மாபெரும் பாவிகளுக்கான மன்னிப்பு
படிப்புகள்: 512
Print
ஆசிரியர்: ஜான் ஃபிளேவல் 1627–1691
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

 “ஜான் ஃபிளேவல்” அவர்களுடைய எழுத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

கிறிஸ்து மரித்தாரா? அவர் சிலுவையில் வேதனையுடனும், அவமானத்தையும் சாபத்தையும் தாங்கியவராயும், கோரமான நிலையில் தொங்கினவராய்ப் பாடுகளைச் சகித்து மரித்தாரா? அப்படியானால், தேவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், திரளான மீட்பும் மிகப்பெரிய பாவிக்கும் உண்டு என்பது நிச்சயம். விசுவாசத்தின் வழியாக, இயேசுவின் சிலுவை இரத்தத்தின் பலனால் பாவிகள் தங்கள் குற்றமுள்ள ஆத்துமாக்களுக்கு மீட்பைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

"குமாரனாகிய அவருக்குள் அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது" என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (கொலோசெயர் 1:14). மேலும், "அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7).

இரண்டு காரியங்கள் இதைத் தெளிவுபடுத்த வல்லவை:

  1. முதலாவது, சிலுவையில் சிந்தப்பட்ட இந்த இரத்தம் மனிதனுடைய மிகப்பெரிய பாவங்களையும் மன்னிக்கும் வல்லமை உடையதாய் இருக்கிறது.

  2. இரண்டாவதாக, இதன் வல்லமை விசுவாசிக்கும் பாவிகள் அனைவருக்கும் பலன் தரும் விதத்தில் தேவனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு குறிப்புகளும் வேதத்தில் எவ்வளவு தெளிவாய் விளங்குகின்றன என்பதைப் பார்ப்போம்.

முதலாவதாக, பாவப் பிராயச்சித்தம் செய்ய சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் போதுமான வல்லமை இருப்பதையும், அது மிகப்பெரிய பாவங்களையும் கழுவிச் சுத்திகரிப்பதையும் பார்ப்போம். இது மிகவும் வெளிப்படையானது; ஏனெனில் இந்த இரத்தம் 'விலையேறப்பெற்றது' என அழைக்கப்படுகிறது. "நீங்கள்... அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்... கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று அறிந்திருக்கிறீர்களே" (1 பேதுரு 1:18–19).

இந்த இரத்தம் ஏன் விலையேறப்பெற்றது? ஏனெனில் இது யாருடையது என்பதினால். "இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்" (ரோமர் 9:5). ஆகையால், இது 'தேவனுடைய இரத்தம்' என்றே அழைக்கப்படுகிறது (அப்போஸ்தலர் 20:28). இது இராஜரீகம் நிறைந்த அதிபதியின் இரத்தமாகும். ஆம், அதன் மேன்மை மற்றும் அதன் வலிமையின் காரணமாக, படைக்கப்பட்ட எந்த மனித நரம்புகளிலும் பாயும் இரத்தத்தை விட இது சிறந்தது. உலகம் முழுவதிலும் உள்ள எல்லா மனிதர்களின் இரத்தத்தை விடவும் இது விலையேறப்பெற்றது. ஒரு சாதாரண நதியின் தண்ணீருக்கும், தங்க ஆற்றில் இருந்து எடுக்கப்படும் ஒரு துளிக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது இது.

இதன் விலைமதிப்பற்ற தன்மையின் விளைவாக, இது மனிதனைத் தேவனோடு ஒப்புரவாக்கும் அளவிற்கான திருப்தியைத் தேவனுக்குள் ஏற்படுத்துகிறது. "அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்தில் உள்ளவைகள் பரலோகத்தில் உள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று" என்று எழுதுகிறார் பவுல் (கொலோசெயர் 1:20). இந்தப் பூமியில் இருப்பவர்களுக்கு மீட்பைத் தரும் இதே இரத்தம் தான், பரலோகத்தில் வசிப்பவர்களுக்கும் உறுதியைத் தந்திருக்கிறது.

