ஆவிக்குரிய சத்தியங்களை அறியவிடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பதே இவ்வுலகத்தின் தேவனான பிசாசின் செயலாகும். அவன் காரியங்களைத் தலைகீழாகப் புரட்டி, வெளிப்புறத் தோற்றங்களால் தொடர்ந்து உலகத்தாரை வஞ்சிக்கிறான். அவன் சந்தோஷம், ஞானம் மற்றும் சுயாதீனம் ஆகியவற்றைக் குறித்து மக்களிடம் பொய்யுரைக்கிறான். பணம் சம்பாதித்து, செழிப்பாய் இருப்பவர்களே உண்மையில் சந்தோஷமானவர்கள் என்று அவன் எப்போதும் அனைவரிடமும் பொய் சொல்கிறான்.
வேதத்தின் பணி சாத்தானின் வஞ்சகத்திலிருந்து நம்மை விடுவிப்பதேயாகும். வெளிப்புறமான பொருளாதார வசதி படைத்தவர்கள் சந்தோஷமானவர்கள் அல்ல; மாறாக ஆவியில் எளிமையுள்ளவர்கள், துயரப்படுகிறவர்கள், துன்புறுத்தப்படுகிறவர்கள், பரிசுத்தமுள்ளவர்கள் மற்றும் சாந்தகுணமுள்ளவர்களே உண்மையில் பாக்கியவான்கள் என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது (மத்தேயு 5).
ஞானம் உள்ளவர்கள் ஏமாற்றுகிறவர்களாகவும், மோசடி செய்கிறவர்களாகவும் இருந்தால் மட்டுமே இந்த உலகத்தில் வெற்றியாளர்களாக இருக்க முடியும் என்று சாத்தான் உலக ஞானத்தைக் குறித்துப் பொய் சொல்கிறான். ஆனால், "உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்துகிறவர்கள் மிகப்பெரிய மூடர்கள்" என்று வேதம் அறிவிக்கிறது. உண்மையில் ஞானம் உடையவர்கள் தங்கள் இரட்சிப்பிற்குரிய ஞானத்தைப் பெற்று, தேவனிடத்தில் ஐசுவரியம் உள்ளவர்களாகவும், இனிவரும் உலகத்தின்மேல் நோக்கமாயும் இருப்பார்கள்.
அதைப் போலவே, எல்லா மக்களும் விரும்பும் 'சுயாதீனம்' குறித்தும் பிசாசு பொய் சொல்கிறான். சுதந்திரம் என்றால் நாம் விரும்பும் எதையும், எந்தத் தடையும் இல்லாமல் செய்வது என நினைப்பதே உலகத்தின் மிகப்பெரிய வஞ்சகமாகும். தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவது, அவருடன் நடப்பது, அவருடைய வசனத்தை வாசிப்பது மற்றும் ஜெபிப்பது போன்றவை ஒரு சிறைச்சாலையைப் போலவும், அடிமைத்தனத்தைப் போலவும் இவர்களுக்குத் தோன்றுகிறது. நியமங்களை அல்லது ஒழுங்கைக் கடைபிடிப்பதை இவர்கள் விரும்புவதில்லை.
நம் பிள்ளைகள் சில வேளைகளில், “ஐயோ, ஒரே நிபந்தனை, கட்டளை, ஒழுக்கம்!” என்று நொந்து கொள்கிறார்கள். அவர்கள் எந்த ஒரு கட்டுப்பாடையும் வெறுக்கிறார்கள்; அவற்றை, தங்களைக் கட்டிப்போடும் சங்கிலி என்று நினைக்கிறார்கள். “நான் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், நான் விரும்புகிறதை எப்போது செய்யப்போகிறேன்? நான் விரும்புவதை எந்தத் தடையும் இல்லாமல் எப்போது பேசப்போகிறேன்?” என்று அவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் ஒழுக்கத்தைப் பாரமாகக் காண்கிறார்கள்; எந்த ஒரு கட்டுப்பாடையும் உடைத்து எறிந்துவிட நினைக்கிறார்கள். அதுதான் உண்மையான விடுதலை என்று சாத்தான் அவர்களை நம்ப வைத்துள்ளான்.
