நவம்பர் 2 கொண்டாடப்படும் கல்லறைத் திருநாள் சரியானதா? உத்தரிக்கிற ஸ்தலம் என்ற ஒன்று உண்டா?
இவை மிகவும் முக்கியமான கேள்விகள். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டும், இது குறித்த தெளிவான வேத அறிவு இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரிய ஒரு காரியம். என்னுடைய சிறுவயதில் நான் சென்ற சபை ரோமன் கத்தோலிக்கப் பாரம்பரியத்தோடு தொடர்பில்லாததாக இருந்தாலும், அங்கிருந்த விசுவாசிகளுக்கு இந்தக் காரியங்களில் போதிய வேத அறிவு இல்லாமலே இருந்தது. "மரணத்திற்குப் பிறகு நாம் நேராகப் பரலோகம் செல்லாமல், இடையில் தூய்மை பெறும் இடத்தில் (Purgatory) தங்கிவிடுகிறோம்" என்ற தவறான நம்பிக்கை ரோமன் கத்தோலிக்கர்களைப் போலவே அநேக கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இந்தக் கட்டுரையின் நோக்கம், உண்மையில் மரணத்திற்குப் பின்பு அப்படி ஒரு இடம் உண்டா என்பதை வேதத்தின் அடிப்படையில் ஆராய்வதே ஆகும்.
அக்டோபர் 31-ம் தேதி சீர்திருத்த நாள் கொண்டாடப்பட்டது. இது கி.பி. 1517-ல் மார்ட்டின் லூத்தர் தனது 95 கொள்கை விளக்கங்களை (95 Theses) வெளியிட்டதை நினைவுகூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்நாள் சீர்திருத்தத் திருச்சபையின் (Protestant Reformation) தொடக்கத்தைக் குறிக்கிறது. நவம்பர் இரண்டாம் தேதி கொண்டாடப்படும் கல்லறைத் திருநாளுக்கு முன்பாக, ரோமன் கத்தோலிக்க சபையில் இருந்த லூத்தர் இந்தச் செயலைச் செய்ததால் அன்று பெரும் சர்ச்சையும் விவாதமும் உண்டானது. அன்று அநேகருடைய கண்கள் திறக்கப்பட்டு, ரோமன் கத்தோலிக்க சபையின் இந்தப் பாரம்பரியம் எந்த அளவிற்கு வேதத்திற்கு முரணானது என்பது எடுத்துக்காட்டப்பட்டது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் யாரையும் குற்றப்படுத்துவதோ அல்லது விமர்சிப்பதோ அல்ல. மாறாக, மனிதன் இந்த உலகத்தில் மறைந்த பிறகு அவனுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சுருக்கமாக அறிவிப்பதே ஆகும். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த விஷயத்தில் தெளிவோடு இருப்பது அவசியம். ஏனெனில், தவறான நம்பிக்கை இருக்கும்போது பரிசுத்தமாக வாழ்வதைப் பற்றியும், ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பைப் பற்றியும் தவறான புரிதலோடு வாழ நேரிடும். தேவன் படைத்த உலகத்தில் மனிதன் ஒருமுறை பிறக்கிறான். அவன் மரித்த உடனே தேவனுடன் பரலோகத்திற்கோ, அல்லது தேவன் இல்லாத நரகத்திற்கோ சென்று விடுகிறான். அவன் இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு முற்றிலுமாக கீழ்ப்படிந்து வாழ வேண்டும். இது மட்டுமே அவனுக்குக் கொடுக்கப்பட்ட கடமை. தேவனால் படைக்கப்பட்ட அனைத்துப் படைப்புகளுக்கும் இதுவே நிபந்தனை. இது மட்டுமே வேதம் விளக்குகின்ற சத்தியம். இதற்கு மேல் சொல்லப்படுகிற அனைத்தும் மனிதனின் கற்பனையில் உதித்தவையே; அதற்கும் வேதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
கல்லறைத் திருநாள் என்றால் என்ன?
