யோகா - ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்
படிப்புகள்: 348
Print
ஆசிரியர்: பேதுரு தேவதாசன்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

முற்காலங்களிலெல்லாம் மக்களிடையே காலரா, வாந்திபேதி, நிமோனியா மற்றும் தொற்றுநோய்கள் போன்ற கிருமிகளினால் பரவும் வியாதிகளே மிக அதிக அளவில் காணப்பட்டன. ஆனால், இந்நாட்களில் சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு மற்றும் மன அழுத்தம் போன்ற வாழ்க்கைமுறை சார்ந்த (Lifestyle diseases) வியாதிகளே அதிகமாகப் பேசப்படுகின்றன. மருத்துவத் துறையின் அபரிமிதமான வளர்ச்சியும், தகவல் தொழில்நுட்பங்களின் பெருக்கமும் மருத்துவருக்கும் நோயாளிக்குமிடையே உள்ள இடைவெளியை அதிகரிக்கச் செய்கின்றன. இது மருத்துவச் செலவினத்தையும் கூட்டுகிறது.

சில வேளைகளில், செலவு செய்யப் பணம் இருந்தும், பிரயோஜனமில்லை என மருத்துவத்துறை கைவிரிக்கும் நிலையில், "எப்படியாயினும் தீர்வு கிடைத்துவிடாதா?" என்ற எதிர்பார்ப்போடு மாற்று மருத்துவ முறைகளில் (Alternative Medicine) நாட்டம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மருத்துவமனைகளுக்கு வந்து செல்லும் நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு இருப்பது, அவர்களது மனரீதியான பாதிப்புகளினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளே ஆகும். இந்நிலையில் அவர்கள் மருந்து மாத்திரைகளை மறந்துவிட்டு, மாற்று மருத்துவ முறைகளை நாடும்படி ஊக்குவிக்கப்படுவது ஒன்றும் புதிரல்ல. உலகில் யோகா, ஆழ்நிலை தியானம் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மாற்று மருத்துவ முறைகள் உள்ளன. ஒருவிதத்தில் ஆங்கில மருத்துவத்தின் (Allopathic Medicine) வரையறுக்கப்பட்ட எல்லையே, யோகா போன்ற மாற்றுமுறை மருத்துவத்தின் வளர்ச்சிக்குக் காரணம் எனலாம்.

யோகா என்பது என்ன?

சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த 'யோகா' என்ற வார்த்தைக்கு "இணைப்பு" என்று பொருள். உடல் ஆசன நிலைகள் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் மூலம் மனிதனை இறைவனுடன் இணைக்க முற்படும் மனித முயற்சியே 'யோகா' என்றழைக்கப்படுகிறது. யோகா என்பது அடிப்படையில் ஒரு தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை முறை, சுயமுன்னேற்றக் கருவி, உடல் மற்றும் மனநலம் பேணும் ஒரு அறிவியல் சார்ந்த கலை, ஆன்மிக சாதனம் எனப் பலராலும் பலவிதமாகக் கருதப்படுகிறது. மன அமைதியின்மை, மன அழுத்தம், அலைச்சல், வேலைப்பளு, மாசடைந்த உணவு, சுற்றுப்புறச் சூழல் மற்றும் ஊடகங்களின் தாக்கங்கள் போன்ற சமுதாய சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு யோகா ஒரு நல்ல ஆயுதம் என்கின்றனர்.

நம்மில் பலரும் 'யோகா' என்றாலே, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து, அதற்கு வலுவினை ஊட்டும் ஒரு சாதாரணமான உடற்பயிற்சி என்றுதான் நினைக்கிறோம். ஆனால், அது உடற்பயிற்சிகளுக்கெல்லாம் மேலான தத்துவங்களை மையமாகக் கொண்டுள்ளது. சுமார் கி.மு. 150-ல் உருவான பதஞ்சலி யோக சூத்திரத்தின்படி யோகாவில்: யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம் மற்றும் சமாதி என மொத்தம் எட்டு வகையான வழிமுறைகள் உண்டு. ஆனால் பின்னாட்களில், 15-ம் நூற்றாண்டில் 'ஆசனம்' (குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் உடற்பயிற்சி), 'பிராணாயாமம்' (சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியே விடும் மூச்சுப் பயிற்சி) என்ற இரண்டு அம்சங்களை மட்டும் உள்ளடக்கிய ஹட யோகா (Hatha Yoga) உருவெடுத்தது. இது மற்ற மதத்தினருடன் ஏற்படும் தத்துவ தர்க்கங்களைச் சற்றே சாமர்த்தியமாகத் தவிர்த்து, இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

