தலைப்பு: நீண்ட காலமாகவே “எஸ்தர்” என்ற தலைப்பு எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வழங்கிவருகிறது. பழைய ஏற்பாட்டில் பெண்களின் பெயரால் அழைக்கப்படும் புத்தகங்கள் இரண்டு மட்டுமே; அவை எஸ்தர் மற்றும் ரூத் சரித்திரங்களாகும். உன்னதப்பாட்டு, ஒபதியா மற்றும் நாகூம் புத்தகங்களைப் போன்றே, எஸ்தர் புத்தகத்திலிருந்தும் புதிய ஏற்பாட்டில் எந்தவொரு மேற்கோளும் காட்டப்படவில்லை.
பெயர்க்காரணம்: “பசுமை மாறா நறுமணச்செடி” (Myrtle) என்று அர்த்தம் தொனிக்கும் ”அத்சாள்” (2:7) என்பதே எஸ்தரின் எபிரேயப் பெயராகும். எஸ்தர் என்பது “நட்சத்திரம்” என்ற பெர்சிய வார்த்தையிலிருந்தோ அல்லது பாபிலோனிய காதல் தேவதை இஸ்தாரின் பெயராகவோ இருந்திருக்கலாம். அபியாயிலின் மகளான இவள், தன் தாய் தகப்பனை இழந்தபோது, மொர்தெகாயினால் மகளாக எடுத்து வளர்க்கப்பட்டாள் (மொர்தெகாய் எஸ்தருக்குச் சிறிய தகப்பன முறை வேண்டும் – எஸ்தர் 2:7,15).
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி: மொர்தெகாய், எஸ்றா அல்லது நெகேமியா ஆகியோரில் யாரேனும் ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டாலும், ஆசிரியரின் பெயர் அறியப்படாததாகவே இருந்து வருகிறது. எஸ்தர் சரித்திரத்தை எழுதியவர் யாராக இருந்தாலும், அவருக்குப் பெர்சிய பழக்கவழக்கங்கள், ஆசாரம், வரலாறு மற்றும் சூசாவிலிருந்த அரண்மனை (1:5-7) ஆகியவை மிகவும் பரிச்சயமானதாக இருந்திருக்கின்றன. மேலும், அவர் எபிரேய கால அட்டவணை மற்றும் யூத முறைமைகளை மிக நன்றாக அறிந்திருந்ததோடு, யூத தேசப்பற்று மிக்கவராகவும் காணப்படுகிறார். இஸ்ரவேலில் பின்நாட்களில் குடியேறிய பெர்சிய யூதர் ஒருவர் இப்புத்தகத்தை எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பின்னணி மற்றும் அமைப்பு: எஸ்தர் புத்தகத்தின் வரலாற்றுச் சம்பவங்கள், உலக வரலாற்றில் பெர்சிய காலத்தில் கி.மு. 539 (தானியேல் 5:30,31) முதல் கி.மு. 331 (தானியேல் 8:1-27) வரை உள்ள நாட்களில் சம்பவித்திருக்கலாம். அகாஸ்வேரு ராஜா அரசாண்ட காலம் கி.மு. 486 – 465 ஆகும். எஸ்தர் புத்தகச் சம்பவங்கள் கி.மு. 483 முதல் 473 வரையிலான காலகட்டத்திற்குள் அடங்குகின்றன. அகாஸ்வேரு என்பது 'கேயர்ஷா' (Khshayarsha) என்ற பெர்சியப் பெயரின் ஒலிபெயர்ப்பு. 'செர்க்சஸ்' (Xerxes) என்பது அவரது கிரேக்கப் பெயராகும்.
பாபிலோனிய (கல்தேயர்) தேசத்தில் 70 வருடம் சிறையிருப்பிலிருந்த யூதர்கள், செருபாபேல் தலைமையில் முதல்முறை தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பியதற்கும் (கி.மு. 538 - எஸ்றா 1-6), எஸ்றாவின் தலைமையில் இரண்டாம் முறை திரும்பியதற்கும் (கி.மு. 458 - எஸ்றா 7-10) இடையில் இருந்த நீண்ட கால இடைவெளியில் இச்சம்பவங்கள் நடைபெற்றன. நெகேமியா சூசானிலிருந்து எருசலேம் சென்ற பயணம் (மூன்றாவது முறை திரும்புதல்) பின்னர் கி.மு. 445–ல் நிறைவேறியது.