நாம் செய்ய நினைக்கிற அனைத்தையும் செய்யும் அளவிற்குப் போதுமான பணம், நேரம், வசதிகள் மற்றும் ஆரோக்கியம் உடையவர்களாய் இருப்பதே சுயாதீனம் என்று நாமும் நினைக்கிறோம். இப்படித்தானே நம்மில் அதிகம் பேர் சிந்திக்கிறோம்? ஆனால், இவ்வழியில் நடந்தவர்கள் மென்மேலும் அடிமைத்தனத்திற்கு உட்பட்டுவிட்டதை உணருகிறார்கள். இதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள்: தேவனுடைய பிரமாணத்தின் கட்டுப்பாடற்ற மாம்ச சுயாதீனமே மிக மோசமான அடிமைத்தனம்.
இது மிகவும் மோசமான அடிமைத்தனம் என்பதை உணர்த்தும் ஐந்து காரணங்கள் இதோ:
1. இது நம் சிற்றின்பங்களின் சிறைச்சாலை
தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பை நமக்குத் தருவதுதான் அதிகம் பயப்படத்தக்க, அபாயம் நிறைந்த தண்டனையாகும். அதிக பொறுமைக்குப் பின்னரும், "மெய்யான சந்தோஷம் தேவனை மகிமைப்படுத்துவதும், அவரில் மகிழ்ந்திருப்பதும் தான்" என்று மீண்டும் மீண்டும் போதித்த பின்னரும், நாம் இப்புத்திமதியை விட்டு விலகி உலகத்தை நோக்கி ஓடுகிறோம். நம்மைச் சரிப்படுத்தும் நோக்கில் தேவன் தொடர்ந்து பொறுமையுடன் செயல்பட்டும், நாம் கேட்க விரும்பாமல் அவருடைய வேலிகளை உடைக்க விரும்பும் பட்சத்தில், அவர் நம்மை நம்முடைய இச்சைகளுக்கு விட்டுக் கொடுத்துவிடுகிறார். நாம் விரும்பியதைச் செய்யவும், அதன் விளைவாக எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அந்த இச்சையே நம்மை அழித்துப் போடவும் அவர் விட்டுவிடுகிறார்.
ரோமர் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்படுவது போல, தேவன் நம்மை நமது அசுத்தமான சிந்தனைக்கும், நம் இருதயத்தின் இச்சைகளுக்கும் ஒப்புக் கொடுத்துவிடுகிறார். “ஆகையால், அவர்களை அவர்களுடைய இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்” என்று சங்கீதம் 81:12 கூறுகிறது. நாம் நம்முடைய மிருகத்தனமான இச்சைகளில் நடக்க விட்டுவிடப்பட்டுள்ளோம். நம்முடைய இச்சைகள் எவ்வளவு மோசமான கொடுங்கோலன் என்பது நமக்குத் தெரிவதில்லை. அவை நமக்காகச் சிறையை ஏற்படுத்தி, நம்மேல் பலவிதமான சங்கிலிகளைப் போட்டு, நம்மைப் பல்வேறு தவறான பாதைகளிலும் இழுத்துச் செல்கின்றன. இந்த மாம்சத்துக்குரிய 'விடுதலை' ஒரு நபரைத் தங்கள் சீர்கேடான இருதயத்தைப் பின்பற்றவும், அவருடைய சந்தோஷத்துக்கான உண்மையான வழியை அழித்துப்போடவும் செய்கிறது. தேவனில் மகிழ்ந்து அவருக்குக் கீழ்ப்படிவதே நம் மகிழ்ச்சிக்கான வழியாகும்.
மீன் தொட்டியில் இருக்கிற மீனானது தண்ணீரில் சந்தோஷமாக உலா வந்தாலும், உண்மையில் அது ஒரு சிறுகுவளைக்குள் இருப்பதை அறியவில்லை. அதுபோலவே உலக மக்கள் தங்கள் உலக “விடுதலையினை” அனுபவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு ஆவிக்குரிய சிறைச்சாலையில் அடைபட்டு இருக்கிறார்கள். இது உண்மையும், பூரணமுமான அடிமைத்தனம். அவர்கள் மாயையைத் தொடர்ந்து பிடித்துக்கொள்ளும்படி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அது உண்மையில் அவர்களை மகிழ்ச்சியாக்காது; அவர்கள் தங்களுக்குள் ஒரு வெறுமையுடனே வாழ்கிறார்கள். இதற்குக் காரணம், நாம் தேவனில் மகிழ்ந்து, அவருக்குக் கீழ்ப்படியும்போது மட்டுமே சந்தோஷமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறோம். இன்பங்கள், மதிப்புகள், இலாபங்கள் மற்றும் ஐசுவரியம் ஒருபோதும் உண்மையான சந்தோஷத்தைத் தர முடியாது. அவைகளை தேவனுடைய மகிமைக்காகத் தேடும்போது மட்டுமே நமக்கு உண்மையான மகிழ்ச்சி உண்டாகும்.
