தேவனுடைய சித்தத்தை அறிதல் - பாகம் 1
படிப்புகள்: 423
Print
ஆசிரியர்: ஆசிரியர்: G.பிபு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 16 நிமிடங்கள்

அறிமுகம்

தேவனுடைய சித்தத்தின்படியான வாழ்வை வாழ்வதே ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனின் விருப்பமாக இருக்க வேண்டும். தான் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும், தான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், தன்னுடைய யோசனைகள் அனைத்தும் தேவனுடைய சித்தத்தின்படியே இருக்க வேண்டும் என்று அவன் மனதார விரும்புவான். தேவனுடைய சித்தத்திலே தனக்கு பாதுகாப்பு உள்ளது என்பதையும், தனது சுயபுத்தியை நம்புவது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவன் நன்கு அறிவான்.

மேலும், "தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்" (எபிரேயர் 10:9) என்று சொன்ன இயேசு கிறிஸ்துவினுடைய சிந்தையை உடையவனாய் இருப்பதால், "ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்ற மனப்பான்மையைக் கொண்டிருப்பான். "உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" (1 யோவான் 2:17) என்ற வார்த்தையின் மீது விசுவாசம் வைத்து, "தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான்" (மாற்கு 3:35) என்று இரட்சகர் சொல்லிய மேன்மையை மையமாகக் கொண்டு வாழ்வான். (ரோமர் 12:2)-ன் படி, "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிதலுடனும் உண்மையுடனும் ஜெபித்து முயற்சிப்பான்.

ஆனால், பொதுவாக எல்லோருக்கும் எழும் குழப்பமான ஒரு கேள்வி: 'தேவனுடைய சித்தத்தை நான் எப்படி அறிந்துகொள்வது?' ஆம், இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது; மிகவும் அவசியமானது. தேவனின் சித்தம் என்னவென்று தெரியாமல் அதை எப்படி நிறைவேற்றுவது? ஆகவே, தேவனுடைய சித்தத்தை எப்படிக் கண்டறிவது என்பது நமது கடமையும், முக்கியமான பொறுப்புமாகும்.

தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதில் உள்ள சில தவறான வழிமுறைகள்

தேவனுடைய சித்தத்தை அறியவேண்டிய தேவையையும் பொறுப்பையும் உணரும்படியான மனசாட்சியைக் கொண்ட விசுவாசிகளிடமிருந்து, உலகப்பிரகாரமான ஆதாயம் பெறுவதற்காகப் பலர் அவர்களைத் தவறாக வழிநடத்தி ஏமாற்றுகிறார்கள். "தேவன் எங்களுக்கு வெளிப்படுத்துவார்! நாங்கள் உங்கள் மீது கைவைத்து ஜெபம் செய்வதினால் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தம் என்னவாக இருக்கிறதோ அதை நாங்கள் சொல்வோம்" என்று இயேசுவின் பெயரால் முதலில் அவர்களின் சொத்துக்களையும், பின்னர் ஆன்மாக்களையும் கொள்ளையடிப்பவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். மேலும், விசுவாசிகள் தங்களுடைய அறியாமையாலும், அவர்களுக்கு வேத அறிவு இல்லாததாலும், வேத வசனத்தின்படியாகத் தேவனுடைய சித்தத்தைத் தேடாமல் வேறு விதங்களில் தேட முயற்சிக்கிறார்கள்.

சிலர் தங்களுடைய அப்பாவித்தனத்தினால் அல்லது வேதத்தைப் பற்றிய போதிய புரிதல் இல்லாததால், மனசாட்சியின் அழுத்தங்களையே தேவனின் குரல் என்று கருதுகின்றனர். மற்றவர்கள் தேவனின் முன்னிலையில் தங்களை ஒருமுகப்படுத்திக்கொண்டு ஜெபிக்கும்போது, மனதில் தோன்றும் எண்ணங்களையே தேவன் தங்களுக்குச் சொல்லுகிறார் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் 'சீட்டுப் போட்டு' தேவனுடைய சித்தத்தை உறுதி செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். வேதத்தைத் திறக்கும்போது கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஒரு வசனத்தைத் தொட்டு, அதுவே தேவனுடைய சித்தத்தின் வெளிப்பாடு என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். இவை அனைத்தும் மனிதனுடைய சுய முயற்சியே தவிர, தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்க போதுமான நடைமுறைகள் அல்ல. எனவே, இந்த வீணான முயற்சிகளினால் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொண்டோம் என்ற மாயையில், தேவனுடைய சித்தத்திற்கு முரணானவற்றைப் பின்தொடரும் அபாயம் உள்ளது.

