தேவனோடு நமக்குள்ள நீதியும் சமாதானமும் பாய்ந்தோடி வரக்கூடிய அந்த கன்மலையை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. தன்னிடமுள்ள நற்காரியங்களால் ஒரு உண்மையான கிறிஸ்தவன் நீதிமானாக முடியாது. ஒருவன் தானாகச் செய்யும் எந்த ஒரு காரியத்தாலும் அவனுடைய சமாதானத்தை அவன் கண்டுகொள்ள முடியாது.
அவனுடைய ஜெபத்தினாலோ, பழக்கவழக்கங்களாலோ, மனந்திரும்புதலினாலோ, தன்னைச் சீர்ப்படுத்திக் கொள்வதாலோ, நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தினாலோ அல்லது அவனுடைய தானதர்மங்கள் மூலமாகவோ சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. இவை அனைத்தின் மூலமாகவும் அவனை நீதிமான் என்று கூறிவிட முடியாது. அவர்களுக்குள்ளாகவே அநேக குறைபாடுகள் இருப்பதால், அவர்களுக்கே மிகப் பெரிய மன்னிப்புத் தேவைப்படுகிறது. அவனை நீதிமானாக்கிக்கொள்ள அவனிடம் எந்த ஒரு காரியமும் இல்லை. தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் தரத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், 'நல்லவன்' என்று சொல்லக்கூடிய ஒரு கிறிஸ்தவன், நீதிமானாக்கப்பட்ட ஒரு பாவியைவிடவோ அல்லது மன்னிப்புப் பெற்ற ஒரு குற்றவாளியைவிடவோ உயர்ந்தவன் அல்ல. தகுதி என்று சொல்லிக்கொள்ளவோ, யோக்கியதை பாராட்டவோ அல்லது தேவனுடைய இரக்கத்திற்கு உரிமை கோரவோ அவனிடம் ஒன்றுமில்லை. இவைகளின் மேல் ஒருவன் சார்ந்திருப்பானானால், அவன் மிகவும் பரிதாபமாக ஏமாற்றமடைவான்.
எந்த ஒரு மனிதனும் அவனுடைய கிரியைகளின் மூலமாகத் தேவனுக்கு முன் நீதிமான் என்று சிறிதளவு கூடக் கூறமுடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். மனிதனுக்கு முன்பாக ஒருவனுடைய கிரியைகள் நீதியுள்ளதாகத் தோன்றலாம்; அவன் ஒரு கிறிஸ்தவன் என்பதற்கு அவனுடைய கிரியைகள் சாட்சி பகரலாம். ஆனால், தேவனுக்கு முன்பாக அவன் செய்யும் செய்கைகள் அவனை நீதிமானாக்க முடியாது. அவன் எப்போதும் குறைவுள்ளவனாக, முழுமையற்றவனாக, எட்டவேண்டிய அளவை அடையாதவனாகவே தன் வாழ்நாள் முழுவதும் இருப்பான். அவனுடைய சொந்தக் கிரியைகள் மூலமாக ஒருவன் நீதிமானாகவோ, சமாதானமுள்ளவனாகவோ மாற முடியாது.
அப்படியானால், ஒரு உண்மையான கிறிஸ்தவன் எப்படி நீதிமானாக்கப்படுகிறான்? அவன் அனுபவிக்கும் சமாதானத்திற்கும், 'பாவமன்னிப்பைப் பெற்றுவிட்டேன்' என்ற நிச்சயத்தைப் பெற்று மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் என்ன இரகசியம்? பரிசுத்தமுள்ள தேவன், பாவியான ஒரு மனிதனை 'நல்லவன்' என்று எப்படி ஏற்கிறார் என்பதையும், சூதுவாது நிறைந்த உலகத்தில் இருப்பவனை எப்படிக் கையாள்கிறார் என்பதையும் நாம் எப்படிப் புரிந்துகொள்வது? அவன் அநேக பாவங்களைச் செய்திருந்தாலும் அவனை எப்படி நீதிமான் என்று எண்ண முடியும்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையானது சிறியதாகவும், அதே சமயம் ஆழமானதாகவும் இருக்கிறது: தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே ஒரு உண்மையான கிறிஸ்தவன் நீதிமான் என்று எண்ணப்படுகிறான்.
