ஒரு புதிய படைப்பு
படிப்புகள்: 388
Print
ஆசிரியர்: ஆர்தர் w. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

மீட்புக்கு இரண்டு காரியங்கள் முற்றிலும் அவசியமானவை: முதலாவது, பாவத்தின் குற்ற உணர்விலிருந்தும் அதின் தண்டனையிலிருந்தும் விடுதலை; இரண்டாவது, பாவத்தின் ஆதிக்கத்திலிருந்தும் அதனுடைய இருப்பிலிருந்தும் விடுதலை. முதலாவது, கிறிஸ்துவின் மத்தியஸ்தப் பணியால் பெறப்படுகிறது; இரண்டாவது, பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளால் நிறைவேறுகிறது. முதலாவது, இயேசு கிறிஸ்து தேவனுடைய மக்களுக்காகச் செய்ததின் ஆசீர்வாதமான பலனாகும்; இரண்டாவது, பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய மக்களில் செய்யும் மகத்தான செயலின் விளைவாகும்.

முதலாவதாக, ஒருவன் தன்னைத் தாழ்த்தி, கிறிஸ்துவை விசுவாசத்தோடுப் பற்றிக்கொள்ளும்போது அவனுக்கு விடுதலை கிடைக்கிறது; அப்போது தேவன் அவனை எல்லாவற்றிலிருந்தும் நீதிமானாக்கி, நடுக்கத்தோடும் மனந்திரும்புதலோடும் விசுவாசிக்கிற பாவியாகிய அவனை முழுமையாக மன்னிக்கிறார். இரண்டாவதாக, மறுபிறப்பு, பரிசுத்தமாக்கப்படுதல் மற்றும் மகிமைப்படுத்தப்படுதல் ஆகிய தெய்வீக ஆசீர்வாதங்கள் அவனுடைய வாழ்க்கையில் படிப்படியாக, வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்கின்றன. மறுபிறப்பில், பாவம் மரண காயத்தைப் பெறுகிறதேயன்றி, முழுமையாக மரிப்பதில்லை. பரிசுத்தமாக்கப்படுதலில், புதுப்பிக்கப்பட்ட ஆத்துமா தன்னுள் இருக்கும் அசுத்தத்தின் ஆழத்தைப் பார்க்கிறது; மேலும் தன்னை வெறுக்கவும் பகைக்கவும் கற்றுக்கொள்கிறது. மகிமைப்படுத்தப்படுதலில், ஆத்துமா, சரீரம் ஆகிய இரண்டும் பாவத்தின் ஒவ்வொரு அடையாளத்திலிருந்தும், அதின் விளைவிலிருந்தும் என்றென்றுமாக விடுவிக்கப்படுகின்றன.

மறுபிறப்பு இல்லாமல் எந்த ஆத்துமாவும் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஆவிக்குரிய காரியங்களை நேசிக்க, ஒருவர் ஆவிக்குரியவராக மாற வேண்டும். ஜென்ம சுபாவமுள்ள மனிதன் அவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவற்றின் போதனையின் சரியான கருத்தைத் தெரிந்திருக்கலாம்; ஆனால் அவற்றை நேசிக்க முடியாது (2 தெசலோனிகேயர் 2:10). அவற்றில் தனக்கான மகிழ்ச்சியைக் கண்டுகொள்ளவும் முடியாது. தேவனுடன் வாழ்ந்து, அவருடைய பிரசன்னத்தில் நித்திய மகிழ்ச்சியை அனுபவிக்க, மனிதனுக்குள் அவனுடைய பாவத்திலிருந்து அவனைப் பரிசுத்தமாக்கக்கூடிய ஒரு அடிப்படை மாற்றம் நிகழ வேண்டும்; அந்த மாற்றம் இந்த பூமியிலேயே நிகழ வேண்டும்.

தன் வாழ்நாள் முழுவதையும் பாவத்தில், அதாவது சுயதிருப்தியில் செலவழித்தவன், எவ்வாறு பரிசுத்தத்தின் உலகிற்குள் பிரவேசிக்க முடியும்? ஆட்டுக்குட்டியானவரின் பாடலுக்கு அவனது இதயம் இசையாதிருக்க, அவன் எப்படி ஆட்டுக்குட்டியானவரின் பாடலைப் பாட முடியும்? விசுவாசக் கண்ணாடியின் வழியாக மங்கலாகக் கூட தேவனைப் பார்க்காதவன், தேவனுடைய பயங்கரமான மகிமையை நேருக்கு நேர் எவ்வாறு தாங்க முடியும்? நீண்ட நாட்கள் இருளில் மூழ்கியிருந்த கண்களை, நண்பகல் சூரியனின் பிரகாசமான கதிர்கள் திடீரென தாக்கும்போது அது கடுமையான வேதனையை உண்டாக்குவதுப் போல, மறுபிறப்படையாதவன் ஒளியாக இருக்கிறவரைக் காணும்போது இருக்கும்.

