ஆண்டவரே, இந்தப் பாவத்தை அழித்தருளும்
படிப்புகள்: 164
Print
ஆசிரியர்: தாமஸ் வாட்சன்
தமிழாக்கம்: கிரேஸ் சீர்திருத்த பாப்டிஸ்ட் சபை - கொல்லிமலை.
வாசிப்பதற்கான நேரம்: 5 நிமிடங்கள்

 நாம் தேவனுடைய வார்த்தையின் பரிசுத்தத்தை நேசிக்கிறோமா? தேவனுடைய வார்த்தை பாவத்தை அடித்து நொறுக்கவும், பரிசுத்தத்தில் வளரவும் பிரசங்கிக்கப்படுகிறது. அதன் ஆவிக்குரிய தன்மைக்காகவும் தூய்மைக்காகவும் நாம் அதை நேசிக்கிறோமா? அநேகர் பிரசங்கிக்கப்படும் வார்த்தையை அதன் அழகிய பேச்சுக்காகவும் கருத்துக்காகவும் மாத்திரம் நேசிக்கிறார்கள். அவர்கள் பிரசங்கத்தைக் கேட்க வருகிறார்கள், ஆனால் இசைக்கச்சேரிக்கு வருவது போல வருகிறார்கள் (எசேக்கியேல் 33:31,32). அல்லது பூக்களைப் பறிப்பதற்கு ஒரு தோட்டத்திற்கு வருவதுபோல வருகிறார்கள்; ஆனால் தங்கள் ஆசைகளையும் இச்சைகளையும் அடக்கவோ, தங்கள் இருதயங்களைச் சுத்தப்படுத்தவோ அல்ல. இவர்கள் முகத்தை மட்டும் அலங்கரிக்கும் மூடப் பெண்களைப்போல, தங்கள் இருதய ஆரோக்கியத்தை அலட்சியம் செய்கிறார்கள்.

தேவ வார்த்தையின் கடிந்துகொள்ளுதலை நாம் நேசிக்கிறோமா? வார்த்தை நமது மனசாட்சியைத் தொட்டு, நமது பாவங்களுக்கு எதிராகக் கண்டன அம்புகளை எய்யும்போது அதை நேசிக்கிறோமா? பிரசங்கியின் கடமை சிலசமயம் கண்டிக்க வேண்டியது. பிரசங்க மேடையில் மென்மையான வார்த்தைகளைப் பேசக்கூடியவன், ஆனால் கண்டிக்கத் தெரியாதவன் - நல்ல கைப்பிடியுள்ள வாள் போன்றவன், ஆனால் கூர்மை இல்லாதவன்! "இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள்" (தீத்து 2:15). ஆணியைச் சுலபமாக இறக்குவதற்கு எண்ணெயில் தோய்த்து அடிப்பது போல, அன்பு என்ற எண்ணெயைக் கொண்டு பாவத்தைக் குறித்துக் கடிந்துகொள்.

இப்பொழுது கிறிஸ்தவனே, தேவனுடைய வார்த்தை உன் பாவத்தைத் தொட்டு “நீயே அந்த மனுஷன்!” என்று சொல்லும்போது - நீ அப்படியாகக் கண்டிக்கும் கடிந்துகொள்ளுதலை நேசிக்கிறாயா? “ஆவியின் பட்டயம்” உன்னையும் உன் ஆசைகளையும் பிரித்தது என்று கர்த்தரை ஸ்தோத்தரிக்க முடியுமா? இதுதான் உண்மையில் கிருபையின் அடையாளம்; நீ தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறவனாய் இருக்கிறாய் என்பதைக் காட்டுகிறது.

ஒரு கெட்ட இருதயம் ஆறுதலான தேவனுடைய வார்த்தையை மட்டும் நேசிக்கிறது, ஆனால் அதனுடைய கடிந்துகொள்ளுதலை நேசிப்பதில்லை: “கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்" (ஆமோஸ் 5:10). அவர்களின் கண்கள் தீயால் மின்னுகின்றன! விஷ ஜீவிகளைப் போல, சிறிது தொட்டாலும் விஷத்தைக் கக்குகின்றன! "இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்" (அப்போஸ்தலர் 7:54). ஸ்தேவான் அவர்கள் பாவங்களைத் தொட்டபோது, அவர்கள் கோபமடைந்து அதைப் பொறுக்க முடியவில்லை.

தேவ வார்த்தையின் கடிந்துகொள்ளுதலை நாம் நேசிக்கிறோம் என்பதை எப்படி அறிவது?

1. இருதயத்தை ஆராயத்தக்கதான ஊழியத்தின் கீழ் உட்கார விரும்பும்போது. எந்த மருந்து வேலை செய்யாதோ, அதைக் குறித்து யார் அக்கறை கொள்வார்கள்? ஒரு தெய்வபக்தியுள்ள மனுஷன் தன் மனசாட்சியை மழுங்கச் செய்கிற ஊழியத்தின் கீழ் உட்கார விருப்பப்பட மாட்டான்.

2. தேவனுடைய வார்த்தை நமது பாவங்களைச் சந்திக்க வேண்டுமென்று நாம் ஜெபிக்கும்போது. நம்முடைய இருதயத்துக்குள் இருக்கும், தேவன் மீதுள்ள விசுவாசத்துக்குத் துரோகம் செய்யும் ஆசை எதுவாக இருந்தாலும், அதைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும்! நாம் பாவத்தை மூடி வைக்க விரும்பாமல், அதைக் குணப்படுத்த விரும்புவோம்.

3. தேவ வார்த்தையாகிய ஆவியின் பட்டயத்திற்கு நமது இருதயத்தைத் திறந்து, “கர்த்தாவே, இந்தப் பாவத்தை அடித்து நொறுக்கும்” என்று சொல்லும்போது.

4. கடிந்துகொள்ளுதலுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கும்போது. "நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை" (சங்கீதம் 141:5). தாவீது, கடிந்துகொள்ளுதலுக்கு மகிழ்ச்சியாயிருந்தான்.

ஒரு மனுஷன் சிங்கத்தின் வாயில் இருந்தால், வேறொருவன் சிங்கத்தைச் சுட்டு அவனை இரட்சித்தால் - அவன் நன்றியுள்ளவனாக இருக்கமாட்டானா? அதுபோல, நாம் சிங்கம் என்கிற பாவத்தின் வாயில் இருக்கும்போது, பிரசங்கி கடிந்துகொண்டு அந்தப் பாவத்தை சுட்டுத்தள்ளினால் - நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கமாட்டோமா?

தேவ வார்த்தையின் கூர்மையான ஈட்டி அவனது பாவத்தின் கொப்புளத்தைத் துளைத்தபோது, ஒரு கிருபையுள்ள ஆத்துமா மகிழ்ச்சியடைகிறது! அவன் கடிந்துகொள்ளுதலைத் தன் காதில் ஒரு அணிகலனாக அணிகிறான்: "கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி" (நீதிமொழிகள் 25:12).

முடிவாக, ஆத்துமாவுக்கு நன்மை செய்வது கடிந்துகொள்ளும் பிரசங்கமே. வசந்த காலத்தின் இனிய மலர்களுக்குக் கடுமையான பனித்துளி வழிவகுப்பது போலவே, கூர்மையான ஒரு கடிந்துகொள்ளுதலும் ஆறுதலுக்கு வழிவகுக்கிறது.