தலைப்பு:
எபிரேய வழக்கத்தின்படி, இப்புத்தகம் தேவனிடமிருந்து தொடர்ச்சியாக வெளிப்படுத்தல்களைப் பெற்று வந்த ஒரு தீர்க்கதரிசியின் பெயரையே தலைப்பாகக் கொண்டுள்ளது. பாபிலோன் தேசத்தில் சிறையிருப்பிலிருந்த 70 ஆண்டுகால செயல்பாடுகள் முழுவதையும் ஒரு பாலம் போலத் தானியேல் இணைக்கிறார் (கி.மு. 605–536; காண்க 1:1 மற்றும் 9:1-3). இப்புத்தகத்தில் உள்ள 12 அதிகாரங்களில், 9 அதிகாரங்கள் தரிசனங்கள் மற்றும் சொப்பனங்கள் மூலமாகப் பெறப்பட்ட வெளிப்படுத்தல்களையே நிறைவாகக் கொண்டுள்ளன. தானியேல், தேவனுடைய வார்த்தையை அறிவிப்பவராக—யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும்—தேவனின் தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தினார். புதிய ஏற்பாட்டிற்கு 'வெளிப்படுத்தின விசேஷம்' புத்தகம் எப்படி இருக்கிறதோ, அப்படியே பழைய ஏற்பாட்டிற்குத் தானியேல் புத்தகம், தீர்க்கதரிசன வார்த்தைகளையும், தீமையை நன்மை வெல்லும் என்பதையும் எடுத்துரைக்கும் நூலாக விளங்குகிறது.
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் காலம்
"தேவனே என் நியாயாதிபதி" என்பதே 'தானியேல்' என்னும் பெயரின் அர்த்தமாகும். அநேக வசனங்கள் தானியேல் தான் இப்புத்தகத்தின் ஆசிரியர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன (8:15, 27; 9:2; 10:2, 7; 12:4, 5). அதிகாரம் 7:2-லிருந்து இவர் தன் சுயசரிதையைத் தன்மைப் பெயரில் (First Person) எழுதியுள்ளார். பழைய ஏற்பாட்டில் நாம் காணும் இதர மூன்று தானியேல்களைக் காட்டிலும் (1 நாளா. 3:1; எஸ்றா 8:2; நெகேமியா 10:6) இவரை வேறுபட்டவராகக் காண வேண்டும்.
தானியேல் பதின்ம வயதில் இருக்கும்போதே, தன் உயர்குடியிலிருந்து பிரிக்கப்பட்டுப் பாபிலோனுக்குக் கடத்தப்பட்டார். பாபிலோனுக்குக் கொண்டுவரப்படும் யூதர்களுக்குப் பாபிலோனிய கலாச்சாரத்தைப் போதிக்க வல்லவராக அவர் விளங்கினார். அங்கே தானியேல் தன் வாழ்நாளில் நீண்ட காலத்தை (85 வருடங்கள் அல்லது அதற்குமேல்) கழித்தார். நாடுகடத்தப்பட்டு வந்தவராக இருந்தாலும், தேவனைத் தமது குணாதிசயத்தாலும் சேவையினாலும் மகிமைப்படுத்தி, அதிகமான நன்மைகளை அனுபவித்தவராக வாழ்ந்தார். ராஜா இவரைப் பதவியில் நியமித்தபடியால், சீக்கிரத்தில் ஒரு இராஜதந்திரி (Statesman) என்னும் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டார். அதுமாத்திரமல்ல, அன்றைய உலகத்தில் இருந்த மாபெரும் வல்லரசுகளான பாபிலோன் (2:48) மற்றும் மேதிய-பெர்சிய (6:12) அரசுகளின் மத்தியில் தீர்க்கதரிசியாகச் சேவை செய்தபடியால், ராஜாக்களின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். இப்புத்தகத்தின் ஆசிரியர் தானியேல் தான் எனக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் மத்தேயு 24:15-ல் உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.
தானியேல் 10:1-ல் நாம் காணும் காலகட்டத்தைக் காட்டிலும் அதிகமான நாட்கள் தானியேல் வாழ்ந்தார் (கி.மு. 536). இந்த நாட்களுக்குப் பின்பாகவும், கி.மு. 530-க்கு முன்பாகவும் தானியேல் இப்புத்தகத்தை எழுதியிருக்கக்கூடும். தானியேல் 2:4-ன் பின்பகுதி முதல் 7:28 வரை, புறஜாதியாரின் உலக வரலாற்றைக் குறித்துத் தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள், அன்றைய சர்வதேச வர்த்தக மொழியாக இருந்த அராமிக் மொழியில் எழுதப்பட்டிருந்தன. எசேக்கியேல், ஆபகூக், எரேமியா மற்றும் செப்பனியா ஆகியோர் தானியேலின் காலத்தில் வாழ்ந்த சமகாலத் தீர்க்கதரிசிகள் ஆவர்.
