“தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு” (1 தீமோத்தேயு 4:7)
சீர்திருத்தத்தின் ஐந்நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிற இவ்வேளையில், இது தொடர்பாக உருவான அனைத்து ஆக்கங்கள், கட்டுரைகள், புத்தகங்கள், கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றைக் கொண்டு, "சீர்திருத்தம் எதைப் பற்றியது?" என்று கேட்பது மிக அவசியமானது. விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுதல் அல்லது இரட்சிப்பின் கோட்பாடுகளைக் குறித்துச் சிலர் பிரதானமாகச் சொல்லலாம். இன்னும் சிலர், வேதப்பூர்வமான ஆராதனை குறித்தோ அல்லது கத்தோலிக்க மத போதனைக்கு எதிரான வேத அதிகாரத்தைக் குறித்தோ பேசலாம்.
ஆனால், சீர்திருத்தத்தைக் குறித்து நாம் அடிக்கடி மறந்துவிடும் ஒரு காரியம் என்னவென்றால், அது “இருதய சீர்திருத்தத்தின் எழுப்புதல்” (Revival of a reformation of the heart) அல்லது ஜான் கால்வின் கூறும் சொற்றொடரான “Biblical Pietas (Piety)” எனப்படும் “வேதப்பூர்வமான பக்தி” ஆகும். இந்தக் காரியம், குறிப்பாகச் சீர்திருத்தவாதிகளின் வாழ்விலும், அவர்களுடைய இறையியலிலும், பின்னால் எழும்பின தூய்மைவாதிகளின் (Puritans) வாழ்விலும் காணப்பட்டது. இந்தச் சிறிய ஆக்கத்தில், இருதயத்திலிருந்து வரும் பக்திக்கேதுவாக அல்லது “தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு” (1 தீமோத்தேயு 4:7) என்று பவுல் கூறுவதை, அதாவது வேதத்திற்கு ஒப்புக்கொடுத்து, ஐந்து முக்கியமான கிருபைகளை வளர்த்துக்கொள்வதைக் கால்வின் எப்படிக் குறிப்பிடுகிறார் என்பதைப் பார்ப்போம். முதலாவது, கால்வின் ‘பக்தியை’ (Piety) குறித்து என்ன சொல்லுகிறார் என்று பார்த்துவிட்டு, பிறகு அந்த ஐந்து முக்கியமான கிருபைகளை நாம் தியானிப்போம்.
ஜான் கால்வின் கூறும் இருதய பக்தி
‘Pietas’ (Piety) எனப்படும் பக்தியானது, கால்வினுடைய பிரதானமான போதனைகளில் ஒன்றாக இருந்தது. இது, தேவன் பக்கமாக மனிதன் காண்பிக்கும் சரியான, இருதயப்பூர்வமான நடக்கையை வெளிப்படுத்துகிறது. மேலும் இது, மெய்யான அறிவு, இருதயப்பூர்வமான ஆராதனை, இரட்சிக்கும் விசுவாசம், தேவ பயம், ஒப்புக்கொடுக்கப்பட்ட ஜெபம் மற்றும் மரியாதைக்குரிய அன்பு போன்றவற்றை உள்ளடக்கியதாய் இருக்கிறது. தேவன் யாராக இருக்கிறார், எத்தகையவர் என்பதைப் பற்றிய அறிவானது, சரியான விதத்தில் தேவனோடு நடப்பதற்கும், அவருக்குப் பிரியமான நடக்கையைக் கொண்டிருப்பதற்கும் நம்மை வழிநடத்துகிறது. கால்வின் எழுதுகிறார்: “நான் பக்தியை, தேவ அன்போடு இணைக்கப்பட்ட கனத்துக்குரிய பயபக்தி என்று அழைக்கிறேன்; அது அவருடைய நன்மைகளைப் பற்றிய அறிவைத் தூண்டுகிறது.”
தேவன் மீதுள்ள இந்த அன்பும் பயபக்தியும் அவரைப் பற்றிய எந்தவொரு அறிவிற்கும் தேவையானதும், வாழ்க்கை முழுவதும் இடம்பெறச் செய்ய வேண்டியதுமாய் இருக்கிறது. கால்வினைப் பொறுத்தவரையில், “கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கை முழுவதும், தேவபக்திக்கேதுவான பயிற்சியைக் கொண்ட அவசியமான ஓட்டமாய் இருக்கிறது” என்று கூறுகிறார்.
