படிப்புகள்: 2155
Print

தலைப்பு: “கர்த்தரே இரட்சிப்பு” என்று பொருள்படும் நூலாசிரியரின் பெயரிலிருந்தே இப்புத்தகம் தனது தலைப்பைப் பெறுகிறது. இப்பெயர் யோசுவா, எலிசா மற்றும் இயேசு ஆகிய பெயர்களுக்கு இணையான பொருளைக் கொண்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் நேரடியாக 65 முறைகளுக்கு மேலாகவும், 20-க்கும் அதிகமான இடங்களில் ஏசாயாவின் பெயர் குறிப்பிடப்பட்டும் உள்ளது. வேறு எந்தவொரு பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசியைக் காட்டிலும் இவரே அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளார்.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் காலம்: யூதா தேசத்தை அரசாண்ட உசியா (2 ராஜாக்களில் அசரியா என்று அழைக்கப்படுபவர்), யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா ஆகிய நான்கு ராஜாக்களின் காலத்தில் (கி.மு. 739-686), ஆமோஸின் குமாரனாகிய ஏசாயா, யூதா தேசத்துத் தீர்க்கதரிசியாக எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஊழியம் செய்துவந்தார். இவர் ராஜாவின் சமூகத்தில் எளிதில் பிரவேசிக்கும் தகுதி பெற்ற (7:3), அந்தஸ்து நிறைந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவர். திருமணமான இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் தீர்க்கதரிசன அடையாளப் பெயர்களைக் கொண்டிருந்தனர்: ஒருவன் பெயர் ஷேயார்யாசூபு (“மீதியாயிருப்பவர்கள் திரும்புவார்கள்” என்று பொருள்), மற்றவன் பெயர் மகேர்-சாலால்-ஷ்-பாஸ் (“கொள்ளையிட விரைகிறது, இரையை நோக்கி ஓடுகிறது” என்று பொருள்).

உசியா ராஜா மரித்த கி.மு. 739-ல் தீர்க்கதரிசன ஊழியத்திற்கான அழைப்பைப் பெற்றபோது, ஆரம்பத்திலிருந்தே தமது ஊழியம் உடனடியாகப் பலன் தராத, கடினமான எச்சரிப்பின் ஊழியம் (6:9-13) என்பதை அறிந்திருந்த போதிலும், அவர் மனமுவந்து பணிசெய்ய ஆயத்தமாயிருந்தார். எருசலேமிலேயே வளர்ந்தவராதலால், தேசத்திற்கு அரசியல் மற்றும் ஆவிக்குரிய ஆலோசனைகளை வழங்க மிகவும் தகுதியுள்ளவராகத் திகழ்ந்தார்.

ஏசாயா, ஓசியா மற்றும் மீகா தீர்க்கதரிசிகளின் சமகாலத்தவர் ஆவார். இவருடைய எழுத்து நடைக்கு நிகர் வேறில்லை எனலாம். மேலும் இவரது எழுத்துக்களில் கற்பனை வளம், கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் சொல்வளம் நிறைந்து காணப்படுகின்றன. ஆதித் திருச்சபையின் பிதாவான ஜெரோம், ஏசாயாவை கிரேக்கப் பேச்சாளரான டெமஸ்தனீஸ் (Demosthenes) என்பவருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

ஒப்பிட்டுப் பார்த்தால், எசேக்கியேலில் 1,535 வார்த்தைகளும், எரேமியாவில் 1,653 வார்த்தைகளும், சங்கீதங்களில் 2,170 வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏசாயாவின் எழுத்துக்களில் 2,186 வித்தியாசமான (Unique) வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளதிலிருந்து இவரின் மொழிப்புலமை விளங்கும். எசேக்கியா ராஜாவின் வாழ்க்கை வரலாற்றை ஏசாயா எழுதினார் என்று 2 நாளாகமம் 32:32 குறிப்பிடுகிறது. இத்தீர்க்கதரிசி குறைந்தது கி.மு. 681 வரை வாழ்ந்திருக்கக்கூடும். இக்காலக்கட்டத்தில் சனகெரிப்பின் மரணம் குறித்து எழுதியுள்ளார் (37:38). மனாசே ராஜாவின் காலத்தில் (கி.மு. 695-642) இவர் ரம்பத்தால் அறுப்புண்டு மரித்தார் என்று பாரம்பரியம் கூறுகிறது (எபிரேயர் 11:37).