பின்னணி மற்றும் அமைப்பு
பாபிலோனியர் (கல்தேயர்) எருசலேமை வெற்றிகொண்டு, அங்கிருந்தோரை நாடுகடத்திய கி.மு. 605-ம் ஆண்டுதான் இப்புத்தகத்தின் ஆரம்பக் காலமாகும். இந்நாட்களில்தான் தானியேலும் அவரது மூன்று நண்பர்களும் அந்நிய தேசத்திற்குச் சிறைக்கைதிகளாக அனுப்பப்பட்டனர். அதன்பின் தொடர்ச்சியாகக் கி.மு. 539 வரை பாபிலோனிய ராஜ்யத்தின் ஆளுகை இருந்தது. பின்னர் மேதிய-பெர்சியர்களின் கை ஓங்கி, பாபிலோனியரைத் தோற்கடித்தனர் (5:30, 31). அதற்கும் பின்னான சரிவுக்காலத்தைக் கி.மு. 536 வரை தானியேல் 10:1-ம் வசனத்தில் காண்கிறோம்.
தானியேல் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதற்குப் பின், எருசலேமைப் பாபிலோனியர்கள் இரண்டு கட்டங்களில் முற்றுகையிட்டு வெற்றி கொண்டனர் (கி.மு. 597 மற்றும் கி.மு. 586). இந்த இரண்டு வெற்றிகளிலும் அதிக அளவிலான யூதர்களைச் சிறைபிடித்துத் தங்கள் தேசத்திற்குக் கொண்டு சென்றனர். வசனம் 6:10-ல் "தன் வீட்டுக்குள்ளே போய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க..." என நாம் வாசிப்பதிலிருந்து, எருசலேமில் இருந்து கொண்டுவரப்பட்டு 70 வருடங்களுக்கு மேலாகியும், எருசலேம் குறித்த தானியேலின் பேரார்வத்தை நாம் அறியலாம்.
தானியேலின் பின்னணி குறித்து எரேமியா குறிப்பிடும்போது, யூதா சிறைபிடிக்கப்படுவதற்கு முன் யூதர்களை ஆட்சிசெய்த 5 ராஜாக்களைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக 3 ராஜாக்களை (யோசியா, யோயாக்கீம் மற்றும் சிதேக்கியா) மட்டுமே குறிப்பிடுவதால், தானியேல் குறித்துப் பகுதியளவில் மட்டுமே எரேமியா சொல்லியிருக்கிறார் எனலாம். எசேக்கியேல் தீர்க்கதரிசியும் தானியேலைக் குறித்துக் குறிப்பிடும்போது (14:14, 20; 28:3), அவரை நீதிமான் மற்றும் ஞானவான் என விவரிக்கிறார். எபிரேயருக்கு எழுதின நிருபத்தில், "சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்" (எபி 11:33) என ஆசிரியர் தானியேலைக் குறிப்பாக உணர்த்துகிறார்.
எரேமியா, ஆபகூக் மற்றும் செப்பனியா போன்ற தீர்க்கதரிசிகள் தொடர்ச்சியாக எச்சரிப்புக் கொடுத்திருந்தும், தேசத்தில் மனந்திரும்புதல் இல்லாததாலும், யூதா தேசம் நீண்டகாலம் பாவத்தில் நிலைத்திருந்ததாலும், இறுதியில் தேவ கோபாக்கினைக்கு ஆளானது. ஆரம்ப நாட்களில், தேவனின் உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய ஏசாயாவும், ஏனைய உடன் தீர்க்கதரிசிகளும் வரவிருக்கும் அபாயத்தைக் குறித்து எக்காளம் போல உரக்கச் சொல்லி வந்தார்கள்.
கி.மு. 625-ல், அசீரியர்களின் பெலன் குன்றி வந்த வேளையில், புதிதாக வந்த பாபிலோனியர்கள் வெற்றிசிறக்க ஆரம்பித்தனர். அவர்கள் குவித்த வெற்றிகள்:
-
கி.மு. 612-ல் அசீரியர்களை அவர்களது தலைநகரான நினிவேயுடன் கைப்பற்றினர்.
-
அதனைத் தொடர்ந்து வந்த வருடங்களில் எகிப்தைக் கைப்பற்றினர்.
