வேதாகமத்தை வாசி

Click to Subscribe

நீதிமொழிகள் 13

                   
புத்தகங்களைக் காட்டு
1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.
2மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும்.
3தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;
5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான்.
6நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
7ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு.
8மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான்.
9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.
10அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
12நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும்.
13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
14ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
15நற்புத்தி தயவை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.
16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
17துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.
18புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான்.
19வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.
20ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.
21பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
22நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
23ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
24பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
25நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.