யோகாவின் தத்துவப் பின்னணி

யோகா, வெளிப்படையாகவே கிறிஸ்தவ தத்துவங்களுக்கு முரணானது. மனிதனைக் கடவுளோடு இணைக்க முற்படும் முயற்சியே யோகா என்றறிந்தோம். கடவுளைக் குறித்த கருத்தில் கிறிஸ்தவத்திற்கும் யோகாவிற்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்களைக் கொண்ட இந்து மதக் கருத்தின்படி, காண்பதெல்லாம் கடவுள்தான். இறைவன் ஒரு ஆள்த்தத்துவத்தோடு (Personality) இல்லாமல், ஒரு ஆன்மீகப் பொருளாக அண்ட சராசரத்திலுள்ள எல்லாவற்றிலும் வியாபித்துள்ளார் என அது கூறுகிறது. ஆனால் கிறிஸ்தவமோ, இறைவன் என்பவர் மனிதன் உட்பட அண்ட சராசரங்கள் அனைத்தையும் தமது வார்த்தையினால் படைத்த, ஆள்த்தத்துவமுள்ள ஒருவர் எனத் தெளிவாய்க் கூறுகிறது.

மனிதனைக் குறித்த கருத்திலும் இரண்டிற்குமிடையே வேறுபாடு உள்ளது. "காண்பதெல்லாம் கடவுள்" என்பதால், உடல் ஆசன மற்றும் மூச்சுப் பயிற்சிகள் மூலமாக மனிதனும் இறைநிலையை அடைகிறான் என்பது யோகாவின் கருத்து. இது, "நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்" (ஆதியாகமம் 3:5) என்று சாத்தான் ஏவாளை வஞ்சித்ததுபோல் அல்லவா உள்ளது? பரிசுத்த வேதாகமமோ, மனிதன் இறைவனால் தமது சொந்தச் சாயலில் படைக்கப்பட்ட ஒரு படைப்பு என்றும், படைப்பும் படைத்தவரும் ஒன்றாகிவிட முடியாது என்றும் கூறுகிறது.

மனிதனின் அடிப்படைப் பிரச்சினையும் அதற்கான தீர்வும் குறித்த விஷயத்தில், மனிதன் தனது இறைநிலையை உணராமல் இருப்பதுதான் அவனது அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும், அதனை அவன் தனது முயற்சியினால் அடைந்துவிடலாம் என்பதும் யோகாவின் கருத்து. ஆனால் பரிசுத்த வேதாகமத்தின்படியோ, மனிதனின் பாவ நிலைமையே அவனது பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்; இயேசு கிறிஸ்துவின் இரத்தமே சகல பாவங்களையும் நீக்கி, அவனைச் சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7). இது கிருபையாய் தேவனால் அருளப்படும் ஈவு; அது மனித முயற்சியினால் சம்பாதிக்க இயலாத ஒன்று. யோகா, உண்மைத் தெய்வத்திற்குப் பதிலாக ஒருவன் தன்னையே மையப்படுத்திக்கொள்ளப் போதிக்கிறது. கிறிஸ்தவன் தனது வாழ்வின் இக்கட்டான வினாக்களுக்குத் தீர்வை வேதாகமத்தில் தேடுவதைத் தடுத்து, அவன் தனது மனசாட்சியையே நாடும்படி அது ஊக்குவிக்கிறது.

அதிலென்ன தவறு?

"அதெல்லாம் சரி, எப்படியாயினும் யோகா ஒருவிதத்தில் நன்மையைத் தானே தருகிறது? பின்னர் அதிலென்ன தவறு? பின்னணியிலுள்ள தத்துவத்தை மட்டும் தவிர்த்துவிட்டு, வெறும் யோகாசன நிலையையும் உடற்பயிற்சியையும் மட்டும் எடுத்துக்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே?" எனச் சிலர் கேட்கலாம். ஆனால் அது சரியாக இருக்க வாய்ப்பில்லை. அனைத்து வகையான யோகாவும் ஆன்மீகப் பயிற்சிகளே. ஒவ்வொரு யோகாசன நிலையும் இந்து தெய்வங்களை வழிபடுவதாகவே அமைந்துள்ளது. உடல் ஆசன மற்றும் பயிற்சிகளை அவற்றின் ஆன்மீக ஈடுபாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது.

