யோவான் 3:5-ன் உண்மையான அர்த்தம் என்ன?
“ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” (யோவான் 3:5) என்று கர்த்தராகிய இயேசு நிக்கொதேமுவிடம் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் என்ன?
சிலர், “ஒருவன் உடல் ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் பிறந்தால் மட்டுமே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் என்பதே இயேசுவின் வார்த்தைகளுக்கு அர்த்தம்” என்று கூறுகிறார்கள். இதற்குக் காரணமும் சொல்லப்படுகிறது: தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போது உமிழ்நீரால் (Amniotic fluid) சூழப்பட்டுள்ளது. பிரசவத்திற்குச் சற்று முன்பு, அந்தச் சவ்வு உடைந்து திரவம் வெளியேறும். இது தாய் பிரசவிக்கப் போகிறாள் என்பதற்கான அறிகுறி. இந்த அடிப்படையில், ‘ஜலத்தினால் (தண்ணீரால்) பிறப்பது’ என்பது உடல் ரீதியான பிறப்பைக் குறிக்கிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால், இயேசு உடல் ரீதியான பிறப்பைப் பற்றிப் பேசியிருப்பாரானால், ஏற்கனவே பிறந்து, வளர்ந்து, முதிர்வயது அடைந்த நிக்கொதேமுவைப் பார்த்து, “நீ இரட்சிக்கப்பட வேண்டுமானால் முதலில் பிறந்து இந்த பூமிக்கு வர வேண்டும்” என்று கூறுவது அர்த்தமற்றதாகிவிடுமே!
இன்னும் சிலர், “ஒருவர் இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் பெறுவது அவசியம்” என்று போதிக்கிறார்கள். (யோவான் 3:5) வசனம் அத்தகையவர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தும் வசனங்களில் ஒன்றாகும். விசுவாசிகள் பெறும் தண்ணீர் ஞானஸ்நானம் அன்று நடைமுறையில் இல்லாதிருந்தும், ‘அத்தகைய ஒரு நற்கிரியையைச் செய்வதன் மூலம் உன் இரட்சிப்பை நீ பெற்றுக்கொள்ள முடியும்’ என்று இயேசு கூறுகிறாரா? நிச்சயம் இல்லை. ஏனென்றால், பரிசேயனாகிய நிக்கொதேமு இயேசு சொன்னதைப் புரிந்துகொண்டிருந்தால், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவன் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்? மாறாக, “ஓ, அவ்வளவுதானா! இரட்சிக்கப்படுவதற்கு இது போதுமா? நாளைய தினமே இதைச் செய்துவிடுகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்திருப்பானே! ஆனால், இயேசுவின் வார்த்தைகளுக்கு நிக்கொதேமு அளித்த பதிலையும், அதன் பின்னர் இயேசு போதித்த காரியங்களையும் சிந்தித்துப் பார்த்தால், நம்முடைய சுய முயற்சியால் இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
நற்பண்புகளினாலோ, நற்கிரியைகளினாலோ எந்த ஒரு மனிதனும் இரட்சிக்கப்பட முடியாது என்பது அப்போஸ்தலர் 15-ம் அதிகாரம் மற்றும் ரோமர் 4-ம் அதிகாரம் போன்ற பகுதிகளில் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இரட்சிப்பு என்பது கிருபையினாலும் விசுவாசத்தினாலும் மட்டுமே உண்டாகிறது (ரோமர் 3:22-30, 4:5; கலாத்தியர் 2:16; எபேசியர் 2:8-9; பிலிப்பியர் 3:9). ஒரு நபர் இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் கட்டாயமென்றால், சுவிசேஷம் அறிவிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலும் ஞானஸ்நானத்தைக் குறித்துக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இயேசுவோ, அப்போஸ்தலர்களோ அவ்வாறு செய்ததாக நாம் வேதத்தில் எங்கும் வாசிக்கவில்லை. அப்போஸ்தலனாகிய பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் தமது பிரசங்கத்தில் ஞானஸ்நானம் பற்றிக் குறிப்பிடுகிறார் (அப்போஸ்தலர் 2:38). ஆனால், அவரே அப்போஸ்தலர் 3-ம் அதிகாரத்தில் பேசும்போது, “உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்புங்கள்” (அப் 3:19) என்றுதான் கூறுகிறாரே தவிர, ஞானஸ்நானத்தைக் குறிப்பிடவில்லை. பாவமன்னிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்றால், பேதுரு அதை ஏன் இங்கு குறிப்பிடவில்லை?