பின்னணி மற்றும் அமைப்பு: உசியா ராஜாவின் செழிப்பான 52 வருட அரசாட்சியில் (கி.மு. 790-739), யூதா தேசம் வர்த்தக மற்றும் இராணுவ ரீதியாக வளர்ந்து, செங்கடலில் ஒரு துறைமுகத்தையும் பெற்றிருந்தது. மதில்கள், கோபுரங்கள் மற்றும் கோட்டைகள் கட்டுவதில் (2 நாளா. 26:3-5, 8-10, 13-15) யூதா சிறந்து விளங்கியது. இருப்பினும், இக்காலக்கட்டத்தில் யூதா தேசத்தின் ஆவிக்குரிய தரம் குறைந்திருந்தது. ஆசாரியர்கள் செய்யவேண்டிய தூபகலச ஊழியத்தைத் தானே செய்ய உசியா ராஜா முற்பட்டது, அவனது வீழ்ச்சிக்குக் காரணமானது (2 ராஜா. 15:3,4; 2 நாளா. 26:16-19). கர்த்தர் அவனைத் தண்டித்ததினால், மரண நாள் வரை அவன் குஷ்டரோகியாக இருந்தான் (2 ராஜா. 15:5; 2 நாளா. 26:20, 21).

அவன் குமாரனாகிய யோதாம் அரண்மனை நிர்வாகியாக இருந்து, தேசத்து ஜனங்களை நியாயம் விசாரித்தான் (கி.மு. 750-731). திக்லத்-பிலேசரின் தலைமையில் அசீரியப் பேரரசு வல்லமை நிறைந்த தேசமாக வளர்ந்தது. யோதாம் யூதாவின் ராஜாவாக இருந்த நாட்களில் (2 ராஜா. 15:19), வடக்கே இஸ்ரவேல் மற்றும் சீரியாவிலிருந்து யூதாவிற்கு எதிர்ப்பு தோன்றியது (2 ராஜா. 15:37). யோதாம் தன் தகப்பனைப் போலவே கட்டிடங்கள் கட்டுவதிலும், யுத்தத்திலும் வல்லவனாக இருந்தான்; ஆனால், தேசத்தின் ஆவிக்குரிய சீர்கேடு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது (2 ராஜா. 15:34, 35; 2 நாளா. 27:1, 2).

ஆகாஸ் தனது 20-வது வயதில் ராஜாவாகி, யூதா தேசத்தை 16 வருடங்கள் அரசாண்டான் (2 நாளா. 28:1, 8; கி.மு. 735-715). கிழக்கிலிருந்து எழும்பிய அசீரியர்களின் அச்சுறுத்தலை எதிர்க்கும்படி இஸ்ரவேலும் சீரியாவும் கூட்டு சேர்ந்தன; ஆனால் ஆகாஸ் இந்தக் கூட்டணியில் இணைய மறுத்துவிட்டார். இதனால் வடக்கிலிருந்த அண்டை தேசத்தார் பகைமை கொண்டு, ஆகாஸைச் சிங்காசனத்திலிருந்து இறக்க யுத்தம் செய்தனர் (கி.மு. 734).

திகிலடைந்த ஆகாஸ், அசீரிய ராஜாவிடம் உதவி கேட்டு ஆளனுப்பினான் (2 ராஜா. 16:7). அதற்கு அசீரிய ராஜா காசா நகரிலிருந்தோரைப் பதவியிலிருந்து தள்ளிவிட்டு, கலிலேயா மற்றும் கிலேயாத் முழுவதையும் சிறைப்படுத்தி, தமஸ்குவையும் கைப்பற்றி (கி.மு. 732), அவனது வேண்டுகோளை நிறைவேற்றினான். அசீரியர்களுடன் ஆகாஸ் செய்துகொண்ட கூட்டணி, அந்நிய தேவர்களின் பலிபீடத்தை சாலொமோனின் ஆலயத்திற்குள் கொண்டுவரக் காரணமானது (2 ராஜா. 16:10-16; 2 நாளா. 28:3). ஆகாஸின் ஆட்சிக்காலத்தில் (கி.மு. 722) வடதேச ராஜ்ஜியத்தின் தலைநகரான சமாரியாவை அசீரியர் கைப்பற்றி, இஸ்ரவேலின் பராக்கிரமசாலிகளைச் சிறைபிடித்துச் சென்றனர் (2 ராஜா. 17:6, 24).