கால்வின் இங்கே கூறுவது என்னவென்றால், தேவபக்தி கொண்டுள்ள ஒரு மனிதன், தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் வாழ்கிறவனாய் இருக்கிறான். தேவன் மகிழ்ச்சியுள்ளவராய் இருப்பதால், அவன் தேவனில் மகிழ்கிறான். தேவபக்தி என்பது, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும்—நடக்கை, ஐக்கியம் என எல்லாவற்றிலும்—இருதயத்திலிருந்து தேவனை ஆராதிக்கும் விஷயமாக இருக்கிறது. ஆம், அந்த இருதயமானது கட்டுப்பாடின்றி, எப்பொழுதும், தொடர்ச்சியாகவும் உற்சாகமாகவும் தேவன் பேரில் அன்பும் பயபக்தியும் கொள்ள வாஞ்சிக்கிறது.
1 தீமோத்தேயு 4:7-ல் அப்போஸ்தலனாகிய பவுலைப் பொறுத்தவரை, பக்தி என்பது தெய்வபக்தி (Godliness); இவை இரண்டும் தேவனைப் பற்றிய பயத்திற்கு இணையானவை என்று கால்வின் கூறுகிறார். பழைய ஏற்பாட்டில் பக்திக்கான முக்கிய விளக்கமான சொற்றொடர் “கர்த்தருக்குப் பயப்படுதல்” என்றால், புதிய ஏற்பாட்டில் அது “தெய்வபக்தி” என்று ஒருவர் கூறலாம். சுவாரஸ்யமாக, 1 தீமோத்தேயு 4:7-ல் கால்வின் செய்த பிரசங்கத்தில், “தேவனுக்குப் பயப்படுகிற பயத்தில் பயிற்சி பண்ணு” என்று மொழிபெயர்க்கிறார். பக்தி, தேவபக்தி மற்றும் தேவ பயம் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டும் என்று தீமோத்தேயுவும் கால்வினும் வலியுறுத்துகின்றனர். இது தீமோத்தேயுவின் “சரியான, முக்கியமான அக்கறை மற்றும் பிரதானமான கரிசனையாய்” இருக்க வேண்டும். வெளிப்புறமான மதச்சடங்குகளோ, துறவறம் போன்ற கடுமையான செயல்களோ அல்லது உடற்பயிற்சி உட்பட எந்தவொரு மதச்சார்பற்ற செயலோ உண்மையான பக்திக்கு உண்டான இடத்தை ஆக்கிரமிக்க முடியாது. அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவிடம் கூறுவதைக் கால்வின் இவ்விதமாகச் சொல்லி முடிக்கிறார்: “அர்த்தமில்லாத அநேக காரியங்களுக்காய் நீங்கள் உழைத்துச் சோர்வடைய அவசியமில்லை. உங்கள் வைராக்கியத்துடனும் திறமையுடனும் நீங்கள் தெய்வபக்திக்கு மட்டும் உங்களை அர்ப்பணித்தால், மிகப் பெரிய காரியங்களைச் செய்வீர்கள்.”
நினைவில் கொள்ளுங்கள், அப்போஸ்தலனாகிய பவுல் தொடர்ந்து தீமோத்தேயுவிடம் 8-வது வசனத்தில் பக்தி, தேவபக்தி மற்றும் தேவனுக்குப் பயப்படுதல் ஆகியவை “எல்லாவற்றிற்கும் பிரயோஜனமுள்ளது” என்று கூறுகிறார். இந்தச் சொற்றொடரில் கால்வின் எழுதுகிறார்: “இதன் பொருள் தேவபக்தி கொண்ட மனிதனுக்கு எந்தக் குறைவும் இல்லை. தேவபக்தி அல்லது பக்தி என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஆரம்பம், மையம் மற்றும் முடிவாய் இருக்கிறது. எங்கு அது நிறைவாய் இருக்கிறதோ, அங்குக்குறைவு எதுவும் இல்லை. ஆகவே, நாம் தேவபக்தியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்; ஏனெனில் அதைவிட தேவன் நம்மிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறார்?”
