Day 90 Day 91Day 92

யோசுவா அத்தியாயம் 14

1
கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,
2
ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.
3
மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்கு மாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.
4
மனாசே எப்பிராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்கு தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
5
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.
6
அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.
7
தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டு வந்தேன்.
8
ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.
9
அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.
10
இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.
11
மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள் வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.
12
ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.
13
அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.
14
ஆதலால் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.
15
முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

யோசுவா அத்தியாயம் 15

1
யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன்வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.
2
தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி,
3
தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய்,
4
அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல் மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.
5
கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனைதுவக்கி,
6
பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
7
அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
8
அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,
9
அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
10
பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
11
அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.
12
மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
13
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான்.
14
அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,
15
அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.
16
கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
17
அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.
18
அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.
19
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
20
யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்:
21
கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
22
கீனா. திமோனா, ஆதாதா,
23
கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
24
சீப், தேலெம், பெயாலோத்,
25
ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
26
ஆமாம், சேமா, மொலாதா,
27
ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத்,
28
ஆத்சார்சுவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,
29
பாலா, ஈயிம், ஆத்சேம்,
30
எல்தோலாத், கெசீல், ஒர்மா,
31
சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
32
லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
33
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
34
சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
35
யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
36
சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினான்கு.
37
சேனான், அதாஷா, மிக்தால்காத்,
38
திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
39
லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
40
காபோன், லகமாம், கித்லீஷ்,
41
கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.
42
லிப்னா, ஏத்தேர், ஆஷான்,
43
இப்தா, அஸ்னா, நெத்சீப்,
44
கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
45
எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
46
எக்ரோன் துவக்கிச் சமுத்திரம் மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
47
அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.
48
மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,
49
தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
50
ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
51
கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.
52
அராப், தூமா, எஷியான்,
53
யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
54
உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
55
மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
56
யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
57
காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து.
58
அல்கூல், பெத்சூர், கெதோர்,
59
மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
60
கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
61
வனாந்தரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா,
62
நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
63
எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

யோசுவா அத்தியாயம் 16

1
யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான தண்ணீருக்குப் போய், எரிகோ துவக்கிப் பெத்தேலின் மலைகள் மட்டுமுள்ள வனாந்தர வழியாகவும் சென்று,
2
பெத்தேலிலிருந்து லூசுக்குப் போய், அர்கீயினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து,
3
மேற்கே யப்லெத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள் மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும்.
4
இதை யோசேப்பின் புத்திரராகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.
5
எப்பிராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.
6
மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத்சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,
7
யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.
8
தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானாநதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.
9
பின்னும் எப்பிராயீம் புத்திரருக்குப் பிரத்தியேகமாய்க் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமெல்லாம் மனாசே புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.
10
அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.

அப்போஸ்தலர் அத்தியாயம் 10

1
இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.
2
அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.
3
பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,
4
அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
5
இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி.
6
அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
7
கொர்நேலியு தன்னுடனே பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனுஷரில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து,
8
எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான்.
9
மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்துவருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான்.
10
அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,
11
வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,
12
அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.
13
அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
14
அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
15
அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
16
மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
17
அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:
18
பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
19
பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்துச் சிந்தனைபண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
20
நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்கும் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
21
அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான்.
22
அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளைப்பெற்றார் என்றார்கள்.
23
அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனே கூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள்.
24
மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.
25
பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
26
பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.
27
அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
28
அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.
29
ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.
30
அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:
31
கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.
32
யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு என்று மறுபேர் கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.
33
அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.
34
அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,
35
எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.
36
எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே.
37
யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே.
38
நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
39
யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.
40
மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.
41
ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.
42
அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
43
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
44
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
45
அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்,
46
பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
47
அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,
48
கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.