நீண்ட காலத்திற்கு முன்பு, கிரேக்க நாட்டை “ஆர்க்யாஸ்” என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் சுயநலமிக்கவனாகவும், மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளைக் குறித்துச் சிறிதும் கவலைப்படாதவனாகவும் இருந்தான். எப்போதும் உல்லாசமாக இருப்பதும், பலவிதமான விருந்துகளை உண்பதும், மது அருந்துவதுமே அவனுடைய சிந்தையாக இருந்தது. எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திப்பது அவன் பார்வையில் முட்டாள்தனமாகத் தோன்றியது. இதனால் நாட்டு மக்கள் அந்த அரசனை வெறுத்தனர். இறுதியாக, அவனைக் கொல்வதற்கு அவர்களில் சிலர் ஒரு சதித்திட்டம் தீட்டினார்கள்.
அந்தச் சதித்திட்டத்தைக் குறித்து அரசனாகிய ஆர்க்யாஸ்க்கு எதுவும் தெரியாது. ஆனால், தொலைதூர நகரமான “ஏதென்ஸ்” பட்டணத்திலிருந்த அவனது நண்பர் ஒருவருக்கு இது தெரியவந்தது. உடனே அவர் அரசனுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில், "அரசனே, உனக்கு ஆபத்து! எனவே நீ எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நாளைய தினத்தில் உன்னைக் கொல்வதற்கு ஒரு பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கவனமாக இருந்து, உடனே அந்தச் சதியிலிருந்து தப்பித்துக்கொள்" என்று எழுதியிருந்தார். மேலும், அந்த ஆபத்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை ஒரு ஒற்றனிடம் கொடுத்து அனுப்பினார். அந்த ஒற்றனும் அரசனாகிய ஆர்க்யாஸின் அரண்மனைக்குப் புறப்பட்டான்.
அந்தச் சமயத்தில் ஆர்க்யாஸ் அரசன் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்து, தனது நண்பர்களுடன் உல்லாசமாக புசித்துக் குடித்துக்கொண்டிருந்தான். நீண்ட தூரம் பயணம் செய்த பிறகு, அந்த ஒற்றன் அரண்மனையை வந்தடைந்தான். அவன் அரண்மனை காவலாளியிடம், "அரசனுக்கு மிக முக்கியமான ஒரு கடிதத்தைக் கொடுப்பதற்காக நான் ஏதென்ஸ் பட்டணத்திலிருந்து வந்துள்ளேன்" என்றான். காவலாளிகள் அவனை அரசனிடம் செல்ல அனுமதித்தனர். அந்த ஒற்றன் அரசனிடம் சென்று, "என் அருமை மன்னரே, ஏதென்ஸ் பட்டணத்திலிருந்து உமது நண்பர் என்னை அனுப்பியதற்குக் காரணம், இந்தக் கடிதத்தை நீங்கள் உடனடியாக வாசிக்க வேண்டும் என்பதே. இதில் மிக முக்கியமான, ஆபத்தான செய்தி இருக்கிறது!" என்று பணிவுடன் கூறினான்.
ஆனால், மது போதையில் இருந்த அரசன் அந்தக் கடிதத்தை வாசிக்க விரும்பாமல், "ஹா... ஹா..." என அலட்சியமாகச் சிரித்துவிட்டு, “தீவிரமான காரியங்களை நாளை கவனிப்போம்” (Serious things tomorrow) என்று கூறிவிட்டு, மீண்டும் விருந்து பரிமாறும் இடத்திற்குச் சென்றான்.
பரிதாபம் என்னவென்றால், அந்த அரசனுக்கு "நாளை" என்பது வரவேயில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சதிகாரர்கள் திடீரென விருந்து நடைபெற்ற இடத்தை சுற்றி வளைத்தனர். அங்கே அரசனும் அவனது நண்பர்களும் குடிபோதையில் ஒன்றும் அறியாதவர்களாய் இருந்தார்கள். சதிகாரர்கள் கடுங்கோபத்துடன் விரைந்து வந்து, தங்கள் வாள்களால் அரசனையும் அவனது நண்பர்களையும் வெட்டிக் கொன்றார்கள்.
