சங்கீதங்களின் புத்தகம்: ஓர் அறிமுகம்
சங்கீதங்களின் முழுத் தொகுப்பிற்கும் எபிரேய மூல பாஷையில் “துதிகள்” (Tehillim) என்று பெயரிடப்பட்டுள்ளது. பின்நாட்களில் ரபீக்கள் (யூத குருமார்கள்) இத்தொகுப்பினை “துதிகளின் புத்தகம்” என அவ்வப்போது அழைத்தனர். பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்டுவாஜிண்ட் (LXX), இதனை ”சங்கீதங்கள்” (Psalms) எனப் பெயரிட்டது (புதிய ஏற்பாட்டில் லூக்கா 20:42 மற்றும் அப்போஸ்தலர் 1:20 ஆகிய வசனங்களில் இது ‘சங்கீதப் புஸ்தகம்’ என அழைக்கப்படுகிறது). “சங்கீதங்கள்” (Psalmos) என்னும் கிரேக்கப் பெயர்ச்சொல்லானது, “நரம்புகளை மீட்டி இசைத்தல்” அல்லது “பண் எழுப்புதல்” என்ற வினைச்சொல்லில் இருந்து வருவதால், இவ்வார்த்தைக்கு இசையுடன் ஒரு தொடர்பு இருக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. ஆங்கிலப் பெயரான ‘Psalms’ என்பதும் கிரேக்கப் பெயரின் பின்னணியிலிருந்தே வழங்கப்படுகிறது. இஸ்ரவேலருக்கு இது “தேவ ஆவியினால் அருளப்பட்ட” (2 தீமோத்தேயு 3:16) “பாட்டுப் புத்தகம்” என்பதால், சங்கீதப் புத்தகம் பண்டைய காலத்தின் ஆராதனைக்குரிய சரியான மெய்ப்பொருளாகவும், வழிபாட்டின் உள்ளடக்கமாகவும் திகழ்ந்தது.
மொத்தத்தில் 116 சங்கீதங்கள் தலைப்பு அல்லது மேற்குறிப்பைப் (Superscriptions) பெற்றுள்ளன. எபிரேய மொழி உரையில் இந்தத் தலைப்புகள் வசனங்களுடன் சேர்ந்தே இருக்கின்றன. தலைப்புகள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்தால், பொதுவாக அவை யாவும் சங்கீதம் எழுதப்பட்ட பின்னர் சேர்க்கப்பட்டவை எனவும், மிகவும் நம்பத்தகுந்த தகவல்களைப் பெற்றிருக்கின்றன எனவும் அறிந்துகொள்ளலாம் (லூக்கா 20:42).
அந்தத் தலைப்புகள் – எழுதிய ஆசிரியர், யாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது, வரலாற்றுத் தருணம், இராகத் தலைவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சங்கீதம், மற்றும் வழிபாட்டுமுறை அறிவுரைகள் (இது எப்படிப்பட்ட சங்கீதம், இத்துடன் எந்த இசைக்கருவியை இசைக்க வேண்டும், அல்லது எந்த வேளையில் பயன்படுத்த வேண்டும்) ஆகிய விபரங்களைத் தருகின்றன. இதுதவிர, அவை பழைமை வாய்ந்தவைகளானதால் வேறு நுட்பமான இசைக்குறிப்புகளையும், சிறிய எபிரேய முன்னிடைச்சொற்களையும் (Prepositions) சங்கீதத் தலைப்புகளில் ஆங்காங்கே காணலாம். அவை உதாரணமாக, “உடன்”, ”இருந்து”, ”ஆல்”, “க்கு”, “ஆக” என்பதுடன் - “பற்றி” என்பது போன்ற வெவ்வேறுத் தொடர்புகளை ஏற்படுத்துகின்றன. சில இடங்களில் “இந்தக் குறிப்பிட்ட நபருக்காக, இந்த நபரால் எழுதப்பட்டது” என்ற தகவலைத் தருகின்றன. ஆனாலும், இந்தத் தலைப்புகள் அதிகமாக தாவீதால் எழுதப்பட்ட இஸ்ரவேலின் சங்கீதம், மோசேயினால் எழுதப்பட்ட, சாலமோனால் எழுதப்பட்ட, ஆசாப்பினால் எழுதப்பட்ட அல்லது கோராகின் புத்திரரால் எழுதப்பட்ட சங்கீதம் என அதன் ஆசிரியர்களைச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன.
