இளம் பெண்களும் விவேகமும்
ஆசிரியர்: வால்டர் இ. ஐசன்ஹோர் (1889-1976)
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 4:30

(தீத்து 2: 3-5)

"வயதான ஸ்திரீகளும்... பரிசுத்தத்துக்கேற்ற நடக்கையுள்ளவர்களும்... தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு, பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளையிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும்... நல்லவர்களுமாயிருக்கவும் அவர்களுக்குப் படிப்பிக்கக்கடவர்கள்."

தீத்து 2:5-ல், முதிர்வயது பெண்கள் இளம் பெண்களுக்கு "விவேகமுள்ளவர்களாக" இருக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விவேகம் என்றால் என்ன? விவேகம் என்பது மதிநுட்பத்துடனும் எச்சரிக்கையுடனும் நல்ல தீர்மானங்களை எடுத்து, தனது நடத்தையிலும் சுயக்கட்டுப்பாட்டிலும் ஞானத்தோடு செயல்படுவதாகும்.

இப்பண்புகளைத் தனது சிந்தனையிலும், இதயத்திலும், ஆத்துமாவிலும், ஆவியிலும், வாழ்க்கையிலும் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண், பாவத்தின் இழிவான தன்மைகளுக்கு மேலாக உயர்ந்தவளாய் இருக்கிறாள். அவளுடைய வாழ்க்கை கண்ணியமாகவும், அழகாகவும், பிறருக்குப் பிரயோஜனமுள்ளதாகவும், உன்னதமாகவும் இருக்கும். தன் கணவனும், பிள்ளைகளும் மற்றும் அண்டை வீட்டாரும் பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரியாக அவள் விளங்குவாள். அவளுடைய வாழ்க்கை கிறிஸ்துவோடு தேவனில் மறைந்திருக்கிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

அவள் தேவனுடைய ஆவியைப் பெற்றிருப்பதால், நன்மையையும் தீமையையும் பகுத்தறியும் அறிவு பெற்றிருக்கிறாள். பாவமான வழிகளிலிருந்து தன்னைத் தூரமாக வைத்துக்கொள்கிறாள். அதேபோன்று, தன் கணவனையும் பிள்ளைகளையும் சூழ்ந்திருக்கும் தீமைகள், தவறுகள், பாவங்கள் மற்றும் துன்மார்க்கங்களிலிருந்து பாதுகாக்கிறாள். குறைந்தபட்சம், அவர்களை எச்சரித்து, விழிப்படையச் செய்து, உயர்ந்த, சிறந்த, பரிசுத்தமான மற்றும் அழகான வாழ்க்கையின் மேன்மைகளை அவர்களுக்குக் காண்பிக்கிறாள்.

விவேகமுள்ள பெண் "நற்பலனுக்கான நல்வழிகளைத்" தேர்ந்தெடுக்கும் ஆவியும் திறனும் கொண்டவள். நிச்சயமாக நல்ல வழிமுறைகள் அவளையும் அவள் குடும்பத்தையும் ஒரு நல்ல முடிவிற்குக் கொண்டுவரும் என்பதை அவள் நன்கறிவாள். தனது வாழ்க்கைக்கும், குணத்திற்கும், ஆத்துமாவிற்கும், நற்சாட்சிக்கும் கேடு விளைவிக்கும் எந்த வழிகளையும் அவள் தவிர்க்கிறாள். தன் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் விட்டொழிக்கிறாள். வாழ்க்கையில் தான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பல ஆண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவள் உணர்ந்திருக்கிறாள். நல்ல முடிவுகள் நல்ல வழிமுறைகளால் மட்டுமே வரும் என்பதையும், நற்செயல்கள் நற்பலன்களையும், தீய செயல்கள் தீய பலன்களையும் முடிவில் தரும் என்பதையும் அவள் அறிந்திருக்கிறாள். ஆதலால் நன்மையானதைத் தன் உள்ளத்தில் ஏற்று, தீயதை வெறுத்து ஒதுக்குகிறாள். இவ்வாறு வாழும் அவளே உண்மையான விவேகமுள்ளவள். அவளை அறிந்தவர்கள், "உண்மையாகவே இவள் ஞானமுள்ள பெண்மணி" என்று அவளைப் போற்றுகிறார்கள்.

