| 1 | தேவனே, அரசனும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும். உமது நல்லியல்பை அரசனின் மகனும் அறிந்துகொள்ள உதவும். |
| 2 | அரசன் உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும். உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும். |
| 3 | தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும். |
| 4 | ஏழைகளுக்கு அரசன் நல்லவனாக இருக்கட்டும். திக்கற்றோருக்கு அவன் உதவட்டும். அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும். |
| 5 | சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் அரசனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன். என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிபார்கள் என நான் நம்புகிறேன். |
| 6 | வயலில் விழும் மழையைப்போன்றிருக்க அரசனுக்கு உதவும். பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும். |
| 7 | அவன் அரசனாக இருக்கும்போது நன்மை மலரட்டும். சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும். |
| 8 | ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும் கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும். |
| 9 | பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள். புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும். |
| 10 | தர்ஷீசின் அரசர்களும் தூரத்துத் தேசங்களின் அரசர்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும். ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள அரசர்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும். |
| 11 | எல்லா அரசர்களும் நமது அரசனை விழுந்து வணங்கட்டும். எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும். |
| 12 | நமது அரசன் திக்கற்றோருக்கு உதவுகிறார். ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் அரசன் உதவுகிறார். |
| 13 | ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் அரசனைச் சார்ந்திருப்பார்கள். அரசன் அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார். |
| 14 | அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து அரசன் அவர்களைக் காப்பாற்றுகிறார். அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் அரசனுக்கு மிக முக்கியமானவை. |
| 15 | அரசன் நீடூழி வாழ்க! அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும். எப்போதும் அரசனுக்காக ஜெபம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள். |
| 16 | வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும். மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும். நிலங்களில் புல் வளர்வது போன்று நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும். |
| 17 | அரசன் என்றென்றும் புகழ்பெறட்டும். சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும். ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும். அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும். |
| 18 | இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள். தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும். |
| 19 | அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்! அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்! |
| 20 | ஈசாயின் மகனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன. |