திருச்சபை

இன்றைய திருச்சபைகளுக்கும் மாபெரும் சீர்த்திருத்தம் தேவைப்படுகிறது
ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்
வாசிப்பதற்கான நேரம்: 4 நிமிடங்கள்

சீர்திருத்தத்தின் ஐந்து தூண்கள்: இன்றைய திருச்சபைக்கு ஒரு அறைகூவல்

கி.பி. 1517-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி, ஜெர்மனியின் விட்டன்பர்க் (Wittenberg) ஆலயக் கதவில் அறையப்பட்ட சீர்திருத்தக் கொள்கைகள், பல்வேறு நாடுகளில் பல்வேறு இயக்கங்களாக உருவாகி, வேதாகம ரீதியான பல உபதேசங்களை அடிப்படையாகக் கொண்ட திருச்சபைகளை உருவாக்கின. இது திருச்சபைகளில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது. முகநூலில் பல ஊழியர்கள் இந்த வரலாற்றை எழுதியிருக்கிறார்கள்; நான் மீண்டும் அந்த வரலாற்றை எழுத விரும்பவில்லை. ஆனால், மார்டின் லூத்தர் வலியுறுத்திய ஐந்து முக்கிய உபதேசக் கொள்கைகள் (Five Solas), இன்றைய திருச்சபையின் சீர்திருத்தத்திற்கும் மிக மிக அவசியம் என்பதை மட்டும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

1. கிருபை மட்டுமே (Sola Gratia)

உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும் ஒரு பக்கமும், கிறிஸ்தவத்தை மறுபக்கமும் வைத்தால், அதை 'கிருபையின்' அடிப்படையிலேயே வித்தியாசப்படுத்த முடியும். மற்ற மதங்கள் எல்லாமே மனிதனின் 'கிரியையை' (Works) வலியுறுத்துகிற மதங்கள். கிறிஸ்தவம் மாத்திரமே 'கிருபை' மார்க்கம்.

மனிதன் பாவத்தில் மரித்திருக்கிறான் (எபேசியர் 2:1). "உன்னுடைய மீட்புக்காக (இரட்சிப்பிற்காக) நீ எதையுமே செய்ய முடியாது" என்பதுதான் கிருபை மார்க்கம். ஏனென்றால், உன்னுடைய மீட்புக்குத் தேவையான எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்துவிட்டார் (யோவான் 17:4).

இயேசுவை ஏற்றுக்கொள்ள கையை உயர்த்துவதினாலோ, குறிப்பிட்ட ஒருவர் கையைத் தலைமேல் வைத்து ஜெபிப்பதினாலோ அல்லது ஒருவர் சொல்லிக் கொடுக்கும் ஜெபத்தை அப்படியே திரும்பச் சொல்வதினாலோ இரட்சிக்கப்படுவதாகச் சொல்வதும், "இதயத்தைத் திறப்பது" என்று கூறுவதும் தவறான உபதேசங்களாகும். வெளிப்படுத்தின விசேஷம் 3:20-ல் கூறப்பட்டுள்ள வசனம், ஆண்டவருடைய வருகைக்கு ஆயத்தமாக இருக்க விசுவாசிகளுக்குச் சொல்லப்பட்டதே தவிர, அவிசுவாசிகளுக்கு அல்ல. மனிதருடைய இதயத்தை ஒருவரும் திறக்க முடியாது; இதயத்தைத் திறப்பது ஆண்டவருடைய வேலை (அப்போஸ்தலர் 16:14). நற்செய்தி அறிவிப்பது மட்டுமே நம்முடைய பணி; இதயத்தைத் திறப்பது கடவுளின் பணி.