நாம் ஏதாவது ஒரு குரலையோ அல்லது தரிசனத்தையோ நம்பி, அது தேவனின் வெளிப்பாடு என்று ஏற்றுக்கொண்டால், அது தேவனிடமிருந்து வந்ததா? அல்லது ஒளியின் தூதனாக வேஷந்தரித்து ஏமாற்றும் சாத்தானிடமிருந்து வந்ததா? அல்லது அது நம் சொந்தக் கற்பனையில் (மாயையில்) இருந்து வந்ததா? என்று உறுதியாகக் கண்டறிய முடியுமா? மனசாட்சியில் ஏற்படும் ஒவ்வொரு அழுத்தமும் தேவனுடைய குரல் என்று எண்ணினால், புறஜாதிகளும் தங்கள் மனசாட்சியின்படியே தங்கள் தெய்வங்களுக்குக் காணிக்கை செலுத்தவும், பூஜைகளைச் செய்யவும், பல சடங்குகளை நிறைவேற்றவும் தள்ளப்படுகிறார்கள். இந்தச் சூழலில், மனசாட்சியின் அழுத்தங்கள் அனைத்தும் தேவனின் குரல் என்று சொல்ல முடியுமா?

ஜெபத்தின்போது எழும் எண்ணங்களைத் தேவனின் எண்ணங்களாகக் கருதினால், ஜெபம் செய்யும்போதுதான் எப்போதும் எழாத எண்ணங்கள் தோன்றும் என்பதை இதை வாசிக்கும் வாசகர்கள் அறிவீர்கள். ஆகவே, அவை அனைத்தையும் தேவனின் எண்ணங்களாகக் கருதலாமா?

இன்றைக்கும் தேவனுடைய சித்தத்தை அறிய 'சீட்டுப் போடுதல்' என்பதைத் தேவன் நியமித்த முறை என்றால், சீஷர்கள் மத்தியாவை பன்னிரண்டாவதாகச் சீட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தாலும், அதன் பின்னர் களத்தில் திருச்சபையின் மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கத் தேவன் அதே முறையை ஏன் தொடரவில்லை? 'சீட்டுப் போட்டு' தேவனே என்று சொல்வதைவிட, வேத வசன விதிமுறைகளின் அடிப்படையில் முடிவெடுப்பதே திருச்சபைக்குத் தேவன் நியமித்த பாதை என்பதை வேத உபதேசம் நமக்குக் கற்பிக்கவில்லையா?

வேதத்தைத் திறந்து அங்கே காணப்படும் வசனத்தின் மூலம் தேவன் பேசுகிறார் என்பதைப் பொறுத்தவரை, நாம் வேதத்தை அவ்விதமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தேவன் அவற்றை எழுதவில்லை. வேதாகமம் அதிகாரங்களாக, வசனங்களாக, எண்களாக இல்லாமல், தொல்சுருள்களில் எழுதப்பட்ட பழமையான கையெழுத்துப் பிரதிகளே நமக்கு இதைத் தெளிவாகச் சொல்லுகின்றன. "இன்று நாம் வேதத்தைத் திறக்கும் முறை சரியானது; அச்சு இயந்திரங்கள் மற்றும் காகிதங்களை அறிமுகப்படுத்திய பிறகுதான் தேவன் இந்த முறையைக் கொண்டுவந்தார்" என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?