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் நம்பிக்கையின்படி, மரிக்கும் வேளையில் தேவனுடன் உறவில் இருந்தும், பரலோகம் செல்லத் தகுதியற்றவர்களாக இருப்பவர்கள், சிறிது காலம் காத்திருந்து தூய்மை பெற்று முதிர்ச்சியடையத் தேவனால் அளிக்கப்படும் வாய்ப்பு நிலையினைத் 'தூய்மை பெறும் நிலை' அல்லது 'உத்தரிப்பு நிலை' அல்லது 'உத்தரிக்கிற ஸ்தலம்' என்கிறார்கள்.
இந்த நிலையில் இருப்போர் தங்கள் பாவங்களுக்கு உரிய வேதனையை அனுபவித்துத் தூய்மை அடைவார்கள் எனவும், முற்றிலும் தூய்மை அடைந்த பிறகு பரலோகம் செல்வார்கள் எனவும் கத்தோலிக்கர்கள் நம்புகின்றனர். இத்தகையோருக்குக் கத்தோலிக்கத் திருச்சபையினர், இவ்வுலகில் இருந்து தங்களின் மன்றாட்டினால் உதவிட முடியும் எனவும் நம்புகின்றனர். நவம்பர் மாதம் முழுவதும் இந்த நிலையில் இருப்போருக்காகக் கத்தோலிக்கர்கள் சிறப்பாக மன்றாடுகின்றனர். குறிப்பாக, மரித்துப்போன விசுவாசிகள் அனைவரின் நினைவு நாளன்று அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று மன்றாடுவது வழக்கமாய் உள்ளது. மரித்த அவர்களை தேவன் ஏற்றுக்கொள்ளும்படியாக அவர்களுக்குப் பதிலாக அநேக நற்காரியங்களை இங்கே செய்கிறார்கள்.
கல்லறைத் திருநாளை முதன்மையாக நிறுவியவர் 'கிளூனி' மடத்தின் துறவியான புனித ஒடிலோ ஆவார். இவர் கி.பி. 998-ஆம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதியை மரித்த விசுவாசிகளுக்காகப் பிரார்த்தனை செய்யும் நாளாக அறிவித்தார். அவர் ஏன் இதை அறிவித்தார் என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் அதற்குப் பல அர்த்தங்களைக் கொடுத்துப் பல காரியங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதன் தாக்கமானது ரோமன் கத்தோலிக்கச் சபையையும் தாண்டிப் பிற கிறிஸ்தவப் பிரிவுகளிலும் இருக்கிறது.
ஏன் இது கிறிஸ்தவத்திற்கு எதிரானது?
தேவன் கொடுத்த வேதத்தில் நம்முடைய இரட்சிப்புக்குத் தேவையான அனைத்தும் மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும், அழகாகவும் விளக்கப்பட்டிருக்கின்றன. நாம் கருத்துடன், தாழ்மையோடும் விசுவாசத்தோடும் வாசிக்கும்போது, தேவன் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்கு விளங்கச் செய்கிறார். வேதம் மரணத்தைப் பற்றிச் சொல்லும்போது, அது மனிதனுக்கு 'ஒரே தரம்' தான் என்கிறது. மரித்த உடனே விசுவாசிகள் பரலோகத்திற்குச் செல்கிறார்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசியாத, தேவபயம் இல்லாத மனிதர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள். “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” (எபிரெயர் 9:27) என்று வேதத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் நம்புவது போல மரித்தவர்களுக்காக ஜெபிப்பதோ, அல்லது மரித்தவர்களுக்காக நற்காரியங்கள் செய்வதோ தவறு. இச்செயல் வேதத்திற்கு முரணானது.
வேதம் தெளிவாக விளக்குவது என்னவென்றால், ஒரு மனிதன் இந்த உலகத்தில் உயிரோடு வாழும்போதே பிதாவாகிய தேவன் இரட்சிப்பிற்காக ஏற்படுத்தியிருக்கும் ஒரே வழியாகிய கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து, தன்னுடைய பாவத்தை அவரிடம் அறிக்கையிட்டு, பாவத்திலிருந்து மனந்திரும்பித் தொடர்ச்சியாகப் பரிசுத்தத்தில் வளர்ந்து வாழ்வதாகும். இந்தக் காரியம் மனிதன் இந்த உலகத்தில் கண்ணை மூடுவதற்கு முன்பாக நடைபெற வேண்டிய ஒன்று. நாம் மரித்த பிறகு உத்தரிக்கிற ஸ்தலத்தில் பரிசுத்தமாகிக்கொள்ளலாம் என்று நினைப்பது முற்றிலும் தவறு. இது சாத்தான் ஏற்படுத்தியிருக்கும் கள்ளப்போதனை. இந்தத் தவறான போதனை நம்மைப் பரிசுத்தத்தின் பாதையில் தடுமாறச் செய்து, பாவத்தோடு சமரசம் செய்ய வைக்கிறது. எனவே, வேதத்தின் அடிப்படையில் இது முற்றிலும் தவறான செயல்.
