்தை எப்படிக் கையாள வேண்டும்?

ஒரு விசுவாசிக்கு வசதிகளையும் வாய்ப்புகளையும் இறையாண்மையுள்ள தேவனே தருகிறார். ஒரு விசுவாசி நியாயமான முறையில் உழைத்துப் பணத்தை ஈட்ட வேண்டியது மிக அவசியம். "உழைக்காதவன் உண்ணலாகாது" என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது.

கிறிஸ்தவனின் கடமைகள்:

  1. குடும்பத் தேவை: ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய தேவைகளையும், தனது குடும்பத்தாரின் தேவைகளையும் தன் வருமானத்தைக் கொண்டே பூர்த்தி செய்ய வேண்டும். தேவன் அவனை வாழும்படியாக அனுமதித்த சூழலில், அவன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். ஒருநாளும் தேவையற்ற கடன் என்ற சுமைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளக் கூடாது.

  2. தற்சார்பு: தனது குடும்பத்தாரின் தேவைகளுக்குத் தனது உறவினர்களையோ அல்லது சுற்றத்தாரையோ சார்ந்திருக்கக் கூடாது. அவனுடைய வருமானத்திலேயே அவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கேற்ப அவன் தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு, தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பணத்தை ஈட்ட வேண்டும். கிறிஸ்தவனுக்கு உழைப்பிலிருந்து ஓய்வு என்பது கிடையாது; ஏனெனில் ஓய்வு சோம்பேறித்தனத்திற்கும், சோம்பேறித்தனம் பாவத்திற்கும் அவனை இட்டுச் செல்லும்.

  3. தசமபாகம் மற்றும் ஊழியம்: ஒரு கிறிஸ்தவன் திருச்சபைக்குத் தசமபாகம் மற்றும் காணிக்கை கொடுக்கிற காரியங்களில் மிகுந்த கருத்தோடும், உண்மையோடும் இருக்க வேண்டும். தேவனுடைய ஆசீர்வாதம் நம்முடைய வாழ்வில் தொடர்ந்து நிலைத்திருக்க, நாம் நம்முடைய பணத்தை முறையாகத் திருச்சபைக்குச் செலுத்த வேண்டும். நம்முடைய தசமபாகத்தின் மூலமாகச் சபையின் தேவைகளும், சபைக்கு ஊழியம் செய்கிற போதகரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். "மனமுவந்து கொடுக்கிறவனைக் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்" என்று வேதம் சொல்லுகிறது.

பணத்தைச் செலவிடும் முறை:

ஒரு கிறிஸ்தவன் பணத்தை எப்படிச் செலவிட வேண்டும்?

  • முதலாவதாக, அவன் தன்னுடைய தேவைகளையும் தனது குடும்பத்தார் தேவைகளையும் தன்னுடைய வருமானத்தைக் கொண்டே பூர்த்தி செய்ய வேண்டும்.

  • இரண்டாவதாக, அவனது திருச்சபைக்கும், திருச்சபையின் மூலமாக நடைபெறும் ஊழியங்களுக்கும் அவனுடைய பணம் பயன்பட வேண்டும்.

  • மூன்றாவதாக, அவனது பணம் ஏழைகளுக்குத் தாராளமாகச் செலவு செய்யப்பட வேண்டும்.

பணத்தினால் வரும் ஆபத்து:

பணம் எப்போது தீங்கைக் கொண்டுவருகிறது? மனிதனுடைய பார்வையில் பணத்திற்கு ஒரு ஆழமான ஈர்ப்பு சக்தி இருப்பதாக அவன் கருதுகிறான். அதனால்தான் பணம் தேவனை மறக்கச் செய்து, பணத்தின் மீது நம்பிக்கை வைக்க நம்மை மயக்கிவிடும். ஆடம்பர வாழ்க்கை நம்மையும், நமது குடும்பத்தையும், நமது பிள்ளைகளையும் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும்.

முடிவுரை:

பணம் என்பது தேவனுடைய கிருபை! அதைத் தேவனே கொடுத்திருக்கிறார் என்ற அறிவு நமக்கு வேண்டும். "நான் அதிகமாகச் சம்பாதிக்கிறேன்" என்ற பெருமையோ அல்லது அகங்காரமோ நமக்கு வரும்போது, அது தேவனுடைய பார்வைக்கு அருவருப்பாய் இருக்கிறது.

வரலாற்றில் கிறிஸ்தவர்களின் பணம் அதிகமாகத் தேவனுடைய ஊழியத்திற்கும், சுவிசேஷம் அறிவிப்பதற்கும் உதவியாக இருந்திருக்கிறது. இதுவே பரலோகத்தில் நமது பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதற்கு அடையாளம். நமது நிலையில்லாத பணத்தைக் கொண்டு நமது சகோதர சகோதரிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவி செய்வது மிக அவசியம்.

நமது பிள்ளைகளுக்கு நேர்மையாகக் கஷ்டப்பட்டு உழைத்துப் பணத்தை ஈட்டுவதற்கும், அந்தப் பணத்தை நியாயமாக எப்படிச் செலவிடுவது என்பதையும் சொல்லிக் கொடுப்பது மிக மிக அவசியம்.

பொருளாசையை வெல்வதற்கு ஒரே வழி, நமது பணத்தை ஆண்டவரின் பணிக்குச் செலவு செய்வது மட்டுமே. நமது வருமானத்தைக் கொண்டு தேவனுக்கு மகிமையான வாழ்க்கையை வாழ்வோம்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.