ஜான் கால்வின் 1 தீமோத்தேயு 4:7-ல் தனது பிரசங்கத்தில் குறிப்பிடுவது போல, இருதய சீர்திருத்தத்தின் நோக்கமானது உண்மையான பக்தி, தேவனைப் பற்றிய பயம் மற்றும் முழு கிறிஸ்தவ வாழ்க்கை ஆகிய அனைத்தும் நம் மத்தியில் தேவனை கனப்படுத்தும் படியான பயபக்தியைக் கொண்டிருப்பதே ஆகும். ஒரே வார்த்தையில் சொல்வோமானால், நம்முடைய ஒரே குறிக்கோள் தேவனை மகிமைப்படுத்துவதே. அதாவது, இப்பிரபஞ்சத்தின் கட்டமைப்பிலும், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றிலும் பிரகாசிக்கும் தேவனுடைய குணங்களை ஒப்புக்கொள்வதும், அவற்றை உயர்த்திப் பிடிப்பதும் இதில் அடங்கியிருக்கிறது. தேவனை மகிமைப்படுத்துவது என்பது, ஒவ்வொரு உண்மையான பக்தியுள்ள மனிதனின் தனிப்பட்ட இரட்சிப்பைத் தாண்டிய செயலாய் இருக்கிறது. ஜான் கால்வின் கூற்றுப்படி, ஒவ்வொரு பக்தியுள்ள மனுஷனும் சொல்வது: “நாங்கள் தேவனுடையவர்கள்: ஆகவே அவருக்காக வாழ்வோம், அவருக்காக மரிப்போம். நாங்கள் தேவனுடையவர்கள்: ஆகவே, எங்களுடைய எல்லா நடக்கைகளையும் அவருடைய ஞானமும் சித்தமும் ஆளுகை செய்யட்டும். நாங்கள் தேவனுடையவர்கள்: ஆகவே, வாழ்வின் அனைத்துப் பகுதிகளும் அவரை மட்டுமே மகிமைப்படுத்துகிற நோக்கத்தோடு பிரயாசப்படட்டும்.”
ஆனால் நாம் தேவனை எவ்வாறு மகிமைப்படுத்துகிறோம்? ஜான் கால்வின் எழுதினார்: “தேவன் நம்மூலமாய் மகிமைப்படும்படியான ஒரு வழியை நமக்கு எழுதிக்கொடுத்துள்ளார். அதுவே அவருடைய வார்த்தையின் கீழ்ப்படிதலில் அடங்கியுள்ள பக்தி. இந்த எல்லைகளை மீறிச் செயல்படுகிற அனைவரும் தேவனை மதிக்காதவராயும், மாறாக அவரை அவமதிப்பவர்களாயும் இருப்பார்கள்.”
பக்தியைக் குறித்ததான ஐந்து முக்கிய கிருபைகள்
ஜான் கால்வினைப் பொறுத்தவரை, இத்தகைய பக்தி இருதய சீர்திருத்தத்தின் மையத்தில் உள்ளது. இது கிறிஸ்தவ வாழ்வின் இதயம் போன்றது; அதே போல் இதுவே தொடக்கமும் முடிவும் ஆகும். இத்தகைய பக்தி கடைப்பிடிக்கப்பட வேண்டியதாயும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதாயும், தேவனுடைய வார்த்தைக்கு அடிபணிந்து வாழ வேண்டியதாயும் இருக்கிறது. இது கால்வின் அவர்களுக்கு, அன்றாட கிறிஸ்தவ வாழ்வின் பல நடைமுறை காரியங்களை உள்ளடக்கியதாய் இருந்தாலும், இதயத்திலிருந்து வெளிவரும் ஜெபம், மனந்திரும்புதல், சுயத்தை வெறுத்தல், சிலுவை சுமத்தல் மற்றும் கீழ்ப்படிதல் ஆகிய ஐந்து முக்கியமான கிருபைகளை வலியுறுத்திய பக்தியாய் இருந்தது. என்றைக்கு ஒருவர் இருதயத்தின் உண்மையான சீர்திருத்தத்தை அனுபவிக்கிறாரோ, அப்போது இந்தக் கிருபையின் பகுதிகளில் எதிலும் குறைவுடன் இருக்க முடியாது.