முடிவாக என்ன செய்யலாம்?
மெய்யாகவே பரலோகம் சென்றடைய வேண்டும் என்ற உங்களின் வாஞ்சை சரியானது. ஆனால் அதைச் சரியான வழியில் செய்கிறோமா என்பதே எனது கேள்வி. ஆரோனின் குமாரர்களும் இஸ்ரவேலின் ஆசாரியர்களுமான நாதாபும் அபியூவும் தங்கள் சொந்தத் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு, கர்த்தருக்கு முன்பாக அங்கீகரிக்கப்படாத அந்நிய அக்கினியையும் தூபத்தையும் செலுத்தினார்கள். தேவன் கட்டளையிட்டபடி அவர்கள் அந்தக் காரியத்தைச் செய்யாததால், தேவன் அவர்களை அங்கேயே அழித்தார்.
நீங்களும் நானும் கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களாக இருப்பதால் வேதம் என்ன சொல்கிறதோ அதற்குக் கீழ்ப்படிவது அவசியம். ரோமன் கத்தோலிக்கச் சபையோ அல்லது கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் இருந்து சொல்லுகிற பாரம்பரியங்களோ, சடங்குகளோ வேதத்திற்கு முரணாக இருக்கும்போது அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.
நாம் செய்கின்ற சடங்குகளும் நற்காரியங்களும் ஒருநாளும் நமக்கு இரட்சிப்பைப் பெற்றுத்தராது. இந்தக் காரியங்கள் தேவனைத் திருப்திப்படுத்தாது. நான் எவ்வளவுதான் நற்காரியங்கள் செய்தாலும் அதற்கு முடிவு என்ற ஒன்று கிடையவே கிடையாது. அப்படி இருக்கும்போது, தேவன் எதிர்பார்க்கிற முழுமையான நீதியையும் பரிசுத்தத்தையும் என்னிலிருந்து எப்படி நானே கொண்டுவர முடியும்? இதற்காகவே நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம். நமக்காக அவர் சிலுவையில் தேவனுடைய கோபத்தை ஏற்றுக்கொண்டு பாவமாகிச் சாபமானார். இந்த உலகத்தில் வாழ்ந்தபோது தேவன் எதிர்பார்க்கிற முழுமையான நீதியுள்ள வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். அதன் மூலமாகத் தேவன் எதிர்பார்க்கிற முழுமையான நீதியைச் சம்பாதித்தார். அவரை விசுவாசிக்கிற நமக்கு அதை இலவசமாகத் தருகிறார். நாம் இறந்தவர்களுக்காக என்ன நன்மை செய்தாலும் அவர்களை இரட்சிக்க முடியாது. அது அவர்களைப் பரலோகம் கொண்டு சேர்க்காது.
அநேகர் இது தவறு என்று தெரிந்தும் சடங்காச்சாரமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருவேளை உண்மையாகவே உங்களுக்கு அவர்கள்மீது அக்கறை இருந்தால், அவர்கள் இந்த உலகத்தில் வாழும்போதே இரட்சிப்பின் நற்செய்தியை அவர்களுக்குச் சொல்லுங்கள். அந்த நற்செய்திக்குக் கீழ்ப்படியும்படி அவர்களை வருந்தி அழையுங்கள். மரித்த பிறகு அவர்களுக்கு உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.
தீமையான பாரம்பரியங்களைத் தவிர்த்து, வேதம் மட்டுமே விளக்குகிற காரியங்களை விசுவாசத்தோடு செய்யப் பழகுங்கள். கர்த்தர் உங்களுக்கு இந்தக் காரியங்களில் மேலும் தெளிவான வேத அறிவைத் தருவாராக... ஆமென்.