ஆதியாகமம்
படிப்புகள்: 1918
Print

ஆதியாகமம் – மோசேயின் முதல் ஆகமம்

ஆதியாகமம் (Genesis) என்னும் தலைப்பு, “தோற்றம்” என்று பொருள்படும் கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்து (செப்டுவஜிண்ட் LXX) வருகிறது. வேதாகமத்தின் முதல் வார்த்தையான “ஆதியிலே” என்பதிலிருந்தே இதன் எபிரேயத் தலைப்பு பெறப்பட்டது. பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களான பஞ்சாகமங்களையும், முழு வேதாகமத்தையும் அறிமுகம் செய்ய ஆதியாகமம் உதவுகிறது. புதிய ஏற்பாட்டில் 35-க்கும் மேற்பட்ட இடங்களிலும், இரு ஏற்பாட்டுகளிலும் சேர்த்து நூற்றுக்கும் அதிகமான இடங்களிலும் இதன் குறிப்புகள் காணப்படுவதே, வேத வாக்கியங்களில் ஆதியாகமத்தின் தாக்கத்தை நிரூபிக்கும் சான்றாகும். ஆதியாகமம் 3-ஆம் அதிகாரத்தில் தொடங்கும் மீட்பின் சரித்திரத் தொடர்ச்சி, வெளிப்படுத்தல் 21, 22-ஆம் அதிகாரங்களில், மீட்கப்பட்ட விசுவாசிகளால் ஆன நித்திய ராஜ்யத்தை மகிமையாகவும் தத்ரூபமாகவும் சித்தரிக்கும் வரை முடிவடைவதில்லை.

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் காலம்

ஆதியாகமத்தில் ஆசிரியர் தன்னைத் தானே வெளிப்படையாக அடையாளம் காட்டவில்லை. ஆயினும், மோசே பிறப்பதற்கு ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆதியாகம வரலாறு முடிவடைகிறது.

பழைய ஏற்பாடு (யாத். 17:14; எண். 33:2; யோசுவா 8:31; 1 இராஜா. 2:3; 2 இராஜா. 14:6; எஸ்ரா 6:18; நெகேமியா 13:1; தானி. 9:11; மல்கியா 4:4) மற்றும் புதிய ஏற்பாட்டு வசனங்களின் (மத். 8:4; மாற்கு 12:26; லூக்கா 16:29; 24:27, 44; யோவான் 5:46; 7:22; அப். 15:1; ரோமர் 10:19; 1 கொரி. 9:9; 2 கொரி. 3:15) அடிப்படையிலும், மோசேயின் கல்விப் பின்னணியை (அப். 7:22) வைத்துப் பார்க்கும்போதும், இதனைத் தொகுத்து எழுதுவதற்குப் பொருத்தமான ஆசிரியர் மோசேதான் என்பது தெளிவாகிறது. மோசேதான் ஆசிரியர் என்பதை மறுப்பதற்கு வலுவான காரணங்கள் ஏதுமில்லை. ஆதியாகமம், யாத்திராகமம் (கி.மு. 1445) புத்தகத்திற்குப் பின்னும், ஆனால் மோசேயின் மரணத்திற்கு (கி.மு. 1405) முன்னும் எழுதப்பட்டது. மோசேயின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பினை யாத்திராகமம் 1 முதல் 6 வரையிலான அதிகாரங்களில் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம்.

பின்னணி மற்றும் அமைப்பு

ஆதியாகமத்தின் தொடக்க அமைப்பு - நித்திய கடந்தகாலம். தேவன், தமது சித்தத்தின்படியும் தெய்வீக வார்த்தையினாலும், சகல சிருஷ்டிகளையும் உருவாக்கினார். இறுதியில், தேவனாகிய கர்த்தர் ஆதாமைப் பூமியின் மண்ணினாலே தமது சாயலில் வடித்து, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதிச் சிருஷ்டித்தார். தேவன் தமது சிருஷ்டிப்பின் மகுடமாக மனுக்குலத்தை உண்டாக்கினார். அதாவது, அவருடனான உறவைக் கொண்டாடி, அவருடைய நாமத்திற்கு மகிமை சேர்க்கும் தோழர்களாக அவர்களை வைத்தார்.