இன்று பெரும்பாலான விசுவாசிகள், தங்கள் இரட்சிப்பை தங்கள் சுய கிரியையினாலே தாங்களே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; இவர்களுக்கும் ஆண்டவராகிய இயேசுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்னையின் ஒரு மெகா சபையின் போதகர், கிருபைக்கு அழகாக விளக்கம் தந்துவிட்டு, பின்பு அந்தக் கிருபையைப் பெற்றுக்கொள்வது எப்படி என்று அதற்கு நேர்மாறாகப் போதிப்பதை நானே கேட்டிருக்கிறேன். ஆகவே, இந்தச் சபைக்குப் போகிறவர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டதாகத் தாங்களே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

2. விசுவாசம் மட்டுமே (Sola Fide)

"விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறோம்" (ரோமர் 1:17) என்பதுதான் சீர்திருத்த காலத்தின் முக்கிய உபதேசம். ரோமன் கத்தோலிக்க திருச்சபையானது போப், திருச்சபை அதிகாரம், குருக்கள், பாவமன்னிப்புச் சீட்டு, புனிதர்கள் போன்றவர்கள் வழியாக மட்டுமே ஒருவன் இரட்சிக்கப்பட முடியும் என்ற கொள்கையை வலியுறுத்தியது. ஆனால், மார்டின் லூத்தர் அவர்களுக்கு வேதத்தை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தபோது, "விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறோம்" என்ற உண்மையைக் கண்டறிந்தார். அதுவே அவருடைய அனுபவமாகவும் மாறியது.

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது" (எபிரேயர் 11:1). இன்றைய பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் அற்புதங்கள் நடந்தால்தான் அல்லது நோய் குணமானால்தான் விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இது விசுவாசமல்ல. கண்டு விசுவாசிப்பது விசுவாசமாகாது; காணப்படாதவைகளைக் குறித்த உறுதிதான் விசுவாசம்.

பாடுகள், கண்ணீர், கஷ்டங்கள் மற்றும் உபத்திரவங்கள் மத்தியிலும் ஆண்டவரிடம் விசுவாசமாக இருப்பதுதான் உண்மையான விசுவாசம். நன்றாக நடந்து வந்த யாக்கோபை கர்த்தர் ஆசீர்வதித்தபடியினால், அவன் போகும்போது நொண்டி நொண்டிச் சென்றான். ஊனமும் ஒரு ஆசீர்வாதம்தான். நோயிலிருந்து சுகம் கிடைத்ததினால் மட்டுமே ஒருவர் இரட்சிக்கப்பட்டதாக அர்த்தம் கிடையாது. விசுவாசத்துடன் உபவாசத்தையும், தசமபாகத்தையும், ஊழியத்தையும் மற்ற எதையும் சேர்க்கக்கூடாது. இரட்சிப்பிற்கு விசுவாசம் மட்டுமே போதுமானது.

3. கிறிஸ்து மட்டுமே (Solus Christus)

நம்முடைய இரட்சிப்புக்கு கிறிஸ்து மாத்திரமே போதுமானவர் (கொலோசெயர் 1:15-20). ஏனென்றால், அவர் மாத்திரமே நம்முடைய பாவத்திற்காகச் சிலுவையில் இரத்தம் சிந்தி, மரித்து, பாவமன்னிப்பைக் கொடுத்தவர். அவருடன் வேறு எதையும் கூட்டுவது, அவருடைய இரட்சிப்பின் பணியை மட்டுப்படுத்துவதாகும்.

இன்று பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் தங்கள் திருச்சபை நிறுவனங்களைக் கிறிஸ்துவுக்குச் சமமாகக் கருதுகிறார்கள். நான் தென்னிந்திய திருச்சபையைச் (CSI) சேர்ந்தவன்; அவ்விதமே லூதரன், மெதடிஸ்ட், பாப்திஸ்து, பிரதாரன் மற்றும் பெந்தேகோஸ்தே சபைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் திருச்சபை நிறுவனங்களைக் கிறிஸ்துவுக்குச் சமமாகக் கருதுகிறார்கள். இது கிறிஸ்துவை இழிவுப்படுத்துவதாகும்.

