மகாதேவனும் நம்முடைய இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், என்னுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு அன்பின் வாழ்த்துக்கள்.
வேதம் முன்னறிவித்தபடியே, இந்தக் கடைசி காலத்தில் பல கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி அநேக கிறிஸ்தவர்களை வஞ்சிப்பார்கள். அப்படி வஞ்சிக்கின்ற கள்ளத் தீர்க்கதரிசிகளில் முக்கியமானவர் “வில்லியம் மரியன் பிரன்ஹாம்” (William Marrion Branham) என்பவர். இவர் 1909-ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள “கென்டகி” (Kentucky) மாநிலத்தில் பிறந்தார். 1943-ல் இவர் சுகமளிக்கும் ஊழியத்தைத் (Healing Ministry) தொடங்கினார். குறுகிய காலத்திலேயே பெரும் புகழைப் பெற்ற இவர், பல நாடுகளுக்குப் பயணம் செய்தார். ஒருபுறம் கிறிஸ்தவத்திலுள்ள தவறான போதனைகளைக் கண்டிப்பவர்போலத் தோன்றினாலும், மறுபுறம் தவறான உபதேசங்களை கிறிஸ்தவ சமூகத்திற்குள் புகுத்திப் பிரபலமடைந்தார்.
ஆதித் திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எப்படியோ, அதேபோல இந்தக் கடைசி காலத் திருச்சபைக்குத் தானும் அதிகாரம் பெற்றவர் என்றும், தன்னை மக்கள் தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்றும், தன்னைப் பற்றி முன்பே வேதத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லத் தொடங்கினார்.
அவர் பிறந்தபோது, அவருடைய அறையில் ஒளி பிரகாசித்ததாகவும், அந்த ஒளி அவரது தலைக்கு மேல் நின்றதாகவும், அவர் குழந்தையாக இருந்தபோதே பறவைகள் அவரோடு பேசியதாகவும், அவருடைய ஏழாவது வயதில் ஒரு சூறாவளிக் காற்றிலிருந்து தேவன் அவருடன் பேசினார் என்றும் சொல்லி, மக்கள் மத்தியில் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக அவரே அறிவித்துக்கொண்டார். வேதத்தின் இரகசியங்களை விளக்குவதற்கு, லவோதிக்கேயா சபைக் காலத்திற்கு தேவன் தன்னை ஒரு தூதனாக அனுப்பியதாகவும் சொல்லிக்கொண்டார். ஏழு சபைக் காலங்கள், ஏழு முத்திரைகள் ஆகியவற்றைக் குறித்துப் புத்தகங்களை எழுதும்போது, ஒரு தேவதூதன் தன்னுடனே இருந்து தனக்குப் போதித்ததாகவும், தனது ஊழியப் பணி அனைத்திலும் அந்தத் தேவதூதனே தன்னை வழிநடத்துவதாகவும் சொல்லிக்கொள்வார். ஆனால் உண்மை என்னவென்றால், அவர் 1919-ல் “கிளாரன்ஸ் லார்கின்” (Clarence Larkin) வெளியிட்ட 'தி புக் ஆஃப் ரெவலேஷன்' (The Book of Revelation) என்ற புத்தகத்திலிருந்தும், “சார்லஸ் ரஸல்” (Charles Russell) எழுதிய ‘சபைக் காலங்கள்’ என்ற புத்தகத்திலிருந்தும் கருத்துக்களை எடுத்து, இந்த காரியங்களை எழுதினார் என்பதேயாகும்.
இந்தப் புதிய ஏற்பாட்டு காலத்தில், மக்களைப் பரிசுத்த ஆவியானவரே வழிநடத்துவாரே தவிர, ஒரு தேவதூதன் மூலமாக அல்ல. மேலும், "நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்" என்று தேவவசனம் எச்சரிக்கிறது (கலாத்தியர் 1:8). பிரன்ஹாமின் பல தீர்க்கதரிசனங்கள் மற்றும் தரிசனங்கள் நிறைவேறவில்லை என்றாலும், அவரைப் பின்பற்றுபவர்கள் (பிரன்ஹாமிஸ்டுகள்) தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்தனர். பிரன்ஹாம் வேதத்தை விளக்குவதில் பல வசனங்களோடு சுய கருத்துக்களைச் சேர்த்தும், பல வசனங்களை நீக்கியும் போதித்தார். அவர் தவறான பாதையில் செல்கிறார் என்றும், விரைவில் தேவன் அவரைத் தண்டிப்பார் என்றும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் எச்சரித்தாலும், அதை அவர் பொருட்படுத்தவில்லை.
இறுதியாக, 1965 டிசம்பர் 18-ஆம் தேதி, பிரன்ஹாம் காரில் பயணம் செய்கையில் விபத்துக்குள்ளாகி, தலையில் பலத்த காயமேற்பட்டுச் சுயநினைவை இழந்தார். அதே மாதம் 24-ஆம் தேதி மரணமடைந்தார். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரை நான் உயிரோடு இருப்பேன் என்று உறுதியளித்த தங்கள் தீர்க்கதரிசி, திடீரென இறந்துபோனதை அவரைப் பின்பற்றுபவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, அவர் நிச்சயமாக மீண்டும் உயிரோடு எழுவார் என்ற மூட நம்பிக்கையோடு, அவரின் உடலைச் சுமார் நான்கு மாதங்கள் அடக்கம் செய்யாமல் வைத்திருந்தனர். ஆனால் அவர் உயிரோடு எழவில்லை; இனி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என உணர்ந்தபின், 1966 ஏப்ரல் 11-ஆம் தேதி அவருடைய உடலை அடக்கம் செய்தனர். அவர் எழுதிய புத்தகங்களையும், அவரது பிரசங்க உரைகளின் பதிவுகளையும் உலகம் முழுவதும் அவரைப் பின்பற்றுபவர்கள் பரப்பி வருகின்றனர்.
