உண்மையான திருச்சபை
படிப்புகள்: 346
Print
ஆசிரியர்: J.C. ரைல் (1816 - 1900)
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 7 நிமிடங்கள்

நீங்கள் உண்மையான திருச்சபையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏனெனில், திருச்சபைக்கு வெளியே இரட்சிப்பு என்பது இல்லை. நீங்கள் ஞாயிற்றுக்கிழமை எங்கே செல்கிறீர்கள் என்று நான் கேட்கவில்லை; “நீங்கள் அந்த உண்மையான திருச்சபையைச் சேர்ந்தவரா?” என்பதை மட்டுமே நான் கேட்கிறேன்.

“அந்த ஒரு உண்மையான திருச்சபை எங்கே இருக்கிறது? அது என்ன? அதை அறிந்துகொள்ளக்கூடிய அடையாளங்கள் என்ன?” என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் கவனத்தைத் தாருங்கள், நான் உங்களுக்குச் சில பதில்களைத் தருகிறேன்.

அந்த ஒரு உண்மையான திருச்சபை, கர்த்தராகிய இயேசுவிலுள்ள அனைத்து விசுவாசிகளாலும் ஆனது. இது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அனைத்து மக்களாலும்—மனந்திரும்பின அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களாலும்—அனைத்து உண்மையான கிறிஸ்தவர்களாலும் ஆனது. எவரில் பிதாவாகிய தேவனுடைய முன்குறித்தலும், குமாரனாகிய தேவனுடைய இரத்தம் தெளிக்கப்படுதலும், பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய பரிசுத்தமாக்குதலின் பணியும் காணப்படுகிறதோ, அந்த நபரே கிறிஸ்துவின் உண்மையான திருச்சபையின் அங்கத்தினராக இருப்பார்.

இந்தத் திருச்சபையின் அனைத்து அங்கத்தினர்களும் ஒரே விதமான அடையாளங்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்கள்; அவர்கள் அனைவரும் “தேவனை நோக்கி மனந்திரும்பினவர்கள், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தினால் கிட்டிச் சேர்ந்தவர்கள்.” அவர்கள் பரிசுத்தமான வாழ்க்கையையும், தூய பேச்சையும் கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தை வெறுத்து, கிறிஸ்துவை நேசிப்பார்கள். பல்வேறு நாகரிகங்களுக்கு அப்பால், அவர்கள் வித்தியாசமான ஆராதனை முறைகளைக் கொண்டிருக்கலாம். சிலர் ஒரு ஜெபப் புத்தகத்தின் உதவியோடு ஆராதிக்கிறார்கள், சிலர் அவ்விதமான முறைகள் எதுவும் இல்லாமல் ஆராதிக்கிறார்கள்; சிலர் முழங்காலிட்டு ஆராதிக்கிறார்கள், சிலர் நின்றுகொண்டு ஆராதிக்கிறார்கள்; ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே இருதயத்தோடு ஆராதிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆவியினால் வழிநடத்தப்படுகிறார்கள்; அவர்கள் அனைவரும் ஒரே அஸ்திபாரத்தின்மேல் கட்டப்படுகிறார்கள்; அவர்கள் அனைவரும் தங்கள் மார்க்கப் பக்திக்கு ஆதாரமாக ஒரு ஒற்றைப் புத்தகத்தின் பக்கமே ஈர்க்கப்படுகிறார்கள், அதுதான் பரிசுத்த வேதாகமம். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே பெரிய மையத்திற்கு வருகிறார்கள், அவரே இயேசு கிறிஸ்து. அவர்கள் அனைவரும் இப்பொழுதும் ஒரே இருதயத்தோடு “தேவனுக்கு மகிமை உண்டாவதாக” என்கிறார்கள், அவர்கள் அனைவரும் ஒரே இருதயத்தோடும், ஒரே சத்தத்தோடும் “ஆமென், ஆமென்” என்று சொல்லுகிறார்கள்.