கிறிஸ்துவின் மரணத்தினாலும், பாவநிவிர்த்தியினாலும் அவன் நீதிமானாக்கப்படுகிறான். "கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்" (1 கொரிந்தியர் 15:3). இதுவே நமக்குப்புரியாத மிகப்பெரிய புதிருக்கான திறவுகோலாக இருக்கிறது. தேவன் எவ்வாறு நீதியுள்ளவர் என்றும், அதே வேளையில் தேவபக்தியற்றவர்களை எப்படி நீதிமான்களாக்குகிறார் என்றும் எழும் பெரிய பிரச்சனை இங்கே தீர்க்கப்படுகிறது. கர்த்தராகிய இயேசுவின் வாழ்க்கையும் மரணமும் இங்கே விளக்கப்பட்டுள்ளது. அவரே நம்முடைய சமாதானக் காரணர் (எபேசியர் 2:14).
உண்மையான ஒரு கிறிஸ்தவனுடைய இடத்தில் கிறிஸ்து நின்றார். அவரே பிணையாளியாகவும், பதிலாளியாகவும் மாறினார். நம்முடைய மீறுதல்களுக்காகவும் பாவங்களுக்காகவும் கிறிஸ்து பாடுபட்டார். அதாவது, அநீதியுள்ளவர்களுக்காக நீதிபரர் பாவமானார். சிலுவையில் நம்முடைய தண்டனைகளை அவர் தம் சரீரத்திலே சகித்தார். நாம் அடையவேண்டிய தேவகோபாக்கினையை அவர் ஏற்றுக்கொண்டார் (1 பேதுரு 3:18).
ஒரு கிறிஸ்தவன் கொடுக்கவேண்டிய கடனைக் கிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தினால் செலுத்திவிட்டார். அவர் அதை எண்ணிப்பார்த்து, தம்முடைய மரணத்தின் மூலமாக வெகுதூரத்திற்கு அகற்றிவிட்டார். தேவன் நீதியுள்ளவராயிருப்பதால், மனிதன் செலுத்தவேண்டிய கடனை இரண்டு முறை (கிறிஸ்துவிடம் ஒருமுறை, மனிதனிடம் ஒருமுறை என) கேட்கமாட்டார். ஆகையால், ஒரு மெய்க்கிறிஸ்தவன் நீதிமானாகக் காணப்படுகிறான் (அப்போஸ்தலர் 20:28; 1 பேதுரு 1:18,19).
தேவனுடைய கட்டளைகளுக்குக் கிறிஸ்துவானவர் முழுமையாகக் கீழ்ப்படிந்தார். பிரபஞ்சத்தின் அதிபதியான சாத்தானாலும் அவரிடத்தில் ஒரு குற்றத்தையும் காணமுடியவில்லை. இதினிமித்தம், அனைத்தையும் நிறைவேற்றியதால், அவர் அழிவில்லாத நீதியைக் கொண்டுவந்து, அதன் மூலமாக அவருடைய பிள்ளைகள் அனைவரும் தேவனுடைய பார்வையில் நீதியின் வஸ்திரத்தைப் பெற்றுள்ளனர். இதனால் ஒரு உண்மையான கிறிஸ்தவன் நீதிமானாகக் காணப்படுகிறான் (தானியேல் 9:24; ரோமர் 10:4).
ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால், கிறிஸ்துவானவர் மெய்யான ஒரு கிறிஸ்தவனுக்காக வாழ்ந்தார்; அவனுக்காக மரித்தார். அவனுக்காக அவர் கல்லறைக்குச் சென்றார்; அவனுக்காக உயிர்த்தெழுந்தார். கிறிஸ்து அவனுக்காகப் பரத்திற்குச் சென்று, அவனுடைய ஆத்துமாவிற்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவனுடைய மீட்புக்காகக் கிறிஸ்துவானவர் செய்யவேண்டிய அனைத்தையும் செய்து முடித்தார். சகலத்தையும் கொடுத்துத் தீர்த்தார். எல்லாப் பாடுகளையும் பட்டார். அதனால் உண்மையான கிறிஸ்தவன் நீதியைப் பெற்றுக்கொண்டு, அதன் மூலமாகச் சமாதானத்தையும் பெற்றுக்கொள்கிறான். அவனுக்குள் ஒன்றுமில்லை; ஆனால், அவனுடைய ஆத்துமாவிற்குத் தேவையான அனைத்தையும் அவர் கொடுத்திருக்கிறார் (கொலோசியர் 2:3; 3:11).
