முதலாவது, உண்மையான பக்தி உலக சிநேகத்திற்கு இடங்கொடாது. பாடுகளின் வேளையில், உலக சிநேகமானது கிறிஸ்துவை விட்டுப் பின்வாங்கும் படியாகச் செய்யும். விசுவாசிகள் இன்றைக்கு உலகத்தைச் சார்ந்து வாழ்ந்தாலும், அதுவே அவர்களுக்குப் பிரதானமாக இல்லை என்பதை நான் மறுக்கவில்லை. வேதம் சொல்லுகிறது: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை” (1 யோவான் 2:15). ஒரு கிறிஸ்தவன் எவ்வளவாய் உலகத்தின் மீது அன்பு கூர்ந்தாலும், அது தேவன் மீது கொண்டுள்ள அன்புக்கு மேலாக இருக்காது. நிழலுக்கு அடியில் வளரும் செடியைப் போல, அவன் வளர்ச்சியற்றுக் குன்றிப்போய் கிடக்கமாட்டான்.
எவன் ஒருவன் உலகத்தை அதிகமாக நேசிக்கிறானோ, அவன் சோதனையைச் சந்திக்கிற வேளையில் கிறிஸ்துவை விட்டு விலகுகிறவனாய் இருக்கிறான். இதுவே மத்தேயு 19:22-ல் நாம் பார்க்கும் வாலிபனின் நிலைமை. “அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.” இதுவே 2 தீமோத்தேயு 4:10-ல் சொல்லப்பட்டுள்ள தேமாவின் நிலைமை. “ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்.” நெருப்பிலே போடப்பட்ட பச்சை மரம் எப்படிப் பற்றி எரியாதோ, அப்படியாக உலக சிநேகமானது தேவனுக்காய் நாம் வைராக்கியமாய் வாழ்வதற்கு நம்மை அனுமதிக்காது.
இரண்டாவதாக, உண்மைத்தன்மையானது கிறிஸ்துவோடு பின்னிப்பிணைந்து, அவரோடு இணைந்திருக்கும். இதுவே பெரிதான சோதனையில் பலமானதாய் இருக்கிறது. மாயமாலக்காரனுக்குக் கிறிஸ்துவோடு ஐக்கியம் இருக்காது; ஆகையால் அவரிடத்திலிருந்து எந்தவிதக் கிருபைகளையும் அவன் பெற முடியாது. மேலும், கிறிஸ்துவினிடமிருந்து ஒன்றும் பெறாதவனாய் இருப்பதினால், சீக்கிரம் செலவழிந்து போகக்கூடிய தன்னுடைய சுய பெலத்தை மட்டுமே அவன் சார்ந்திருக்கிறான். ஆனால் ஒரு விசுவாசி, பாடுகளின் மத்தியில் தனக்கு வேண்டிய கிறிஸ்துவின் பெலனையும் கிருபைகளையும் பெற்றுக்கொள்கிறவனாய் இருக்கிறான். “எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது” (2 கொரிந்தியர் 1:5). “சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும்” (கொலோசியர் 1:11) என்று பவுல் கூறுகிறார். இதுவே பாடுகளின் வேளையில் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் ஒரு விசுவாசிக்குக் கிடைக்கும் பெரிதான பலன்.
மூன்றாவதாக, உண்மையுள்ள ஆத்துமா கிறிஸ்துவோடு பிணைக்கப்பட்டிருப்பதினால், அந்த ஆத்துமா நித்தியத்தின் மீதும் பரலோகத்தின் மீதும் தன் இருதயத்தைப் பதித்திருக்கும். “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்” (கொலோசியர் 3:1). நாம் கிறிஸ்துவோடு தொடர்ந்து இணைந்திருப்பதற்கு இது நம்மை ஊக்கப்படுத்துகிறது. இப்பார்வை, எப்பக்கத்திலிருந்து வரும் சோதனையிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. மோசே இப்படியாகச் செய்வதற்கு இதுவே உதவி செய்தது. “விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்” (எபிரெயர் 11:24-26). வெலன்ஸ் (Valens) பேரரசர் உலக மேன்மைகளையும் ஈர்ப்புகளையும் காண்பித்தும், அதை மறுத்த 40 இரத்த சாட்சிகளின் தைரியமான பதில் இதுவே: "நாங்கள் முழு உலகத்தையே ஒன்றுமில்லை என்று எண்ணும்போது, நீர் இந்த அற்பமான உலகக் காரியங்களை எங்களுக்கு ஏன் அளிக்கிறீர்?" ஒரு விசுவாசிக்கு, பாடுகளும் சோதனைகளும் வரப்போகிற நித்தியமான பரலோக வாழ்விற்கு ஆயத்தப்படுத்தும் கருவிகளாகவும், நித்திய சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ளத் துரிதப்படுத்தும் கருவிகளாகவும் இருக்கின்றன.