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் காலம் தேவனுடைய கண்ணோட்டத்தில், தேவன் தாமே சங்கீதங்களின் ஆசிரியர் என்று அறிகிறோம். மனுஷிகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஏழு தொகுப்பாளர்களை நாம் அடையாளம் காணலாம். 150 சங்கீதங்களில் ஏறக்குறைய 73 சங்கீதங்களை தாவீது ராஜா எழுதியுள்ளார். கோராகின் புத்திரர் 10 சங்கீதங்களையும் (சங். 42, 44-49, 84, 85, 87); ஆசாப் 12 சங்கீதங்களையும் (சங். 50, 73-83) எழுதியுள்ளனர். ஏனைய எழுத்தாளர்கள் சாலமோன் (சங். 72, 127), மோசே (சங். 90), ஏமான் (சங். 88), மற்றும் ஏத்தான் (சங். 89) ஆவர். எஸ்றா சில சங்கீதங்களை எழுதியிருக்கலாம் என எண்ணப்பட்டாலும், மீதமுள்ள 50 சங்கீதங்களின் ஆசிரியர் யார் என அறியப்படாததாகவே உள்ளது. மோசேயின் காலம் கி.மு. 1410-ல் (சங். 90) தொடங்கி, ஐந்தாம் நூற்றாண்டு ஆரம்பம் அல்லது ஆறாவது நூற்றாண்டின் முடிவு (சங். 126; சிறையிருப்பில் இருந்து திரும்பிய காலம்) வரையிலான யூத வரலாற்றின் ஏறக்குறைய 900 வருடக் கால இடைவெளியில் சங்கீதங்கள் எழுதப்பட்டுள்ளன.
பின்னணி மற்றும் அமைப்பு சங்கீதங்களின் பின்னணி இரண்டு விதமாக இருக்கின்றன: 1) தேவனின் சிருஷ்டிப்பு மற்றும் அதன் வரலாறு, 2) இஸ்ரவேலரின் வரலாறு. வரலாற்றுக் காலவரிசைப்படி, சங்கீதங்கள் உலகில் உயிர் உண்டானதிலிருந்து பாபிலோன் சிறையிருப்பில் இருந்து இஸ்ரவேலர் தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பின மகிழ்வான நாட்கள் வரை கடந்து செல்கின்றன. கருப்பொருள் - பரலோக ஆராதனையிலிருந்து பூலோக யுத்தம் வரை பல தலைப்புகளைக் குறித்துப் பேசுகிறது. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள புத்தகங்களிலேயே மிகப் பெரிய புத்தகம் சங்கீதப் புத்தகம்; மிகப் பெரிய அதிகாரம் சங்கீதம் 119; மற்றும் புதிய ஏற்பாட்டில் அதிக எண்ணிக்கையில் மேற்கோள் காட்டப்படும் பழைய ஏற்பாட்டுப் புத்தகம் சங்கீதப் புத்தகமேயாகும். பரிசுத்த வேதாகமத்தில் 1189 அதிகாரங்கள் உள்ளன. இவற்றில் மைய அதிகாரம் சங்கீதம் 117. ”தேவனைத் துதிக்கவும் ஆராதிக்கவும் சரியான முறையைத் தோற்றுவிப்பதற்கு உதவும்” என்ற சங்கீதங்களின் உன்னத நோக்கத்தை சங்கீதப் புத்தகம் பல யுகங்களாக முன்நிறுத்திக் கொண்டே இருக்கிறது.