1. ஜெபம்
முதலாவதாக, இருதயப்பூர்வமான ஜெபம் பக்திக்குரிய வாழ்விற்குப் பிரதானமான அம்சமாயும், தொடர்ச்சியான விசுவாச வாழ்விற்கு அடிப்படையாயும் இருக்கிறது என்று கால்வின் கூறுகிறார். விசுவாசி தேவனைத் துதித்து, அவருடைய மாறாத உண்மைத்தன்மையை அண்டிக்கொள்ளும்போது, ஜெபமானது தேவனுடைய கிருபையைக் காண்பிக்கிறதாய் இருக்கிறது. மேலும் பொதுவான ஜெபமும், தனிப்பட்ட ஜெபமும் பக்தியை வெளிப்படுத்துகிறதாய் இருக்கின்றன.
ஜெபமானது நம்மைக் கிறிஸ்துவோடு நெருங்கி ஜீவிக்கவும், ஐக்கியப்படவும் வைப்பதினால், இதிலே நாம் உறுதியாய் தரித்திருக்கவும், அதை ஒழுங்காய், தவறாமல் கடைப்பிடிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். ஜெபமானது தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள வழியாய் இருக்கிறது. இவ்வழியின் மூலமாக மட்டுமே, ஒரு கிறிஸ்தவன் தேவனுக்கு மகிமையையும் துதியையும் ஏறெடுக்கிறவனாயும், அவருடைய வார்த்தைக்கு ஒப்புக்கொடுத்து அவருடைய உதவியைப் பெறுகிறவனாயும் இருக்கிறான்.
2. மனந்திரும்புதல்
இரண்டாவதாக, உண்மையான மனந்திரும்புதல் ஜெபம் மற்றும் விசுவாசத்திற்குண்டான கனியாய் இருக்கிறது. மார்ட்டின் லூத்தர், தன்னுடைய 95 ஆய்வுக்கட்டுரைகளில் (Theses), கிறிஸ்தவ வாழ்வின் அனைத்துப் பகுதியிலும் மனந்திரும்புதல் முக்கிய அம்சமாகக் காணப்பட வேண்டும் என்று சொல்லுகிறார். ஜான் கால்வின் கூட, மனந்திரும்புதல் என்பது வாழ்க்கை முழுவதுமே காணப்படும் காரியம் என்றும், அது இருதய சீர்திருத்தத்திற்கு மிக முக்கியமான அம்சமாய் இருக்கிறது என்றும் சொல்லுகிறார். ஆம், மனந்திரும்புதல் என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பம் மாத்திரமல்ல, இது கிறிஸ்தவ வாழ்க்கையாகவே இருக்கிறது. இதில், பாவத்தை அறிக்கை செய்கிற காரியமும், பரிசுத்தத்தில் வளருகிற காரியமும் உள்ளடங்கியிருக்கிறது. மனந்திரும்புதலானது, ஒரு விசுவாசி அவனுடைய வாழ்க்கை முழுவதும் சுவிசேஷத்திற்குச் செவிசாய்க்கும் வண்ணமாக, அவனுடைய மனதிலும், இருதயத்திலும், நடத்தையிலும், சித்தத்திலும் காணப்படுகிறது.