அப்போஸ்தலனாகிய பவுலின் சுவிசேஷ அறிவிப்பிலும் ஞானஸ்நானம் பிரதானப்படுத்தப்படவில்லை. 1 கொரிந்தியர் 15:1-4 வசனங்களில் அவர் தான் பிரசங்கித்த சுவிசேஷத்தின் சாராம்சத்தைக் கூறுகிறார். அதில் ஞானஸ்நானம் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. மேலும், “ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்” (1 கொரிந்தியர் 1:17) என்று பவுல் கூறுகிறார். சுவிசேஷமும், ஞானஸ்நானமும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்பது பவுலின் வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது. ஒருவன் இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் அவசியம் என்றால், பவுல் ஞானஸ்நானம் கொடுக்காமல் வெறும் சுவிசேஷத்தை மட்டும் பிரசங்கித்ததால் என்ன பயன்? அப்படிச் செய்திருந்தால் யாரும் இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டார்களே! ஆகவே, சுவிசேஷமும் ஞானஸ்நானமும் வேறுவேறானவை என்ற சத்தியத்தை பவுல் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார். லூக்கா 7:37-ல் கண்ணீரால் கர்த்தருடைய பாதங்களைத் துடைத்த பாவிப்பெண், மத்தேயு 9:2-ல் முடக்குவாதக்காரர், லூக்கா 18:13-14-ல் வரி வசூலிப்பவன் ஆகியோர் ஞானஸ்நானம் பெறாமலேயே பாவமன்னிப்பைப் பெற்றார்கள் என்பதை நாம் வேதத்தில் பார்க்கிறோம்.
மேலும், சிலர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே இரட்சிக்கப்பட்டதாக வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. கொர்நெலியுவும் அவருடன் இருந்தவர்களும் பேதுரு சொன்ன சுவிசேஷத்தைக் கேட்டு விசுவாசித்தார்கள் (அப்போஸ்தலர் 10:44-48). அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றதிலிருந்து (வசனம் 44), அவர்கள் ஞானஸ்நானத்திற்கு முன்பே இரட்சிக்கப்பட்டார்கள் என்பது தெளிவாகிறது. அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்றும், பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள் என்றும் பேதுருக்கு உறுதியான பிறகுதான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
வேதாகமத்தின் ஒரு பகுதியின் சரியான அர்த்தத்தை அறிவதற்கு, அந்தப் பகுதியை வேதத்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கோட்பாடு மிகவும் முக்கியமானது. தேவனுடைய வார்த்தைகளுக்குள் முரண்பாடு இருக்க முடியாது. வேதத்தின் ஏதாவது ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு கோட்பாட்டை உருவாக்குவது சரியான முறை அல்ல. ஞானஸ்நானத்தாலோ அல்லது வேறு எந்தக் கிரியையினாலோ ஒரு நபர் இரட்சிக்கப்படுவதில்லை என்பதே வேதத்தின் முழுமையான போதனை. எனவே, இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்று தோன்றும் பகுதிகளை வேத ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு பார்ப்போம்.
அப்போஸ்தலர் 2:38-ல், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று பேதுரு கூறுகிறார். கிரேக்க இலக்கணப்படி ஆராய்ந்தால், ‘மனந்திரும்புதல்’ என்பது பாவமன்னிப்போடு நேரடியாகத் தொடர்புடையது. சுருக்கமாகச் சொன்னால், பாவமன்னிப்பு என்பது மனந்திரும்புதலின் விளைவே தவிர, ஞானஸ்நானத்தின் விளைவு அல்ல.