இறையியல் மற்றும் வரலாற்றுக் கருப்பொருட்கள் வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இரண்டு பரிமாணங்கள் செயல்படுகின்றன: 1) கிடைமட்டமான அல்லது தற்காலிக உண்மை, 2) செங்குத்தான அல்லது எல்லை கடந்து செல்லும் நித்திய சத்தியம். மெய்யான உலகில் மெய்யான வாழ்க்கை வாழ்வதே சங்கீதங்களின் அடிப்படைக் கருப்பொருள்.
உலகில் பாடுகள் இல்லை என்று சங்கீதங்கள் மறுக்கவில்லை. மாறாக, தேவனுடைய ஜனங்கள் பரலோக/நித்திய பரிமாணத்தின் நபர் மீதும், அவர் தரும் வாக்குத்தத்தங்களைச் சார்ந்தும் மகிழ்வுடன் வாழ வேண்டும் எனக் கூறுகிறது. மனித வாழ்வில் வரும் துன்பங்கள் மற்றும் வெற்றிகள் என்னும் சுழற்சிகள் அனைத்தும், இஸ்ரவேலின் சர்வவல்ல கர்த்தரிடத்தில் தங்கள் நம்பிக்கையைக் காட்டவும், குறைகளைச் சொல்லவும், ஜெபிக்கவும் அல்லது துதிக்கவும் சந்தர்ப்பங்களை அளிக்கின்றன என்று இது கற்றுத் தருகிறது.
இவைகளை வைத்துப் பார்க்கும்போது, சங்கீதங்கள் அனுதின வாழ்க்கையில் செயல்படுத்த வல்ல பரவலான இறையியல் கருத்துகளை வழங்குகின்றன. மனுஷனின் பாவம் நிறைந்த சுபாவத்தைக் குறித்து மட்டுமல்ல, பொல்லாதோரின் நடவடிக்கைகளின் மாதிரிகள் குறித்தும், விசுவாசிகள் தொடர்ந்து தடுமாறி விழுவது குறித்தும் கூட உறுதியாக எழுதுகிறது. தேவனுடைய இறையாட்சியை அனைத்து இடங்களிலும் இது அங்கீகரிக்கிறது; அதே வேளையில், மனிதப் பொறுப்பை எந்தவொரு இடத்திலும் தட்டிக் கழிக்கவில்லை. வெளியிலிருந்து பார்க்கும்போது, வாழ்க்கை கட்டுப்பாட்டை இழந்ததுபோல் காணப்படுகிறது. ஆனால், தெய்வீக வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கும்போது, தேவனுடைய கால அட்டவணைப்படி நடைபெறும் அனைத்துச் சம்பவங்களும், சூழ்நிலைகளும் தேவன் நியமித்தபடி சரியான பாதையில் நடத்திச் செல்கின்றன என அறிந்துகொள்ளலாம். எதிர்காலத்தில் “தேவனுடைய நாள்” என்ற ஒன்று உண்டு என்ற நிச்சயத்தைத் தந்து, முடிவுபரியந்தம் நிலைத்து விடாமுயற்சியுடன் இருக்க ஓர் அழைப்பைத் தருகிறது. இந்தத் துதியின் புத்தகம் மிக எளிதில் நடைமுறைப்படுத்தக்கூடிய இறையியலை வெளிப்படுத்துகிறது.