அன்பான வாசகரே! நீங்களும் நாளை தினத்தைப் பற்றிக் கவலையில்லாமல், இவ்வுலக இன்பமே முக்கியம் என்று நினைக்கிறீர்களா? நன்றாகச் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்வதே இந்த வாழ்வின் குறிக்கோள் என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் விரும்பியதைச் செய்வது மட்டுமே மகிழ்ச்சி என்று இருக்கிறீர்களா? தேவ பக்தி, ஆத்தும இரட்சிப்பு, பாவ மன்னிப்பு போன்ற அவசியமான காரியங்களைப் பற்றிச் சிந்திக்க விரும்பாமல், "அவற்றை நாளை பார்ப்போம்" என்று ஆர்க்யாஸ் அரசனைப் போலச் சொல்லுகிறீர்களா? சற்று நில்லுங்கள்! உமக்கும் “நாளை” என்பது வராமல் போகலாம். ஒருவேளை இன்றே உங்கள் வாழ்க்கைப் பயணம் முடிவடையலாம், யாருக்குத் தெரியும்?
நாம் எதிர்பாராத நேரத்தில் நம்முடைய மரண நாள் எப்படி நம்மைச் சந்திக்கும் என்பதை விளக்குவதற்கு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த உவமையைச் சொன்னார்:
"ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்." (லூக்கா 12:16-20).
உன் ஆத்துமாவிற்கு ஒரு எதிரி உண்டு; அவன் தேவனின் எதிரியாகிய சாத்தான். அவன் எந்த வகையிலாவது உன்னை ஏமாற்றி, உன் ஆத்துமாவை நரகத்திற்குக் கொண்டு செல்லவும், தேவனுக்குரிய காரியங்களைப் பற்றி உன்னைச் சிந்திக்க விடாமல் தடுக்கவும் முயற்சிக்கிறான். இந்தக் கைப்பிரதியின் செய்தியைக் கூட நீ ஏற்றுக்கொள்ளாதபடி அவன் தடைசெய்வான்.
ஆனால், ஒரு உண்மையைத்தெரிந்துகொள்! உன் ஆத்துமாவை நேசிக்கும் ஜீவனுள்ள தேவன் இன்று உன்னை எச்சரிக்கிறார். "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23), அதாவது நித்திய நரகம். தேவனின் நியாயத்தீர்ப்பு உங்கள் மீது உள்ளது. ஆனால், வரப்போகும் அந்த நியாயத்தீர்ப்பிலிருந்து நீ தப்பித்துக்கொள்ள தேவன் ஒரு வழியையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.
தேவன் ஏற்படுத்தியிருக்கும் அந்த வழி என்னவென்றால்: உனக்காகச் சிலுவையில் உயிர் தியாகம் செய்த இயேசுகிறிஸ்துவே. உன் பாவங்களுக்காக நீ அடையவேண்டிய தேவனின் கோபத்தையும், தண்டனையையும் உனக்குப் பதிலாக இயேசுகிறிஸ்து ஏற்றுக்கொண்டார். அவர் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இன்று அவர் தேவனின் வலது பாரிசத்தில் உயர்ந்த சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். தான் ஒரு பாவி என்றும், தன் பாவத்தைப் போக்கிக்கொள்ள தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் உணர்ந்து, தேவனிடம் சரணடையும் நபருக்கு அவர் பாவ மன்னிப்பை அருளுகிறார். தன்னை விசுவாசிக்கும் அனைவருக்கும் நரகத்திலிருந்து விடுதலையை வழங்குகிறார்.
"ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப் படுகிறதென்றும், விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே (இயேசுகிறிஸ்துவாலே) விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது." (அப்போஸ்தலர் 13:38,39).
நாளை என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது. எனவே, இன்றே உங்கள் பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்து மனந்திரும்புங்கள். உன் பாவத்திற்குப் பரிகாரமாக இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இன்றே விசுவாசியுங்கள்.
“மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக் காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே.” (யாக்கோபு 4:13,14).
“இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.” (2 கொரிந்தியர் 6:2).
"கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." (ரோமர் 10:9).
"கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31).