3. சுயத்தை வெறுத்தல்
மூன்றாவதாக, தேவனை மையமாகக் கொண்ட சுயவெறுப்பு, தியாகத்தோடு கூடிய பக்தி வாழ்க்கையாய் இருக்கிறது. உண்மையான பக்தி, கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட விசுவாசியின் வாழ்க்கையில் ஆழமாய் பதிந்த ஒன்றாகும். அத்தகைய இணைக்கப்பட்ட வாழ்வில் காணப்படும் கனி, சுயத்தை வெறுத்தல் ஆகும். இதைக் குறித்து ஜான் கால்வின் மூன்று முக்கியமான காரியங்களை வலியுறுத்திப் பேசுகிறார். முதலாவது, நாம் வாழுகிற நம்முடைய வாழ்க்கை நம்முடையது அல்ல, முற்றிலுமாய் தேவனுடையது என்ற உணர்வு; அவருடைய வார்த்தையின்படி நாம் அவருக்காக வாழ்கிறோம், மரிக்கிறோம். இரண்டாவதாக, சுயத்தை வெறுத்தல் என்பது, நம்முடைய வாழ்க்கை முழுவதும் ஆண்டவரைப் பிரியப்படுத்துகிற நோக்கத்தைக் கொண்டுள்ளதாய் இருக்கிறது. சுயத்தை வெறுத்தல் என்பது சுயத்தை நேசிப்பதற்கு எதிரான காரியம்; ஏனென்றால், இது நமக்கு மேலாக தேவன் மேல் அன்புகூருகிற காரியமாய் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முழுவதும் தேவனை நோக்கியே இருக்க வேண்டும். மூன்றாவதாக, சுயத்தை வெறுத்தல் என்பது ஜீவபலியாக நம்மையும், நமக்குரிய யாவற்றையும் அவருக்காக முழுமையாய் ஒப்புக்கொடுத்து வாழ்வதே ஆகும். அப்பொழுது, மற்றவர்களை நாம் நம்மைக் காட்டிலும் அன்புசெலுத்துவோம், மதிப்போம். அவர்களை வெறும் மனிதர்களாகப் பார்க்காதபடி, அவர்களுக்குள்ளும் தேவசாயலைக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அவர்கள் மீது அன்பு செலுத்துவோம்.
4. சிலுவை சுமத்தல்
நான்காவதாக, சுயத்தை வெறுத்தல் என்பது ஒரு பக்கம் நம்முடைய உள்ளான வாழ்க்கையில் கிறிஸ்துவுக்கு ஒப்பாய் மாறுதலை வலியுறுத்திச் சொல்லும்போது, மறுபக்கம் கிறிஸ்துவைப் போலச் சிலுவையைச் சுமத்தலானது கிறிஸ்துவுக்கு ஒப்பான வெளிப்புற வாழ்க்கையைக் காட்டுகிறது. யாரெல்லாம் கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருக்கிறார்களோ, அவர்கள் தங்களைத் தாங்களே பலவிதமான தீமைகள் நிறைந்த பாடுகள், துன்பங்கள் கொண்ட வாழ்க்கைக்காக ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கால்வின் கற்பிக்கிறார். இதற்குப் காரணம், இந்த வீழ்ந்து போன உலகத்தில் உள்ள பாவத்தின் பாதிப்பு மட்டுமல்ல, விசுவாசி கிறிஸ்துவோடு கொண்டுள்ள ஐக்கியத்தினாலும் ஆகும். இயேசுவானவருடைய வாழ்க்கையும் தொடர்ச்சியான பாடுகள் கொண்டதாக இருந்ததால், நம்முடைய வாழ்க்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தக் காரியத்தில் நாம் பார்ப்பது என்னவென்றால், நாம் அவருடைய சிலுவை மரணத்தினால் உண்டாகும் பிராயச்சித்த பலியில் பங்கடைவது மாத்திரமல்ல, ஆவியானவரின் பணியாகிய ‘கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாய் மாற்றப்படுவதற்கும்’ பங்கடைகிறோம். இந்த வழியில்தான் சிலுவை சுமத்தல் நம்முடைய பக்தியைச் சோதிக்கிறது. சிலுவை சுமத்தல் என்ற பாதையின் வழியாக நாம் நம்பிக்கையில் எழும்புகிறவர்களாயும், பொறுமையில் கற்றுக்கொள்ளுகிறவர்களாயும், கீழ்ப்படிதலில் பயிலுகிறவர்களாயும், பெருமையில் சீர்ப்படுத்தப்படுகிறவர்களாயும் காணப்படுவோம்.