போப்பின் அதிகாரம், திருச்சபையின் அதிகாரம், குரு அதிகாரம், பாவமன்னிப்புச் சீட்டின் அதிகாரம், புனிதர்களின் அதிகாரம் என அனைத்து அதிகாரங்களையும் இன்றைய சுயாதீன சபையின் போதகர்கள் எடுத்துக்கொண்டார்கள். பெரும்பான்மையாகச் சுயாதீன திருச்சபையார், அந்தச் சபையின் போதகருக்கு அடிமைகளாகவே இருக்கிறார்கள். ஆண்டவராகிய இயேசுவே அவர்களை விடுதலை செய்ய வந்தாலும், "இந்த அடிமைத்தனமே எங்களுக்குச் சந்தோஷம் கொடுக்கிறது" என்று சொல்லும் அளவில் இருக்கிறார்கள். ஆகவே, கிறிஸ்து மட்டுமே போதுமானவர்; அவருக்குச் சமமாக எதுவும் இருக்க முடியாது.

4. வேதம் மட்டுமே (Sola Scriptura)

ரோமன் கத்தோலிக்க திருச்சபை வேதத்தின் அதிகாரத்தை மறுதலித்தது. வேதத்தைவிட போப்பின் அதிகாரமே மேலானது என்றும், வேதத்திற்கு போப் என்ன விளக்கம் கொடுக்கிறாரோ அதுதான் அதிகாரப்பூர்வமானது என்றும் நம்பப்பட்டது. போப்பின் வாயிலிருந்து வருகிற வார்த்தை (Papal Bull) அதிகாரமுடையது, அது மாற்றத்தக்கது அல்ல என்று கருதப்பட்டது. ஏறக்குறைய கடவுளின் அதிகாரம் கொண்டவராகப் போப் விளங்கினார். ஆனால், கடவுளுடைய வார்த்தை மாத்திரமே மாறாதது மற்றும் அதிகாரமுடையது என்பதை மார்டின் லூத்தர் அறிந்துகொண்டார் (மத்தேயு 5:18, 2 தீமோத்தேயு 3:16). ஆகவே, வேதமே அதிகாரமுடையது என்பதை அவர் வலியுறுத்தினார்.

இன்றும் நம்முடைய விசுவாசத்திற்கும், நம்பிக்கைக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் தேவையான அனைத்திற்கும் வேதமே போதுமானதாக இருக்கிறது. இந்த எளிய உண்மையை பெரும்பான்மையான பிரபல ஊழியர்கள் சொல்ல மாட்டார்கள். சொல்லியிருந்தால், மக்கள் எந்த ஊழியர்களுக்கும் பின்னால் போகமாட்டார்கள். வேதத்தின் அதிகாரத்தை மறுத்தவர்களும், மறந்தவர்களும்தான் இன்று ஊழியர்களுக்குப் பின்னால் ஓடுகிற கூட்டம். தினகரனுக்கும், பால் தினகரனுக்கும், மோகனுக்கும், மோகன் சி. லாசரஸுக்கும், பெர்க்மானுக்கும் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இந்த ரசிகர்களுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவர்கள் எங்கெல்லாம் பேசுகிறார்களோ, அங்கெல்லாம் இந்த ரசிகர்கள் ஓடுவார்கள்.

உண்மையான ஊழியர்கள் மக்களை ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் வழிநடத்துவார்களே ஒழிய, தங்களிடத்தில் மக்களைச் சேர்க்கமாட்டார்கள். ஒரு விசுவாசிக்கு வேதமும், அதன் ஆசிரியராகிய பரிசுத்த ஆவியானவரும் போதுமானவர்கள். இதைவிட எந்த ஊழியர்களும் மேலானவர்கள் அல்ல. வேதத்தின் அதிகாரம் வலியுறுத்தப்பட்டிருந்தால், இப்படிப்பட்ட தவறான நபர்கள் உருவாகியிருக்க மாட்டார்கள். ஆகவே, வேதத்தின் அதிகாரத்திற்குத் திரும்புவோம்.