தேவனுக்கு மகிமையைக் கொண்டுவர வேண்டும் என்கிற விருப்பத்துடன் நாடப்படும் மன மற்றும் சரீர இன்பம், மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவையே நமக்குத் தேவையானவை. இவைகளை தேவ மகிமைக்குக் கீழ்ப்படுத்துவதுதான் நமது மாபெரும் முடிவிற்கான இலக்கு. அவை நம்மை ஈர்த்து, நமது விருப்பங்களுக்குள் நம்மைச் சிறைப்படுத்தும் பட்சத்தில், அவை நமது விக்கிரகங்களாக மாறுவதுடன், நாம் அவைகளின் அடிமைகளாகி விடுகிறோம். நாம் எந்த அளவு அவைகளைச் சேவிக்கிறோமோ, அந்த அளவு நமது விடுதலையையும் இழக்கிறோம்.
2. மாம்சத்துக்குரிய விடுதலை ஒழுங்கற்ற ஆத்துமாவை உருவாக்குகிறது
இந்தச் சுயாதீனம் நம் ஆத்துமாவில் ஒழுங்கற்ற தன்மையை உருவாக்கி, நம்மை அடிமைத்தனத்திற்கு உட்படுத்திவிடுகிறது. ஆத்துமாவின் சரியான ஒழுங்கு என்பது மனதும், மனச்சாட்சியும் 'சரியானது என்ன' என்பதைத் தீர்மானிப்பதில் இருக்கிறது. எது தேவனை மகிமைப்படுத்தி, அதன் விளைவாக எனக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதை நிதானிப்பதுதான் சரியான ஒழுங்கு. சிந்தை மற்றும் மனச்சாட்சியால் ஆளப்படும் வகையில் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இந்த மனச்சாட்சியே இருதயத்தில் சரியான உணர்வுகளை ஏற்படுத்தி, அந்த விருப்பங்களைச் சரீர அவயவங்களால் செயல்படுத்தத் தூண்டுகிறது. ஆனால், இங்கே பாவமுள்ள ‘சுயாதீனம்’ இந்த வரிசைக்கிரமத்தையே தலைகீழாக மாற்றிவிடுகிறது. அது மனிதனை அடிமைப்பட்ட மிருகத்தைப் போல மாற்றிவிடுகிறது.
சரீரத்தில் தலை இருக்க வேண்டிய இடத்தில் கால்கள் இருந்தாலோ, கால்கள் இருக்க வேண்டிய இடத்தில் தலை இருந்தாலோ எவ்வளவு ஒழுங்கீனமாக இருக்கும்? அதுபோலவே உலகக் காரியங்களை தேவனுடைய மகிமைக்காக நாடாமல், சுய இச்சைகளை நிறைவேற்றும்படி தேடினால் ஆத்துமாவும் ஒழுங்கற்றுப் போய்விடும். இந்த அடிமைத்தனம் ஆண்டவர் ஏற்படுத்தியுள்ள ஒழுங்கில் மாறுதலை உண்டாக்கிவிடுகிறது. வெளிப்புற இன்பங்கள் புலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, இருதயத்தில் பாதிப்பை வருவிப்பதால், அதன் அழுத்தம் மனதையும் மனச்சாட்சியையும் மேற்கொள்கிறது. மனமானது, 'இந்தச் செயல் மதியீனமானது, சரியில்லாதது' என்று உணர்ந்தாலும், அந்த மனிதன் அதைத் தொடரும்படி அவன் கண்கள் குருடாக்கப்படுகின்றன. அவன் முடிவிலே அழிவில் வீழ்ந்துவிடுகிறான். சிந்தனை ஆதிக்கம் செலுத்த வேண்டிய இடத்தில், இச்சை அரியணை போட்டு அமர்ந்துவிடுகிறது.