எஸ்தர் சரித்திரமும், யாத்திராகமமும் யூத குலத்தை அழிக்க அந்நிய தேசங்கள் எவ்வளவு தீவிரமாக முயன்றன என்பதையும், கி.மு. 2100-2075-ல் தேவன் ஆபிரகாமுக்குத் தந்த உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களின்படி (ஆதி. 12:1-3; 17:1-8) – அனைத்தையும் ஆளுகை செய்யும் தேவன் - தன் சொந்த ஜனத்தை தமது சர்வவல்லமையினால் எவ்வாறு பாதுகாத்தார் என்பதையும் காலவரிசைப்படுத்தி விவரிக்கின்றன. தேவனின் பாதுகாப்பின் விளைவாகத் தோன்றிய புதிய வருடாந்திரப் பண்டிகை, தேசம் பாதுகாக்கப்பட்டதை நினைவுகூரும்படிக்கு, 12-வது மாதத்தில் கொண்டாடப்பட்டது. 'பூரிம்' பண்டிகையின் தொடக்கத்தை (பிப்ரவரி – மார்ச்) எஸ்தர் 9, 10 அதிகாரங்கள் குறிப்பிடுகின்றன. மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்படாமல், இஸ்ரவேல் ஜனங்கள் கொண்டாடும்படிக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு பண்டிகைகளில் ஒன்றான இது, இந்நாள் வரை இஸ்ரவேலில் கொண்டாடப்பட்டு வருகிறது (மற்றொன்று: ஹனுக்கா அல்லது ஒளியின் பண்டிகை - யோவான் 10:22).
வரலாற்று மற்றும் இறையியல் கருப்பொருட்கள்: தேவனுடைய பெயர் இப்புத்தகத்தில் எங்கும் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்பதால், இப்புத்தகத்தின் உண்மைத்தன்மையில் சிலர் சந்தேகத்தை எழுப்பிய போதிலும், வேதாகமத்தின் புனித நூலாக எஸ்தர் புத்தகத்தின் 167 வசனங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. (கிரேக்க செப்டுவஜின்ட் (LXX) இதனுடன் 107 வசனங்களைச் சேர்த்தது, ஆனால் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை). உன்னதப்பாட்டு, ரூத், பிரசங்கி மற்றும் புலம்பல் புத்தகங்களுடன் எஸ்தர் புத்தகமும் இணைந்து, 'மெகிலோத்' அல்லது பழைய ஏற்பாட்டின் “5 தோல்சுருள்கள்” என்று அழைக்கப்படுகிறது. யூதர்களின் ஐந்து விசேஷ நாட்களில் இந்த ஐந்து புத்தகங்களையும் தேவாலயத்தில் ரபிமார்கள் வாசிப்பது வழக்கம். இதில் எஸ்தர் புத்தகம் பூரிம் பண்டிகை நாட்களில் வாசிக்கப்படும் (9:20-32).
எகிப்திலிருந்து யூதர்கள் வெளியேறி ஏறக்குறைய 1000 வருடங்களுக்குப் பின், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மொர்தெகாய் (பென்யமீன் கோத்திரத்தான்; சவுல் வம்சவழி வந்தவர் 2:5) மற்றும் ஆமான் (அமலேக்கியரின் ராஜா ஆகாக்கின் வம்சவழி வந்தவர் 3:1,10; 8:3,5; 9:24) ஆகியோருக்கு இடையில் இந்த மோதல் நடைபெற்றது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறியபோது, ஏசாவின் பேரனான அமலேக்கின் வழிவந்த அமலேக்கியர் அவர்களைத் தாக்கினர் (ஆதி. 36:12). அமலேக்கியரில் ஒருவரும் இல்லாதபடி அவர்களை அழித்துப்போடும்படி தேவன் கட்டளையிட்டார் (யாத். 17:14; உபா. 25:17-19). சவுல் ராஜாவுக்கு (கி.மு. 1030) அமலேக்கியர் மற்றும் ஆகாக் ராஜா உட்பட அனைவரையும் கொன்றுபோடக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அவன் இதில் முழுமையாகக் கீழ்ப்படியவில்லை (1 சாமு. 15:7-9). அது தேவனுக்குப் பிரியமாக இருக்கவில்லை (1 சாமு. 15:11,26; 28:18). இறுதியாக, சாமுவேல் தீர்க்கதரிசி ஆகாகைத் துண்டித்துப்போட்டான் (1 சாமு. 15:32,33). எனினும், ஆகாக்கின் வம்சவழியில் வந்தபடியால், ஆமானுக்கு யூதர்களின் மீது பரம்பரைப் பகை மற்றும் ஆழமான வெறுப்பு இருந்தது.