ஆதியாகமத்தில் காணப்படும் ஆரம்பக்காலச் சம்பவங்களின் வரலாற்றுப் பின்னணி, மெசொப்பொத்தாமியாவைச் சார்ந்தது. இப்புத்தகம் எந்த வரலாற்று காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதைத் துல்லியமாகக் கூறுவது கடினமாக இருந்தாலும், இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன் (கி.மு. 1405) ஆதியாகமத்தை வாசிக்கக் கேட்டிருந்தனர்.

புவியியல் ரீதியாக ஆதியாகமம் மூன்று தெளிவான, தொடர்ச்சியான அமைப்பைக் கொண்டுள்ளது:

  1. மெசொப்பொத்தாமியா (அதிகாரங்கள் 1-11)

  2. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் (அதிகாரங்கள் 12-36)

  3. எகிப்து (அதிகாரங்கள் 37-50)

இந்த மூன்று பிரிவுகளின் கால அளவுகள்:

  1. சிருஷ்டிப்பிலிருந்து கி.மு. 2090 வரை.

  2. கி.மு. 2090 முதல் கி.மு. 1897 வரை.

  3. கி.மு. 1897 முதல் கி.மு. 1804 வரை. வேதாகமத்தின் மற்ற புத்தகங்களின் கால இடைவெளியை ஒன்றுசேர்த்தாலும், அதைக்காிலும் அதிக கால இடைவெளியை ஆதியாகமம் உள்ளடக்கியுள்ளது.

வரலாற்று மற்றும் இறையியல் கருப்பொருட்கள்

இந்தத் ‘தொடக்கங்களின்’ (ஆதியாகமம்) புத்தகத்தில் தேவன் தம்மை வெளிப்படுத்தி, இஸ்ரவேலுக்கு உலகத்தைக் குறித்த ஒரு பார்வையைக் தந்தார். அது இஸ்ரவேலின் அண்டை தேசத்தாரின் உலகப்பார்வைக்கு முற்றிலும் முரணானதாக இருந்தது. தேவன் இருக்கிறார் என்பதையோ, அல்லது அவரின் ஆள்தத்துவத்தையோ, அவரின் செயல்பாடுகளையோ நிரூபித்துத் தற்காத்துக்கொள்ள ஆசிரியர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. மாறாக, இஸ்ரவேலின் தேவன், அண்டை தேசத்தாரின் தேவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்பதைத் தெளிவாகக் காட்டி, தம்மை வேறுபடுத்திக் கொள்கிறார். பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியாகிய தேவன், மனுஷன், பாவம், மீட்பு, உடன்படிக்கை, வாக்குத்தத்தம், சாத்தான், தேவதூதர்கள், ராஜ்யம், வெளிப்படுத்தல், இஸ்ரவேல், நியாயத்தீர்ப்பு மற்றும் ஆசீர்வாதம் ஆகிய இறையியலின் அடிப்படைக் கருப்பொருட்கள் இதில் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆதியாகமம் 1-11 (ஆதி வரலாறு) பிரபஞ்சத்தின் தோற்றங்களைக் குறித்து வெளிப்படுத்துகிறது. காலம், இடம் போன்றவற்றின் ஆரம்பமும்; மனித அனுபவத்தில் திருமணம், குடும்பம், வீழ்ச்சி, பாவம், மீட்பு, நியாயத்தீர்ப்பு மற்றும் தேசங்கள் போன்ற அநேக முதல் அனுபவங்களும் இங்குதான் தொடங்கின. ஆதியாகமம் 12 முதல் 50-ஆம் அதிகாரம் வரை (முற்பிதாக்களின் வரலாறு), இஸ்ரவேலர்கள் எப்படிக் குடும்பமாக வாழ ஆரம்பித்தார்கள் என்பதையும், அவர்கள் சந்ததியை ஏபேர் வரை (அதனால்தான் ”எபிரேயர்”; ஆதியாகமம் 10:24, 25) கண்டறிய முடியும் என்பதையும் விளக்குகிறது. இன்னும் தூரத்து உறவான நோவாவின் மகன் சேம் வரையிலும் அவர்கள் சந்ததி அறியப்பட்டிருந்தது (ஆதியாகமம் 10:21).