சிலர் அன்றாடப் பிரசங்கத்திலிருந்தும், தினந்தோறும் வாசிக்கும் வேதப் பகுதியிலிருந்தும் தேவன் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறார் என்று நினைக்கிறார்கள்; இதுவும் தவறே. வேத வசனத்தின் சந்தர்ப்பச் சூழலை அவர்கள் புறக்கணித்து, அவர்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேத வாக்கியத்திற்குப் புதிய அர்த்தங்களை இணைக்க அது வழிவகுக்கிறது. உதாரணமாக, ஒரு நபர் அமெரிக்கா செல்வது தேவனின் விருப்பமா இல்லையா என்று ஜெபித்துக் கொண்டிருந்தபோது, ஏசாயா 11:14-ம் வசனம் தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்தியதாம்! "அவர்கள் இருவரும் ஏகமாய்க் கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து..." (ஆங்கிலத்தில் 'இறக்கைகளில் ஏறுவார்கள்' - fly upon the shoulders) என்ற வார்த்தையின்படி, தான் விமானத்தில் ஏற வேண்டும் என்றும், "மேற்கு திசை" என்று இருப்பதால் அமெரிக்கா செல்ல வேண்டும் என்றும் உணர்ந்தாராம்.

வேத வசனத்தின் சூழல் எதுவாக இருந்தாலும் தேவன் என் நிலைமையை அறிந்து, அதற்குத் தகுந்த வசனத்தில் ஆலோசனையைத் தருகிறார் என்பது இப்படிப்பட்டவர்களின் மாயையே. இருப்பினும், இந்த வகையான சிந்தனையே வேத வசனத்திற்குத் தவறான விளக்கங்களை உருவாக்குவதற்கான அடித்தளம் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்றதும், மனிதனுடைய உணர்வுகளுக்கு ஏற்றதுமான அந்த முறை வேத வசனத்தோடு ஒத்துப்போகாது; அது மனிதனுடைய சுய உணர்வுதான். தாம் விரும்பியபடி வேத வார்த்தையைத் திரிக்கவும், விளக்கவும் தேவன் யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. இந்த வழிமுறையில் தேவனுடைய சித்தத்தை அறிய முடியும் என்று வேதத்தில் குறைந்தபட்சம் முன்னுரையாகக்கூடச் சொல்லவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

இறுதியாக, பிலிப்பியர் 4:7-ல், "அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்" என்று கூறப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு, தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளும்படியான ஒரு விசித்திரமான முறையைக் கண்டுபிடித்துள்ளனர். அது என்னவென்றால், ஒரு காரியத்தைக் குறித்து நீங்கள் ஜெபிக்கும்போது உங்களுடைய இருதயம் சமாதானமாக உணர்ந்தால் அது தேவனின் சித்தம்; மாறாகச் சமாதானம் தரவில்லை என்றால் அது தேவனுடைய சித்தம் அல்ல என்பது அவர்களின் கருத்து. ஆனால், அந்த வசனத்தின் சூழல் தேவனின் சித்தத்தை அறியும் வழிவகையைச் சொல்லவில்லை; அந்த வசனம் ஜெபத்தின் மூலம் தேவன் மீது பாரங்களை வைப்பதின் மூலம் வரும் சமாதானத்தைப் பற்றிப் பேசுகிறது. அந்த வசனத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள 6 & 7 வசனங்களை ஒன்றாக இணைத்துப் படியுங்கள்: "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்."

இருப்பினும், இந்த "சமாதானம்" தேவ சித்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று நினைப்பதில் உள்ள சிரமத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இது கெத்செமனே காட்சியில் தெளிவாகக் காணப்படுகிறது. சிலுவையில் இயேசுவின் மரணம் தேவனின் சித்தமாக இருக்கிறது (யோவான் 10:17,18). ஆயினும் அதற்கு ஆயத்தமாகும் போது, "எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்" அவர் இருதயத்தில் இருந்ததாக வேதம் கூறவில்லை. இதற்கு நேர்மாறாக, அவர் தம்முடைய சீஷர்களிடம், "என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது" (மத்தேயு 26:38) என்று சொன்னதாக வாசிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் என்ன செய்யப்போகிறார் என்பது தேவனுடைய சித்தம் அல்ல என்று நினைப்பது முரண்பாடாக இருக்கும். "என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்" (யோவான் 6:38) என்று அவர் கூறினார். எனவே நாம் எப்படி உணர்கிறோம் என்பது தேவனுடைய சித்தத்தின் குறிகாட்டியாக இருப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேவனின் சித்தத்தை உறுதிப்படுத்த மேலே குறிப்பிடப்பட்ட எந்த முறைகளையும்விட நம்பகமானதும், நிலையானதுமான மற்றொரு வழி உள்ளது. "அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்" (2 பேதுரு 1:19). இந்தத் தீர்க்கதரிசன வார்த்தையே பரிசுத்த வேதாகமம். இந்த வேதத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் தேவன் தனது சித்தத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், வேதத்தின் வசனங்களை 'லாட்டரி சீட்டு' முறையில் தேர்ந்தெடுப்பதன் மூலம் தேவனுடைய சித்தத்தை அடையாளம் காண முடியாது. மாறாக, வேதத்தில் உள்ள போதனைகளை முறையாகவும், விரிவாகவும் புரிந்துகொண்டு, அந்தப் போதனைகளிலிருந்து எழும் கொள்கைகளை நம்முடைய வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் பயன்படுத்தினால், நிச்சயமாக நாம் தேவனின் சித்தப்படி நடக்கிறோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வேதம் தேவனுடைய சித்தத்தின் வெளிப்பாடு; எனவே வேதாகமத்தின்படியான வாழ்க்கை என்பது தேவ சித்தத்தின்படியான வாழ்க்கையே.