5. கீழ்ப்படிதல்
ஜான் கால்வின் கூற்றுப்படி, பக்திக்கு மிக அவசியமான ஒன்று தேவனுடைய சித்தத்திற்கு நிபந்தனையற்ற கீழ்ப்படிதல் ஆகும். தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் என்பது, நம்முடைய பாவத்திற்குண்டான மன்னிப்பைக் கிறிஸ்துவில் பெறுவதும், அவருடைய வார்த்தையில் அவரை அறிவதும், அன்பான இருதயத்தோடு அவரைச் சேவிப்பதும், அவர் காண்பித்த நன்மைக்கு நன்றியாக நற்செயல்களைச் செய்வதும், நம்முடைய விரோதிகளை அன்புகூரும் நோக்கத்தோடு நம்முடைய சுயத்தை வெறுப்பதுமே ஆகும். இவ்விதமான காரியம், அவருடைய வார்த்தைக்கும், அவருடைய சித்தத்திற்கும், அவருக்கே முழுமையாய் ஒப்புக்கொடுக்கிறதில் உள்ளடங்கியிருக்கிறது. ஜான் கால்வின் தான் வைத்திருந்த முத்திரையில் பதிக்கப்பட்ட வார்த்தை: “ஓ தேவனே! என் இருதயத்தை உண்மையும் உத்தமத்தோடும் உமக்கே அர்ப்பணிக்கிறேன்.” இதுதான் உண்மையான பக்திக்குரிய ஆசையும் அடையாளமும் ஆகும். பக்தி என்பது அன்பு, சுதந்திரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றோடு இணைக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தைக்கும் சித்தத்திற்கும் கீழடங்கிப்போகிற காரியமாயிருக்கிறது. அன்பு ஒன்றே தேவபக்தியைச் சட்டவாதத்திற்குச் சிதைத்துவிடாதபடி காத்துக்கொள்ளுகிறது.
ஜான் கால்வினைப் பொறுத்தவரையில் ஜெபம், மனந்திரும்புதல், சுயத்தை வெறுத்தல், சிலுவை சுமத்தல் மற்றும் கீழ்ப்படிதல் போன்ற அனைத்தும் கவனமாகக் கையாளப்படும்பொழுது உண்மையான பக்தியின் இருதயத்துடிப்பைச் சரியாக வைத்துக்கொள்ளலாம்.
முடிவுரை
இருதய சீர்திருத்தத்தின் பக்தியைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில் தீமோத்தேயுவுக்கும், அந்நாட்களில் இருந்த சபைகளுக்கும் அப்போஸ்தலனாகிய பவுலுடைய பிரதானமான கட்டளை இதுவாகவே இருந்தது. ஆம், இது இந்நாட்களிலும் மிக மிக அவசியமான ஒன்றாய் இருக்கிறது. நாம் இவ்விதமான பக்தியை அனுதினமும் வேதம் போதிக்கும் ஆரோக்கியமான உபதேசத்தின் அடிப்படையிலும், ஜீவனுள்ள வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் பரிகார பலியின் அடிப்படையிலும் ஆவியானவரின் கிருபையினால் பயிற்சி செய்ய வேண்டும். இது நம்முடைய பலத்தினால் கூடாததும், நாம் அனுதினமும் போராட வேண்டியதாகவும் இருக்கிறது. தொடர்ச்சியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்தும், மேலே கண்ட ஐந்து கிருபைகளைக் கவனமாய்க் கையாளும்போது, நாம் ஆண்டவருக்கு நன்றியுள்ளவர்களாயும், இப்படியான உண்மையான பக்தியிலே தொடர்ந்து முன்னேறிச் செல்பவர்களாயும் இருப்போம்.
ஜான் கால்வின் தன்னுடைய பக்திக்குரிய வாழ்க்கை வாழ்வதில் மிகவும் பிரயாசப்பட்டார். இயேசு கிறிஸ்துவில் அவருடைய கிருபையையும் நன்மையையும் ருசிபார்த்த அவர், ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் தன்னுடைய இருதயத்திலிருந்து தேவனுடைய சித்தத்தை அறிவதும், அதன்படி செய்வதுமான பக்திக்குரிய வாழ்வைக் கொண்டிருந்தார். அவருடைய இறையியல் பணி அனைத்துமே கிறிஸ்துவை மையமாகக் கொண்ட இருதய சீர்திருத்தத்தைக் கொண்டதாய் இருந்தது. இவ்விதமான இருதய சீர்திருத்தத்தைக் கொண்ட பக்தியே சபையையும், சமுதாயத்தையும், உலகத்தையும் மிக ஆழமாய் பாதித்தது. தேவன் தாமே இவ்விதமான ஆசீர்வாதத்தை இன்றைக்கு நமக்கும், உலகளாவிய சபைக்கும் தந்தருள்வாராக.