எசேக்கியா யூதாதேசத்தை கி.மு. 715-ல் ஆட்சி செய்ய ஆரம்பித்து 29 ஆண்டுகள் (கி.மு. 686 வரை) ஆட்சி செய்தான் (2 ராஜா. 18:1, 2). ஆவிக்குரிய சீர்திருத்தங்களுக்கு இவரது ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது (2 ராஜா. 18:4, 22; 2 நாளா. 30:1). அசீரியர்களின் படையெடுப்பு, கிழக்கத்திய தேசத்திற்கு அதிக அளவில் கப்பம் கட்டும்படி யூதாதேசத்தை நிர்பந்தித்தது. கி.மு. 701-ல் எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு மரணத் தருவாயில் இருந்தார். அப்போது அவர் ஜெபித்ததும், தேவன் கிருபையாக அவருடைய வாழ்நாளில் 15 வருடங்களைக் கூட்டித் தந்தார் (2 ராஜா. 20; ஏசாயா 38). எசேக்கியாவின் சுகவீனத்தையும், அவர் அதிலிருந்து மீண்டு வந்ததையும் அறிந்த பாபிலோனிய ஆட்சியாளர்கள், யூதாவுடன் கூட்டணி அமைத்து அசீரியாவிற்கு எதிராகப் படையைத் திரட்ட முயன்றனர் (2 ராஜா. 20:12; ஏசாயா 39). அசீரியாவில் ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையினால் அதன் பலன் குன்றியபோது, எசேக்கியா ராஜா அத்தேசத்திற்குக் கப்பம் கட்டுவதை நிறுத்திவிட்டான் (2 ராஜா. 18:7). இதனால், கி.மு. 701-ல் அசீரிய ராஜாவாகிய சனகெரிப், யூதாவின் கடற்கரைப் பிரதேசங்களின் மீது படையெடுத்து, எகிப்தை நோக்கி முன்னேறினான். இதில் யூதாவின் அநேக பட்டணங்களைக் கொள்ளையிட்டு, ஜனங்களைச் சிறைபிடித்தான். லாகீசை முற்றுகையிட்ட வேளையில், அவன் எருசலேமை முற்றுகையிட ஒரு ராணுவப் பிரிவை அனுப்பினான் (2 ராஜா. 18:17 – 19:8; ஏசாயா 36:2-37:8). அவனது மற்ற முயற்சிகள் தோல்வியடைந்தபோது, இரண்டாவது முறையாக எருசலேமைச் சரணடையச் சொல்லித் தூதுவர்களை அனுப்பினான் (2 ராஜா. 19:9; ஏசாயா 37:9). ஏசாயா உற்சாகப்படுத்தியதினால் எசேக்கியா சரணடைய மறுத்தான். அதே வேளையில், சனகெரிப்பின் சேனை திடீரென்று ஏற்பட்ட பேரழிவைச் சந்தித்ததால், அதன் பிறகு யூதாவிற்கு அவன் அச்சுறுத்தலாக இருக்கவில்லை.

இறையியல் மற்றும் வரலாற்றுப் பொருட்கள்: ராஜ்ஜியங்கள் பிளவுபட்டிருந்த வேளையில் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். குறிப்பாக, அவரது செய்திகள் தென் ராஜ்ஜியமாகிய யூதா தேசத்தை மையப்படுத்தியிருந்தன. அவரது நாட்களில் காணப்பட்ட வெற்றுச் சடங்குகளையும் (உதா: 1:10-15), ஜனங்கள் விக்கிரக ஆராதனையில் வீழ்ந்து கிடந்ததையும் (40:18-20) அவர் கண்டித்தார். கர்த்தரை விட்டு விலகிச் சென்றுவிட்டபடியால் யூதா தேசம் பாபிலோனியரால் சிறைபிடிக்கப்படப் போகிறது என்பதை அவர் முன்னமே அறிந்திருந்தார் (39:5, 7).