தனிப்பட்ட வாழ்க்கையும் தேவ சித்தமும்

"இதுவரை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் வேதத்தில் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே! வேதத்தின் அடிப்படையில் எந்தக் கல்லூரியில் படிப்பது? எந்த வேலையைச் செய்வது? யாரைத் திருமணம் செய்துகொள்வது? போன்றவற்றைப் பற்றிய தனிப்பட்ட முடிவுகளை நான் வேதத்தின் அடிப்படையில் எப்படி எடுப்பது?" என்று நீங்கள் கேட்கலாம். இது மிக முக்கியமான கேள்வி. இதற்கு விடை காணும் முன் ஒரு விஷயத்தைக் குறித்து அறிந்துகொள்வது அவசியம். பலர் நினைப்பதுபோல, தேவன் என் மீது வைத்துள்ள தமது சித்தத்தை எழுதி மறைத்துவிட்டார் என்றும், நான் அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் நினைப்பது சரியானதல்ல. தேவன் நான் என்ன செய்ய விரும்புகிறாரோ, அதை அவர் என்னிடமிருந்து மறைத்தால் அதை நான் எப்படி நிறைவேற்ற முடியும்? ஆகவே, நான் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ளும் பாதையை அவர் நிச்சயமாக எனக்கு வைத்திருக்க வேண்டும்.

தேவ சித்தத்தின் இரண்டு பகுதிகள்:

"மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்" (உபாகமம் 29:29). மேற்கூறிய வசனத்தின் அடிப்படையில் தேவனின் சித்தத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

  1. தேவனின் இரகசிய சித்தம்: அது தேவனுக்குச் சொந்தமானது. அதை நிறைவேற்றுவது நமது பொறுப்பு அல்ல.

  2. வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சித்தம்: அது அவருடைய வார்த்தையாகிய வேதத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதை நிறைவேற்றுவது நமது பொறுப்பு. இந்த இரண்டாம் பாகத்தை நாம் விட்டுவிட்டு, தேவனின் முதல் பகுதியைக் (இரகசிய சித்தத்தை) கண்டுபிடிக்கவும் அறிந்துகொள்ளவும் நாம் முயற்சி செய்கிறோம். ஆனால், வெளிப்படுத்தப்பட்ட அவருடைய சித்தத்தைச் செய்வதில் நாம் விடாமுயற்சியுடன் இல்லாவிட்டால், அவருடைய வெளிப்படுத்தப்படாத சித்தம் நமக்குத் தெரியவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவே, முதலில் தேவனின் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தை முறையாக அறிந்துகொள்ள முயற்சிப்போம்.