சங்கீதங்களில் ”ஒருவர்” என்னும் சங்கீதக்காரருக்கும், ”அனேகர்” என்னும் தேவபயம் உள்ள ஜனங்களுக்கும் இடையில் காணப்படும் உறவுதான் அதிகமான வேளைகளில் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் நிகழ்வாக உள்ளது; அவற்றில் தாவீது ராஜா எழுதிய சங்கீதங்களில் ஏராளமானவை இருக்கின்றன. ஆளுபவராக அல்லது மத்தியஸ்தராக இருந்த ராஜாவிற்கும் அவரது ஜனங்களுக்கும் பிரிக்க முடியாத ஓர் உறவு இருந்தது; ராஜாவிற்கு எவ்வித வாழ்க்கை இருந்ததோ, அப்படியே அவரது ஜனங்களுக்கும் இருந்தது. இந்த உறவு சில வேளைகளில், சங்கீதக்காரனுக்கு கிறிஸ்துவுடன் இருந்த உறவாக மேசியாவின் சங்கீதங்களில் (அல்லது மேசியா குறித்து எழுதியுள்ள சங்கீதங்களில்) வெளிப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்தே சத்துருக்களைச் சபிக்கும் சங்கீதங்களை (Imprecatory Psalms) நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் தேவனுக்கும் மனுஷருக்கும் இடையில் மத்தியஸ்தராக, பூவுலகில் இருக்கும் பிரதிநிதியாக இருந்தார். தாவீதின் சத்துருக்கள் தனக்குத் துன்பம் விளைவிப்பது மாத்திரமல்ல, தேவனுடைய ஜனத்திற்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இறுதியில் பார்த்தால், அவர்கள் ராஜாதி ராஜாவாகிய இஸ்ரவேலின் தேவனுக்குச் சவால் விட்டுக் கொண்டிருந்தனர். எனவேதான், தாவீது தன் சத்துருக்களின் மீது தேவன் நியாயம் விசாரிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார் என்பது நமக்கு புரிகிறது.
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள் துதிப்பாடல் புத்தகமாகிய சங்கீதத்தில், திரும்பத் திரும்ப ஒரே விதமான வகைகள் எழும்புவதை நாம் கவனித்தல் நலமாகும். வெளியரங்கமாக இருக்கக்கூடியவை: 1) சரியான வாழ்க்கை வாழத் தேவையான ஞானம் தரும் அறிவுரைகள் நிறைந்த சங்கீதங்கள்; 2) (எதிரில் இல்லாத சத்துருக்களால் எழும்பும்) வாழ்க்கையின் வேதனைகள் பற்றிய புலம்பல்கள்; 3) “உள்ளிருக்கும்” சத்துருவாகிய பாவம் - அல்லது மீறுதல்களுக்காக வருந்தும் சங்கீதங்கள்; 4) அரசாட்சியை வலியுறுத்தும் சங்கீதங்கள் (சர்வலோக ஆட்சி அல்லது மத்தியஸ்தம்; தேவபயம் சார்ந்த மற்றும்/அல்லது மேசியாவின் ஆட்சி); மற்றும் 5) நன்றி சொல்லும் சங்கீதங்கள்.
சங்கீதத்தின் நடை மற்றும் உட்பொருள் கருத்துக்கள் மேற்காணுமாறு வகைபிரிப்பதற்கு அடையாளம் காட்டுகின்றன. சங்கீதங்களின் விரிவான இலக்கியப் பண்புகள் யாவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆங்கிலக் கவிதைகள் எதுகை மோனையைச் சார்ந்து எழுதப்பட்டிருப்பது போன்று இல்லாமல், கருத்துகளின் இணையான ஒப்புமையே (Parallelism) சங்கீதங்களின் அடிப்படைக் குணாதிசயங்களாக இருக்கின்றன. சில முக்கிய ஒப்புமைகள்: 1) ஒரே பொருள் உடையவை (முதல் வரியில் சொல்லப்பட்ட கருத்து இரண்டாவது வரியில் அதனைப்போன்ற வேறொரு கருத்துடன் திரும்பச் சொல்லப்பட்டிருக்கும்; உதாரணம்: சங்கீதம் 2:1). 2) எதிர்மறைப் பொருள் உடையவை (இரண்டாவது வரியில் உள்ள கருத்து முதல் வரியில் உள்ள கருத்துக்கு முரணாக இருக்கும்). 3) உச்சகட்ட வரிகள் (இரண்டாவது அல்லது அடுத்து உள்ள வரிகள் முக்கியமான வார்த்தை, சொற்றொடர் அல்லது கருத்தினை எடுத்துக்கொண்டு அதனைப் படிப்படியான முறையில் வளர்த்துக்கொண்டே செல்வது; உதாரணம்: சங். 29:1,2). 4) வார்த்தைகளைப் புரட்டிப்போட்டுக் கருத்தினைத் தெரிவிப்பது (தர்க்கம் அ…. ஆ என்பதை ஆ….அ என்று உருவாக்குவது; உதாரணம்: சங்கீதம் 1:2).
