தலைப்பு: 

பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்டுவஜின்ட் (Septuagint), லத்தீன் வுல்கேட்டில் (Latin Vulgate) மொழிபெயர்க்கப்பட்டபோது, இதற்கு “புலம்பல்” (Lamentations) என்ற பெயர் வழங்கப்பட்டது; இது “சத்தமிட்டு கதறுதல்” என்ற பொருளைத் தருகிறது. எபிரேய மொழியில் “ஏக்கா” (Ekhah) என்ற வார்த்தை ”எப்படி” என்ற திகைப்பூட்டும் அச்சத்தை வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. இவ்வார்த்தை 1:1, 2:1, 4:1 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இதுவே எபிரேய வேதாகமத்தில் இப்புத்தகத்தின் தலைப்பாகவும் மாறியது. பிற்காலத்தில், யூத போதகர்களான ரபிமார்கள் இப்புத்தகத்தை ”கதறி அழும் புத்தகம்” அல்லது 'புலம்பல்' என அழைக்கத் தொடங்கினர் (எரேமியா 7:29).

பழைய ஏற்பாடு முழுவதையும் நாம் பார்க்கும்போது, வேறு எந்தவொரு புத்தகத்திலும் ’புலம்பல்’ மட்டுமே உள்ளடக்கமாக இருப்பதில்லை. ஒருகாலத்தில் பூரண வடிவும், சர்வ பூமியின் மகிழ்ச்சியுமான நகரமாக இருந்த எருசலேமின் அடக்க ஆராதனையின்போது பாடப்பட்ட துயரம் நிறைந்த ஒரு புலம்பல் பாடலைப் போல, வேதாகமத்தில் வேறு எங்கும் நாம் காண முடியாது (2:15). அந்த வீழ்ச்சியின் நினைவுகளை இப்புத்தகம் உயிரோட்டத்துடன் அளித்து, விசுவாசிகள் துயரமான வேளையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறது.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் காலம் புலம்பல் புத்தகத்தில் ஆசிரியரின் பெயர் எங்கும் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இதிலுள்ள உட்புறச் சான்றுகளும் வரலாற்று குறிப்புகளும், எரேமியா தீர்க்கதரிசியே இப்புத்தகத்தின் ஆசிரியர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. கிரேக்க LXX மொழிபெயர்ப்பு (புலம்பல் 1:1) இவ்வாறாக அறிமுகம் செய்கிறது: ”ஐயோ! ஜனம் பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே!” எரேமியா உட்கார்ந்து புலம்பினான் (3:48, 49) “கதறி அழுது” சொன்னான். "யூதா புத்திரருக்காக நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்ந்த மேடுகளிலே புலம்பிக்கொண்டிரு" என்று எரேமியாவிடம் தேவன் சொன்னார் (எரேமியா 7:29). மேலும் எரேமியா யோசியாவிற்காகவும் புலம்பல் பாடினான் (2 நாளாகமம் 35:25).

கி.மு. 586-ல் எருசலேமின் வீழ்ச்சியின் போதோ அல்லது அதனைத் தொடர்ந்தோ எரேமியா இப்புலம்பல்களைத் தன் கண்கண்ட சாட்சியாக எழுதினார் (1:13-15, 2:6, 9; 4:1-12). இதனை எழுதுவதற்கு ஒருவேளை பாருக், எரேமியாவிற்கு உதவி செய்திருக்கலாம் (எரேமியா 36:4; 45:1). ஜூலை மாதத்தின் மையப் பகுதியில் பட்டணம் வீழ்ச்சி அடைந்தது; ஆகஸ்ட் மாதத்தின் மையப் பகுதியில் தேவாலயம் எரிக்கப்பட்டிருக்கலாம். எரேமியா, மதில் சுவர்கள், கோபுரங்கள், வீடுகள், அரண்மனைகள் மற்றும் ஆலயங்கள் இடிக்கப்படுவதைக் கண்டான். அவனது நினைவில் இச்சம்பவங்கள் வேதனை தருவதாக அப்படியே பதிந்திருந்த வேளையில், அவர் எகிப்துக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்ட கி.மு. 583-க்கு முன் (எரேமியா 43:1-7) இதனை எழுதினார். புலம்பலில் எரேமியா எழுதிய வார்த்தைகள், அவர் எழுதிய பெரிய தீர்க்கதரிசனப் புத்தகத்தின் வார்த்தைகளுக்கு இணையானதாகவே இருக்கின்றன (ஒப்பிட்டுப் பார்க்க: 1:2-ஐ எரேமியா 30:14 உடன்; 1:15-ஐ எரேமியா 8:21 உடன்; 1:6 மற்றும் 2:11-ஐ எரேமியா 9:1, 18 உடன்; 2:22-ஐ எரேமியா 6:25 உடன்; 4:21-ஐ எரேமியா 49:12 உடன்).