நமது தனிப்பட்ட விவகாரங்களில் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதற்கான இரகசியத்தையும் இந்த ஆய்வு நமக்குத் தெரியப்படுத்துகிறது. இதற்கு நான் கொடுக்கப்போகும் குறிப்புகள் எளிமையானதாகத் தோன்றினாலும், அல்லது உங்களுக்குத் தெரிந்த விஷயங்களாக இருந்தாலும், அவற்றைக் கவனத்துடன் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், அவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் நம்முடைய வாழ்வில் எடுக்கக்கூடிய முடிவு, நம்முடைய தனிப்பட்ட தீர்மானங்களில் தேவனுடைய சித்தத்தைக் கண்டறிவதற்கான துல்லியமான வழிகாட்டியாக அமையும். கல்வி, வேலை, திருமணம் போன்ற ஒவ்வொரு தனிப்பட்ட முடிவுகளையும் தேவனின் சித்தப்படி செய்வதற்கான பாதையை நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். எனவே இந்தக் கட்டுரையை விடாமுயற்சியோடும், பொறுமையோடும், ஜெபத்தோடும், கவனத்தோடும் வாசியுங்கள்.


தேவனின் சித்தத்தைக் கண்டறிவதற்கான முக்கியமான கொள்கைகள்

1. இரட்சிப்பைப் பற்றிய தேவனின் சித்தம் "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்" (2 பேதுரு 3:9). பேதுரு, தனது நிருபத்தில் தேவன் தான் முன்குறித்தவர்களைக் குறித்து எழுதுகையில் (1 பேதுரு 1:1,2; 2 பேதுரு 3:12), "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும்" என்பதே தேவனின் சித்தம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். தேவனின் இரட்சிப்பிற்கான இந்தச் சித்தத்திற்குக் கீழ்ப்படியாத எவரும் அவருடைய சித்தத்தைத் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் காண மாட்டார்கள். தேவனுடனான நம்முடைய நல்லுறவுக்கு முதல் படியே இரட்சிப்புதான்.

நீங்கள் மனந்திரும்பி, தேவனுடைய குமாரனை விசுவாசித்து, உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்புக்கொடுக்காவிட்டால், 'எனக்கான தேவனின் சித்தம் என்னவென்று' நீங்கள் தேடுவது வீண். 'இதுவே எனது சித்தம்' என்று தேவன் தெளிவாக வெளிப்படுத்திய இந்த அடிப்படை விஷயத்திற்கு நீங்கள் கீழ்ப்படியவில்லை என்றால், மற்ற விஷயங்களில் அவருடைய சித்தம் என்னவென்று கேட்க உங்களுக்கு எந்தவிதத் தார்மீக உரிமையும் இல்லை. எனவே, அன்பான வாசகரே, நீங்கள் இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளையாக இருந்தால், தேவனுக்கு நன்றி! உங்கள் வாழ்க்கை தேவ சித்தத்தின்படியான வாழ்க்கையே.

2. ஆவியில் நிறைந்திருப்பது தேவனின் சித்தம் "ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாய் இராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து..." (எபேசியர் 5:17,18). தேவ சித்தத்தை அறியாதவர்களை இந்த வசனம் 'மதியற்றவர்கள்' என்கிறது. மேலும் இந்த வசனப் பகுதியில் தேவ சித்தம் என்று சொல்லப்பட்டது என்ன? நாம் ஆவியானவரால் நிரப்பப்பட வேண்டும் என்பதே இங்கு வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சித்தம். இது தேவனின் இரட்சிப்பின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம். ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் இரட்சிக்கப்பட்டவர்களில் மட்டுமே வாசம் செய்வார்.

இந்த வாக்கியத்திலிருந்தே அதன் அர்த்தம் நமக்குத் தெளிவாகிறது. மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்திருக்க வேண்டும் என்று இங்கு அறிவுறுத்தப்படுகிறது. மதுபானத்தில் நிறைந்துள்ள ஒருவன் தன் கட்டுப்பாட்டை இழந்து, தான் உட்கொண்ட மதுவால் கட்டுப்படுத்தப்படுவான். எபேசியர்கள் கிறிஸ்துவுக்குள் இல்லாதபோது, ​​அவர்களின் மதச் சடங்கில் இப்படிக் குடித்துவிட்டு, தங்களின் சுயநினைவை இழந்து தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று நம்பினார்கள் என்று வரலாறு சொல்கிறது. ஆனால் இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால், இப்போது இரட்சிக்கப்பட்டுள்ள எபேசியர்கள், முன்புபோல் மதுபானத்தால் ஆளுகை செய்யப்படுவதற்குத் தங்களை ஒப்புக்கொடுக்காமல், ஆவியால் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்; அதாவது, தங்களை வழிநடத்துவதற்குப் பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

பாவத்தால் ஆத்துமாவை "துக்கப்படுத்தலாம்"; "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்" (எபேசியர் 4:30). "ஆவியை அவித்துப்போடாதிருங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:19). ஆவியைத் துக்கப்படுத்தாமலும், ஆவியை அவித்துப்போடாமலும் நாம் எப்போதும் பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டிலும் கீழ்ப்படிதலிலும் வாழ வேண்டும் என்பதே தேவனின் சித்தம்.