பெருமளவில், சில சங்கீதங்கள் முதல் வரியில் இருந்து கடைசிவரை அகரவரிசைப் பாடல்களாக (Acrostic) அமைக்கப்பட்டுள்ளன. சங்கீதங்கள் 9, 10, 25, 34, 37, 111, 112, 119 மற்றும் 145 முழுமைபெற்ற அல்லது முழுமைபெறாத அகரவரிசைப் பாடல்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எபிரேய உரையில் ஒவ்வொரு வசனத்தின் முதல் வார்த்தையின் முதலெழுத்து எபிரேய மொழியின் வெவ்வேறான மெய்யெழுத்துக்களாக மாறி, இறுதியில் 22 எபிரேய மெய்யெழுத்துக்களுடன் முடிந்துவிடும்.
இப்படிப்பட்ட இலக்கியப் படைப்பு, உள்கருத்தை எளிதில் மனப்பாடம் செய்ய உதவும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அது பாட்டின் கருத்து - அகரம் முதல் னகரம் வரை (A to Z) எல்லாம் அதில் நிறைவாகத் தரப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டுகிறது. சங்கீதம் 119 இப்படிப்பட்ட படைப்பிற்கு முழுமையான உதாரணமாக இருக்கிறது. ஏனென்றால், அதன் 22 பிரிவுகளில் உள்ள 8 வரிச் சரணங்கள் எபிரேய அகரவரிசையின்படி செல்கின்றன.
சுருக்கம் ஆரம்ப நாட்களில் கிறிஸ்தவத் திருச்சபைகளால் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட புத்தக வரிசையில் 150 சங்கீதங்களும் ஐந்து “புத்தகங்களாக” வரிசைப்படுத்தப்பட்டன. இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் இறை வாழ்த்துப் பாடலுடன் (Doxology) முடிவடைகின்றன. அவையாவன: (சங்கீதம் 41:13; 72:18-20; 89:52; 106:48; 150:6). இந்த ஐந்து புத்தகங்கள் மோசேயின் பஞ்சாகமப் புத்தகங்களைப் பிரதிபலிக்கின்றன என யூதப் பாரம்பரியத்தினர் முறையீடு செய்தனர்.
தனிப்பட்ட நபருடன் அல்லது குழுவுடன் ஒன்று சேர்க்கப்பட்ட சங்கீதங்களின் தொகுப்புகள் (Clusters) இருக்கின்றன. உதாரணமாக: 1) கோராகின் புத்திரரின் சங்கீதங்கள் (சங். 42-49) மற்றும் ஆசாபின் சங்கீதங்கள் (சங். 73-83); 2) ஒரு குறிப்பிட்ட செயல், உதாரணமாக, ஆரோகணம் - ஆரோகண சங்கீதங்கள் (சங்கீதம் 120-134) - அதற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட சங்கீதங்கள்; அல்லது 3) துதி ஆராதனைக்கென்று வெளிப்படையாக அர்ப்பணிக்கப்பட்ட சங்கீதங்கள் (சங். 146-150).
ஆனால், எந்தவொரு தொகுப்பும் இந்த ஐந்து புத்தகங்களை எதன் அடிப்படையில் பிரித்தனர் என்ற “இரகசியத்தை” வெளிப்படுத்தவில்லை. ஆகையால், மொத்த சங்கீதங்களுக்கு இடையில் - இந்த ஒரு கருப்பொருளின் அடிப்படையிலான அமைப்பு இருக்கிறது - என்று நம்மால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.