அப்பொழுது மரண பயமும், நித்திய வாழ்வைக் குறித்த கவலையும் அவனைப் பிடித்து மனதை வாட்டி வதைத்தன. உடனே அவன், தனக்குக்கீழ் பணிபுரியும் ஒரு முக்கிய அதிகாரியை அழைத்தான். அந்த அதிகாரி வந்தவுடன் அவனிடம், "நான் எனது வாழ்நாளில் பாவங்களையும் அக்கிரமங்களையும் ஏராளமாய்ச் செய்துள்ளேன். அவைகள் எனக்கு மன்னிக்கப்படவும், எனது நித்திய வாழ்வுக்காகவும் எனக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றான்.
அதற்கு அந்த அதிகாரி வருத்தத்துடன் தலைவனைப் பார்த்து, "ஐயா! நான் இதுவரை ஜெபித்ததே இல்லை; எனக்கு ஜெபிக்கவும் தெரியாது" என்றான். உடனே கப்பல் தலைவன் அவனைப் பார்த்து, "நீ பரிசுத்த வேதத்தையாவது கொண்டுவந்து நான் கேட்கும்படி வாசி" என்றான். அதற்கும் அந்த அதிகாரி, "ஐயா! என்னிடம் பரிசுத்த வேதமும் இல்லையே! நான் என்ன செய்வது?" என்று திகைத்தான்.
அப்போது, அந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த தேவ ஊழியர் ஒருவர் முன்வந்தார். கப்பல் தலைவனின் வேண்டுதலின்படி, அந்த ஊழியர் வேதத்தைத் திறந்து ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 53-ம் அதிகாரத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.
"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" என்று அந்த அதிகாரத்தின் 5-வது வசனத்தை வாசித்தார்.
உடனே கப்பல் தலைவன், "அங்கேயே நிறுத்திக்கொள்ளுங்கள் ஐயா!" என்று வாசிப்பவரை இடைமறித்து, "எனது தாயார் இந்த வசனத்தில் எனது பெயரை வைத்து ஜெபிக்கும்படி கூறினாள். எனக்கோ இதன் அர்த்தம் புரியவில்லை; ஆகையால் இதை என்னால் ஜெபமாகக் கூறமுடியவில்லை. இந்த வசனம் என்ன சொல்லுகிறது என்று எனக்குச் சற்று விளக்கிச் சொல்லுங்கள்" என ஆவலுடன் கேட்டான்.
அதற்கு அந்தத் தேவமனிதர், "நான் ஒரு உதாரணம் கூறுகிறேன். என்னிடமிருந்த விலையுயர்ந்த கண்ணாடிப் பொருளை என் வேலைக்காரச் சிறுவன் உடைத்துவிட்டு, பிறகு என்னிடம் வந்து அதற்காக மன்னிப்புக் கேட்டான். நானும் அவனை மன்னித்துவிட்டேன். இப்போது உங்களிடம் ஒரு கேள்வி, இந்த மன்னிப்புக்கான விலை எவ்வளவு?" எனக் கேட்டார்.
அந்தக் கப்பல் தலைவன் போதகரைப் பார்த்து, "அந்தக் கண்ணாடிப் பொருளின் விலை எதுவோ, அதுவே மன்னிப்பின் விலை. அதாவது அந்தக் கண்ணாடிப் பொருள்தான் உமது மன்னிப்பின் விலை" என்றார். போதகர் கப்பல் தலைவனைப் பார்த்து, "நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். நாமும் பாவம் செய்யும்போதெல்லாம் தேவனுக்கு விரோதமாகத்தான் பாவம் செய்கிறோம். பிறகு அவரிடம் வந்து சரணடைந்து மன்னிப்புக் கேட்டால், அவர் உடனே மன்னித்துவிடுகிறார். ஆனால் நம்மை அவர் மன்னிக்க, ஒரு விலையைக் கொடுக்கவேண்டும். 'பாவத்தின் சம்பளம் மரணம்'. உயிருக்கு விலை உயிர்தான் அல்லவா? எனவேதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுயிரை ஈவாகத் தந்து, நம்மை மன்னிக்கும் அதிகாரத்தை உடையவராக இருக்கிறார்" என்று விளக்கினார்.