அவர் உரைத்த தீர்க்கதரிசனங்கள் அவரது வாழ்நாட்களிலேயே நிறைவேறியது, அவரது வார்த்தைகளுக்குச் சாட்சியாக அமைந்தது. ஏசாயா முன்னறிவித்தபடியே, எருசலேமைக் கைப்பற்ற சனகெரிப் எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன (37:6, 7, 36-38). எசேக்கியாவின் ஆயுசு நாட்கள் நீட்டிக்கப்பட்டதும் நிறைவேறியது (38:5; 2 ராஜா. 20:7). பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசு எழும்பும்போது, பாபிலோனியரின் கரத்திலிருந்து யூதாவை விடுவிக்கப்போகிறவர் அவரே என ஏசாயா குறிப்பிடுகிறார் (44:28; 45:1). கிறிஸ்து இயேசுவின் முதலாம் வருகையைக் குறித்து ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது, அவர் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசி என்பதை உறுதிப்படுத்தியது. ஏற்கனவே நிறைவேறிய தீர்க்கதரிசனங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து அவர் உரைத்துள்ள தீர்க்கதரிசனங்களும் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

வருங்காலத்தில் நிகழவிருக்கும் ‘கர்த்தருடைய நாள்’ மற்றும் அதனைத் தொடரும் நாட்களைக் குறித்து ஏசாயா தகவல்களைத் தருகிறார். பழைய ஏற்பாட்டிலோ அல்லது புதிய ஏற்பாட்டிலோ வேறெங்கும் காண முடியாத இஸ்ரவேலரின் எதிர்கால ராஜ்ஜியத்தின் அம்சங்கள், இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள், விலங்குகளின் இயல்பு மாற்றம், மற்றும் தேசங்களுக்கு நடுவில் எருசலேமின் நிலை, பாடு அனுபவிக்கும் ஊழியக்காரனின் தலைமை எனப் பல்வேறு அம்சங்களைக் குறித்து ஏசாயா பேசியிருக்கிறார்.

“தீர்க்கதரிசன முன்னறிவிப்பு” என்ற இலக்கிய உத்தியின் உதவியுடன், ஏசாயா எந்த வரிசையில் நிகழும் என்று வரையறுக்காமலும், அவற்றுக்கிடையில் உள்ள கால இடைவெளியைக் குறிப்பிடாமலும் எதிர்காலச் சம்பவங்களை முன்னறிவிக்கிறார். உதாரணமாக, மேசியாவின் இரண்டு வருகைகளுக்கு இடையில் எவ்வளவு கால இடைவெளி இருக்கும் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. யோவான், வெளிப்படுத்தின விசேஷத்தில் (20:1-10; 21:1-22:5) வரவிருக்கும் தற்காலிக ராஜ்ஜியத்திற்கும் (Millennium) நித்திய ராஜ்ஜியத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகக் கூறியதுபோல, ஏசாயா கூறவில்லை. இவையிரண்டிற்கும் உள்ள தொடர்பு, கடைசி காலத் தீர்க்கதரிசிகள் மூலமாகத் தேவனின் திட்டப்படி பிற்காலத்தில் வெளிப்படும்படி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இஸ்ரவேலிடம் தேவன் காட்டும் கிருபையைக் குறித்து, விசேஷமாக அவரது கடைசி 27 அதிகாரங்கள் பேசுவதால், “சுவிசேஷத் தீர்க்கதரிசி” எனவும் ஏசாயா அழைக்கப்படுகிறார். ஏசாயாவின் ஒப்பில்லா 53-ஆம் அதிகாரம், கிறிஸ்து நமக்குப் பதிலீடாக வந்த தேவ ஆட்டுக்குட்டி என்பதைச் சித்தரிப்பது, இவரது தீர்க்கதரிசனங்களின் சிகரமாகும்.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்: நீளமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஏசாயா புத்தகத்திற்கு விளக்கம் அளிப்பதில் அநேக சவால்கள் உள்ளன. ஏசாயாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் நேரடியாக இயற்கை உலகில் நிறைவேறுமா இல்லையா என்பது அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு கருத்து. மற்றொன்று, கர்த்தர் தமது திட்டத்தின்படி இஸ்ரவேல் தேசத்தை அடியோடு கைவிட்டுவிட்டு, அத்தேசத்திற்குப் பதிலாகச் சபையை நித்தியமாக அந்த இடத்தில் வைத்திருப்பதால், இஸ்ரவேல் தேசத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்ற கருத்தும் விமர்சனத்திற்குரியது.