பின்னணி மற்றும் அமைப்பு 800 வருடங்களுக்கு முன்பாகவே எருசலேமின் அழிவைக் குறித்த தீர்க்கதரிசன விதை யோசுவாவின் மூலம் விதைக்கப்பட்டது (யோசுவா 23:15, 16). 40 வருடங்களாக எரேமியா வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்துத் தீர்க்கதரிசனமாக உரைத்துவரும் வேளையில், அவர் ஜனங்களின் அழிவைக் குறித்துப் பிரசங்கிக்கிறார் என மக்கள் அவரைத் தூஷித்தனர் (கி.மு. 645-605). விசுவாசிக்காத ஜனங்கள் மீது நியாயத்தீர்ப்பு நேபுகாத்நேச்சார் மற்றும் பாபிலோனிய சேனையின் மூலம் வந்தபோது, பிடிவாதமான ஜனங்கள் துயரப்படுவதைக் கண்டு மிகுந்த துக்கத்துடனும் மனதுருக்கத்துடனும் எரேமியா பதிலளித்துக் கொண்டே வந்தார். புலம்பல் புத்தகம், தங்கள் பாவத்திலிருந்து மனம் திரும்பாததினால் தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு உட்பட்ட ஜனங்களின் வேதனையை விவரிக்கும் எரேமியாவின் தீர்க்கதரிசனப் புத்தகத்துடன் மிக நெருக்கமாகத் தொடர்புடையது. எரேமியாவின் பெயரைத் தாங்கியுள்ள புத்தகத்தில் அதிகாரம் 1-29ல் பேரிடர் குறித்து முன்கூட்டியே எரேமியா கூறியிருக்கிறார். எருசலேமின் அழிவினால் உண்டான கசப்பான துயரங்கள் மற்றும் மனவேதனைகளுக்கு முக்கியத்துவம் தந்து விரிவாகப் புலம்பல் புத்தகத்தில் எழுதியுள்ளார். எருசலேமின் அழிவு மிகவும் மோசமானதாக இருந்ததால், பழைய ஏற்பாட்டின் நான்கு இடங்களில் (2 இராஜாக்கள் 25; எரேமியா 39:1-11; எரேமியா 52; மற்றும் 2 நாளாகமம் 36:11-21) இச்சம்பவம் தனிப்பட்ட முக்கியத்துவத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யூதர்களின் புனிதநூல் வரிசையில் (Hagiographa), இதில் வரும் 154 வசனங்கள் அனைத்தும் வேதவாக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ”மெகிலோத்” (Megilloth) அல்லது ’ஐந்து தோல் சுருள்கள்” என்று அழைக்கப்படும் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களான ரூத், எஸ்தர், உன்னதப்பாட்டு மற்றும் பிரசங்கியுடன் சேர்ந்த இந்தப் புலம்பல் புத்தகம், யூதர்களின் ஆலயங்களில் விசேஷித்த நாட்களில் வாசிக்கப்பட்டது. ஆப் (Av) மாதத்தின் ஒன்பதாவது நாள் (ஜூலை/ஆகஸ்ட் மாதம்) - நேபுகாத்நேச்சார் ராஜா ஏற்படுத்திய எருசலேமின் பேரழிவின் நாளில் இப்புத்தகத்தை எடுத்து வாசிப்பார்கள். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரோம சாம்ராஜ்யத்தால் ஏரோதின் ஆலயம் இடிக்கப்பட்டதும் இதே நாளில்தான் எனக் குறிக்கப்பட்டது.

இறையியல் மற்றும் வரலாற்றுக் கருப்பொருட்கள் யூதாவின் பாவத்திற்கான தேவ நியாயத்தீர்ப்பே புலம்பல் புத்தகத்தின் முக்கிமான கவனமாக இருக்கிறது. இந்தக் கருப்பொருளைப் புத்தகம் முழுவதும் காணலாம் (1:5, 8, 18, 20; 3:42; 4:6, 13, 22; 5:16). தேவனுடைய மனதுருக்கத்தில் வைக்கப்படும் நம்பிக்கை இரண்டாவது கருப்பொருளாக இப்புத்தகத்தில் மேலெழும்பி வருகிறது (3:22-24, 31-33; சங்கீதம் 30:3-5). தேசத்திற்கு நேர்ந்த அவமானத்தைக் குறித்துப் பேசுவதாக இருந்தாலும், இப்புத்தகம் தேவனின் வாக்குறுதியைக் காக்கும் பண்பினை (3:22-25) நோக்கி நம்மை வழிநடத்துகிறது. எரேமியா புலம்பலிலிருந்து ஆறுதலுக்கு (5:19-22) மாறுவதிலிருந்து, இறுதியில் கிருபையுடன் இப்புத்தகம் முடிவடைகிறது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.