நான்காவதாக, உண்மைத்தன்மை ஒரே ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கும். அதாவது, தேவனுக்குள் களிகூரவும், அவரைப் பிரியப்படுத்துவதுமே அதன் நோக்கமாகும். பாடுகளின் மத்தியில் கிறிஸ்துவுக்குள் உறுதியாய் இருப்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? யாக்கோபு 1:8-ன் படி, மாய்மாலக்காரன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாய் இருப்பதற்கு அவன் இருமனம் உள்ளவனாய் இருப்பதே காரணம். ஆனால், கிறிஸ்துவுக்குள் இருக்கிற விசுவாசி ஒரே மனம் கொண்டவனாய், தன் வழியில் உறுதிகொண்டவனாய் கிறிஸ்துவுக்காக வாழ்கிறான்.
ஐந்தாவதாக, உண்மைத்தன்மை கிறிஸ்துவின் சித்தத்திற்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணிக்கிறது. இதனால் பல்வேறு சிரமங்களும் அபாயங்களும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. இதுவே பரிசுத்த எண்ணெய்; அவனுடைய ஆத்துமாவின் சக்கரம் கிறிஸ்துவுக்கென்று கீழ்ப்படிந்து சுலபமாக ஓடுவதற்கு அது உதவுகிறது. இதுவே பாடுகளின் வேளையிலும், அப்போஸ்தலர் 21:13-ன் படி, “எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்று சொல்லி, கிறிஸ்துவின் சித்தத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கச் செய்கிறது. எவ்வளவு துன்பங்கள், பாடுகள் வந்தாலும், அவன் கிறிஸ்துவுக்காகப் பொறுமையோடு சகித்து, அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க இது செய்கிறது.
ஆறாவதாக, உண்மைத்தன்மையானது இவ்வுலகக் காரியங்களை நித்தியம் மற்றும் விசுவாசம் என்ற அளவுகோலைக் கொண்டு அளவிடச் செய்கிறது. “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரிந்தியர் 4:18). “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” (ரோமர் 8:18). அவன் தற்காலிகமான உலகக் காரியங்களைக் குறித்துப் புலம்பிக்கொண்டிராதபடி, நித்திய மகிமையைக் குறைத்து மதிப்பிடாதவனாய்க் காணப்படுவான். நித்தியத்தின் மேல் நம்முடைய உறுதியான பார்வை, இவ்வுலகத் துன்பங்களில் நம்மை ஜெயிக்கிறவர்களாய் வைக்கும்.
ஏழாவதாக மற்றும் முடிவாக, உண்மைத்தன்மையுள்ள வாழ்வில் மட்டுமே பாடுகளின் மத்தியில் கிறிஸ்துவுக்காக உறுதியோடும் ஸ்திரத்தோடும் செல்லுவதற்குரிய அனைத்துப் பரலோக உதவிகளும் உண்டு. அதாவது, உண்மையுள்ளவர்களுக்காகவே கிறிஸ்துவானவர் பரலோகத்தில் வேண்டுதல் செய்கிறவராயிருக்கிறார் (ரோமர் 8:34). மேலும் பாடுகளின் வேளையில் ஆவியானவரின் ஆறுதலும், தேவதூதர்களின் உதவியும் அவர்களுக்கு உண்டு (எபிரெயர் 1:14). தேவ ஆவியானவர் அவர்களில் தங்குகிறவராயும் இருக்கிறார். அநேகப் பரிசுத்தவான்களின் ஜெபம் மற்றும் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள விசேஷமான வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றிலும் தேவனின் உண்மைத்தன்மை அடங்கியிருக்கிறது. அதினால், ஒரு உண்மையான விசுவாசி சோதனையில் மாண்டுபோவதில்லை.