அந்த ஒரு திருச்சபை இந்த பூமியில் எந்தவொரு ஊழியக்காரர்களையும் சார்ந்ததல்ல. திருச்சபை விசுவாசிகளுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பவர்கள் அதிகமாய் மதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையே. ஆனாலும், விசுவாசிகளின் ஜீவன் சபை அங்கத்துவத்திலோ, ஞானஸ்நானத்திலோ, கர்த்தருடைய பந்தியிலோ இல்லை. இவையெல்லாம் கடைபிடிக்கப்படும்போது மதிக்கப்பட வேண்டியவைதான். ஆனால், இந்தத் திருச்சபை அங்கத்தினர்களுக்கு ஒரே தலையும், ஒரே மேய்ப்பனும், ஒரே பிரதான போதகரும் உண்டு; அவர்தான் இயேசு கிறிஸ்து. கிறிஸ்துவினால் மட்டுமே, ஆவியானவரால் மட்டுமே இந்தத் திருச்சபையில் அங்கத்தினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஊழியக்காரர்கள் வாசலைக் காட்ட மட்டுமே முடியும். அவர் வாசலைத் திறக்கும் வரை, இந்த பூமியில் ஒரு மனிதனும் அதைத் திறக்க முடியாது; ஒருவேளை அவர்கள் பேராயராக (Bishop) இருந்தாலும், அல்லது போதகராக இருந்தாலும், உதவியாளராக இருந்தாலும் அது அவர்களால் முடியாது. ஒரு மனிதன் மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசிக்கும் அந்தத் தருணமே இந்தத் திருச்சபையின் அங்கத்தினராக மாறுகிறான். ஒரு சிறைச்சாலைக் கைதியைப் போல, அவர்கள் ஞானஸ்நானம் பெற எந்தவொரு வாய்ப்பும் இல்லாமலும் இருக்கலாம்; ஆனாலும் அவர்கள் தண்ணீரினால் பெறும் ஞானஸ்நானத்தை விட மேலான, பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறார்கள். ஒருவேளை அவர்கள் கர்த்தருடைய பந்தியில் அப்பமும் திராட்சரசமும் பெற முடியாமல் போகலாம்; ஆனால் அவர்கள் விசுவாசத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் சரீரத்தைப் புசித்தும், கிறிஸ்துவின் இரத்தத்தைப் பானம்பண்ணியும் வருகிறார்கள். அதை இந்த பூமியில் ஒரு ஊழியக்காரனும் தடுக்க முடியாது. ஒருவேளை அவர்கள் நியமிக்கப்பட்ட போதகரால் ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் சபையிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம்; திருச்சபையின் ஐக்கியத்திலிருந்து புறம்பே தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த உலகில் உள்ள எந்தச் சபை அதிகாரிகளாலும் அவர்களை உண்மையான திருச்சபையிலிருந்து வெளியேற்ற முடியாது.

இந்த ஒரு திருச்சபை ஏற்கனவே இருக்கும் எந்தவொரு பூமிக்குரிய அமைப்புகளையும் சார்ந்ததல்ல. உதாரணமாக, ஆலயக் கட்டிடங்கள், பிரசங்க பீடங்கள், நன்கொடைகள், பணம், அரசாங்கங்கள், சட்டங்கள் அல்லது மனிதனால் உண்டாகும் எந்த நன்மையையும் சார்ந்ததல்ல. இந்தக் காரியங்கள் அனைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்டாலும் அது தொடர்ந்து வாழும். மேலும் வனாந்தரங்களிலோ, கூடாரங்களிலோ அல்லது பூமியின் குகைகளிலோ தள்ளப்பட்டாலும் அவை நிலைத்திருக்கும். இந்தத் திருச்சபையானது கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தால் மட்டுமே நிலைத்திருக்கிறது. அவர்கள் எப்பொழுதும் அதனுடன் இருப்பதால் இந்தத் திருச்சபை மரித்துப்போவதில்லை.