ஆகாக்கின் மரணத்திற்குப் பின் 550 வருடங்கள் கழித்து எஸ்தரின் காலம் வருகிறது. இவ்வளவு காலம் கடந்த பின்பும், ஆகாகின் வம்சவழி வந்த ஆமானோ அல்லது பென்யமீன் கோத்திரத்து மொர்தெகாயோ அந்தப் பகையை மறக்கவில்லை; அது அவர்கள் உள்ளத்தில் புகைந்து கொண்டிருந்தது. மொர்தெகாய் ஆமானுக்கு முன் அடிபணியவில்லை என்பதற்கும் (3:2,3), ஆமான் யூத குலத்தை ஏன் அடியோடு அழிக்க வேண்டும் எனக் கொடூரமாகச் சிந்தித்தான் (3:5,6,13) என்பதற்கும் இதுவே விளக்கமாக அமைகிறது. ஆனால், தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தையின்படி, அமலேக்கியர் முற்றிலும் அழிக்கப்பட்டனர்; யூதர்களைப் பாதுகாப்பேன் என்ற தேவனுடைய வாக்குத்தத்தமே நிலைநின்றது. 'பூரீம்' என்ற பெயர் "சீட்டு" என்று பொருள்படும் அக்காதியன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது (3:7; 9:26). இப்பண்டிகை, அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாக ஆசரிக்கப்படுகிறது. இந்நாட்களில் விருந்துண்டு, சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை (பரிசுகளை) அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மம் செய்யவும் திட்டம் பண்ணினார்கள் (9:21,22). இப்பண்டிகை சரியான காலத்திலே ஆசரிக்கப்பட்டு, இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு,ற வறிப்போகாமல் ஆசரிக்கப்பட்டது (9:27,28). எஸ்தர் ராஜாத்தி, தானும் தன் ஜனங்களும் உபவாசத்தோடும் அலறுதலோடும் இதை ஆசரிப்போம் எனத் தங்கள்மேல் கடனாக உறுதிப்படுத்திக் கொண்டு எழுதினாள் (9:31). பல நூற்றாண்டுகளாக இஸ்ரவேல் தேசத்தில் ஆசரிக்கப்படும் பண்டிகையாக இது இருந்தபோதிலும், பரிசுத்த வேதாகமத்தில் வேறு எங்கும் பூரிம் குறிப்பிடப்படவில்லை.
சதுரங்க விளையாட்டும் தேவனின் கரம்: எஸ்தர் சரித்திரத்தை ஒரு சதுரங்க விளையாட்டுக்கு ஒப்பிடலாம். தேவனும் சாத்தானும் – கண்களுக்குத் தெரியாதவர்களாக இருந்து, நிஜ வாழ்வில் ராஜாக்கள், ராணிகள் மற்றும் பிரபுக்களை நகர்த்தி விளையாடுவது போன்றது இது. சாத்தான் ஆமானை அரண்மனைக்குள் கொண்டுவந்தது, ஆட்டத்தில் “செக்” (Check) வைத்து இறுதி முடிவைச் சொல்வது போல் இருந்தது. ஆனால் தேவன் எஸ்தரையும் மொர்தெகாயையும் நகர்த்தி, சாத்தானுக்கு “செக்மேட்” (Checkmate) வைத்துச் செயலிழக்கச் செய்தது போல் ஆனது.
ஆதியாகமம் 3:1-19-ல் நாம் காணும் மனுஷனின் வீழ்ச்சிக்குப் பின், மனுஷ சிருஷ்டிப்புடன் தேவன் கொண்டிருக்கும் உறவைத் துண்டிக்கவும், தேவன் இஸ்ரவேலருடன் கொண்டிருக்கும் உறவில் இடையூறு செய்யவும் சாத்தான் முயற்சி செய்துகொண்டே வருவதைப் பார்க்கிறோம். உதாரணமாக, கிறிஸ்துவின் வம்சவழியான யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரும் சங்காரம்பண்ணப்பட்டார்கள்; அதில், யோவாஸ் மட்டும் ஒளித்துவைத்துப் பாதுகாக்கப்பட்டான் (2 நாளா. 22:10-12). பின்நாட்களில் ஏரோது, பெத்லகேமில் இருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும், இயேசு அவர்களுக்குள் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு கொன்றுபோட்டான் (மத்தேயு 2:16). சாத்தான் தேவனை விட்டுவிலகி, தன்னைச் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துகொள் என இயேசுவைச் சோதித்தான் (மத்தேயு 4:9). சாத்தானின் தூண்டுதலின் பேரில், பேதுரு இயேசுவைக் கல்வாரிக்குச் செல்வதைத் தடுக்கும்படி முயற்சித்தான் (மத்தேயு 16:22). கடைசியாக, சாத்தான் யூதாசுக்குள் புகுந்து, இயேசுவை யூதர்கள் மற்றும் ரோமர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படிச் செய்தான் (லூக்கா 22:3-6).