இதுகுறித்து, Hinduism Today என்ற பத்திரிக்கை (April - June 2003) தனது கருத்தாக, "ஹட யோகாவை இந்து மதத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது ஒரு ஏமாற்று வேலையாகும். அநேக யோகா ஆசிரியர்கள் அதன் வேர் இந்து மதத்தில் இருப்பதையும், அதன் ஆன்மீக நோக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள்" என்று கூறித் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

உண்மைத் தெய்வத்தின் அருளால் வியாதிகள் அகலும்போது, தீய சக்திகளின் வல்லமையினாலும் வியாதிகள் விலகும் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அது ஆச்சரியமல்ல; ஏனெனில், "சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே" (2 கொரிந்தியர் 11:14). எனவே, வியாதியை நீக்குவதால் ஒருவர் தெய்வமாகிவிட முடியாது. நம்முடைய தேவனோ உண்மைத் தெய்வமாக இருப்பதினால், அவர் சரீர சுகத்தை மட்டுமல்ல, ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதுமான ஒரு பூரண தெய்வீக சுகத்தை அருளுகிறார். எனவே, "நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்" (1 யோவான் 4:1).

மேலும், அது எப்படி அந்த வேலையைச் செய்கிறது என்பது மிகவும் முக்கியம். வேதாகமத்திற்கு முரண்பாடான மந்திர சக்தியினால் அது நடைபெறுகிறதா? அப்படியெனில், அது இறுதியில் விடுதலையை அல்ல, அடிமைத்தனத்தையே கொண்டுவரும். எனவே எதையும் ஏற்றுக்கொள்முன் எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கும் மனப்பக்குவம் வேண்டும். அப்போதுதான் நலமானதைப் பிடித்துக்கொள்ள முடியும். யோகா போன்ற மாற்று மருத்துவ முறைகளில், எது நல்லது எது பொல்லாதது எனத் தெளிவாகவும் எளிதில் வரையறுக்க இயலாத நிலையில்... "பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:22) என்ற தாரக மந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். "விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே" (ரோமர் 14:23). எனவே சந்தேகத்திற்கிடமான செயல்களிலிருந்து விலகியிருப்பதுதான் நல்லது.

கிறிஸ்தவ யோகா?

சமீப காலங்களில் உடல் மற்றும் மூச்சுப் பயிற்சியையும், வேதாகம தியானத்தையும் இணைத்து 'கிறிஸ்தவ யோகா' என்று புதிதாக ஒன்று முளைத்திருக்கிறது. 'கிறிஸ்தவ யோகா' என்பது அடிப்படையிலேயே ஒரு முரண்பாடான வார்த்தை (Oxymoron). ஒருவனை 'கிறிஸ்தவ இந்து' அல்லது 'இந்து கிறிஸ்தவன்' என்று நம்மால் வர்ணிக்க இயலுமா? "ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?" (யாக்கோபு 3:11). "நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது" என்று பரிசுத்த வேதம் தெளிவாய்ப் போதிக்கிறது (மத்தேயு 7:18). எனவே யோகா என்ற மரத்தின் வேர் ஆதாரத்தை எண்ணிப்பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

"சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்... வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள்..." (மத்தேயு 10:7,8) - இதுவே பன்னிரு சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையின் வரிசை. சரீர நலனில் காட்டும் அக்கறையைக் காட்டிலும் ஆன்மீக நலனே மிகவும் முக்கியம். ஏனெனில், "சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது" (1 தீமோத்தேயு 4:8).

வேதம் நமது தியானமாகட்டும்; ஜெபம் நமது பயிற்சியாகட்டும்

வேதாகமத்தின்படியான தியானம் என்பது, பரிசுத்த வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியங்கள் எந்த அளவிற்கு நமக்குச் சம்பந்தப்பட்டவை எனச் சிந்தனை செய்து, அவற்றை நமதாக்கிக் கொள்ளுதலைக் குறிக்கிறது. தாவீதின் தியானங்கள் சங்கீதம் 119 முழுவதிலும் தெளிவாய்த் திரும்பத் திரும்ப வெளிப்படுகின்றன. வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறபடியால் (2 தீமோத்தேயு 3:16), அவை யாவும் நிச்சயமாக நமது தியானத்திற்கு உகந்தவையே. வேதத்தின் மூலம் தேவன் நம்மோடு பேசுகிறார்; ஜெபத்தின் மூலம் நாம் அவரோடு உறவாடுகிறோம்.

இக்கட்டான சூழ்நிலைகளில்கூட தானியேல், தன் மேலறையிலே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் என்பதை அறிவோம் (தானியேல் 6:10). நமது பிரச்சினைகள் எதுவாயினும் இறைவனிடம் எடுத்துக் கூறி, உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள ஜெபமே நமக்குச் சிறந்த பயிற்சியாகும்.

"போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்" (1 கொரிந்தியர் 8:13) என்று தீர்மானித்த பவுலைப் போன்று, நாமும் தெளிவு பெற்றவர்களாய் மற்ற சக விசுவாசிகளுக்கு எந்த விதத்திலும் இடறலாயிராமல், இந்தக் காரியத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம்; வழிநடத்துவோம்.

"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, அவருடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை" (ரோமர் 12:1).