மேலே சொல்லப்பட்டிருக்கும் இரண்டாவது கருத்திற்கு எதிராகவும், தேவன் பூகோள ரீதியான இஸ்ரவேல் தேசத்திற்குப் பதிலாக “புதிய இஸ்ரவேல்” என்று கருதப்படும் சபையைக் கொண்டு நிரப்பவில்லை என்பதற்கும் ஆதாரமாக, ஏசாயாவிலிருந்தே அநேக வசனங்களைச் சுட்டிக்காட்டலாம். தேவன் தாம் உருவாக்கினவரும், பெயர் சொல்லி அழைத்தவர்களுமான (43:1) இஸ்ரவேல் ஜனங்களை உதறித் தள்ளிவிடமாட்டார். அதற்கும் மேலாக, இஸ்ரவேலின் நம்பிக்கைக்குரியவர் தேவன் என ஏசாயா சொல்லியிருக்கிறார். “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை (இஸ்ரவேல் தேசத்தை) வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது” (49:16) என்று அவர் வாக்குத்தத்தம் கொடுத்தபடியே, அவர் இஸ்ரவேலரைத் திரும்பத் தம் பக்கமாகத் திருப்புவார்; மேலும் அவர்களை வருங்காலங்களில் ஆசீர்வதிப்பார் (55:10-12).

முதல் விமர்சனத்திற்கான பதில்: ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களில் அநேகமானவை ஏற்கனவே நிறைவேறிவிட்டன. இன்னும் நிறைவேறாத தீர்க்கதரிசன வார்த்தைகள் எழுத்தின்படியல்லாத (non-literal) ஒரு நிறைவேறுதலைக் காணும் என வாதிடுவது வேதாகம அடிப்படைக்கு முரணானது. இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை இன்று சபை பெற்றுவருகிறது என்ற வாதத்தை இது தகுதிநீக்கம் செய்கிறது. தாவீதிற்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ராஜ்ஜியம் இஸ்ரவேலருக்கு உரியதேயன்றி, சபைக்கு உரியதல்ல. எதிர்காலத்தில் எருசலேம் உயர்த்தப்படுதல் பூலோகத்தில்தான் நிகழும், பரலோகத்தில் அல்ல. நாம் அறிந்திருக்கிறபடி, கிறிஸ்துவின் ஆட்சி தனிப்பட்ட முறையில் பூமியில் நடைபெறும்; அதே வேளையில் புதிய வானம் புதிய பூமியிலும் நடைபெறும் (வெளி. 22:1, 3).

சுருக்கம்

I. நியாயத்தீர்ப்பு (1:1 - 35:10)

அ. யூதா மற்றும் எருசலேம் குறித்ததான தீர்க்கதரிசனங்கள் (1:1 - 12:6)

  1. யூதாவின் பாவங்கள் (1:1 - 6:13)

  2. யூதாவின் அரசியல் சிக்கல்கள் (7:1 - 12:6)

ஆ. நியாயத்தீர்ப்பு மற்றும் இரட்சிப்பு குறித்த தேவ வார்த்தைகள் (13:1 - 23:18)

  1. பாபிலோன் மற்றும் அசீரியா (13:1 - 14:27)

  2. பெலிஸ்தியா (14:28-32)

  3. மோவாப் (15:1 - 16:14)

  4. சிரியா மற்றும் இஸ்ரவேல் (17:1-14)

  5. எத்தியோப்பியா (18:1-7)

  6. எகிப்து (19:1 - 20:6)