அப்படியென்றால், பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டில் நடப்பது என்றால் என்ன? இதற்கான பதில் மிகவும் எளிமையானது. பரிசுத்த ஆவியானவர் வேதத்தின் ஆசிரியர். வேதம் அவருடைய மனதின் பிரதிபலிப்பாகும். எனவே வேத வசனங்களுக்குக் கீழ்ப்படிவதும் கட்டுப்படுவதும், ஆவியானவருக்குக் கட்டுப்படுவதற்குச் சமம். எபேசியர் 5:18-ல் ஆவியானவரால் நிரப்பப்பட்டதின் விளைவாகச் சொல்லப்பட்ட காரியங்களும் (சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் பேசுதல், கீழ்ப்படிதல், அன்பான நடத்தை), கொலோசெயர் 3:16-ல் கிறிஸ்துவின் வார்த்தை நம்மில் நிறைவாக இருப்பதின் விளைவாகச் சொல்லப்பட்ட காரியங்களும் ஒன்றாகவே உள்ளன. எனவே, ஆவியில் நிறைந்து வாழ்வதும், வேத வார்த்தையின்படி வாழ்வதும் ஒன்றே; அதுவே தேவனுடைய சித்தம்.

3. பரிசுத்தத்தைப் பற்றிய தேவனுடைய சித்தம் "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து... உங்களில் அவனவன் தன் தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து..." (1 தெசலோனிக்கேயர் 4:3-5). இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் ஆலயமாக மாற்றப்பட்ட ஒரு நபரின் இதயத்தில் பரிசுத்தம் என்கிற நியமம் பொருத்தப்பட்டுள்ளது. அசுத்தத்தை வெறுக்காத ஒரு மனிதன் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்று சந்தேகிக்க எல்லாக் காரணங்களும் உள்ளன.

ஒவ்வொரு இரட்சிக்கப்பட்ட நபரும் பரிசுத்தமாக்கப்படுவதற்கான செயல்முறையைத் தனக்குள்ளே அனுபவிக்கிறான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட புதிய இருதயம், நீதியை விரும்புகிறதும் அக்கிரமத்தை வெறுக்கிறதுமான இருதயம். எனவே, அன்பான வாசகரே, நீங்கள் சரீர இச்சைகளுக்கு எதிராகப் போராடுகிறீர்கள் என்றும், தேவனின் பரிசுத்தத்திற்காக ஏங்குகிறீர்கள் என்றும் நேர்மையாகச் சொல்ல முடிந்தால், தேவனுக்கு நன்றி! உங்கள் வாழ்க்கை தேவ சித்தத்தின்படியான வாழ்க்கை.

4. நமது வாழ்க்கையின் சாட்சிக்கான தேவனின் சித்தம் "நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது" (1 பேதுரு 2:15). "நன்மை செய்கிறதினாலே" என்று குறிப்பிடப்பட்டுள்ள தேவனின் சித்தம், மற்றவர்களுக்கு முன் நாம் காட்டும் நல்ல சாட்சியான வாழ்க்கையைக் குறிக்கிறது. நம்மை அவதூறாகப் பேசுபவர்களின் முன்பாக நல்ல நடத்தை, அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் கீழ்ப்படிதல், சகோதர நேசம், பொறுமை, மன்னிப்பு ஆகியவை இதில் அடங்கும். புறஜாதியார் தேவனின் பெயரை அவமதிக்கச் செய்தால், நாம் தேவனின் இந்தச் சித்தத்திற்குக் கீழ்ப்படியவில்லை என்று அர்த்தம்.