இயேசு கிறிஸ்துவுக்கும் ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கும் இடையேயான இந்தப் பரிமாற்றங்கள் எவ்வளவு ஆசீர்வாதமானவை என்பதை யாரால் விவரிக்கக்கூடும்! கிறிஸ்துவின் நீதியானது அவன்மேல் வைக்கப்படுகிறது; அவனுடைய பாவங்கள் கிறிஸ்துவின்மேல் சுமத்தப்படுகின்றன. அவன் நிமித்தம் கிறிஸ்துவானவர் பாவியாக எண்ணப்படுகிறார்; கிறிஸ்துவின் நிமித்தம் அவன் பாவமற்றவனாக எண்ணப்படுகிறான். அவர் பாவமற்றவராக இருந்தும், அவன் நிமித்தமாக ஆக்கினைக்குட்படுத்தப்பட்டார். அவனிடம் பாவம், குற்றம், குறைபாடுகள் இருந்தாலும், கிறிஸ்துவின் நிமித்தம் அவன் விடுவிக்கப்படுகிறான்.
உண்மையாகவே தேவஞானம் இங்கே காணப்படுகிறது. தேவன் நியாயமுள்ளவராக இருந்தாலும், தேவபக்தியற்றவர்களை மன்னிக்கிறார். மனுஷன் தான் ஒரு பாவி என்பதை உணர்ந்தாலும், பரலோகத்தைக் குறித்ததான நன்னம்பிக்கை இருப்பதால் அவன் சமாதானம் உடையவனாக இருக்கிறான். மனிதருக்குள் யார் இப்படிக் கற்பனை செய்யமுடியும்? இதனைக் கேள்விப்படும்போது யார் இதைப் போற்றாமல் இருக்கக்கூடும்? (2 கொரிந்தியர் 5:21).
சுவிசேஷப் புத்தகத்தில் அன்பின் வரலாற்றைக் காட்சிப்படுத்தியிருப்பதை நாம் வாசிக்கிறோம். பாவ உலகத்திற்குத் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து வந்ததைக் குறித்து வாசிக்கிறோம். உலகத்திற்கு வரும்முன், தமக்கு நேரிடப்போகும் பாடுகளைக் குறித்த கவலை அவருக்கு இல்லை; அவர் வந்ததைக் குறித்து அவர் மேன்மை பாராட்டவும் இல்லை. சிறைப்பட்டிருந்த நம்மை மீட்பதற்காக, கட்டப்படுவதற்கு அவர் தம்மை ஒப்புக்கொடுத்தார். மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் தம்மைத் தாழ்த்தினார். ஆதாமின் சந்ததியாகிய நாம் எந்த விதத்திலும் தகுதியற்றவர்கள் என்றாலும், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி அதற்கான வழியைத் திறந்தார். நம்முடைய பாவங்களைப் பொறுமையோடு சகித்தார். அவருடைய நீதியை நாம் தரித்துக்கொள்ளும்படி, நம்முடைய மீறுதல்களை அவர் ஏற்றுக்கொண்டார். தேவனுடைய பிள்ளைகள் என்ற சுதந்தரத்தைப் பெற்று ஒளியிலே நடக்கச் செய்தார் (பிலிப்பியர் 2:8).
இதனை அறிவுக்கு எட்டாத அன்பு என்று கூறலாம். கிறிஸ்துவின் மூலமாக நீதிமான்களாக்கப்படுதல் என்பதைப்போல, எந்த வழியிலும் இலவசமான இந்த கிருபை இவ்வளவு பிரகாசமாக இருந்ததில்லை (எபேசியர் 3:19).