சூரியனின் வெளிச்சத்திற்கு முன்பாக இருள் விலகி ஓடுவதைப் போல, இந்த இரத்தத்தின் வல்லமையால் குற்ற உணர்ச்சி மறைந்து போகிறது. குற்ற உணர்ச்சியால் கலங்கிப் போயிருக்கும் ஆத்துமாவுடன் நேரடியாக இடைபட்டு, "ஆபேலின் இரத்தம் பேசினதைவிட நன்மையானவைகளைப் பேசுகிற" இரத்தமாக இது இருக்கிறது (எபிரெயர் 12:24). இது நம்மைத் தீமை அனைத்திலிருந்தும் விடுவிப்பதுடன், துர்க்குண மனசாட்சி நீங்கத் தெளிக்கப்பட்டவர்களாயும் நம்மை மாற்றுகிறது (எபிரெயர் 10:22). தேவனைத் திருப்திப்படுத்தப் போதுமான வலிமை இந்த இரத்தத்திற்கு இருப்பது போலவே, நமது மனசாட்சியையும் கறைதீரக் கழுவப் போதுமான வலிமை இதற்கு இருக்கிறது. தேவன் எப்போது தமது நீதிக்கான திருப்தியைப் பெற்றுக்கொண்டாரோ, அதன் பின்பு நமது மனசாட்சி குற்ற உணர்வில் இருக்க வேண்டியதில்லை. இந்த இரத்தம் தேவனையும், நமது மனசாட்சியையும் திருப்தி அடையச் செய்ய வல்லதாய் இருக்கிறது.

இரண்டாவதாக, தேவனைத் திருப்திப்படுத்துவதற்குத் தேவையான வல்லமை இந்த இரத்தத்திற்கு இருப்பதுபோலவே, விசுவாசிக்கும் பாவிகள் இதைப் பயன்பெறும்படியான வகையிலேயே தேவன் இதை ஏற்படுத்தியிருக்கிறார். எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி, எவ்வளவு பெரிய பாவத்திற்கும் பிராயச்சித்தம் செய்யும் விதத்தில் இந்த இரத்தம் சிந்தப்பட்டது. "மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான்" (அப்போஸ்தலர் 13:39) என்று நடபடிகள் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பது போல, இந்த இரத்தம் விசுவாசிக்கிறவர்களின் பயனுக்காகவே சிந்தப்பட்டது.

விசுவாசிகளின் பாவப் பிராயச்சித்தமே மிகப்பெரிய நோக்கம் என்பது, பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலரின் பலி செலுத்துதல் முறை வழியாக நிழலாட்டமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் சிந்தப்பட்டதால் நிஜமானது. அடையாளமாகச் சிந்தப்பட்ட இரத்தம் (பலி செலுத்துதல்) மன்னிப்பைக் குறித்த தேவனுடைய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. பலி மிருகத்தின் தலையின் மேல் பலி செலுத்த வருகிறவர்கள் கைகளை வைக்கும் செயல், அவர்கள் விசுவாசிக்க வேண்டிய முறையை எடுத்துரைக்கிறது. சிந்தப்பட்ட இரத்தம் அன்று அவர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது போல, இன்றளவும் மிகச் சிறப்பான வழியில் நமக்கும் பயன்படுகிறது. மன்னிப்பு என்கிற நோக்கம் இல்லாதிருந்தால், எந்தப் பலியும் ஏற்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

மேலும், இயேசுவால் சிந்தப்பட்ட இரத்தம் நம் பாவங்களுக்கான கடன்களை நம்மிடமிருந்து அகற்றி, நம்மை விடுதலையாக்கி இருக்கிறது என்கிற உறுதியை நமக்குத் தருகிறது. நாம் இனிக் குற்றவாளிகள் அல்ல; அவரே நமக்குரிய "பிணை" (எபிரெயர் 7:22). தேவன் தம்முடைய குமாரனின் இரத்தத்தைப் பாவப் பிராயச்சித்த பலியாக ஏற்றுக்கொண்ட பின்னும், அதற்கான விலையை விசுவாசிகள் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பாரா? அதற்கு வாய்ப்பே இல்லை.

"தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றம் சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே" (ரோமர் 8:33–34).

