ஜெபத்தின் தங்க திறவுகோல்
படிப்புகள்: 362
Print
ஆசிரியர்: சார்லஸ்.H ஸ்பர்ஜன் (1834 - 1892)
தமிழாக்கம்: சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை சேலம்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" (எரேமியா 33:3)

இந்த வார்த்தையானது எரேமியா தீர்க்கதரிசி இருண்ட சிறையில் அடைபட்டிருந்தபோது, தேவனால் கொடுக்கப்பட்டது. ஒரு சிறைச்சாலையில் அடைபட்டிருந்த தேவ ஊழியனுக்கு, இது மகிழ்ச்சியையும் நம்பிக்கையின் பிரகாசத்தையும் கொடுக்கிறதாயிருந்தது. உன்னதமாக எழுதப்பட்ட அநேக புத்தகங்கள் சிறைச்சாலையிலிருந்து உருவானவைகளாய் இருக்கின்றன. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ஜான் பனியன் எழுதிய "மோட்சப் பிரயாணம்" என்ற புத்தகத்தை நாம் சொல்லலாம்.

தேவனுடைய மக்கள் தங்களுடைய இக்கட்டான வேளைகளில்தான் தேவனின் மிகச்சிறந்தவைகளைக் கண்டிருக்கின்றார்கள். தேவன் எப்பொழுதும் நல்லவராகவே இருக்கிறார்; ஆனாலும் தம்முடைய மக்களின் இருள் சூழ்ந்த காலங்களில் அவர் மிகச்சிறந்தவைகளை வெளிப்படுத்துகிறார். 'உபத்திரவம்' என்கிற கடலில் மூழ்குகிறவர்கள் விலையேறப்பெற்ற முத்துக்களை எடுத்து வருபவர்களாய் இருந்திருக்கின்றார்கள். நமக்கு உபத்திரவங்கள் பெருகுகையில், அவருடைய ஆறுதலும் கிறிஸ்துவுக்குள் நம்மில் பெருகுகிறதாய் இருக்கிறது. இருண்ட சிறையில் அடைபட்டிருக்கின்ற தேவனுடைய பிள்ளைகள் மகிழ்ச்சியான இந்த வார்த்தையைக் கேட்பார்களாக. பாரப்பட்ட இருதயமும் இந்த மெல்லிய தேவனின் சத்தத்தைக் கேட்கட்டும். இந்த வசனத்தை மூன்று பகுதிகளாகப் பார்க்கவும், தேவ ஆவியானவர் தாமே இந்தச் சத்தியத்தை நமக்கு விளங்கப்பண்ணவும் உதவி செய்வாராக.

முதலாவது, "என்னை நோக்கிக் கூப்பிடு" - அதாவது ஜெபம் கட்டளையிடப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, "நான் உனக்கு உத்தரவு கொடுப்பேன்" - அதாவது பதில் கொடுப்பேன் என்று வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக, “நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" - அதாவது விசுவாசம் உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறது.

1. ஜெபிக்கக் கட்டளையிடப்பட்டிருக்கிறது:

இங்கு ஜெபம் ஓர் ஆலோசனையாகக் கொடுக்கப்படவில்லை, அல்லது "ஜெபித்தால் நன்றாய் இருக்கும்" என்று சொல்லப்படவுமில்லை. ஜெபிக்கும்படியாக அழைப்பு கொடுக்கப்படுகின்றது. உன்னுடைய சொந்த ஆத்துமாவுக்கு நன்மை பயக்கும் தேவனுடைய அன்புக் கட்டளை இது. பொதுவாக மனிதன் ஜெபம் நல்லது என்று அறிந்திருந்தாலும், அதைத் தேடி வராத தன்மையுள்ளவனாக இருக்கிறான். ஆகவேதான் தேவன் இதைத் தம்முடைய கட்டளையாகக் கொடுத்திருக்கிறார். ஏன் தேவன் இதைக் கட்டளையாகக் கொடுக்க வேண்டும்? ஏனென்றால் தேவனை அறிந்தவர்களும், இதைக்காட்டிலும் உலகத்தின் அநேக காரியங்களைத் தேடி ஓடுகிறவர்களாய் இருக்கிறார்கள்.