மேலும் கப்பல் தலைவனிடம், "இப்போது உமது தாயார் சொன்னபடி நான் உமக்குச் சொல்லித் தருகிறேன்; நீங்கள் ஜெபிக்கிறீர்களா?" என்றார். கப்பல் தலைவன் உடனே கண்களை மூடி ஜெபிக்க ஆரம்பித்தான். தனது பெயரை அழுத்தம்திருத்தமாகச் சொல்லி, "ஜானுடைய மீறுதல்களினிமித்தம் இயேசு காயப்பட்டு, ஜானுடைய அக்கிரமங்களினிமித்தம் இயேசு நொறுக்கப்பட்டார். ஜானுக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை இயேசுவின்மேல் வந்தது. இயேசுவின் தழும்புகளால் ஜான் குணமடைகிறான்" என்று அந்தத் தேவமனிதர் சொல்லச் சொல்ல, கேப்டனும் ஜெபித்தார். ஜெபித்தவுடன் கேப்டனின் இருதயம் இலகுவானது.
கேப்டன் தானாகவே அழுகையுடன் திரும்பத் திரும்ப ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போதே, 'இயேசு தன் பாவங்களை மன்னித்துவிட்டார்' என்ற நிச்சயமும், 'இயேசுவின் காயப்பட்ட கரங்களினால் நான் சுகமானேன்' என்ற விசுவாசமும் கேப்டன் ஜானுக்கு வந்துவிட்டது. அந்த நாளிலேயே அவரது உடலில் ஏற்பட்ட வியாதி நீங்கி நல்ல சுகத்தைப் பெற்றார். மரண பயமும் நீங்கிப்போனது. தொடர்ந்து தன் கப்பற்பணியைச் சந்தோஷமாக நிறைவேற்றினார். ஆம்! கேப்டன் ஜானுடைய வாழ்க்கைப் பயணம் புதிய திசையில் பயணிக்க ஆரம்பித்தது.
அன்பானவர்களே!
இந்தக் கைப்பிரதியை வாசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும், எந்த நம்பிக்கையை உடையவராயிருந்தாலும், அல்லது கிறிஸ்துவை அறியாதவராயிருந்தாலும், அவர் எல்லாவற்றையும் மன்னித்து உங்கள் வாழ்வில் சமாதானத்தையும் மாறாத சந்தோஷத்தையும் தரக் காத்திருக்கிறார்.
இந்தக் கேப்டன் ஜானைப் போல் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினாலும், விசுவாசிப்பதினாலும் தேவனைக் கண்டுகொள்வீர்கள். கப்பல் தலைவனுக்கு உண்டானதுபோல் கொடிய வியாதியினாலோ, மனநிம்மதியின்றியோ, துயரத்திலோ, வேதனையிலோ நீங்கள் இருக்கக்கூடும். ஆனால் இனி நீங்கள் அவ்வாறு இருக்கத் தேவையில்லை. தேவனுக்குப் பிரியமில்லாத தவறுகளையும் பாவங்களையும் செய்வதாலேயே நம் வாழ்வில் இத்துன்பங்களால் வாடுகிறோம். அவற்றிலிருந்து நம்மை விடுவிக்கவே ஆண்டவராகிய இயேசு காயப்பட்டார்; சிலுவையிலே அறையப்பட்டார்; மரித்தார். நமக்கு எட்டாத சந்தோஷமான, சமாதானமான வாழ்வு கிடைக்கும்படிக்கே அவர் சிலுவையில் பலியானார்.
இயேசுவின் காயத்தின் தழும்புகள் உங்கள் பாவ வியாதிகளைக் குணமாக்கும் வல்லமையுள்ளவை. இன்றே நீங்களும் கேப்டன் ஜானைப் போல அந்த வேத வசனத்தில் உங்கள் பெயரை வைத்து விசுவாசத்துடன் தேவனிடம் மன்றாடுங்கள்.
பூட்டிய அறையில் தனித்திருந்து இயேசுவை வேண்டி உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். நிச்சயமாகவே நீங்களும் அவரிடம் பாவ மன்னிப்பைப் பெறுவதோடு, இப்பூமியிலே மனசமாதானத்தையும் சந்தோஷத்தையும், மறுமையில் தேவனோடு கூட வாழும் பரலோக வாழ்வையும் பெறுவீர்கள்.
"கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." (ரோமர் 10:9)