ஒருமுறை விளையாட்டு அரங்கில் அவரைப் புகைப்படம் எடுத்தபோது, அவருக்குப் பின்னால் இருந்த மின்விளக்கு வெளிச்சத்தினால் ஒரு நிழல் போன்ற வடிவம் (Halo) தோன்றியது. பெரும்பாலான புகைப்படங்களில் ஒளி பிரதிபலிப்பு அப்படித்தான் வரும். அந்தப் புகைப்படத்தை எடுத்த “டக்ளஸ் ஸ்டுடியோ” நிறுவனர், விளக்கு வெளிச்சம் காரணமாகவே அப்படித் தோன்றியது என்று பிரன்ஹாமிற்கு விளக்கம் அளித்துக் கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும், அது தன்னைப் பின்தொடரும் 'அக்கினித் தூண்' என்று பிரன்ஹாம் நம்ப வைத்தார். பிரன்ஹாமின் எத்தனையோ புகைப்படங்கள் உள்ளன; ஆனால் அந்தப் புகைப்படங்களைத் தவிர மற்றவற்றில் இந்த அக்கினித் தூண் ஏன் காணப்படவில்லை? கண்ணால் பார்க்க முடியாத அமானுஷ்யத்தை எப்படிக் கேமராவால் படம் பிடிக்க முடிந்தது? இதற்கு முன் எந்தத் தீர்க்கதரிசியையாவது அக்கினித் தூண் பின்தொடர்ந்ததா? இதைப் பற்றி யோசிக்காமல், அவரைப் பின்பற்றுவோர் அந்தப் புகைப்படத்தைத் தங்கள் வீடுகளில் வைத்து வணங்குகிறார்கள்.
மல்கியா 4:5,6 வசனங்களில் சொல்லப்பட்ட எலியா நான்தான் என்று அவர் கூறிக்கொள்கிறார். யோவான் ஸ்நானகன் இந்தத் தீர்க்கதரிசனத்தின் பாதியை மட்டுமே நிறைவேற்றியதாகவும், மற்றொரு பாதியை நிறைவேற்ற எலியாவின் ஆவியோடு தான் வந்ததாகவும் கூறுகிறார். சொல்லப்போனால், அந்தத் தீர்க்கதரிசனம் யோவான் ஸ்நானகனில் முழுமையாக நிறைவேறியது. காபிரியேல் தூதன் கூறுவதைக் கவனியுங்கள்: "அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்" (லூக்கா 1:16,17). இயேசுவும், "நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்" (மத்தேயு 11:14) என்று யோவானைக் குறித்துச் சாட்சி பகர்கிறார்.
வெளிப்படுத்துதல் 10:7-ல் குறிப்பிடப்பட்டுள்ள "ஏழாம் தூதன் பேசும் நாட்களில்" என்ற வசனத்தைச்சுட்டிக்காட்டி, அந்த ஏழாவது தூதன் நானே என்று பிரன்ஹாம் கூறினார். ஆனால் அந்தத் தூதன், வானத்தில் எக்காளங்களை வைத்திருக்கும் ஏழு தேவதூதர்களில் கடைசியானவர் ஆவார். பிரன்ஹாம் ஆரம்பத்தில் தன்னை யோவான் ஸ்நானகன் என்று சொன்னார்; பின்னர் பலர் அவரைப் பின்தொடர ஆரம்பித்ததும், தன்னை எலியாவின் ஆவி உடைய தீர்க்கதரிசி என்று அழைத்துக்கொண்டார். 1964 முதல், பிரன்ஹாம் அதிகமான கள்ளப் போதனைகளைச் சொல்லத் தொடங்கினார். லூக்கா 17:30-ல் "மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலேயும்" என்றுள்ளதை, தனக்காகவே எழுதப்பட்டது என்று கூறினார். சுமார் 32 முறை அவர் தன்னை மனுஷகுமாரன் என்று சொல்லிக்கொண்டார். மத்தேயு 24:24-ல் பல கள்ளக் கிறிஸ்துகள் வருவார்கள் என்று கர்த்தர் முன்னறிவித்ததைப் போலவே, மற்றொரு கள்ளக் கிறிஸ்துவாகப் பிரன்ஹாம் வந்தார். உலகம் முழுவதும் தற்போது சுமார் ஐந்து மில்லியன் மக்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள். இவர்கள் கிறிஸ்தவர்களைப் பிரன்ஹாமைப் பின்பற்றுபவர்களாக மாற்றுவதற்கு இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.
ஏதேன் தோட்டத்தில் சாத்தானும் ஏவாளும் உடல் ரீதியாக உறவு கொண்டதால் காயீன் பிறந்தான் என்றும் (Serpent Seed), தீர்க்கதரிசியாகிய தன்னை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும் என்றும், பிரன்ஹாம் புறஜாதிகளுக்காக வந்த மேசியா என்றும் போதிக்கிறார்கள். இவர்களுடைய சபைகள் 'செய்தி சபைகள்' (Message Churches) என்று அழைக்கப்படுகின்றன. இவர்களுடைய சபைகளில் வேதாகமத்தைவிட அவருடைய போதனைகளே அதிகமாகப் பிரசங்கிக்கப்படுகின்றன. அங்கே இயேசுகிறிஸ்துவைவிட அதிகமாக அவரையே மேன்மைப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்து தேவனல்ல என்று சொன்னால்கூடச் சகித்துக் கொள்வார்கள், ஆனால் பிரன்ஹாம் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இவர்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்.