பாவமன்னிப்பிற்கு விசுவாசமும் மனந்திரும்புதலும் அவசியம் என்று சொல்லப்படுவது ஏன்? தேவன் தம்முடைய வார்த்தை எங்கும் பாவிகளை மனந்திரும்பி இந்த இரத்தத்தை விசுவாசிக்க அழைப்பு விடுப்பது ஏன்? பாவமன்னிப்பை ஏற்கும்படியாகத் திரளான வாக்குத்தத்தங்களைத் தந்திருப்பதும் ஏன்? கிறிஸ்துவின் இரத்தத்தை உதாசீனம் செய்யும் மனந்திரும்பாத மக்கள் மேல் ஆக்கினைத் தீர்ப்பு உண்டாகும் என்று அவர் எச்சரிப்பதும் ஏன்? நான் இதையெல்லாம் சொல்வதன் காரணம் இதுதான்: எவ்வளவு பெரிய பாவிக்கும் மன்னிப்பு உண்டு என்பதன் நிச்சயமும், விசுவாசம் உள்ள ஒவ்வொரு பாவியையும் அவர் பரிபூரணமாக மன்னிக்கிறவர் என்பதும் தானே தவிர வேறென்ன? இது எத்தனை ஆச்சரியமான செய்தி! சமாதானத்தையும், மன்னிப்பையும், கிருபையையும், நம்மை ஏற்றுக்கொள்வதையும் வெளிப்படுத்தும் எவ்வளவு மேன்மையான சத்தம் இது! இது சிலுவையில் இருந்து சிந்தப்படும் இயேசுவின் இரத்தத்தின் சத்தமே!

பாவமுள்ள ஒரு நபரால் தன் மீது உள்ள எல்லாக் குற்றத்தையும் சுமந்துகொண்டு தேவனுடைய நீதிக்கு முன்பாக நிற்க முடியாது. அதேபோல, மன்னிக்கப்பட்ட விசுவாசியின் மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாலும், நடுக்கமும் பயமும் உள்ள மனசாட்சியாலும் கிறிஸ்துவின் அதிக வல்லமையுள்ள இரத்தத்தின் கிரியைக்கு முன்பாக நிற்க முடியாது; கிறிஸ்துவின் இரத்தமே ஜெயிக்கும்.

அன்பு வாசகரே, வேதம் உங்களுக்கு உறுதியான நம்பிக்கையைத் தருகிறது. நீங்கள் எப்படி இருந்திருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், "உங்கள் பாவங்கள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும்" (ஏசாயா 1:18), நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்தால் இந்த இரத்தத்தினால் வெண்மையாக்கப்படுவீர்கள். "முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன். அப்படியிருந்தும்... நான் இரக்கம் பெற்றேன்" என்கிறார் பவுல் (1 தீமோத்தேயு 1:13).

ஆனால் பவுலின் உதாரணம் மிக அரிதான ஒன்று என்றும், அவரைப் போல இன்னொருவர் இந்தக் கிருபையை அடைந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நீங்கள் எதிர்வாதம் வைக்கலாம். பவுலைப் போல நீங்களும் விசுவாசித்தால், அப்படி ஒரு கேள்வியே எழத் தேவையில்லை! ஏனெனில், "நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்" என்று அவரே எழுதுகிறார் (1 தீமோத்தேயு 1:16). ஆகவே பவுலைப் போலவே நாமும் இந்த இரக்கத்தைப் பெற முடியும்.

இயேசுவின் இரத்தத்தைச் சிந்துவதில் தங்கள் பங்கு இருந்தவர்கள் கூட, அவர்களின் பாவ மன்னிப்பிற்காக இதே இரத்தத்தினால் பலன் பெற்றார்கள் (அப்போஸ்தலர் 2:36). அவிசுவாசம் மற்றும் இருதயக் கடினம் (மனந்திரும்ப மறுத்தல்) ஆகியவற்றைத் தவிர, இந்த இரத்தத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதில் உங்கள் ஆத்துமாக்களுக்குத் தடையாக வேறு எதுவும் இருக்க முடியாது.