"யார் என்ன சொன்னால் எனக்கு என்ன? இது என் வாழ்க்கை, என் விருப்பம்போல்தான் வாழ்வேன்" என்பவர்கள் இன்னும் தங்களுக்காகச் சுயநலமாக வாழ்கிறார்களே தவிர, கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமையான வாழ்க்கையை வாழவில்லை. எனவே, அன்பான வாசகரே, உன் நல்ல நடத்தையைப் பார்த்து மற்றவர்கள் தேவனைப் போற்றுவதற்கும் மகிமைப்படுத்துவதற்கும் தூண்டப்பட்டால், உங்கள் வாழ்க்கை தேவனின் சித்தப்படியான வாழ்க்கையே.

5. நம்முடைய இருதய மனப்பான்மையைக் குறித்த தேவனுடைய சித்தம் "...எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது" (1 தெசலோனிக்கேயர் 5:15-18).

சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் தேவனில் மகிழ்ச்சியடைவது, நாம் அவரில் மட்டுமே திருப்தி அடைகிறோம் என்பதையும், அவர் இருக்கும்போது வேறு எதையும் விரும்பவில்லை என்ற மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. இடைவிடாமல் ஜெபிப்பது, நாம் நம்முடைய சுயத்தின் மீது சாராமல், முழு மனதுடன் அவரை விசுவாசிப்பதையும் காட்டுகிறது. எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவது, தேவனுடைய கையிலிருந்து வரும் அனைத்தும் நம்முடைய நன்மைக்காகவே கொடுக்கப்படுகிறது என்ற விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட இருதய மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும் என்பதே தேவனின் சித்தம்.


பின்பு என்னைப் பற்றி என்ன?

"இதெல்லாம் சரி, நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எனது தனிப்பட்ட முடிவுகளில்—எனது கல்வி, எனது வேலை, எனது திருமணம் போன்றவற்றில்—தேவனின் சித்தத்தை நான் எவ்வாறு கண்டறிவது என்பது பற்றி எதுவும் கூறவில்லையே? இவையெல்லாம் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள் தானே?" என்று நீங்கள் கேட்கலாம்.

தேவன் தம்முடைய வார்த்தையில் தமது சித்தமாக வெளிப்படுத்திய ஐந்து முக்கிய குறிப்புகளை மேலே பார்த்தோம். பிரியமான வாசகரே, மற்ற காரியங்களில் தேவனின் சித்தத்தை அறிய, முதலில் இந்த ஐந்து கொள்கைகளுக்கு நேராக உங்களை நீங்களே நியாயமாகச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

  1. நீங்கள் உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டீர்களா?

  2. ஆவிக்குரிய ரீதியில், வேதத்திற்கு முரணான அனைத்தையும் சமரசம் செய்யாமல் நிராகரிக்கும் இதயம் உங்களிடம் இருக்கிறதா?

  3. வேசித்தனம், காமம் மற்றும் அசுத்தமான அனைத்தையும் வெறுத்து, பரிசுத்தமான வாழ்க்கை வாழுகிறீர்களா?

  4. மற்றவர்கள் முன்னிலையில் தேவனுக்கு மகிமையைச் சேர்க்கும் நற்சாட்சி உங்களிடம் உள்ளதா?

  5. எல்லாச் சூழ்நிலைகளிலும் கர்த்தருக்குள் மகிழ்ந்து, ஜெபித்து, எல்லாவற்றிலும் நன்றி செலுத்தும் மனப்பான்மை உங்களுக்கு இருக்கிறதா?

இவை அனைத்தும் உங்களில் உண்மையாக இருந்தால், உங்கள் ஆசைகள் உங்கள் சரீர இச்சையினால் அல்ல, தேவனின் ஆவியால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றிச் சொல்லலாம். எனவே, இந்த ஐந்து காரியங்கள் உங்களில் உண்மையாக இருந்தால், உங்கள் தனிப்பட்ட முடிவில் நீங்கள் விரும்புவதுதான் தேவனின் சித்தம்.

இது எங்கள் சொந்த யோசனை அல்ல. "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்" (சங்கீதம் 37:4) என்று தேவனுடைய வார்த்தை தெளிவாக அறிவிக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து கோட்பாடுகள் "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு" என்ற வார்த்தையின் முழுமையான விளக்கத்தை வழங்குகின்றன. இப்படியாக வாழ்பவரின் உள்ளத்தின் வேண்டுதல்கள் அனைத்தும் கண்டிப்பாகத் தேவ சித்தமே!