அவளுடைய விவேகத்தில் முன்னெச்சரிக்கையும் அடங்கும். அவள் தன்னுடைய நடத்தை, செல்வாக்கு, இலக்குகள், திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் ஆகியவற்றில் கவனமாக இருக்கிறாள். தன்னுடைய வார்த்தைகள், கோபம், ஆடை ஆகியவற்றில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறாள். அவள் ஆடையில் கண்ணியமானவள்; நடத்தையில் நேர்மையானவள்; மற்றவர்களை நல்வழியில் நடத்துவதில் கருத்துள்ளவள். வீட்டுச் செலவில் சிக்கனம் கடைப்பிடிப்பவள். எதுவும் வீணாகாமல் பார்த்துக்கொள்கிறாள். தன்னுடைய வருமானத்திற்குள் குடும்பம் நடத்துபவள். ஆடம்பரம் என்பது அவளிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும்; அதேசமயம் அவள் கஞ்சத்தனம் உள்ளவள் அல்ல. கொடுக்கும் சுபாவம் கொண்டவளாயினும், பணம் வீணாகச் செலவழிக்கப்படுவதைத் தவிர்க்கிறாள். உணவு, உடை போன்றவை வீணாகாமல் பாதுகாக்கிறாள். பயன்படக்கூடிய எந்தப் பொருளையும் குப்பையாக எறியாமல் பார்த்துக்கொள்கிறாள்.

அவள் உண்மையாகத் தசமபாகம் கொடுப்பவள். நிச்சயமாக ஒவ்வொரு கிறிஸ்தவப் பெண்ணும் தசமபாகம் கொடுக்க வேண்டும். தசமபாகம் கொடுப்பவரை தேவன் எப்போதும் ஆசீர்வதிப்பார். பெண்கள் தங்கள் வருமானத்தில் உண்மையாகத் தசமபாகம் கொடுப்பது மட்டுமல்லாமல், ஆண்களும் அவ்வாறே செய்ய வேண்டும். இது நமது வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் பொருளாதாரத் திட்டம். இது எப்போதும் நமது வருமானத்தில் தேவனுடைய ஆசீர்வாதத்தைத் தக்கவைக்கிறது. கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக.

விவேகமுள்ள பெண் நியாயமானவள். அவள் நல்ல முடிவுகளால் வழிநடத்தப்படுகிறாள். அவள் ஞானமுள்ளவள். பாவமோ, பிசாசோ கண்ணி வைத்து அவளைப் பாவத்தின் படுகுழிக்குள் தள்ள முடியாது. அவள் ஞானத்திற்காகவும், நல்ல முடிவுகளுக்காவும் ஜெபிப்பதால் தேவன் அவளுக்கு அந்த ஞானத்தைத் தருகிறார். அவள் தன்னுடைய கணவனுக்கு அவனது பிரச்சினைகளிலும், மேலும் அவனது தீர்மானங்கள், திட்டங்கள், இலக்குகள் மற்றும் நோக்கங்களிலும் உறுதுணையாக இருக்கிறாள். வீட்டிலும், சபையிலும், சமூகத்திலும் அவள் நல்ல முடிவுகளை எடுத்துச் சரியானதைச் செய்கிறாள். பாவத்தில் மட்டுமே வாழ்ந்து உலகத்திற்கும் மாம்சத்திற்கும் ஊழியம் செய்யும் பெண்களின் கண்களை, உண்மையை காண முடியாதபடி பிசாசு மறைப்பது போல, இவள் கண்களை மறைக்க முடியாது. தேவனுக்கே கனமும் மகிமையும் உண்டாவதாக. ஒரு மனைவியும் தாயும் தனது முடிவுகளில் தெளிவானவர்களாக இருப்பதும், அவள் எதைச் செய்தாலும் பகுத்தறிவோடும், தேவசித்தத்திற்கு உட்பட்டும் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! சில சமயங்களில் அவள் தவறு செய்தாலும், அதற்கு விதிவிலக்கு உண்டு. ஏனெனில் அது அவள் இதயத்தின் வஞ்சனையால் அல்ல, மாம்ச பலவீனத்தால் வந்தது. தேவன் அத்தகைய தவறுகளிலும் நன்மையை உண்டாக்குகிறார் (ரோமர் 8:28).