தேவன் என்ற பெயர் எஸ்தர் புத்தகத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவரே சாத்தானின் கொடூரமான செயல்திட்டங்களைத் தடுத்து, வருங்காலத்திற்காக யூதர்களைப் பாதுகாத்தவர் என்பது புத்தகம் முழுவதும் வெளிப்படையாகக் காணப்படுகிறது. தேவன் ஆபிரகாமுக்கு அளித்த நிபந்தனையற்ற உடன்படிக்கை வாக்குத்தத்தங்களும் (ஆதி. 17:1-8), தாவீதிற்கு அளித்த வாக்குத்தத்தங்களும் (2 சாமு. 7:8-16) ஆபத்திற்குள்ளாயின. ஆனாலும், யூத குலம் முற்றிலும் அழிக்கப்பட இருந்த நிலையிலிருந்து அவர் மீட்டெடுத்த விதத்தைக் காணும்போது, இஸ்ரவேலர் மீது தேவன் கொண்டிருந்த அன்பு வெளிப்படுவது போல் வேறு எங்கும் நாம் காண இயலாது. “இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை” (சங்கீதம் 121:4).
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்: உன்னதப்பாட்டு புத்தகத்தில் நாம் காண்பது போலவே, எஸ்தர் புத்தகத்திலும் எங்கும் தேவன் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை என்பது வெளிப்படையான கேள்வியை எழுப்புகிறது. இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியரோ அல்லது இதில் பங்குபெற்றவர்களோ தேவனுடைய நியாயப்பிரமாணம், பலியிடுதல், ஆராதனை அல்லது ஜெபம் குறித்து இப்புத்தகத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. “பெர்சிய ராஜாவின் குறிப்பு 175 தடவைக்கும் மேலாகப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் போது, தேவனின் பெயர் ஏன் ஒருமுறை கூட குறிப்பிடப்படவில்லை? தேவன் தமது இறையாட்சியினால் எதிரிகளை மேற்கொண்டு யூதர்களைக் காப்பாற்றியிருக்கும் போது, அவருக்குரிய அங்கீகாரம் ஏன் அளிக்கப்படக்கூடாது?” என்று சந்தேகப்படுகிறவர்கள் கேட்கிறார்கள்.
இக்கேள்விக்கு இப்படியாகப் பதிலளிக்கலாம்: "நான் இஸ்ரவேலைப் பாதுகாத்தேன்" என்பது புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என தேவன் விரும்பியிருந்தால், அவர் தமது ராஜரீக வல்லமையால் ஆசிரியரைத் தன்னைப்பற்றி எழுதும்படி ஏவியிருக்கலாம். இது மனுஷர்களுக்குள் காணப்படும் பிரச்சினையாக இருக்கிறதே அல்லாமல், தெய்வீகப் பிரச்சினையாக இல்லை. ஏனென்றால், தேவன் காணமுடியாதபடி இருந்து, வல்லமை தந்து, எல்லாவற்றையும் தமது நோக்கத்திற்காகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதற்கு உன்னதமான விளக்கமாக எஸ்தர் சரித்திரம் இருக்கிறது. எஸ்தர் புத்தகத்தில் எந்தவொரு அற்புதமும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இஸ்ரவேலரை எதிர்காலத்திற்கென்று பாதுகாக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும், யெகோவா தேவனின் சர்வவல்லமை மற்றும் அவர் சர்வத்தையும் அறிந்தவர் என்பது வெளிப்படுகிறது.