5. மகிமை கடவுளுக்கு மட்டுமே (Soli Deo Gloria)

ரோமன் கத்தோலிக்க திருச்சபை மகிமையைப் போப்புக்கும், திருச்சபைக்கும், பாரம்பரியத்திற்கும் மட்டுமே கொடுத்தது. ஆனால், "கடவுள் மாத்திரமே எல்லா மகிமைக்கும் உரியவர்" (ஏசாயா 6:1-4, வெளிப்படுத்தின விசேஷம் 5:7-14) என்பதை லூத்தர் கண்டுகொண்டார். போப்போ, திருச்சபையோ அல்லது திருச்சபையின் பாரம்பரியங்களோ மகிமைக்குரியவைகள் அல்ல; இவையெல்லாமே பாவத்தினாலே கெட்டுப்போயிருக்கின்றன. பரிசுத்த கடவுள் மாத்திரமே எல்லா நிலைகளிலும் மகிமைக்குரியவராக இருக்கிறார்.

இன்று பிரபலமான அனைத்து ஊழியர்களுமே கடவுளுக்குரிய மகிமையைத் தங்களுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். போப் தனக்கு பேர் பிரஸ்தாபத்தை (புகழை) உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே, பெரிய தேவாலயத்தின் (Basilica) குவிமாடத்தைக் கட்டப் பெரிய அளவில் நிதி திரட்ட நினைத்தபோதுதான் 'பாவமன்னிப்புச் சீட்டு' விற்பனை செய்யும் திட்டம் உருவானது. அந்தப் போப்புக்குக் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல தற்காலச் சுயாதீன சபை போதகர்கள். ஐந்து வருடம் மாத்திரமே பணியாற்றுகிற ஒரு திருச்சபையில், தன் பெயரை அந்தக் கட்டிடத்தின் கல்வெட்டில் பதிக்க வேண்டும் என்பதற்காகவே, அவசியமே இல்லாத ஒரு கட்டிடப் பணியைத் துவக்குவார்கள். அது சபை மக்களுக்குப் பாரமாய் இருப்பதைப் பற்றியோ, பணம் வீணாவதைப் பற்றியோ அவருக்குத் துளியும் கவலையில்லை.

ஊழியர்கள் என்றாலே மேடையில் உட்கார வேண்டும் என்று நினைப்பதும், திருமண விருந்துக்குப் போனால் ஊழியக்காரர்களுக்கு என்று தனி மேசை போட்டிருப்பதும், சபை ஆராதனையில் ஊழியக்காரர் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தனி நாற்காலி போடப்பட்டிருப்பதும் மகிமையை நமக்கு எடுத்துக் கொள்வதாகும்.

ஒவ்வொரு கிறிஸ்தவனின் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், திருச்சபை வாழ்விலும், சபை ஊழியங்களிலும் நாம் செய்கிற எந்தப் பணியானாலும், "அது ஆண்டவருக்கு மகிமையைக் கொடுக்குமா?" என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆண்டவருக்கு மகிமையைக் கொடுக்காத எந்தப் பணியையும் நாம் செய்வது அர்த்தமற்றதாக இருக்கும்.

ஒரு கிறிஸ்தவனாக நான் எதைச் செய்தாலும் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்:

  1. இதைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

  2. இது ஆண்டவருக்கு மகிமையைக் கொடுக்குமா?

சீர்திருத்தத்தின் 501-ஆம் ஆண்டில், சீர்திருத்தத்தை முதலில் நம்மில் ஆரம்பிப்போம். நம்முடைய குடும்பம், திருச்சபை, ஊழியம், சமுதாயம் எனத் தொடருவோம். ஆண்டவர் தாமே மகிமை அடைவாராக!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.