இது பழமையான வழியாக இருந்தாலும், இதன் மூலமாக மாத்திரமே ஆதாமின் சந்ததியார் உலகத் தோற்றத்திலிருந்து சமாதானத்தைப் பெற்றுக்கொண்டனர். ஆபேலின் பின்வந்த சந்ததியாரில், எந்த ஒரு மனுஷனும் மனுஷியும் யாராக இருந்தாலும், ஒரு துளி இரக்கத்தையும் கிறிஸ்துவின் மூலமாகவே பெற்றிருக்கின்றனர். மோசேயின் காலத்திற்கு முன்னதாகக் கட்டப்பட்ட ஒவ்வொரு பலிபீடமும் உள்ளான ஒரு எண்ணம் கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு பலியும், யூதர்களின் சட்டத் திட்டங்களும், ஒவ்வொரு உரிமைக் கட்டளைகளும் இஸ்ரவேலருடைய பிள்ளைகளுக்குக் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தன. இதை எல்லாத் தீர்க்கதரிசிகளும் சாட்சி கொடுத்தனர். ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால், கிறிஸ்துவின் மூலமாக வரும் நீதியைப் பற்றிய பார்வையை இழந்துபோவோமானால், பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதியானது அர்த்தமற்ற, சிக்கலான வலைப்பின்னல் போலத் தோன்றியிருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நீதிமானாக்கக்கூடிய வழியாக இது மனிதத் தன்மையின் தேவைகளை நிறைவு செய்கிறது. விழுந்துபோனவனாக மனிதன் இருந்தாலும், அவனுக்குள் ஒரு மனசாட்சி இருக்கிறது. அவனுடைய சொந்தத் தேவைகளைக் குறித்த சிறிய உணர்வு அவனுக்கு இருந்தாலும், சில நேரங்களில் தேவைகளை அவன் அதிகமாக உணரும்போது, கிறிஸ்துவானவர் மாத்திரமே அவனைத் திருப்திப்படுத்த முடியும். அவனுடைய மனசாட்சி பசியில்லாமல் (உணர்வில்லாமல்) இருந்தால், எந்த ஒரு மதச் சடங்கோ, விளையாட்டுப் பொருளைப் போன்றவைகளோ அவனுடைய ஆத்துமாவைச் சாந்தப்படுத்தி அவனை அமைதியாக இருக்கும்படிச் செய்யும். ஆனால், அவனுடைய மனசாட்சியானது பசியாய் இருக்குமானால், உண்மையான ஆவிக்குரிய ஆகாரம் மாத்திரமே அவனை அமைதிப்படுத்தும். அந்த ஆகாரம் கிறிஸ்துவே.
ஒரு மனிதனுடைய மனசாட்சியானது உண்மையாகவே விழித்திருக்குமானால், அவனுக்குள்ளாக ஏதோ ஒன்று இருந்து கொண்டு, "என்னுடைய ஆத்துமாவுக்காக ஒரு விலை கொடுக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் சமாதானமில்லை" என்று முணுமுணுக்கும். உடனே சுவிசேஷமானது கிறிஸ்துவோடு கூட அவனைச் சந்திக்கிறது. அவனுடைய மீட்புக்காகக் கிறிஸ்துவானவர் விலையைக் கொடுத்துவிட்டார்; அவனுக்காகக் கிறிஸ்து தம்மையே கொடுத்திருக்கிறார். நியாயப்பிரமாணத்தின் சாபங்களிலிருந்து கிறிஸ்து அவனை விடுவித்திருக்கிறார்; அதினால் அவரே சாபமானார் (கலாத்தியர் 2:20; 3:13).
மனிதனின் மனசாட்சி விழித்திருக்கும்போது, "என்னிடம் கொஞ்சமாவது நீதி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் சமாதானமற்ற நிலை" என்று மனிதனுக்குள் ஏதோ ஒன்று முணுமுணுக்கும். உடனே சுவிசேஷமானது கிறிஸ்துவோடு சேர்ந்து அவனைச் சந்திக்கிறது. நித்திய நீதியை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். நீதியின் பிரமாணத்திற்கு அவர் முடிவாக இருக்கிறார் (ரோமர் 10:4). 'நீதியின் தேவன்' என்று அவர் அழைக்கப்படுகிறார் (எரேமியா 23:6). பாவமறியாத அவர், நாம் நீதிமான்களாகும்பொருட்டு, தேவன் அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2 கொரிந்தியர் 5:21).
மனிதனுக்குள் இருக்கும் மனசாட்சியானது விழித்திருக்கும்போது, "என்னுடைய பாவங்களுக்குத் தக்கதான பாடுகளும் தண்டனையும் கட்டாயம் உண்டு, இல்லாவிட்டால் எனக்குச் சமாதானமில்லை" என்று முணுமுணுக்கும். அந்நேரமே சுவிசேஷமானது கிறிஸ்துவுடன் சேர்ந்து அவனைச் சந்திக்கிறது. கிறிஸ்து பாவங்களுக்காகப் பாடுபட்டிருக்கிறார். தேவனிடம் கிட்டிச் சேர்வதற்காக, அநீதியுள்ளவர்களாகிய நமக்காக நீதியுள்ளவராகப் பாடுபட்டார். சிலுவை மரத்திலே நம்முடைய பாவங்களை அவர் தமது சொந்தச் சரீரத்தில் சுமந்து தீர்த்தார்; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (1 பேதுரு 2:24; 3:18).