அத்தகைய காட்சியை வரவேற்பதற்குப் பதிலாக, “பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்” (வெளிப்படுத்தல் 1:7). ஆம், அவர்களின் வேதனை அதிகமாக இருக்கும்; அவர்கள் மலைகளையும் பாறைகளையும் நோக்கி: “நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும்?” (வெளிப்படுத்தல் 6:16-17) என்று கூறுவார்கள். என் அன்பு வாசகரே, தேவன் உங்களுக்கு மறுபிறப்பை அருளாவிட்டால் இதுவே உங்களின் நிலையாக இருக்கும்.

மறுபிறப்பு நிகழ்வதென்பது, வீழ்ச்சியின்போது நடந்தவற்றிற்குத் தலைகீழான நிகழ்வாகும். மீண்டும் பிறந்தவர், கிறிஸ்துவின் மூலமாகவும், பரிசுத்த ஆவியின் செயல்பாட்டின் மூலமாகவும், தேவனுடனான ஐக்கியத்திற்கும் உறவிற்கும் மீட்டெடுக்கப்படுகிறார். முன்பு ஆவிக்குரிய ரீதியாக மரித்திருந்தவர், இப்போது ஆவிக்குரிய ரீதியாக உயிர்ப்பிக்கப்படுகிறார் (யோவான் 5:24). ஆவிக்குரிய மரணம் ஒரு தீய கொள்கையின் நுழைவால் ஏற்பட்டதைப் போல, ஆவிக்குரிய வாழ்க்கை ஒரு பரிசுத்த கொள்கையின் அறிமுகமாகும். தேவன் ஒரு புதிய கொள்கையை, பாவத்தைப் போலவே உண்மையானதும் வலிமையானதுமான ஒரு கொள்கையை அவனுக்கு அளிக்கிறார். தெய்வீகக் கிருபை இப்போது வழங்கப்படுகிறது. ஒரு பரிசுத்தமான சுபாவம் அவனுடைய ஆத்துமாவில் கொடுக்கப்படுகிறது. உள்ளான மனிதனுக்கு ஒரு புதிய ஆவிக்குரிய மனநிலை அளிக்கப்படுகிறது. ஆனால் அவனுக்குள் புதிய திறன்கள் உருவாக்கப்படுவதில்லை; மாறாக, அவனுள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள் வளப்படுத்தப்படுகின்றன, உயர்த்தப்படுகின்றன மற்றும் வலுவூட்டப்படுகின்றன.

மறுபிறப்பைப் பெற்றவன் “கிறிஸ்து இயேசுவில் ஒரு புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்” (2 கொரிந்தியர் 5:17). இது உங்களில் உண்மையாக இருக்கிறதா? நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய சந்நிதானத்தில் இந்தக் கேள்விகளால் நம்மைச் சோதித்து அறிவோமாக. பாவத்தைக் குறித்து என் இதயம் எவ்வாறு உணருகிறது? அதற்கு அடிபணிந்த பிறகு ஆழ்ந்த அவமானமும் தெய்வீக துக்கமும் உள்ளதா? அதன் மீது ஒரு மெய்யான வெறுப்பு உள்ளதா? என் மனசாட்சி உண்மையாகவே மென்மையாய் இருக்கிறதா? உலகம் “சிறிய தவறுகள்” அல்லது “சிறிய விஷயங்கள்” என்று அழைக்கும் காரியங்களால் என் சமாதானம் குலைக்கப்படுகிறதா? என்னுள் பெருமையும் சுய விருப்பமும் எழும்போது நான் தாழ்மையடைகிறேனா? என் உள்ளான மனிதனின் கெட்ட காரியங்களை வெறுக்கிறேனா? உலகத்தை நோக்கிய என் பற்றுகள் மரித்துவிட்டனவா? அவை தேவனை நோக்கி உயிருள்ளவைகளாய் இருக்கின்றனவா?

தனிமையான நேரங்களில் என் மனதை எது ஈர்க்கிறது? ஆவிக்குரிய பயிற்சிகள் எனக்கு இனிமையானதும் மகிழ்ச்சியானதுமாக உள்ளதா? அல்லது சுமையானதும் சோர்வானதுமாக உள்ளதா? “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங்கீதம் 119:103) என்று நான் உண்மையாகச் சொல்ல முடியுமா? தேவனுடனான உறவு எனக்கு உயர்ந்த மகிழ்ச்சியைத் தருகிறதா? தேவனுடைய மகிமை இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் புனிதமானதா?