-
கி.மு. 605-ல் எருசலேமின் மீதான முதல் வெற்றியின் போது யூதாவைக் கைப்பற்றினர் (அடுத்தடுத்த வெற்றிகள் கி.மு. 597 மற்றும் கி.மு. 586-ல் நிகழ்ந்தன).
-
நாடுகடத்தப்பட்ட முதல் குழுவில் தானியேல் இருந்தார். எசேக்கியேல் தொடர்ந்து கி.மு. 597-ல் நாடுகடத்தப்பட்டார்.
வடக்கு ராஜ்யமான இஸ்ரவேல் அசீரியர்களின் கைகளில் ஆரம்பத்திலேயே கி.மு. 722-ல் வீழ்ந்தது. யூதா சிறைப்பட்டுச் சென்றதுடன் நியாயத்தீர்ப்பு பூரணமானது. நூற்றாண்டுகள் பலவற்றில் அடுத்தடுத்து வரும் காலகட்டங்களில் ஆளுகை செய்பவர்கள் குறித்தும், அதனை மிகப்பெரிய வெற்றி சிறந்தவர் குறித்தும், மேசியாவின் வருகையில் புறஜாதியாரின் ஆளுகை கவிழ்த்துப் போடப்படும் என்பது குறித்தும் தேவனுடைய வார்த்தை பாபிலோனில் இருக்கும்போது தானியேலுக்கு வெளிப்பட்டது. பின் மேசியா, அனைத்துச் சத்துருக்களையும் தோற்கடித்து, அவருடைய உடன்படிக்கையின் ஜனங்களை, தமது மகிமை நிறைந்த ஆயிரம் வருஷ அரசாட்சியில் ஆசீர்வதித்து உயர்த்துவார் என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.
இறையியல் மற்றும் வரலாற்றுப் பொருட்கள்
தேவன் அவர்களுக்காக எப்படிப்பட்ட தீர்மானத்தை வைத்திருக்கிறாரோ, அவைகளை அந்நிய தேசத்தில் இருந்த யூதர்களுக்குத் தெரிவித்து, உலகத்தில் அந்நிய தேசத்தாரின் ஆதிக்கம் இருந்தபோது யூதர்களை உற்சாகப்படுத்தும்படிக்கே தானியேல் புத்தகம் எழுதப்பட்டது. தேவனுடைய இறையாட்சியே சர்வ தேசத்தின் மீதும், ராஜாக்களின் செயல்களின் மீதும் மேலோங்கிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதையும், இறுதியில் அவர்கள் ஆட்சிக்கெல்லாம் பதிலாக மெய் ராஜாவின் ஆட்சி அமையும் என்பதே இப்புத்தகத்தின் மற்றெல்லாக் கருப்பொருளைக் காட்டிலும் முன்னணியில் நிற்கிறது. திறவுகோலான வசனங்கள்: 2:20-22, 44 (மேலும் 2:29, 37; 4:34-35; 6:25-27).
தானியேல் 1-ல் நாம் காணும் இஸ்ரவேலின் வீழ்ச்சியைத் தேவன் அனுமதித்ததால், அவர் தோல்வியைச் சந்தித்ததாக அர்த்தமல்ல; அவருடைய உயர்த்தப்பட்ட கிறிஸ்துவையும், அவருடைய ராஜரீகத்தையும் உலகிற்குப் பூரணமாக வெளிப்படுத்தும் அவரது நிச்சயமான நோக்கம் நிறைவேறுவதின் ஒரு பகுதியாகவே அது அமைந்தது.
இஸ்ரவேலை அந்நிய தேசத்தார் ஆளுகை செய்யத் தேவன் தமது இறையாண்மைக்கு உட்பட்டு அனுமதித்தார். அதாவது:
-
கி.மு. 605–539 வரை பாபிலோன்,
-
கி.மு. 539–331 வரை மேதிய-பெர்சியா,
-
கி.மு. 331–146 வரை கிரேக்கம் (கிரீஸ்),
-
கி.மு. 146-லிருந்து கி.பி. 476 வரை ரோமர் இஸ்ரவேலை ஆளுகை செய்ய அனுமதித்தார். இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் உள்ள காலம் வரைத் தொடர்கிறது.