நாம் தேவனோடு ஜெபத்தில் மன்றாடவும், அவரோடு கொள்ளும் உறவைத் தேடவும் மறந்து விடுகிறோம். தேவ வார்த்தையை வாசித்து, சிந்தித்து, அதை உட்கொள்ளவும் மறந்துவிடுகிறோம். உலகத்திற்கு அநேக மணி நேரங்கள்! ஆனால் கிறிஸ்துவுக்கோ ஒரு சில வினாடிகள்! நமது மிகச்சிறந்த பெலத்தையும் நேரத்தையும் உலகத்திற்குக் கொடுத்துவிட்டு, கிறிஸ்துவுக்குள் பெலனிழந்தவர்களாய், நேரமற்றவர்களாய் காணப்படுகிறோம். ஆகவேதான் "என்னை நோக்கிக் கூப்பிடு" என்று கட்டளை கொடுக்கப்படுகின்றது. நாம் தேவனை நோக்கிக் கூப்பிடுவதைத் தவிர்க்கிறவர்கள் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். "நீ நித்திரை பண்ணுகிறது என்ன? எழுந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்" (யோனா 1:6). இது யோனாவுக்கு மாத்திரமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் எச்சரிக்கையான செய்தி.

நாம் அநேக சமயங்களில் பாவத்தைக் குறித்த உணர்வோடு போராடுகிற இருதயத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றோம் என்று தேவன் அறிந்திருக்கிறார். சாத்தான், "நீ ஏன் ஜெபிக்க வேண்டும்? நீ தேவனிடத்தில் ஜெபிக்க என்ன நம்பிக்கையுண்டு? தேவனிடத்தில் வர உனக்குத் தகுதியில்லை" என்று சொல்லக்கூடும். ஆகவேதான் தேவன் இவ்விதமாக ஒரு கட்டளையை கொடுத்திருக்கிறார். ஏனென்றால் நாம் இவ்விதமான எண்ணங்களோடு ஜெபத்தை விட்டுவிடக்கூடும். தேவன் எனக்குக் கட்டளை கொடுத்திருப்பாரானால், நான் எவ்வளவு தகுதியற்றவனாய் இருந்தாலும் அவருடைய கிருபாசனத்தண்டை கிட்டிச்சேருவேன். "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" என்று அவர் சொல்லியிருக்கிறதின் நிமித்தம், ஜெபிக்க எனக்கு வார்த்தைகள் வரவில்லை என்றாலும், என் சிந்தனைகள் அலைந்து திரிந்தாலும், "கர்த்தாவே, எனக்கு ஜெபிக்கப் போதித்தருளும்" என்று அவரிடத்தில் கெஞ்சிக் கேட்பேன்.

நாம் அடிக்கடி அவிசுவாசக் குழியில் விழுவதினாலும் இந்தக் கட்டளை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவிசுவாசம் மெதுவாக நமது காதுகளில் வந்து, "இந்தக் காரியங்களில் தேவனைத் தேடுவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? இந்தச் சிறிய காரியங்களுக்குக்கூட நீ தேவனைத் தேட வேண்டுமா? வாழ்க்கையின் பல காரியங்களுக்கு நீ ஜெபித்து என்ன பிரயோஜனம்? உனக்கு தேவன் செவிகொடுக்க மாட்டார்! நீ ஒரு பாவி! தேவனிடத்தில் வர உனக்குத் தகுதியில்லை! இது மிகக்கடினம், இது தீர்க்கக்கூடாத பிரச்சினை!" என்று பல சத்தங்களை ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆகவேதான் "என்னை நோக்கிக் கூப்பிடு" என்று தேவன் நம்மை அழைக்கிறார்.