தேவனின் ராஜரீக நியாயத்தீர்ப்பு இப்புத்தகத்தின் ஊடாகக் கடந்து செல்லும் மூன்றாவது கருப்பொருள். யூதாவின் பாவத்தின் நிமித்தம் தேவன் கொண்ட கோபத்தினால் அவர் ஒரு பேரழிவைக் கொண்டுவந்தார். தேவகோபாக்கினைக்கு ஒரு கருவியாகப் பாபிலோன் தெரிந்தெடுக்கப்பட்டது (1:5, 12, 15; 2:1, 17; 3:37, 38; எரேமியா 50:23). எரேமியா தீர்க்கதரிசனப் புத்தகத்தில், 150 தடவைக்கும் மேலாகப் பாபிலோன் என்ற வார்த்தையை (எரேமியா 20:4 லிருந்து 52:34 வரையுள்ள வசனங்களில்) பயன்படுத்துகிறார். ஆனால் புலம்பல் புத்தகத்தில் ஒருமுறைகூட வெளிப்படையாகப் பாபிலோன் என்றோ, அதன் ராஜா நேபுகாத்நேச்சார் குறித்தோ குறிப்பிடவில்லை. யூதாவின் பாவங்களுக்காக அவர்களுடன் கர்த்தர் இடைபட்டார் என்பதை மட்டுமே இது எடுத்துக்காட்டுகிறது.

நான்காவதாக, இஸ்ரவேலரின் இரட்சிப்பு மற்றும் தேவனுடைய வாக்குதத்தங்கள் நிறைவேறுவதற்கான எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல் அற்றுப்போகும் அளவிற்கு நியாயத்தீர்ப்பு பரந்து விரிந்து காணப்பட்டபடியால், இப்புத்தகத்தின் பெரும்பகுதிகளில் ஜெபம் நிறைந்திருக்கிறது:

  1. அதிகாரம் 1:11 - பாவங்களை அறிக்கையிடும் புலம்பலாக இருக்கிறது (வசனம் 18-லும் காணலாம்).

  2. அதிகாரம் 3:43-54 - எரேமியா 7:16-ல் ”ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு” இருந்ததால் ஏற்பட்ட வேதனையைப் பற்றிப் பேசுகிறது.

  3. அதிகாரம் 3:55-59 - எரேமியா நிவாரணத்திற்காகக் கதறிப் புலம்புவதைப் பார்க்கிறோம்; அல்லது 3:60-66 வசனங்களில் எதிரிகளின் சரிக்கட்டுதலைக் கோருகிறார் (எரேமியா 50, 51-ஆம் அதிகாரங்கள் அதற்கு உத்தரவாதம் அளிப்பதைக் காண்கிறோம்).

  4. அதிகாரம் 5:1-22 - கிருபையை மீட்டெடுக்க வேண்டிப் பரலோகத்திற்கு நேராக வேண்டுதல் ஏறெடுக்கப்படுகிறது. எரேமியா 30-33 அதிகாரங்களில் உள்ள வசனங்கள், தேவனின் வாக்குறுதியைக் காக்கும் தன்மையில் நம்பிக்கை கொண்டிருப்பதன் அடிப்படையில் இதற்குரிய நிச்சயத்தைத் தருகின்றன (3:23).

ஐந்தாவது கருப்பொருள் கிறிஸ்துவுடன் தொடர்புடையது. எரேமியா வடித்த கண்ணீர் (3:48, 49), அதே எருசலேம் நகரத்திற்காக இயேசு வடித்த கண்ணீரை நினைவுபடுத்துகிறது. ”அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது...” (மத்தேயு 23:37-39; லூக்கா 19:41-44) - இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தேவன் நியாயாதிபதியாகவும் அதனை நிறைவேற்றுபவராக இருந்தபோதிலும், இந்தப் பேரழிவைக் காண்பது அவருக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாக இருந்தது. "அவருடைய எல்லா நெருக்கத்திலும் அவர் (தேவன்) நெருக்கப்பட்டார்" என்று நாம் ஏசாயா 63:9-ல் காணும் கூற்று இவ்விடத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. ஒரு நாளில் தேவன் தாமே நம் கண்ணீர் யாவையும் துடைப்பார் (ஏசாயா 25:8; வெளிப்படுத்தல் 7:17, 21:4); அந்நாளில் பாவம் என்பதே இல்லாமல் போய்விடும்.