கவனிக்கவும், "யார் என்ன வேண்டினாலும் அதுவே தேவ சித்தம்" என்று நான் சொல்லவில்லை. சில நிபந்தனைகள் பொருந்தும். யாருடைய வாழ்வில் வேதத்தின்படியான இந்த ஐந்து கொள்கைகள் அனுபவரீதியாகவும் உண்மையாகவும் இருக்கிறதோ, அவர்களுடைய வேண்டுதல்கள் தேவனுடைய சித்தத்தின்படி இருக்கும் என்று நான் சொல்கிறேன்.

ஆகவே, நான் என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் போன்றவற்றில், நான் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்றால், என் இதயம் விரும்புவதும் வேண்டுவதும் தேவ சித்தமே; ஆதலால் அவற்றை அவர் நிறைவேற்றுகிறார்.

முடிக்கும் முன் ஒரு முக்கியமான எச்சரிக்கை!

"நான் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டுள்ளேன்; மேலே குறிப்பிட்டுள்ள கொள்கைகள் என் வாழ்வில் உள்ளன; எனவே கர்த்தரில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தங்களை நினைத்து ஏமாற்றத்திற்கு ஆளான பல கிறிஸ்தவர்கள் உள்ளனர். தேவனுடைய சித்தத்தைக் கண்டறியும் இந்த முறை, அத்தகையவர்கள் தங்கள் சுய விருப்பங்களை நியாயப்படுத்திக்கொள்ளும் வழியாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருப்பவரின் வேண்டுதல்களின் குணாதிசயங்கள், அவர் உண்மையில் கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பதைத் தீர்மானிக்கின்றன:

  1. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவான் (மத்தேயு 6:33): தன் சொந்த ஆசைகளைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்கே கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருப்பவன் சுயநலவாதி. கிறிஸ்துவை விடத் தங்களை அதிகமாக நேசிப்பவர்கள் அவருக்குப் பாத்திரவான்கள் அல்ல.

  2. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்க மாட்டான் (சங்கீதம் 1:1): உதாரணமாக, திருமணத்தில் முடிவெடுக்கும்போது, இரட்சிக்கப்படாத உறவினர்களின் ஆலோசனையைப் பொருட்படுத்தாமல், "நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே" (கலாத்தியர் 1:10) என்ற வசனத்தின்படி தேவனுக்குப் பிரியமான முடிவை எடுப்பான். சாதி, வரதட்சணை போன்ற உலகப்பிரகாரமான காரணங்களால் அவன் உலக மக்களைப்போல் நடந்துகொள்வதில்லை.

  3. இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந்தரிக்க மாட்டான் (ரோமர் 12:2): உதாரணமாக, அரசாங்க வேலை வாய்ப்புக்காகப் போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்துவது (SC சான்றிதழ்களின் பலன்களுக்காகத் தங்களை இந்துக்கள் என்று கூறுவது) போன்ற பாவத்தில் சாய்ந்துவிடாமல், நியாயமான வாய்ப்புக்காகத் தேவனை நோக்கிப் பார்ப்பான். "எகிப்தின் செல்வத்தைவிட கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையே பெரிய பாக்கியம்" (எபி 11:26) என்று கருதுவான்.

அன்புள்ள வாசகரே! தேவனுடைய வசனத்தின் எல்லைக்குள் மட்டுமே தன் சுதந்திரத்தைப் பயன்படுத்துபவனே கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருப்பவன். ஒரு உண்மையான தேவ பிள்ளை தேவனின் சித்தத்தைக் 'கண்டுபிடிப்பான்' என்று சொல்வதைவிட, அவனுடைய இதயத்தின் ஆசைகள் மற்றும் வேண்டுதல்கள் தேவனின் சித்தப்படியே இருக்கும் என்று கூறுவதே சிறந்தது. தேவன் தம்முடைய சித்தத்தின் எண்ணங்களை நம்முடைய இருதயங்களில் உண்டாக்கி, அதை நிறைவேற்றும் வாழ்க்கையை நமக்குத் தந்தருள்வாராக! ஆமென்.