தேவனுடைய ஜனங்கள் தங்கள் சந்ததி மற்றும் குடும்ப வரலாற்றை அறிந்துகொள்ள முடிந்தது மட்டுமல்லாமல்; அவர்கள் குடும்ப அமைப்பு, பழக்கவழக்கங்கள், மொழிகள், வேறுபட்ட கலாச்சாரங்கள் ஆகியவற்றின் தோற்றத்தையும் அறிந்திருந்தனர். விசேஷமாக, மனிதனின் அடிப்படைப் பிரச்சனையான பாவம் மற்றும் மரணம் குறித்த புரிதல் அவர்களிடம் இருந்தது.

தேவனுடைய ஜனங்கள் கானானைச் சுதந்தரித்து, கானானியரைத் துரத்திவிட்டு, அவர்களது வீடு மற்றும் உடைமைகளைச் சுதந்தரிக்க இருந்ததால், தேவன் இஸ்ரவேலரின் சத்துருக்களின் பின்னணி குறித்து அவர்களுக்கு முன்னறிவித்தார். கானானியருடைய அக்கிரமத்தின் நிமித்தம் தேவன் அறிவித்த அந்த யுத்தத்தின் உண்மையான அடிப்படையை, மோசே எழுதிக்கொண்டிருந்த மற்ற நான்கு புத்தகங்களுடன் (யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம்) இணைத்து அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது. இறுதியில், முந்தைய உலக வரலாற்றையும், இஸ்ரவேல் தேசத் தொடக்கத்தின் பின்னணியையும் அறிந்திருப்பதை அடிப்படையாகக் கொண்டு; யோசுவாவின் தலைமையின் கீழ், தங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அவர்கள் தங்கள் புதிய வாழ்வைத் தொடங்குவார்கள்.

ஆதியாகமம் 12:1-3, தேவன் ஆபிரகாமுக்குத் தந்த வாக்குத்தத்தங்கள் மீது முதன்மையான கவனத்தைக் குவிக்கிறது. இது முழு உலகத்தின் மீதிருந்த பார்வையைச் சுருக்கி, இஸ்ரவேல் என்னும் ஒரு சிறிய தேசத்தின் மீது கவனத்தைத் திருப்பியது. அவர்கள் மூலமாகத் தேவன் தமது மீட்பின் திட்டத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும்படிக்கு இது அமைந்தது. “ஜாதிகளுக்கு ஒளியாக” (ஏசாயா 42:6) இருப்பதே இஸ்ரவேல் தேசத்தின் பணி என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேசம், சந்ததி (விதை) மற்றும் ஆசீர்வாதத்தைத் தேவன் வாக்குத்தத்தம் செய்தார். இந்த மும்முனை ஆசீர்வாதம்தான் பின்வரும் நாட்களில் ஆபிரகாமுடன் (ஆதியாகமம் 15:1-20) செய்த உடன்படிக்கைக்கு அடிப்படையாக மாறியது. அதற்குப்பின் வரும் வேத வாக்கியங்கள் யாவும் இந்த வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலைக் குறித்தே பேசுகின்றன.