அதிகாரம் 2 மற்றும் 7-ஐக் காண்பீர்களானால், இந்த அந்நிய தேசத்தாரின் அதிகாரங்கள் இஸ்ரவேல் மேல் ஓங்கியிருந்த விவரங்கள் தெரிய வரும். இக்கருப்பொருள் இஸ்ரவேலுக்குண்டான தோல்வி அனுபவத்திலும், அதிகாரம் 8-12ல் நாம் காணும் தேவராஜ்யத்தின் ஆசீர்வாதத்திலும் அடங்கியிருக்கக் காண்கிறோம் (2:35, 45; 7:27). சகல தேசத்தாரின் மீதும் மேசியா மகிமை பொருந்தினவராய் ஆட்சி செய்வார் (2:35, 45; 7:27). அந்நாளிலே தேவனின் ராஜரீகக் கட்டுப்பாடு வெளிப்படும் என்பதே இப்புத்தகத்தின் கருப்பொருளின் திறவுகோலான அம்சமாகும். அவர் 2-ஆம் அதிகாரத்தில் ஒரு கல்லைப் போலவும், அதிகாரம் 7-ல் மனுஷகுமாரனைப் போலவும் ஒப்பிடப்பட்டிருக்கிறார். கூடுதலாக, 9:26 வசனத்தில் அவரே "அபிஷேக்கிக்கப்பட்டவர்" (மேசியா) எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். அதிகாரம் 9-ல் தானியேலின் காலத்திலிருந்து கிறிஸ்துவின் ராஜ்யம் வரைக்குமான காலகட்டத்தின் கட்டமைப்பு விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.
தேவன் ஆட்சி செய்கிறார் என்பதுடன், அவருடைய வல்லமை அற்புதங்கள் மூலமாக வெளிப்படுகிறது என்பதே தானியேல் புத்தகத்தில் இழையோடிக்கொண்டிருக்கும் இரண்டாவது கருப்பொருளாகும். தேவன் தமது நோக்கத்தினை நிறைவேற்ற அற்புதங்களைப் பயன்படுத்துகிறார் என்ற கருப்பொருள் ஆறு காலக்கட்டங்களில் காணப்படுகிறது. அவற்றில் ஒரு பகுதி தானியேலில் காணப்படுகிறது. இதர காலங்கள்:
-
சிருஷ்டிப்பும் வெள்ளமும் (ஆதி. 1-11)
-
மோசேயும், ஐந்து ஆகமங்களும் (ஆதி. 12 - உபாகமம்)
-
எலியாவும் எலிசாவும் (1 ராஜாக்கள் 17 - 2 ராஜாக்கள் 13)
-
இயேசுவும் அப்போஸ்தலர்களும் (சுவிசேஷ புத்தகங்கள், அப்போஸ்தல நடபடிகள்)
-
இயேசுவின் இரண்டாம் வருகையின் காலம் (வெளிப்படுத்தின விசேஷம்).
தேவன் நித்தியமாக ஆளுகை செய்கின்றவர் மாத்திரமல்ல, அவருடைய சித்தத்தின்படி எதையும் செய்ய வல்லவர் (4:34, 35). அவர் அற்புதங்கள் செய்ய வல்லவர்; ஆதியாகமம் 1-ஆம் அதிகாரத்தில் அவர் சிருஷ்டிகராக இருந்து வெளிப்படுத்திய வல்லமையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இங்கே சொல்பவை எல்லாம் அவரின் வல்லமையின் மிகச்சிறிய அளவினையே வெளிப்படுத்துகின்றன. தேவன் தாமே சொப்பனங்களை வெளிப்படுத்தி, விளக்கம் அளித்து, தமது சித்தத்தை வெளிப்படுத்தினார் எனத் தானியேல் வரிசைப்படுத்தித் தன் புத்தகத்தில் எழுதுகிறார் (அதிகாரங்கள் 2, 4, 7).
ஏனைய அற்புதங்கள்:
-
சுவற்றில் எழுதியது மற்றும் தானியேல் அதற்கு விளக்கம் அளித்தது (அதி. 5).
-
எரியும் அக்கினிச் சூளையிலிருந்து மூன்று பேர்களைக் காப்பாற்றிய அதிசயம் (அதி. 3).
-
சிங்கக் கெபியில் தானியேலைச் சிங்கங்களின் வாயில் அகப்படாமல் தப்புவித்த அதிசயம் (அதி. 6).
-
இயற்கைக்கு அப்பாற்பட்ட தீர்க்கதரிசனங்கள் (அதிகாரங்கள் 2, 7, 8; 9:24 – 12:13).