  7. பாபிலோன் - தொடர்ச்சி (21:1-10)

  8. ஏதோம் (21:11, 12)

  9. அரேபியா (21:13-17)

  10. எருசலேம் (22:1-25)

  11. தீரு (23:1-18)

இ. உலக இரட்சிப்பின் வழியாக இஸ்ரவேலர் மீட்கப்படுதல் (24:1 - 27:13)

  1. தேவன் பூமியை அழித்தல் (24:1-23)

  2. மீட்பினிமித்தம் ஏறெடுக்கப்பட்ட முதல் ஸ்தோத்திரப் பாடல் (25:1-12)

  3. மீட்பினிமித்தம் ஏறெடுக்கப்பட்ட இரண்டாம் ஸ்தோத்திரப் பாடல் (26:1-19)

  4. இஸ்ரவேலின் சிட்சை மற்றும் இறுதியில் செல்வச் செழிப்பு (26:20 - 27:13)

ஈ. எகிப்துடன் கூட்டணி ஏற்படுத்தினதற்கு விரோதமான எச்சரிக்கை (28:1 - 35:10)

  1. மதுபானம் குடித்து வெறிக்கும் அரசியல்வாதிகளுக்கு ஐயோ (28:1-29)

  2. மதச் சம்பிரதாயங்களுக்கு ஐயோ (29:1-14)

  3. தேவனிடமிருந்து திட்டங்களை மறைக்கிறவர்களுக்கு ஐயோ (29:15-24)

  4. எகிப்தை ஆதரிக்கிற கூட்டத்தாருக்கு ஐயோ (30:1-33)

  5. குதிரைகளிலும் இரதங்களிலும் நம்பிக்கை வைப்பவர்களுக்கு ஐயோ (31:1 - 32:20)

  6. அசீரியரை அழிப்பவருக்கு ஐயோ (33:1-24)

  7. குறிப்பாக ஏதோம் மற்றும் இதர தேசங்களுக்கு விரோதமாக நியாயம் கிடைக்கக் கதறும் வார்த்தைகள் (34:1 - 35:10)

II. வரலாற்று இடைச்சொருகல்கள் (36:1 - 39:8) அ. எருசலேமைக் கைப்பற்ற சனகெரிப்பின் முயற்சி (36:1 - 37:38) ஆ. எசேக்கியா வியாதிப்படுதல் மற்றும் சுகம்பெறுதல் (38:1-22) இ. எருசலேமுக்கு அனுப்பப்பட்ட பாபிலோனியத் தூதுவர்கள் (39:1-8)

III. இரட்சிப்பு (40:1 - 66:24)

அ. சிறையிருப்பிலிருந்து விடுதலை (40:1 - 48:22)

  1. பாபிலோனில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு ஆறுதல் (40:1-31)

  2. இஸ்ரவேலின் துயரத்திற்கு முடிவு (41:1 - 48:22)

ஆ. கர்த்தருடைய ஊழியக்காரரின் பாடுகள் (49:1 - 57:21)

  1. ஊழியக்காரரின் பணி (49:1 – 52:12)

  2. பாடு அனுபவிக்கும் ஊழியக்காரனால் மீட்கப்படுதல் (52:13 - 53:12)

  3. பாடு அனுபவிக்கும் ஊழியக்காரனால் மீட்கப்பட்டதன் பலன்கள் (54:1 - 57:21)

இ. தேவஜனத்தின் எதிர்கால மகிமை (58:1 - 66:24)

  1. நோன்புகளில் (சமயங்களில்) இரண்டு விதம் (58:1-14)

  2. இஸ்ரவேலரிடம் அவர்கள் பாவங்களை விட்டொழிக்க வேண்டுதல் (59:1-19)

  3. சீயோனின் எதிர்கால ஆசீர்வாதம் (59:20 - 61:1)

  4. சீயோனின் விடுதலை நெருக்கமாக இருத்தல் (62:1 - 63:6)

  5. தேசத்தின் விடுதலைக்காக விண்ணப்பம் (63:7 – 64:12)

  6. இஸ்ரவேலரின் வேண்டுகோளுக்குத் தேவனின் பதில் (65:1 – 66:24)