தற்போதைய மதிப்பு, சிலாக்கியங்கள் மற்றும் எதிர்கால மகிமையின் வாக்குறுதிகள் என அனைத்திற்கும் உரியதான வேதப்பூர்வமான திருச்சபை இதுவே. இது கிறிஸ்துவின் சரீரம்; இது கிறிஸ்துவின் மந்தை; இது விசுவாச வீடு; இது தேவனுடைய குடும்பம்; இது தேவனுடைய கட்டிடம்; தேவன் இட்ட அஸ்திபாரம்; பரிசுத்த ஆவியின் ஆலயம். இது பரலோகத்தில் பெயர் எழுதப்பட்ட முதற்பேறானவர்களின் சபை; இது ராஜரீக ஆசாரியக் கூட்டம், தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, அவருக்குச் சொந்தமான ஜனங்கள், கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர்கள், தேவனுடைய வாசஸ்தலம், உலகத்தின் ஒளி, பூமியின் உப்பு. இதுவே அப்போஸ்தலர்களின் நம்பிக்கையாகிய “பரிசுத்த உலகளாவிய திருச்சபை”; இதுவே கர்த்தராகிய இயேசு, “நரகத்தின் வாசல்கள் இதை மேற்கொள்வதில்லை” என்றும் “உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே இருப்பேன்” (மத்தேயு 16:18; 28:20) என்றும் வாக்களித்த திருச்சபை.

இது உண்மையான ஒற்றுமையைக் கொண்ட ஒரே திருச்சபை. இந்தச் சபையின் அங்கத்தினர்கள் தங்கள் விசுவாசத்தின் அடிப்படைக் காரியங்கள் அனைத்திலும் உடன்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் அனைவரும் ஒரே ஆவியினால் போதிக்கப்படுகிறார்கள். தேவன், கிறிஸ்து, பரிசுத்த ஆவி, பாவம், தங்களுடைய சொந்த இருதயம், விசுவாசம், மனந்திரும்புதல், பரிசுத்தத்தின் அவசியம், வேதத்தின் மதிப்பு, ஜெபத்தின் முக்கியத்துவம், உயிர்த்தெழுதல், வரப்போகிற நியாயத்தீர்ப்பு என இவை அனைத்திலும் அவர்கள் ஒரே சிந்தையோடு இருக்கிறார்கள். அவர்களில் மூன்று அல்லது நான்கு பேரை, ஒருவருக்கொருவர் முற்றிலும் அறிமுகமில்லாதவர்களாக, பூமியின் தொலைதூர மூலைகளிலிருந்து அழைத்து வாருங்கள்; மேற்கண்ட காரியங்களில் அவர்களைத் தனித்தனியாகப் பரிசோதித்துப் பாருங்கள்; அவர்கள் அனைவரும் ஒரே விதமாகச் சிந்திப்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம்.

இது உண்மையான பரிசுத்தத்தைக் கொண்ட ஒரே திருச்சபை. அதன் அங்கத்தினர்கள் அனைவரும் பரிசுத்தவான்கள். அவர்கள் தொழிலில் மாத்திரமல்ல, பெயரளவில் மாத்திரமல்ல, அவர்கள் நற்கிரியைகள் செய்வதிலும் பரிசுத்தமானவர்கள்; அவர்கள் அனைவரும் தங்கள் செயலிலும், பேச்சிலும், நிஜத்திலும், வாழ்விலும், உண்மையிலும் பரிசுத்தமானவர்கள். அவர்கள் அனைவரும் ஏறக்குறைய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாறுகிறார்கள். பரிசுத்தமற்ற ஒரு நபரும் இந்தத் திருச்சபைக்குச் சொந்தமானவன் அல்ல.

இது உண்மையான உலகளாவிய ஒரே திருச்சபை. இது எந்தவொரு தனிப்பட்ட தேசத்துக்கோ அல்லது மக்களுக்கோ உரிய திருச்சபை அல்ல. சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு விசுவாசிக்கப்படும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இதன் அங்கத்தினர்கள் காணப்படுகிறார்கள். இது எந்தவொரு நாட்டின் எல்லைக்குள்ளும் மட்டுப்படுத்தப்படவில்லை; அல்லது ஒரு குறிப்பிட்ட சாதிக்குள்ளோ, வெளிப்புற அரசாங்கத்தினாலோ அடைத்து வைக்கப்படவில்லை. இதில் யூதர்கள், கிரேக்கர்கள், கறுப்பின மக்கள், வெள்ளையின மக்கள் என வித்தியாசங்கள் ஏதுமில்லை; கிறிஸ்துவின் மீதான விசுவாசம் மட்டுமே இதன் சாராம்சமாகும். இதன் அங்கத்தினர்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளிலிருந்து ஒன்று சேர்க்கப்பட்டு, ஒவ்வொரு கோத்திரத்திலும் பாஷைக்காரரிலும் இருப்பார்கள்; ஆனால் அவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவுக்குள் இருப்பார்கள்.