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்
எதிர்காலத்தில் காத்திருக்கும் உபத்திரவம் மற்றும் ராஜ்யத்தின் வாக்குத்தத்தங்களுக்குரிய பகுதிகளுக்கு விளக்கம் அளிப்பதே இதில் உள்ள முக்கிய சவாலாகும். அராமிக் மொழி ஆராய்ச்சி மற்றும் அகழ்வாராய்ச்சிகள் இப்புத்தகத்தில் எழுதியுள்ளவற்றின் நாட்களை உறுதிப்படுத்தியிருந்தும், சில விமர்சகர்கள் (Skeptics) இந்த அற்புதங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட, நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் என்பதை அங்கீகரிக்க மனதில்லாமல் இருக்கின்றனர். அவர்கள், இரண்டு ஏற்பாடுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் (Intertestamental period), பின்நாட்களில் இவற்றை கண்களால் கண்டவர் தன் கருத்தாக எழுதியுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டவைகளில்—குறிப்பாக அதிகாரம் 11-ல் உள்ளவற்றில்—நூற்றுக்கும் மேலானவை ஏற்கெனவே நிறைவேறிவிட்டன.
உண்மையில், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப் பின் உள்ள ஏழு வருட நியாயத்தீர்ப்பின் காலத்தைத் தானியேல் 7:21, 22; 11:36-45; 12:1 வசனங்களிலும், கிறிஸ்து இஸ்ரவேலரையும் புறஜாதியாரையும் சேர்த்துச் செய்யப்போகும் ஆயிரம் வருட அரசாட்சி குறித்து வெளிப்படுத்தல் 20-லும் தானியேல் கற்றுத் தருகிறார். புதிய வானம், புதிய பூமி, புதிய தலைநகரான எருசலேமில் இந்த யுகம் பரிபூரணமானதாக ஆயிரம் வருட அரசாட்சியில் இருக்கும். தானியேல் தீர்க்கதரிசனத்தையும் சேர்த்து, தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு நேரடியான அர்த்தம் பார்க்கும்போது, நமக்கு ஆயிரம் வருட ஆட்சிக்கு முந்தைய நாட்களுக்குரிய விஷயங்கள் பல கிடைக்கின்றன.
வாசிப்பவர்களுக்கு முன் நிற்கக்கூடிய ஏனைய சவால்கள்:
-
எண்களுக்கு விளக்கம் அளித்தல் (1:12, 20; 3:19; 9:24-27).
-
"மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர்" (7:13, 14) என்று ஒருவரை அடையாளம் கண்டதில் உள்ள சவால்.
-
8:19-23-ல் சொல்லப்படும் உருவகத்தை வைத்துக் கடந்த காலத்தின் அந்தியோகஸ் என எடுத்துக்கொள்வதா அல்லது எதிர்காலத்தில் தோன்றவிருக்கிற அந்திக்கிறிஸ்து பற்றியதா?
-
9:24-27-ல் "எழுபது வாரங்களுக்குரிய" விளக்கம் அளிப்பது ஒரு சவால்.
-
11:21-35-ல் சொல்லப்பட்ட அந்தியோகஸ் குறித்துத்தான் 11:36-45-லும் சொல்லப்பட்டுள்ளதா அல்லது எதிர்காலத்து அந்திக்கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசன வார்த்தைகளா? போன்றவை.
சுருக்கம்
I. தானியேலின் தனிப்பட்ட வாழ்க்கையின் பின்னணி (1:1-21) அ. எருசலேமின் வீழ்ச்சி (1:1, 2) ஆ. யூதர்கள் பயிற்சி மேற்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுதல் (1:3-7) இ. சோதனையின் போது நான்கு நபர்களின் தைரியம் (1:8-16) ஈ. நான்கு பேரும் ராஜரீகத் தலைமைப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படல் (1:17-21)
II. புறஜாதியார் மேற்கொண்டு ஆளுவார்கள் என்ற தீர்க்கதரிசன வார்த்தை (2:1-7:28) அ. நேபுகாத்நேச்சாரின் இருமனம் (2:1 - 4:37) ஆ. பெல்ஷாத்சாரின் ஒழுக்கக்கேடு மற்றும் மரணம் (5:1-31) இ. தானியேல் விடுவிக்கப்படுதல் (6:1-28) ஈ. தானியேலின் சொப்பனம் (7:1-28)
III. இஸ்ரவேல் தேசத்தின் எதிர்காலம் குறித்ததான தீர்க்கதரிசன வார்த்தைகள் (8:1-12:13) அ. செம்மறி ஆடு மற்றும் ஆண் வெள்ளாடு குறித்ததான தீர்க்கதரிசனம் (8:1-27) ஆ. எழுபது வாரங்கள் குறித்ததான தீர்க்கதரிசனம் (9:1-27) இ. இஸ்ரவேலின் அவமானமும் மீட்டமைக்கப்படுதலும் (10:1 - 12:13)