நீ வியாதிப்பட்டிருக்கிறாயா? பரம வைத்தியரை நோக்கிக் கூப்பிடு. உன்னுடைய கால சூழ்நிலைகள் குழப்பமானதாய் காணப்படுகிறதா? மனிதர்களுக்கு முன்பாக நான் சரியான காரியங்களைச் செய்ய முடியாதோ என்று கலங்கி நின்றுகொண்டிருக்கிறாயா? என்னை நோக்கிக் கூப்பிடு! உன்னுடைய பிள்ளைகள் உனக்கு வருத்தத்தைக் கொண்டுவருகிறார்களா? நன்றியில்லாத பிள்ளைகளின் வார்த்தைகள் உன்னை உறுத்துகின்றனவா? உன்னுடைய கவலைகள் ஊசி முனைகளைப்போல உன்னைக் குத்திக்கொண்டு வருகின்றனவா? என்னை நோக்கிக் கூப்பிடு! தேவன் தம்முடைய வார்த்தையில் இவ்விதமாய்ச் சொல்லியிருக்கிறபடியால், அது ஒருக்காலும் மாறாததும், என்றென்றும் நிலைத்திருக்கிறதுமாய் இருக்கிறது. வேதத்தில் பல இடங்களில் ஜெபிக்கும்படியாகக் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுவது நமது ஆத்துமாவிற்கு மிகப் பிரயோஜனமாக இருக்கும்.

"ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு", "அவர் சமூகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்", "கர்த்தர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்", "கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்", "விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்", "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" - இவைகள் அனைத்தையும் என்னால் சொல்லித் தீராது.

பை நிறையக் காணப்படும் முத்துக்களாகிய இவைகளில் இரண்டு அல்லது மூன்று முத்துக்களை எடுத்துக்கொள்ள நான் விரும்புகிறேன். தேவன் தம்முடைய வார்த்தையில் கட்டளை கொடுத்தது மட்டுமல்ல, சில சமயங்களில் தமது ஆவியானவரைக் கொண்டு ஜெபிக்கத் தூண்டுகிறார். இவ்விதமான வேளைகளில், அல்லது ஜெபிக்கும்படியான வாஞ்சையை கர்த்தர் நமக்குக் கொடுக்கும் நேரங்களில், நமது ஜெப வாஞ்சையையும் இரட்டிப்பாக்கிக் கொள்வோம். "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்ற விதமாய், நமக்குக் கொடுக்கப்படும் ஜெப தாகத்தைப் பயன்படுத்திக் கொள்வோம். இந்த நேரங்களில் திரளாய் விதைப்போம், யாக்கோபைப் போல மன்றாடுவோம்; அப்போது இஸ்ரவேல் என்ற பெயரைப் பெறுவோம். பசுமையான இந்த வேளையில் விதைக்கும் விதைப்பு, திரளாய் அறுவடை செய்ய நமக்குக் கிருபையாய் இருக்கும்.

2. ஜெபத்திற்குப் பதிலளிக்கப்படும் என்று வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது:

தேவன் ஜெபத்திற்குப் பதிலளிக்கமாட்டார் என்ற கொடிய அவிசுவாச எண்ணத்திற்கு நாம் ஒரு வினாடியும் இடம்கொடுக்கக் கூடாது. தேவன் கிறிஸ்துவில் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற தன்மைகளை நினைவுகூருவோம். அவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய், அன்புள்ளவராய் தம்மை வெளிப்படுத்தியிருக்கும்பொழுது, தம்மை நோக்கித் தாழ்மையாய் மன்றாடுகிற, அவர் சமூகத்தையும் கிருபையையும் தேடுகிறவர்களுக்கு அவர் எவ்விதம் பதில் அளிக்காமல் இருப்பார்? நம்முடைய கதறலை நினைவுகூர்ந்து பதிலளிக்கக் கூடாதபடிக்கு அவர் அநீதியுள்ளவரும் இரக்கமற்றவரும் அல்லவே!