3. நாம் நமது இச்சைகளுக்கு அடிமைகளாகிறோம்
பாவத்தின் வலிமையையும் அதன் அகோரத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இது மனிதர் தங்களையும், தங்கள் செயல்களையும் கட்டுப்படுத்த உபயோகிக்கும் அனைத்துவிதமான உரிமை மற்றும் வலிமையையும் உரிந்து கொள்கிறது. அநேக நேரங்களில், அவர்கள் மாற விரும்பினாலும், சில பழக்கங்களை நிறுத்த விரும்பினாலும், அவர்களால் முடியாமற் போய்விடுகிறது. அடிமைத்தனத்தின் வல்லமை அவர்களை அழுத்தமாக இழுத்துக்கொண்டு, அவர்களை அழித்துவிடும் காரியங்களையே செய்ய வைத்துவிடுகிறது. பாவம் அவர்களுக்குக் கட்டளையிடும்போது, அவர்கள் முடியாது என்று சொல்ல வழியே இல்லாமல் அதற்குக் கீழ்ப்படிகிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தங்கள் பாவத்தின் விளைவாக வருத்தப்படுகிறவர்கள் அல்லது குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிறவர்களிடத்தில் இந்த அடிமைத்தனம் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த அடிமைத்தனத்தின் விளைவாக அவர்களுக்கு ஏற்பட்ட சரீர வியாதிகள், அசௌகரியங்கள், அவமானம் அல்லது இழப்பு போன்றவை அவர்களை வாட்டினாலும் அவர்களால் தங்கள் இச்சைகளை விட முடிவதில்லை. ஆகவே, மிகுந்த வேதனையுடன், அவர்கள் அடிமைகளாகவே தொடர முடிவெடுத்து விடுகிறார்கள்.
ரோமர் 7:14 இவ்வாறு சொல்கிறது, “நானே பாவத்திற்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்கு உரியவனாய் இருக்கிறேன்”. பொல்லாத இச்சைகள் தங்களை ஓட்டுகிறவர்களுக்கு, அடங்காத குதிரைகளைப் போல அவர்களை அழிவிற்கு இழுத்துச் சென்றுவிடுகின்றன. “பலவிதமான இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களாய்” இருந்தோம் என்று பவுல் தீத்துவுக்கு எழுதுகிறார் (தீத்து 3:3). ஒரு மனிதன் தன் ஆசை இச்சைகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் பட்சத்தில், அவன் அடிமையாகவே மாறிவிடுகிறான். “மரணத்துக்கு ஏதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கு ஏதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிகிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாய் இருக்கிறீர்கள் என்று அறியீர்களா?” என்று கேட்கிறார் பவுல் (ரோமர் 6:16).
செலுசியாவைச் சார்ந்த பாசில் என்கிற பரிசுத்தவான், "மாம்சத்துக்குரிய மனிதன் என்பவன், தன் சொந்த இச்சைகள் மற்றும் சீர்கேடான விருப்பங்கள் என்னும் இரதங்களால் தரதரவென இழுக்கப்படும் அடிமை" என்கிறார். அவனால் சரியாக உறங்க முடியாது, சரியாகச் சிந்திக்க இயலாது, சரியாக உணரவும் முடியாது. மனதில் நிதானம் இல்லாதவன் போல அவன் நடந்து கொள்கிறான்.
4. இந்த அடிமைத்தனம் தொடர் செயல்பாடுகளால் அதிகம் ஆழமாகி விடுகிறது
பாவம் மாற்ற முடியாத பழக்கமாகி விடுகிறது. நாம் எந்தளவுக்குப் பாவம் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாய் நாம் அதற்கு அடிமையாகிறோம். இது ஒரு ஆணியைப் போன்றது; அதின் மேல் அடி விழ விழ அது மரத்தை இன்னும் வலுவாகப் பிடித்துக் கொள்கிறது. இது சுகப்படுத்த முடியாத வியாதி போலாகி, இதில் தொடர்வதால் அதிக பாதிப்பையும் ஏற்படுத்துகிறதாய்க் காணப்படுகிறது. நமக்கு எது சரி என்று தெரியும், ஆனால் பாவம் நம்மை முழுவதும் ஆக்கிரமித்துவிட்டதால் நம்மால் சரியானதைச் செய்ய முடிவதில்லை. இதுதான் அடிமைத்தனத்தின் உச்சபட்ச வடிவம் - நீங்கள் விரும்பியும் உங்களால் உங்களைக் காக்க முடியவில்லை என்கிற நிலைமை!