இது உண்மையான அப்போஸ்தலிக்க ஒரே திருச்சபை. இது அப்போஸ்தலர்களால் போடப்பட்ட அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் பிரசங்கித்த உபதேசங்களைக் கொண்டுள்ளது. இந்தச் சபையின் அங்கத்தினர்கள் இரண்டு பெரிய குறிக்கோள்களைக் கொண்டுள்ளனர்: அப்போஸ்தலர்களின் விசுவாசம் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றைக் கடைபிடிப்பதே அது. இந்த இரண்டு பெரிய குறிக்கோள்களைக் கொண்டிராமல் அப்போஸ்தலர்களைப் பின்பற்றுவதைப் பற்றிப் பேசுகிற மனிதன், சத்தமிடுகிற வெண்கலத்தையும் ஓசையிடுகிற கைத்தாளத்தையும் விட மேலானவன் அல்ல.

இது இறுதிவரை நிலைத்திருக்கும் ஒரே திருச்சபை. எதுவும் இதை முற்றிலுமாக வீழ்த்தி அழிக்க முடியாது. இதன் அங்கத்தினர்கள் துன்புறுத்தப்படலாம், ஒடுக்கப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம், அடிக்கப்படலாம், தலை துண்டிக்கப்படலாம், எரிக்கப்படலாம்; ஆனால் உண்மையான திருச்சபையை முற்றிலுமாக அழிக்க முடியாது. அது தன் உபத்திரவங்களிலிருந்து மீண்டு எழுகிறது; அது அக்கினி மற்றும் தண்ணீரினூடே வாழுகிறது. ஒரு தேசத்தில் நசுக்கப்படும்போது அது மற்றொரு தேசத்தில் துளிர்விடும். பார்வோன்கள், ஏரோதுக்கள், நீரோக்கள், இரத்தம் சிந்தும் மேரிகள் (Bloody Marys) போன்றோர் இந்தத் திருச்சபையை வீழ்த்துவதற்கு வீணாக உழைக்கிறார்கள்; அவர்கள் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுவிட்டுத் தங்கள் இடத்திற்குச் செல்கிறார்கள். ஆனால் உண்மையான திருச்சபை அவர்கள் எல்லோரையும்விட அதிகாலம் வாழுகிறது, மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் புதைக்கப்படுவதைக் காண்கிறது. இந்த உலகில் பல சுத்தியல்களை உடைத்த பட்டடை (Anvil) இது; இது இன்னும் பல சுத்தியல்களை உடைக்கும்; இது அக்கினியில் வெந்துகொண்டிருந்தும், இன்னும் எரிந்துபோகாத முட்செடி.

இது ஒரு அங்கத்தினரும் கெட்டுப்போகாத ஒரே திருச்சபை. இந்தத் திருச்சபையில் ஒருமுறை பெயர் எழுதப்பட்டுவிட்டால், அந்தப் பாவிகள் நித்தியத்திற்கும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்; அவர்கள் ஒருபோதும் வெளியே எறியப்படுவதில்லை. பிதாவாகிய தேவனுடைய முன்குறித்தலும், குமாரனாகிய தேவனுடைய இடைவிடாத பரிந்துரைத்தலும், பரிசுத்த ஆவியானவருடைய அனுதின புதுப்பிக்கும் மற்றும் பரிசுத்தப்படுத்தும் வல்லமையும், ஒரு தோட்டத்தைச் சுற்றியுள்ள வேலியைப் போல அவர்களைச் சூழ்ந்துகொள்கிறது. கிறிஸ்துவுக்குள் பிறந்த ஒருவரும் சிதைக்கப்பட முடியாது. கிறிஸ்துவின் மந்தையின் ஒரு ஆட்டுக்குட்டியும் அவர் கையிலிருந்து பறிக்கப்படுவதில்லை.