ஊழியங்களில் நடந்த அநேக காரியங்களைச் சொல்லப்போனால் அவைகள், நிச்சயமாய் தேவன் ஜெபத்திற்கு அளித்த பதில்களே. தேவன் ஒருமுறை இருமுறையல்ல, கணக்கிலடங்காத வேளைகளில் என் ஜெபத்திற்குப் பதில் அளித்திருக்கிறார்.

ஆகவே, எல்லாவற்றிற்கும் தேவன் பதிலளிப்பார் என்ற நிச்சயத்தோடு அவருடைய பாதங்களுக்கு எடுத்துச் செல்லும்போது, மழை எப்படி நிச்சயமாய்ப் பொழியுமோ, அப்படியே ஜெபமும் ஆசீர்வாதத்தைப் பொழிகிறதாய் இருக்கிறது. மன்றாட்டு ஜெபம் வெகுவாய்ப் பெலன் கொடுக்கிறதாய் இருக்கிறது. விதைத்த நான் அநேக முறை அதன் பலனை அறுத்திருக்கிறேன். உங்களுடைய வாழ்க்கையில் தேவன் இவ்விதமாக ஜெபத்தைக் கேட்டுப் பதிலளிக்கவில்லையா? இல்லையென்றால் உங்களின் கிறிஸ்தவ பக்தி என்னவாயிற்று? தேவன் பதிலளிக்கிறார் என்ற நிச்சயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபமானது அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு ஏறெடுக்கப்பட வேண்டும். தேவன் ஜெபத்திற்குப் பதிலளிக்கிறார் என்று சொல்லும்பொழுது, நாம் கேட்பதை அவர் அப்படியே கொடுப்பார் என்றல்ல; எது சிறந்ததோ அதையே அவர் கொடுப்பார். நாம் வெள்ளியைக் கேட்போமானால் அவர் தங்கத்தைக் கொடுப்பார். ஒருவேளை முள்ளை எடுத்துப்போடும் என்று ஜெபிப்போமானால், "என் கிருபை உனக்குப் போதும்" என்று சொல்லுவார். ஆகவே, நம்முடைய ஒவ்வொரு ஜெபத்தையும் "என் சித்தத்தின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்ற உள்ளான உணர்வோடு ஜெபிப்போமாக.

3. விசுவாசத்திற்கான ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது:

"அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிப்பேன்" - இந்த வார்த்தையானது, சிறைச்சாலையில் இருந்த தீர்க்கத்தரிசிக்குக் கற்றுக்கொடுக்கும்படியாக அனுப்பப்பட்ட வார்த்தை என்பதை மறந்துவிட வேண்டாம். ஆகவே தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இது உரியதாகும். தேவனுடைய உன்னத இரகசியங்களை தேவனுக்காக ஜெபத்தில் காத்திருப்பதின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளலாம்.

வேதத்தில் ஓரிடத்தில், "மறைபொருளானவைகளைக் காண்பிப்பேன்" என்று சொல்லப்படுகிறது. மற்றொன்றில் "பெரிய காரியங்களை உனக்குக் காண்பிப்பேன்" என்று சொல்லப்படுகிறது. அருமையான சகோதரரே, கழுகுகளின் கண்கள் காணக்கூடாதவைகளையும், தத்துவங்களால் அறியக்கூடாதவைகளையும் மன்றாட்டு ஜெபத்தின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். மன்றாட்டு ஜெபம் ஒரு கிறிஸ்தவனைக் கர்மேல் பர்வதத்திற்கு அழைத்துச் சென்று, வானத்தை மேகத்தால் நிரப்பவும், பூமியின்மேல் மழையைப் பொழிந்தருளவும் செய்கிறது. மன்றாட்டு ஜெபம், பிஸ்கா மலையின் உச்சிக்கு உன்னை அழைத்துச் சென்று, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சுதந்தரத்தைப் பார்க்கச் செய்கிறது. உன்னைத் தாபோர் மலைக்கு அழைத்துச் சென்று மறுரூபமாக்குகிறது. "நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிப்பேன்" என்ற வாக்குத்தத்தம், பாடுகளின் ஊடாய்க் கடந்து செல்லுகிறவர்களுக்கும் சரியாய்ப் பொருந்தும். எரேமியாவின் சாட்சி இப்படியாகவே இருக்கிறது.