பெரிய அளவில், ஆதியாகமம் 1-11 அதிகாரங்கள் தேவனுடைய குணாதிசயம் மற்றும் செயல்கள் என்னும் ஒரே செய்தியைக் குறித்துத்தான் பேசுகின்றன. இந்த அதிகாரங்களில் நிகழ்ந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, மனுக்குலம் சுயவிருப்பத்தோடு கீழ்ப்படியாமல் சென்றபோதெல்லாம், தேவன் எவ்விதத்தில் பதிலளித்தார் என்பதிலிருந்து அவருடைய பரிபூரண கிருபையின் செயல்பாடு வெளிப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் தேவன் தம்முடைய கிருபையின் வெளிப்பாட்டை அதிகரித்தார். அதேவேளையில், மனிதன் பாவத்தை அதிகரிப்பதன் மூலமே பதிலளித்தான். வேதாகம வார்த்தைகளின்படி, "பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று" (ரோமர் 5:20).

இறுதியாக, வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய முக்கிய கருப்பொருள் இப்புத்தகத்தை மற்ற புத்தகங்களிலிருந்து வேறுபிரிக்கிறது. அதாவது, வேதாகமத்தின் முதல் புத்தகம் கடைசிப் புத்தகத்துடன் மிக நெருக்கமாகத் தொடர்பில் இருக்கிறது. ஆதியாகமத்தில் இழக்கப்பட்ட பரதீசு, வெளிப்படுத்தல் புத்தகத்தில் மீட்டெடுக்கப்படுகிறது. ஆதியாகமம் 3-ல் காணப்படும் சாபத்தின் விளைவுகளுக்கு, யோவான் தனது புத்தகத்தில் எதிர்காலத் தீர்வாக அமையும் சம்பவங்களைத் தெளிவாக விவரிக்கிறார். யோவானின் வார்த்தைகளில் சொல்வதானால், ”இனி ஒரு சாபமுமிராது” (வெளி. 22:3). தேவனுடைய வார்த்தையின் கடைசி அதிகாரத்தில், விசுவாசிகள் மீண்டும் “ஜீவ விருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதையும்” (வெளி. 22:14), அவர்கள் நகரத்திற்குள் பிரவேசிப்பதையும் காண்கிறோம்; அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினாலே தங்கள் அங்கிகளைத் தோய்த்து வெளுத்தவர்கள் (வெளி. 7:14).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

இப்புத்தகத்தின் ஒட்டுமொத்தச் செய்தியும் தனிப்பட்ட செய்தியும், விசுவாசம் மற்றும் கிரியைகளுக்கு முக்கிய பாடங்களைக் கற்றுத் தருவதாய் இருக்கின்றன. ஆதியாகமம், சிருஷ்டிப்பானது “ஒன்றுமில்லாமையிலிருந்து” (Ex nihilo) என்னும் தெய்வீகக் கட்டளையினால் உண்டானது எனக் கூறுகிறது. மனிதனின் வீழ்ச்சி, ஜலப்பிரளயம், தேசங்கள் பிரிக்கப்படுதல் என்னும் மூன்று அதிர்ச்சிகரமான சம்பவங்கள் உலகச் சரித்திரத்தைப் புரிந்துகொள்ளும் பின்னணியாக நமக்குத் தரப்பட்டுள்ளன. பின்னர் ஆபிரகாமிலிருந்து, தேவனின் மீட்பு மற்றும் ஆசீர்வாதத்தில் கவனம் செலுத்துகிறது.

ஆதியாகம நாட்களில் காணப்பட்ட பழக்கவழக்கங்கள், இன்றைய நவீன உலகின் பழக்கவழக்கங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. கிழக்கத்திய தேசங்களின் பழங்காலப் பின்னணியில் வைத்தே அவற்றுக்கு விளக்கம் காண வேண்டும். ஒரு பழக்கவழக்கத்தைக் குறித்து விளக்கம் அளிக்க, வேதாகமத்தின் மற்ற வசனங்களை நாடுவதற்கு முன்பாக, அந்தக் குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் உடனடிச் சூழ்நிலையைக் கொண்டே விளக்கம் அளிக்க வேண்டும்.