துன்பத்தின் மத்தியில் தேவனே நீர் எங்கே இருக்கிறீர்?
படிப்புகள்: 428
Print
ஆசிரியர்: ஷங்கர்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

"இக்கட்டுகள் என்னை மிகவும் நொறுக்குகின்றனவே! தேவனே! நீர் எங்கே இருக்கிறீர்?"

இப்படிப்பட்ட கேள்விகளை நாம் அனைவரும் நம் வாழ்வின் ஏதோ ஒரு காலகட்டத்தில் கேட்டிருப்போம். சில நேரங்களில் மட்டுமல்ல, பெரும்பாலான நேரங்களில் நம்முடைய பிரச்சனைகளின் மத்தியில் நாம் முதன்முதலாக கேள்வி கேட்பது தேவனைத்தான்.

நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் சீராக நடக்கும்போது எழாத இந்தக் கேள்விகள், துன்பங்கள் வந்தவுடன் ஏராளமாக எழுகின்றன. சிலர் நேரடியாகக் கேட்காவிட்டாலும், தங்கள் மனதிற்குள்ளாக, "ஆண்டவரே, உமக்கு எங்கள் மீது உண்மையாகவே அக்கறையில்லையா?" என்று திரும்பத் திரும்பச் சொல்லித் தங்கள் நேரத்தை வீணடிப்பார்கள்.

ஆனால், இந்தக் கேள்விகளுக்கு வேதம் முன்னதாகவே பதிலளித்துள்ளது. சொல்லப்போனால், இங்கு பிரச்சனை பதில்களைக் கண்டுபிடிப்பது அல்ல; மாறாக, அந்தப் பதில்களை ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தோடு அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான்.

"அது உண்மையா?" என்று நீங்கள் யோசிப்பதற்கு முன், மக்கள் துன்பத்தில் இருக்கும்போது தேவன் எங்கே இருக்கிறார், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை வேதத்திலிருந்து உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அதற்கு முன்பாக, தேவனுடைய ஒரு முக்கியமான குணாதிசயத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்வோம்.

தேவன் ஆவியாய் இருக்கிறார். அதாவது அவருக்கு மனிதரைப் போல பௌதிக சரீரம் இல்லை. ஆவியாய் இருக்கும் தேவன், எல்லா இடங்களிலும் தம்முடைய முழுமையான பிரசன்னத்தைக் கொண்டுள்ளார். அதனால்தான் தேவனை நாம் 'எங்கும் நிறைந்தவர்' (சர்வவியாபி) என்று அழைக்கிறோம். மனிதர்கள் துன்பங்களைச் சந்திக்காதபோதும் எங்கும் நிறைந்த தேவன் இருக்கிறார் என்பதையும், அவர்கள் துன்பங்களைச் சந்திக்கும்போதும் அவர் அங்கேயே இருக்கிறார் என்பதையும் முதலில் நம்முடைய மனதில் ஆழமாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இனி, வேதத்தில் துன்பங்களைச் சந்தித்த பக்தர்களையும், அந்தத் துன்பங்களின் மத்தியில் தேவன் அவர்களை எவ்விதமாகச் சந்தித்தார் என்பதையும் பார்ப்போம்.

முதலாவதாக, யோசேப்பிடம் இதைக்குறித்துக் கேட்போம்.

"யோசேப்பே! உன் சகோதரர்கள் உன்னை ஒரு குழியில் தள்ளிவிட்டு, இஸ்மவேலர்களிடம் விற்றுப்போட்டார்களே! நீ செய்யாத ஒரு தவறுக்காகப் போத்திபாரால் சிறையில் அடைக்கப்பட்டாய்; பல துன்பங்களை அனுபவித்தாய். அப்போதெல்லாம் 'தேவன் எங்கே இருக்கிறார்?' என்று உனக்கு யோசிக்கத் தோன்றவில்லையா?" என்று யோசேப்பிடம் கேட்டால்,

யோசேப்பு, ஆதியாகமம் 39:20-21 வசனங்களை நமக்குக் காண்பித்து, "அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்து..." என்று சொல்லி, "என்னுடைய துன்பத்தில் தேவன் எனக்குத் துணையாக இருந்தார்" என்று பதிலளிப்பார்.

இரண்டாவதாக, தானியேலிடம் இந்தக் கேள்வியைக் கேட்போம்.

"தானியேலே! நீ சிறந்த ஞானம் கொண்டவனும், தலைவர்களிடையே புகழ்பெற்றவனும், நம்பகமானவனுமாக இருந்தும் உன்னைச் சிங்கங்களின் கெபியில் தூக்கி எறிந்துவிட்டார்களே! அப்போது, 'கர்த்தராகிய ஆண்டவரே, நான் என்ன தவறு செய்தேன்? நீர் எங்கே இருக்கிறீர்?' என்று ஏன் நீர் கேட்கவில்லை?" எனத் தானியேலிடம் கேட்போம்.