தாவீதின் சாட்சியும், "நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்" (சங்கீதம் 118:5) என்று சொல்லுகிறது. "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய், நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே நமக்குச் செய்ய வல்லவராயிருக்கிறார்".

2 இராஜாக்கள் புத்தகத்தில் விதவையானவள் எலியா தீர்க்கத்தரிசியினிடத்தில் வந்தாள். "என் கணவன் இறந்துபோனான், கடன் கொடுத்தவன் இப்பொழுது என் இரண்டு குமாரர்களையும் அடிமையாக்கிக்கொள்ள வந்தான்" என்றாள். ஒருவேளை எலியா அவளுடைய கடனை அடைத்துவிடுவான் என்று அவள் எண்ணியிருக்கலாம். ஆனால் கடன் அடைத்ததுமல்லாமல், தொடர்ந்து வாழவும் வழி செய்யப்பட்டது. ஜெபம் கேட்பதற்கான ஆசீர்வாதத்தை மாத்திரமல்ல, அதற்கும் மேலாகவும் தேவனால் நமக்குக் கொடுக்கவும் வழிசெய்கிறது.

உங்களுடைய பிள்ளைகளின் இரட்சிப்பிற்காகவும், கணவன், மனைவி மற்றும் மற்றவர்கள் இரட்சிப்பிற்காகவும் ஜெபிக்கிறவர்களே! நாம் கேட்பதற்கும் மேலாக தேவன் செய்கிறார் என்பதை நினைவுகூருங்கள்.

கடந்த நூற்றாண்டில் மிஸ்டர். பெல்லி என்ற தேவ ஊழியனின் தாய், கொடூரமான தன் கணவனுக்காக ஜெபிப்பதில் ஏறக்குறைய நம்பிக்கையை விட்டுவிட்டார்கள். தன்னுடைய மகனுக்காக ஜெபித்தபொழுது, அந்த மகன் பன்னிரண்டு வயதாயிருக்கும்போது இரட்சிக்கப்பட்டான். தாயானவள் குடும்ப ஜெபத்தைத் தன் மகனை நடத்தும்படிக் கேட்டுக்கொண்டாள். குடும்ப ஜெபத்தில் ஒருபோதும் கலந்திராத தன்னுடைய கணவன், அவனுடைய மகன் எப்படிக் குடும்ப ஜெபத்தை நடத்துகிறான் என்று நின்று பார்த்துக்கொண்டிருந்தபொழுது, தேவனால் தொடப்பட்டு இரட்சிக்கப்பட்டான். பிறகு அந்தத் தாயானவள், "என் மகனுக்காக ஜெபித்தேன், ஆனால் தேவனோ என் கணவரையும் இரட்சித்து எனக்குக் கொடுத்தார்" என்று சொல்லக்கூடிய விதத்தில் தேவன் ஆசீர்வதித்தார்.

கீழே கிடக்கும் கொஞ்சம் கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவரப்போன ரூத்துக்கு, அரிக்கட்டுகளின் நடுவே பொறுக்கிக்கொள்ளும்படியாகப் போவாஸினால் அனுமதி கொடுக்கப்பட்டது. பின்பு போவாஸே கணவனாகத் தேவனால் ரூத்துக்குக் கொடுக்கப்பட்டான். "யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்" (யோபு 42:10).

"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்". தேவன் வாக்குத்தத்தத்தோடு தன்னுடைய மாறாத உண்மைத் தன்மையையும் இணைத்திருக்கிறார். முழு இருதயத்தோடும் கிருபையின் கதவைத் தட்டு. நீ எதிர்மறையான பதிலைப் பெறமாட்டாய். நீ கேட்பதற்கும் மேலாக உனக்குச் செய்து, பெரிய காரியங்களை உனக்குக் கட்டளையிடுவார்.

கர்த்தர் தாமே இந்த வார்த்தைகளை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!