மாற்கு 16:16-ல், “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்” என்று வாசிக்கிறோம். இந்த வசனத்தில் யார் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவார்கள் என்பதை கவனியுங்கள். ஞானஸ்நானம் பெறாதவரா? இல்லை, விசுவாசியாதவரே! ஞானஸ்நானம் என்பது விசுவாசத்தின் வெளிப்பாடு. ஒருவன் ஞானஸ்நானம் பெற்றாலும், அவனுக்குள் விசுவாசம் இல்லாவிட்டால், அவன் ஆக்கினையிலிருந்து தப்பிக்க முடியாது. இதிலிருந்து இரட்சிப்புக்கு விசுவாசமே ஆதாரம் என்பது தெளிவாகிறது.
‘ஞானஸ்நானம்’ (Baptism) என்ற சொல்லுக்கு ‘மூழ்குதல்’ என்று பொருள். ‘Baptizo’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து இது வந்துள்ளது. புதிய ஏற்பாட்டில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படும் இடமெல்லாம் அது தண்ணீர் ஞானஸ்நானத்தை மட்டுமே குறிக்கிறது என்று நினைக்கக்கூடாது. 1 பேதுரு 3:21-ல் பேதுரு, “ஞானஸ்நானமானது மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல்...” என்று கூறுகிறார். இங்கே அவர் தண்ணீர் ஞானஸ்நானம் மூலம் சரீரத்தைச் சுத்திகரிப்பதைப் பற்றிப் பேசவில்லை; மாறாக, கிறிஸ்துவின் மரணத்திலும் உயிர்த்தெழுதலிலும் நாம் இணைக்கப்படுவதாகிய ஆவிக்குரிய ஞானஸ்நானத்தைக் குறித்தே பேசுகிறார்.
அப்போஸ்தலர் 22:16-ல் அனனியா பவுலிடம், “நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு” என்றார். இதிலும் கிரேக்க வார்த்தைகளை ஆராய்ந்து பார்த்தால், ‘கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வதற்கும்’ ‘பாவங்கள் கழுவப்படுவதற்கும்’ தான் தொடர்பு உள்ளது. ஞானஸ்நானத்தினால் பாவங்களைக் கழுவ முடியாது என்பது தெளிவாகிறது.
“அப்படியென்றால் ஞானஸ்நானம் அவசியமில்லையா?” என்று நீங்கள் கேட்கலாம். நான் அப்படிச் சொல்லவில்லை. ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தைக் குறைப்பது என் நோக்கமல்ல. உண்மையாக மனந்திரும்பி பாவமன்னிப்பைப் பெற்ற ஒவ்வொரு விசுவாசியும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் பெற வேண்டும். ஆனால், ஒரு நபர் ஞானஸ்நானத்தினால் இரட்சிக்கப்படுகிறார் என்றோ, தவிர்க்க முடியாத காரணத்தால் ஞானஸ்நானம் பெற முடியாமல் போனால் அவர் நரகத்திற்குச் செல்வார் என்றோ வேதம் போதிக்கவில்லை.
ஞானஸ்நானம் பற்றிய விரிவான விளக்கத்திற்கு
இப்போது நமது முக்கிய வேதப்பகுதியைச் சிந்திப்போம்: “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” (யோவான் 3:5).
இங்கே ‘ஜலத்தினால்’ (தண்ணீரால்) பிறப்பது என்பது உடல் ரீதியாகப் பிறப்பதையோ, தண்ணீர் ஞானஸ்நானம் பெறுவதையோ குறிக்கவில்லை. அப்படியென்றால், இதன் உண்மையான அர்த்தம் என்ன? இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக இயேசு நிக்கொதேமுவைக் கடிந்துகொண்டார். “நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?” (யோவான் 3:10) என்று கேட்டார். அதாவது, “பழைய ஏற்பாட்டில் கரைகண்டவனான உனக்கு இது தெரியாதா?” என்பதுதான் இயேசுவின் கேள்வி. இதன் மூலம், இந்தக் காரியங்கள் ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பது நமக்கு புரிகிறது. பழைய ஏற்பாட்டின் எந்த வேதப்பகுதியை இயேசு மனதில் வைத்துப் பேசினார்?