ஆறாவது கருப்பொருள், இப்புத்தகத்தை வாசிக்கும் யாவருக்கும் ஒரு மறைமுகமான எச்சரிக்கையாகும்: தேவன் தமது அருமையான ஜனங்களை (உபாகமம் 32:10) நியாயந்தீர்க்கத் தயங்கவில்லை என்றால், அவருடைய வார்த்தையை நிராகரிக்கின்ற தேசங்களைக் குறித்து அவர் என்ன செய்வார்?

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள் சில விவரங்கள் ஆரம்பத்தில் கடினமானதாகத் தோன்றுகின்றன. அவைகளில் சில:

  1. மற்ற பாவிகள் நியாயத்தீர்க்கப்படும்படி சாபமிட்டு வேண்டுதல் செய்தல் ஏன்? (1:21, 22; 3:64-66).

  2. நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப் போட்டார் (3:8) என்பதைக் காணும்போது - தேவன் பதில் அளிக்க மறுப்பதற்குத் தரும் காரணம் என்ன?

  3. இவ்வளவு கடினமான நியாயத்தீர்ப்பு தரப்பட்டதன் அவசியம் என்ன? (1:1, 14; 3:8).

சுருக்கம் முதல் 2 அதிகாரங்களின் வசனங்கள் எபிரேய மொழியின் 22 எழுத்துக்களின் ஏறுமுக வரிசை முதல் எழுத்தாக அமைய எழுதப்பட்டுள்ளன (Acrostic). அதிகாரங்கள் 1, 2, மற்றும் 4-ல் 22 எழுத்துக்களும் முதல் எழுத்தாக அமைய எழுதப்பட்டுள்ளன. ஆனால் அதிகாரம் 3-ல், 22 எழுத்துக்களில் ஒவ்வொன்றும் 3 வரிகளைச் சேர்த்து வரும் மாதிரியைப் பின்பற்றுகிறது; இதனால் இதில் 66 வரிகள் காணப்படுகின்றன. நாம் சங்கீதம் 119-ல் காண்பது போல, மனனம் செய்ய வசதியாக, 22 எபிரேய வார்த்தைகளும் முதல் வார்த்தையாக 8 வசனங்களின் அணிவரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் மிகச்சிறந்த அறிக்கையை நாம் புலம்பல் 3:22-24-ல் காண்கிறோம்:

"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்."

இந்த அறிக்கையின் அடிப்படையில் இப்புத்தகம் ஏறுவதும் இறங்குவதுமாக (Chiasm) எழுதப்பட்டுள்ளது. ”உமது உண்மை பெரிதாயிருக்கிறது” என்பதே இப்புத்தகம் எழுதப்பட்டதன் மையக் கருத்து.


புலம்பல் ஆகமம் - பகுப்புரை (Outline)

I. முதல் புலம்பல்: எருசலேம் பாழ்க்கடிக்கப்படுதல் (1:1-22)

  • அ. எரேமியாவின் துக்கம் (1:1-11)

  • ஆ. எருசலேமின் துக்கம் (1:12-22)

II. இரண்டாவது புலம்பல்: கர்த்தரின் கோபத்திற்கு விளக்கம் தருதல் (2:1-22)

  • அ. கர்த்தருடைய பார்வையில் இருந்து (2:1-10)

  • ஆ. மனுஷ பார்வையில் இருந்து (2:11-19)

  • இ. எரேமியாவின் ஜெபம் (2:20-22)

III. மூன்றாவது புலம்பல்: எரேமியா தன் துக்கத்தினை வெளிப்படுத்தினது (3:1–66)

  • அ. எரேமியாவின் துயரம் (3:1-20)

  • ஆ. எரேமியாவின் நம்பிக்கை (3:21-38)

  • இ. எரேமியாவின் ஆலோசனை / ஜெபம் (3:39-66)

IV. நான்காவது புலம்பல்: தேவனுடைய கோபாக்கினைக்கு விளக்கம் (4:1-22)

  • அ. எருசலேமுக்காக (4:1-20)

  • ஆ. ஏதோமிற்காக (4:21, 22)

V. ஐந்தாவது புலம்பல்: மீந்திருந்தோரின் விண்ணப்பங்கள் (5:1-22)

  • அ. கர்த்தரால் நினைவுகூரப்பட இருக்கும் தேவைகள் (5:1-18)

  • ஆ. கர்த்தரால் முன்நிலைமையில் வைக்கப்படுதல் (5:19-22)

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.