விவேகமுள்ள பெண் தான் எப்படி வாழ்கிறாள், யாருடன் ஐக்கியம் வைத்திருக்கிறாள், எங்குச் செல்கிறாள், என்ன பேசுகிறாள் எனத் தனது வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையாக இருக்கிறாள். அவள் தன் கணவனும் பிள்ளைகளும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறாள். திருமணமாகாத பெண்களும் எப்போதும் பொறுமையோடு இந்த விவேகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவள் தன் உறவுகள், நட்புகள் மற்றும் தோழமை, தன் கற்பு, பண்பு, நடத்தை ஆகியவற்றில் ஜாக்கிரதையாக இருக்கிறாள். உன்னதமான மற்றும் அழகான பெண்மை தொடர்பான அனைத்திலும் மிகுந்த எச்சரிக்கை கொண்டிருக்க வேண்டும். தன் குணத்தைச் செல்வத்தைவிட மேலாக மதிக்கிறாள். உலகின் அற்பமான சிற்றின்பங்கள், களியாட்டங்கள் மற்றும் அழிவைத் தரும் பாவங்களைத் தவிர்க்கிறாள். தூய்மையான, பரிசுத்தமான பெண்மை அவளுக்கு "விலைமதிப்புள்ள முத்து" (மத்தேயு 13:46). தன் கற்பு, பண்பு மற்றும் தூய பெண்மையை உலகத்தின் எல்லா தங்கம், வெள்ளி, மாணிக்கம், வைரங்கள் மற்றும் முத்துகளுக்கும் விற்க மாட்டாள். எந்த விலைக்கும் அவள் விற்கப்பட மாட்டாள். இதுவே தேவன் மற்றும் மனிதர்களின் பார்வையில் உண்மையான பெண்மையின் சிகரம். தேவபக்தியுள்ள ஆண்கள் அவளை மதிக்கிறார்கள், போற்றுகிறார்கள், நேசிக்கிறார்கள். இது அவர்களைக் கிறிஸ்தவர்களாக அலங்கரிக்கிறது.

விவேகமுள்ள பெண் ஞானத்தோடு நடந்துகொள்ளுகிறாள். அவள் தன்னுடைய வாழ்க்கையை உண்மையாகவும் நேர்மையாகவும் பார்க்கிறாள். அதினால் அவள் வாழ்க்கை உன்னதமானதும், கம்பீரமானதுமாய் இருக்கிறது. அவளுடைய நடத்தை "இயேசுவோடு கூட இருந்தவர்கள்" (அப்போஸ்தலர் 4:13) என்று மற்றவர்களால் அறியப்படும் அளவிற்குச் சாட்சியுள்ளதாக இருக்கிறது. மிகுந்த சுயக்கட்டுப்பாடு கொண்டவள். உலகப்பிரகாரமான மற்றும் தேவபக்தியற்ற புத்தியீனமான பெண்களைப் போல அவள் வழிதவறிச் செல்லமாட்டாள். அவள் தன் வாழ்க்கையைச் சர்வவல்லமையுள்ள தேவனிடமும், "யுகங்களின் கன்மலை"யாகிய கிறிஸ்துவிடமும் நங்கூரமிட்டு இருக்கிறாள்.

ஒரு விவேகமுள்ள பெண்ணாக விளங்குவது வாழ்க்கையில் அடைய வேண்டிய ஒரு அற்புதமான சிகரம். படிப்பு, புகழ், மரியாதை மற்றும் பூமிக்குரிய மகிமையை விட இது மேலானது. தேவபக்தியில்லாத திரைப்பட நட்சத்திரங்கள், நடிகைகள், பிரபலமான உலகப் புகழ் பெற்ற பெண்கள் அல்லது பிசாசுக்காக வாழும் வேறு அனைவரையும் விட நிச்சயமாக விவேகமுள்ள பெண் உயர்ந்தவள். அவள் என்றென்றும் நிலைத்திருந்து பிரகாசிக்கும் ஒளியாக இருக்கிறாள். இதுவே தேவனுடைய ராஜ்யத்தில் மதிப்புமிக்க உன்னதமான காரியம்.

 
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.