“எத்தியோப்பியன் தன் தோலையும், சிறுத்தை தன் புள்ளிகளையும் மாற்றக் கூடுமோ? கூடுமானால், தீமை செய்யப்பழகின நீங்களும் நன்மை செய்யக் கூடும்” என்கிறார் தீர்க்கதரிசியான எரேமியா (எரேமியா 13:23).
முதலில் ஒரு நபர் பாவத்திற்கு இசைந்து ஒரு பங்குதாரர் ஒப்பந்தம் போடுவது போல் துவங்குகிறார். அதற்குப் பின்னர் அவர் பாவத்தினால் மேற்கொள்ளப்பட்டு அடிமையாகிறார். “கர்த்தாவே, நான் அடிமையாய் இருக்கிறேன். நான் என் விருப்பத்தை என் எதிராளிக்குத் தந்துவிட்டேன். அவன் அதை ஒரு சங்கிலியாக மாற்றி, என்னைக் கட்டி உம்மிடம் வராதபடி தடுத்து விடுகிறான். உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்வதைத் தவிர வேறு எதையும் என்னால் செய்ய முடியவில்லை”. இவ்வாறாக, நாம் சிறிது சிறிதாக அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறோம்.
5. அடிமைகளாய் நாம் எப்போதும் பயமும் திகிலும் உள்ள வாழ்க்கையே வாழ்கிறோம்
பாவத்தில் வாழ்வது தொடர்ச்சியான பயத்தை வருவிக்கிறது. நாம் மரணத்தைக் குறித்தும், நியாயத்தீர்ப்பை நினைத்தும், நமது செயல்களின் விளைவுகளைப் பற்றியும் பயப்படுகிறோம். இந்தப் பயம் ஒரு கொடூரமான எஜமானனைப் போல இருந்து, நாம் மெய்யான சமாதானத்தை அனுபவிக்க முடியாமல் தடை செய்து கொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாகப் பயத்தில் வாழும் வாழ்க்கை சுயாதீனத்திற்கு எதிரான வாழ்க்கைதான்.
பாவியின் மடியில் தணிவாக எரிந்து கொண்டிருக்கும் அக்கினியானது சில வேளைகளில் பற்றி எரிந்து பயத்தையும், பெரும் திகிலையும் வருவித்து விடுகிறது. அவ்வாறு வாழ்பவன் மரணத்தைக் குறித்த செய்தியையோ, நரகம் அல்லது நியாயத்தீர்ப்பு குறித்த செய்தியையோ நடுக்கம் இல்லாமல் கேட்க முடியாது. இதுபோன்ற காரியங்களைக் குறித்துச் சிந்திக்கவும் அவர்களுக்குத் தைரியம் இல்லை. அவர்கள் எப்போதுமே சிதைக்கப்பட்ட மனசாட்சியுடனும், பயத்துடனும் வாழ்கிறார்கள். வாழ்க்கையின் சிறிய நிகழ்வுகள் கூட – சிறிய பிரச்சனை, இடி முழக்கம், பூமி அதிர்ச்சி குறித்த செய்தி, யுத்த செய்தி அல்லது சில சரீரப் பிரச்சனைகள் - இவை அனைத்துமே அவர்களுடைய ஆத்துமாவில் கலக்கத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்தக் கொடூரமான எஜமானன் அவர்களை எப்போதும் பயத்திலேயே வைத்திருக்கிறான்.
இதுவா சுயாதீனம்? இயேசு கிறிஸ்து இல்லாமல் வாழும் ஒவ்வொரு பாவியின் நிலையும் இதுதான். அவன் மிக மோசமான அடிமைத்தனத்தில் இருக்கிறான்: தன் பாவங்களுக்கும், இச்சைகளுக்கும், உலகத்திற்கும், சாத்தானுக்கும் அடிமையாக இருக்கிறான். அவன் எப்போதும் கட்டப்பட்டவனாய், மறைவான ஆபத்துக்களை எண்ணிக் கலங்குகிறான். ஆக, இதை நீங்கள் சுதந்திரமான, சந்தோஷமான வாழ்க்கை என்று அழைக்கிறீர்களா? நான் இதை பாவத்திற்கு அடிமையாக வாழும் சாபமான வாழ்க்கை என்றே சொல்லுவேன்.
இது போன்ற பாவிக்கான ஒரே விடுதலை, தன் அடிமைத்தனத்தை உணர்ந்து, பாவத்தில் இருந்து விடுதலையை இயேசுவின் வழியாகப் பெறுவதில் மட்டுமே இருக்கிறது.