மனிதனுக்குள் இருக்கும் மனசாட்சியானது அவனுக்குள் இருந்து, "என்னுடைய ஆத்துமாவிற்காக எனக்கு ஒரு ஆசாரியன் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் எனக்குச் சமாதானமில்லை" என்று முணுமுணுக்கிறது. அந்நேரமே சுவிசேஷமானது கிறிஸ்துவுடனே சேர்ந்து அவனைச் சந்திக்கிறது. மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தராக இயேசு கிறிஸ்துவை அது நியமிக்கிறது. அவர் பாவிகளுக்காக வாதாடுபவராக இருக்கிறார்.
அவர் ஒப்புதல் பெற்ற ஒரு ஆலோசகராகவும், நோயுற்றிருக்கும் ஆத்துமாவிற்கு மருத்துவராகவும் இருக்கிறார். அவர் மகா பிரதான ஆசாரியராகவும், பாவங்களை மன்னிக்கிறவராகவும், சர்வவல்லமையுள்ளவராகவும், பாவ பாரத்தால் ஒரு பாவியான மனுஷன் பாவ அறிக்கை பண்ணும்போது, அதைக் கிருபையாய்க் கேட்கிறவருமாய் இருக்கிறார் (1 தீமோத்தேயு 2:5; எபிரெயர் 8:1).
கிறிஸ்தவர்களைப்போல் நடிக்கும் ஆயிரக்கணக்கானவர்களை எனக்குத் தெரியும். கிறிஸ்துவின் நீதியைக் குறித்ததான உபதேசத்தின் அசாதாரணமான அழகை அவர்கள் கண்டதே இல்லை. ஏனென்றால், உலகக் காரியங்களில் அவர்களின் உள்ளமானது புதையுண்டிருக்கிறது. அவர்களின் மனசாட்சியானது முடக்குவாதத்தால் உணர்விழந்து, பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது.
அவன் கண்களுக்குப் பலவண்ண விளக்குகளும், காதுகளுக்குப் பலவித இசைகளும் பொருந்தாததாகவோ, பிடிக்காததாகவோ இருக்கலாம். ஆனால், பாவியான ஒரு மனுஷனுக்குக் கிறிஸ்துவே அதிமுக்கியமான தேவையாக இருக்கிறார். கிறிஸ்துவின் மூலமாக நீதிமானாக்கப்படுவது சமாதானத்திற்கான உண்மையான ஒரே வழியாக இருக்கிறது. தேவனைக் குறித்த சத்தியத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமல் ஏமாந்து போகக்கூடாது.
கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனோடு நமக்குச் சமாதானம் இல்லை என்பதை நீங்கள் நம்பவேண்டும். சமாதானமானது அவர் தந்த அசாதாரணமான வெகுமதி. அவர் உலகத்தைவிட்டுச் சென்றபோது, சமாதானத்தை விட்டுச்செல்ல அவருக்கு மாத்திரமே வல்லமை இருந்தது. இந்தச் சமாதானத்தைத் தவிர மற்றவையெல்லாம் கேள்விக்குறியாகவும், மாயத்தோற்றம் கொண்டதாகவும் இருக்கின்றன. உணவில்லாமல் பசியும், தண்ணீரில்லாமல் தாகமும், ஓய்வில்லாமல் களைப்பும் எப்படி விலகிப்போகாதோ, அதுபோலவே கிறிஸ்து இல்லாமல் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.
இந்தச் சமாதானம் உங்களுக்கு இருக்கிறதா? கிறிஸ்துவானவர் தமது சொந்த இரத்தத்தால் சம்பாதித்த இந்தச் சமாதானம், கிறிஸ்துவின் மூலமாக இலவசமாய்க் கொடுக்கப்படுவதைக் கற்றுக்கொள்ள வாஞ்சையுள்ளவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தச் சமாதானம் உனக்குச் சொந்தமாக இருக்கிறதா? என்னுடைய கேள்விக்குத் திருப்தியான பதிலைத் தரும்வரை ஓய்ந்திருக்காதே; உனக்குச் சமாதானம் இருக்கிறதா?