அதற்கு அவர் தானியேல் 6:22 வசனத்தைக் காண்பித்து, "சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; ஏனெனில் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்." ஆம், தேவன் என்னோடேகூட சிங்கங்களின் கெபியில் இருந்தார் என்று தானியேல் சொல்வார்.

மூன்றாவதாக, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களிடம் கேட்போம்.

"நீங்கள் இருந்த படகை ஒரு பெரிய புயல் தாக்கியது. அப்போது நீங்கள், 'ஆண்டவரே, உமக்கு எங்களைக்குறித்துக் கவலையில்லையா?' என்று கேட்டீர்கள். அந்த நேரத்தில் ஆண்டவர் எங்கே இருந்தார்?" என்று சீஷர்களிடம் கேட்டால், "இயேசுகிறிஸ்து எங்களோடு அதே படகில்தான் இருந்தார்; நாங்கள்தான் விசுவாசமில்லாமல் பயத்தோடே ஆண்டவரிடம் கேள்வி கேட்டோம்" என்று சீஷர்கள் பதில் சொல்வார்கள் (மாற்கு 4:35-41).

இறுதியாக, பவுல் மற்றும் சீலாவினிடம் கேட்போம்.

"பவுலே! சீலாவே! நீங்கள் அனேக அடிகள் அடிக்கப்பட்டு, உங்கள் கால்கள் தொழுமரத்திலே மாட்டப்பட்டிருந்தன. இருண்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். இவ்வளவு மிகுந்த வேதனையிலும், வாழ்க்கையின் மீதான விரக்தியிலும், மரணம் வந்தால் நலமாக இருக்குமே என்ற சிந்தனை எழுந்திருக்க வேண்டிய நேரத்திலும், நீங்கள் எப்படி ஆச்சரியவிதமாக தேவனைத் துதித்துப் பாடல்களைப் பாடினீர்கள்? 'தேவனே, நீர் எங்கே இருக்கிறீர்? நாங்கள் இவ்வளவு துன்பப்படுகிறோமே, உமக்குக் கவலையில்லையா?' என்ற கேள்வியை நீங்கள் ஏன் கேட்கவில்லை?"

அதற்கு அவர்கள், "உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? அந்த நள்ளிரவு நேரத்தில், அந்த இருண்ட சிறையில், எங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின் மத்தியில் தேவன் அங்கே எங்களோடு இருந்தார். ஆகையால்தான் நாங்கள் அவரைத் துதித்துப் பாடி ஜெபித்தோம்" என்று பவுலும் சீலாவும் மகிழ்ச்சியோடு பதிலளிப்பார்கள் (அப்போஸ்தலர் 16:19-26).

நாம் இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நம்முடைய வாழ்வில் ஏற்படும் பல துன்பங்களுக்குக் காரணம் பாவத்தின் விளைவுகளாகவும் இருக்கலாம். அவை நம்முடன் இருக்க வேண்டியதே! நாம் அவைகளுடன் பயணிக்க வேண்டியதே! துன்பத்தின் வாயிலாகத்தான் நாம் முழுமையடைந்து, சர்வவல்லமையுள்ள தேவனை அதிகமாகச் சார்ந்திருப்போம். அந்தச் சோதனைகளில் தேவன் நமக்குத் துணையாயிருந்து வழிநடத்துகிறார்.

"இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்று இயேசுகிறிஸ்து சொல்லிய வார்த்தைகளை நினைவுக்கூர்வோம். உலகத்தின் இறுதிவரை நம்முடைய சோதனைகளிலும், உபத்திரவங்களிலும், கண்ணீரிலும் தேவன் நம்மோடிருப்பார் என்பதை இது குறிக்கிறது.

ஆகவே, நம்முடைய சோதனைகளில் நாம் தேவனை நோக்கிக் கேள்வி கேட்காமல், அவரைப் புகழ்ந்து பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சோதனைகள் எதுவரை நீடிக்கும் என்று நாம் தேவனிடம் கேட்கும்போது, "துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்" (1 பேதுரு 1:6) என்ற வசனத்தை நினைவில் கொள்வோம். இந்தப் போராட்டங்களும், பாடுகளும் குறுகிய காலத்திற்கு மட்டுமே. அதன் பிறகு, நமக்குத் தேவனோடு நித்திய நித்தியமான மகிழ்ச்சி உண்டு.

தேவன் தாமே நமக்குத் துணையாக இருப்பாராக! ஆமென்.