இந்த பூமியில் கிறிஸ்துவின் வேலையைச் செய்யும் திருச்சபை இதுவே. இதன் அங்கத்தினர்கள் ஒரு ‘சிறுமந்தை’; உலகத்தின் பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். இங்கே ஒன்று அல்லது இரண்டு பேர், அங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என, ஒவ்வொரு சபையிலும் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். ஆனால் இவர்கள்தான் உலகத்தை அசைக்கிறவர்கள்; இவர்கள் தங்கள் ஜெபங்களால் ராஜ்ஜியங்களின் நிலைகளை மாற்றுகிறார்கள். தூய்மையான சத்திய அறிவைப் பரப்புவதில், மாசற்றவர்களாகவும் வைராக்கியம் உள்ளவர்களாகவும் செயல்படும் வேலையாட்கள் இவர்கள்தான்; இவர்களே ஒரு தேசத்தின் உயிர்நாடி, கவசம், பாதுகாப்பு மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் தேசத்திற்கு ஆதரவு.

இதுவே முடிவில் உண்மையிலேயே மகிமை வாய்ந்ததாக இருக்கும் திருச்சபை. பூமிக்குரிய மகிமை அனைத்தும் அழிந்துபோகும்போது, இந்தத் திருச்சபை பிதாவாகிய தேவனுடைய சிம்மாசனத்தின் முன் களங்கமின்றி நிறுத்தப்படும். பூமியில் உள்ள சிம்மாசனங்கள், அதிபதிகள், அதிகாரங்கள், கௌரவங்கள், பதவிகள் மற்றும் செல்வங்கள் அனைத்தும் இல்லாமல் போகும். ஆனால் முதற்பேறானவர்களின் திருச்சபை கடைசியில் பிரகாசிக்கும்; கிறிஸ்து தோன்றும் நாளில் பிதாவின் சிம்மாசனத்திற்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாகும். தேவனுடைய ஆபரணங்கள் ஆயத்தமாக்கப்பட்டு, தேவனுடைய குமாரன் வெளிப்படும்போது எபிஸ்கோப்பல், பிரஸ்பிடீரியன் மற்றும் பாப்டிஸ்டுகள் என்றெல்லாம் குறிப்பிடப்படாது; ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் திருச்சபை’ என்ற ஒரே திருச்சபை மட்டுமே அங்கே பெயரிடப்படும்.

அன்பான வாசகர்களே, ஒரு மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமானால் அவர் சேர்ந்திருக்க வேண்டிய உண்மையான திருச்சபை இதுதான். நீங்கள் இன்னும் இந்தத் திருச்சபையில் சேராதவராக இருந்தால், நீங்கள் இழந்துபோன ஆத்துமாவை விட மேலானவர் அல்ல. உங்களிடம் மதத்தின் அடையாளமும், உமியும், தோலும், ஓடும் இருக்கலாம்; ஆனால் சாராம்சமும் ஜீவனும் உங்களிடம் இல்லை. ஆம், உங்களிடம் எண்ணிக்கையற்ற வெளிப்புறமான சிலாக்கியங்கள் இருக்கலாம்: நீங்கள் பெரிய ஒளியையும் அறிவையும் பெற்றிருக்கலாம்; ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் சரீரத்தைச் சேராதவராக இருந்தால், உங்கள் ஒளியும், அறிவும், சிலாக்கியங்களும் உங்கள் ஆத்துமாவைக் காப்பாற்றாது. இந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு ஐயோ! சிலர் இந்தத் திருச்சபையிலோ அல்லது அந்தத் திருச்சபையிலோ சேர்ந்து, சடங்குகளைக் கடைபிடித்துவிட்டு, இதனால் தங்கள் ஆத்துமா பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். இது ஒரு முழுமையான மாயை; இது மிகப்பெரிய தவறு. இஸ்ரவேலர் என்று அழைக்கப்படும் அனைவரும் இஸ்ரவேலர் அல்ல; மேலும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் அனைவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்கள் அல்ல. இதைக்குறித்துக் கொள்ளுங்கள்: நீங்கள் ஒரு உறுதியான பாப்டிஸ்டாகவோ, பிரஸ்பிடீரியனாகவோ, தனிச்சபைக்காரராகவோ, சகோதரர் சபையைச் சார்ந்தவராகவோ, இன்னும் வேறெந்தப் பிரிவைச் சார்ந்தவராகவோ இருக்கலாம்; ஆனால் நீங்கள் உண்மையான திருச்சபையைச் சேராதவராக இருக்கலாம். நீங்கள் அவ்வாறு இல்லாவிட்டால், நீங்கள் பிறக்காமல் இருந்திருந்தாலே உங்களுக்கு நலமாயிருக்கும்.