இரண்டாவது கேள்வி, மொர்தெகாயும் எஸ்தரும் ஏன் உலகப்பிரகாரமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றினார்கள்? தானியேலில் காண்பது போல (தானியேல் 1:8-20), எஸ்தரில் (2:6-20) பரிசுத்தத்தைக் குறித்த வைராக்கியம் காணப்படவில்லையே? மொர்தெகாய் தன்னுடைய மற்றும் எஸ்தரின் யூதப் பின்னணியை, தானியேலைப் போல வெளிப்படுத்தாமல் (தானியேல் 6:5), ரகசியமாகப் பாதுகாத்து வந்தான். தேவனுடைய வேதத்தை ஆராய எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தது போல (எஸ்றா 7:10), இவர்களிடம் அந்தப் பக்குவம் காணப்படவில்லை. நெகேமியா எருசலேம் மீது கொண்டிருந்த பற்றுடன் ஒப்பிடும்போது, எஸ்தர் மற்றும் மொர்தெகாயின் பற்று குறைவாகவே தோன்றுகிறது.
மேற்சொன்ன கேள்விகளுக்குக் கீழ்க்காணும் விளக்கங்கள் தீர்வாக அமைகின்றன:
-
இப்புத்தகம் நடைபெற்ற அனைத்தையும் பதிவு செய்யவில்லை. மொர்தெகாயும் எஸ்தரும் மிக ஆழமான விசுவாசம் வைத்திருந்தனர் என்பது, ”இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்” (4:16) என்று எஸ்தர் கூறியதிலிருந்து உறுதிப்படுத்தப்படுகிறது.
-
தெய்வீகப் பயம் நிறைந்த நெகேமியா கூட அகாஸ்வேரு ராஜாவினிடத்தில் பேசும்போது, 'தேவன்' என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை (நெகே. 2:1-8).
-
ஆராதனைக்கு அடிப்படையாக இருந்த பஸ்கா (2 ராஜா. 23:22) மற்றும் கூடாரப்பண்டிகை (நெகே. 8:17) போன்றவை எஸ்தரின் காலத்திற்குப் பல வருடங்களுக்கு முன்பே கைவிடப்பட்டிருந்தன.
-
அகாஸ்வேரு ராஜாவுக்குப் பல வருடங்களுக்கு முன் சமாரியர்களால் எழுதப்பட்ட நிருபம் அவர்களைப் பயமுறுத்தியிருக்கலாம் (கி.மு. 486; எஸ்றா 4:6).
-
ஆமானை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை (3:1,2) என்றபோது, ஆமானின் பொல்லாத நோக்கம் உடனே வெளிப்படவில்லை.
-
எஸ்தர் தன் யூதப் பாரம்பரியத்தை ஏற்ற வேளையில் வெளிப்படுத்தினாள் (7:3,4).
-
நெகேமியாவின் விண்ணப்பத்தில் (நெகே. 1:7) "நாங்கள் உமக்கு விரோதமாய் மிகவும் கெட்டுப்போனோம்" என்று அறிக்கையிடுவதிலிருந்து, சூசாவில் இருந்த யூதர்களிடத்தில் ஆவிக்குரிய விஷயத்தில் சோர்வு இருந்தது என்று அறிகிறோம்.
சுருக்கம்:
I. வஸ்திக்கு மாற்றாக எஸ்தர் கொண்டுவரப்படுதல் (1:1 - 2:18)
-
அ. வஸ்தியின் கீழ்ப்படியாமை (1:1-22)
-
ஆ. எஸ்தர் முடிசூட்டப்படுதல் (2:1-18)
II. மொர்தெகாய் ஆமானை மேற்கொள்ளுதல் (2:19 - 7:10)
-
அ. மொர்தெகாயின் விசுவாசம் (2:19 - 7:10)
-
ஆ. ஆமான் பதவி உயர்த்தப்படுதல் மற்றும் ஆணை (3:1-15)
-
இ. எஸ்தரின் இடைபடுதல் (4:1 - 5:14)
-
ஈ. மொர்தெகாய் கனப்படுத்தப்படுதல் (6:1-13)
-
உ. ஆமானின் வீழ்ச்சி (6:14 - 7:10)
III. ஆமானின் இனப்படுகொலை சதித்திட்டத்திலிருந்து இஸ்ரவேல் பாதுகாக்கப்படுதல் (8:1 - 10:3)
-
அ. எஸ்தர் மற்றும் மொர்தெகாய் பரிந்து பேசுதல் (8:1-17)
-
ஆ. யூதர்களின் வெற்றி (9:1-19)
-
இ. பூரிம் பண்டிகையின் ஆரம்பம் (9:20-32)
-
ஈ. மொர்தெகாயின் மேன்மை (10:1-3)