அது எசேக்கியேல் 36:25-27 ஆகும்:
“அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன்... உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு... உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைப்பேன்.”
தேவன் தம்முடைய மக்களைச் சுத்தமான தண்ணீரால் கழுவி, எல்லா அசுத்தங்களும் நீங்கும்படியாகத் தம்முடைய ஆவியை அவர்களுக்குள் வைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஒரு நபர் மறுபடியும் பிறப்பதற்குத் தேவன் செய்யும் செயல் இதுதான். “ஜலத்தினால் பிறப்பது” என்பது, தேவன் நம்மைத் தம்முடைய வார்த்தையினால் கழுவிச் சுத்திகரிப்பதைக் குறிக்கிறது. “ஆவியினால் பிறப்பது” என்பது, தேவன் கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு சதையான இருதயத்தைக் கொடுத்து, தம்முடைய ஆவியை நமக்கு அளிப்பதைக் குறிக்கிறது. இதுவே மறுபிறப்பைப் பற்றிய இயேசுவின் விளக்கம்.
பரிசேயர்கள் வெறும் சடங்காச்சாரங்களையும், வெளிப்புறத் தோற்றத்தையும் மட்டுமே நம்பியிருந்தனர். ஆனால், மறுபிறப்பு அல்லது மறுஜென்மம் என்பது புதிய செய்தி அல்ல. எசேக்கியேல் 11:19-20-லும் இதைக் குறித்த வாக்குறுதிகள் உள்ளன. இஸ்ரவேலின் போதகனான நிக்கொதேமு இதை அறிந்திருக்க வேண்டும். ஆனால், பரிசேயர்களின் போதனை தேவனுடைய வார்த்தையை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றிருந்தது.
மனிதன் தன்னுடைய நற்கிரியைகளாலோ, சுய நீதியினாலோ இரட்சிப்பை அடைய முடியாது. “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” (யோவான் 3:6). மனிதனின் இருதயம் மாறாவிட்டால், வெளிப்புற பக்தி வேஷம் அனைத்தும் வீண்.
அன்புள்ள வாசகரே, இந்த சத்தியங்களை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஞானஸ்நானத்தாலோ, சுய முயற்சிகளாலோ எவரும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. இத்தனை காலமும் தவறான உபதேசத்தால் ஏமாற்றப்பட்டிருந்தால், தேவன் இன்று உங்களுக்குத் தம்முடைய சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். ஞானஸ்நானம் பெற்றதால் பரலோகம் செல்வேன் என்ற பொய்யான நம்பிக்கையில் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறப்பது என்பது, பாவங்கள் கழுவப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்று, ஒரு புதிய இருதயத்தைப் பெறுவதாகும். நீங்கள் உண்மையிலேயே மனந்திரும்பினீர்களா? உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டனவா? இது உங்கள் நித்திய வாழ்வு சம்பந்தப்பட்ட கேள்வி.
நீங்கள் மீண்டும் பிறந்தவரா? என்பதை அறிய
நம்மை நாமே இரட்சித்துக்கொள்ள முடியாது என்பதையும், தேவன் தம்முடைய கிருபையினால் மட்டுமே மறுபிறப்பு என்ற அற்புதத்தை நம்மில் நிகழ்த்துகிறார் என்பதையும் இக்கட்டுரையின் மூலம் நாம் கற்றுக்கொண்டோம்.
“ஆண்டவரே, இந்தக் கட்டுரையை வாசிக்கும் ஒவ்வொருவரும் இந்தச் சுவிசேஷ சத்தியத்தினால் தெளிவுபெற்று, வெளிப்படுத்தல் 7:9,10-ல் கூறியுள்ளதுபோல, ‘இரட்சிப்பு தேவனுடையது’ என்று உம்மைத் துதிக்கும் பாக்கியத்தைப் பெற கிருபை செய்யும். ஆமென்.”