வேறொரு சுவிசேஷம்
படிப்புகள்: 470
Print
ஆசிரியர்: ஆர்தர் W. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 12 நிமிடங்கள்

சாத்தான் எதையும் புதிதாகத் துவக்குகிறவன் (Initiator) அல்ல, அவன் போலியாகப் பாவனை செய்கிறவன் (Imitator). தேவனுக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்கிற ஒரே பேறான குமாரன் இருப்பது போல, சாத்தானுக்கும் "கேட்டின் மகன்" இருக்கிறான் (2 தெசலோனிக்கேயர் 2:3). ஒரு பரிசுத்த திரித்துவம் (Holy Trinity) இருப்பதைப் போலவே, தீமையின் திரித்துவமும் (Trinity of Evil) இருக்கிறது (வெளிப்படுத்தல் 20:10). நாம் "தேவனுடைய பிள்ளைகள்" என்று வாசிப்பது போலவே, "பொல்லாங்கனுடைய பிள்ளைகள்" என்பதைக் குறித்தும் வாசிக்கிறோம் (மத்தேயு 13:38). தேவன் முந்தினவர்களிடத்தில், தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குகிறவராயிருப்பது போல, கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆவி சாத்தானே (எபேசியர் 2:2). "தேவபக்தியின் இரகசியம்" (1 தீமோத்தேயு 3:16) இருப்பது போல, "அக்கிரமத்தின் இரகசியமும்” (2 தெசலோனிக்கேயர் 2:7) உள்ளது. தேவன் தம்முடைய தூதர்களைக் கொண்டு தம் ஊழியர்களை நெற்றிகளில் "முத்திரையிடுவது" போல (வெளிப்படுத்தல் 7:3), சாத்தானும் தன்னைப் பின்பற்றுகிறவர்களின் நெற்றியில் தன் முகவர்களால் முத்திரையிடுகிறான் (வெளிப்படுத்தல் 13:16). "ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்" (1 கொரிந்தியர் 2:10) என்று நாம் அறிகிறோம்; அதேபோல சாத்தானும் அவனுடைய "ஆழங்களை" வைத்திருக்கிறான் (வெளிப்படுத்தல் 2:24). கிறிஸ்து அற்புதங்களைச் செய்தது போல, சாத்தானும் செய்கிறான் (2 தெசலோனிக்கேயர் 2:9). கிறிஸ்து சிங்காசனத்தில் வீற்றிருப்பது போல, சாத்தானுக்கும் ஒரு சிங்காசனம் உண்டு (வெளிப்படுத்தல் 2:13). கிறிஸ்துவுக்கு ஒரு சபை இருப்பது போல, சாத்தானுக்கும் ஒரு "சின்னாகோகம்" (சாத்தானுடைய கூட்டம்) உண்டு (வெளிப்படுத்தல் 2:9). கிறிஸ்து உலகத்திற்கு ஒளியாக இருப்பது போல, சாத்தானும் "ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்கிறான்" (2 கொரிந்தியர் 11:14). கிறிஸ்து அப்போஸ்தலர்களை நியமித்தது போல, சாத்தானுக்கும் அப்போஸ்தலர்கள் உள்ளனர் (2 கொரிந்தியர் 11:13). இவை அனைத்தும் "சாத்தானின் சுவிசேஷத்தைப்" பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

சாத்தான் ஒரு தலைசிறந்த ஏமாற்றுக்காரன் (Arch-counterfeiter). ஆண்டவர் நல்ல விதைகளை விதைத்த அதே வயலில் பிசாசும் மும்முரமாக வேலை செய்கிறான். கோதுமையைப் போலவே தோற்றமளிக்கும் களைகளை விதைத்து, அவன் கோதுமையின் வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறான். ஒரே வார்த்தையில் சொல்வதானால், போலியாகப் பாவனை செய்வதன் மூலம் கிறிஸ்துவின் பணியைச் சீர்குழைப்பதே அவனது நோக்கம். எனவே, கிறிஸ்துவுக்கு ஒரு சுவிசேஷம் இருப்பது போல, சாத்தானுக்கும் ஒரு சுவிசேஷம் இருக்கிறது; சாத்தானின் சுவிசேஷம், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு போலி வடிவமாகும். அது உண்மையான சுவிசேஷத்தை மிக நெருக்கமாக ஒத்திருப்பதால், இரட்சிக்கப்படாத திரளான மக்கள் அதன் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள்.

இந்தச் சாத்தானின் சுவிசேஷத்தைக் குறித்தே அப்போஸ்தலன் கலாத்தியருக்கு எழுதும்போது குறிப்பிடுகிறார்: "கிறிஸ்துவினுடைய கிருபையினாலே உங்களை அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல" (கலாத்தியர் 1:6,7). இந்தப் பொய்யான சுவிசேஷம் அப்போஸ்தலர்களின் காலத்திலேயே பிரசங்கிக்கப்பட்டது; அதைப் பிரசங்கித்தவர்கள் மீது மிகக் கடுமையான சாபம் கூறப்பட்டது. அப்போஸ்தலன் தொடர்ந்து, "நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்" (கலாத்தியர் 1:8) என்று கூறுகிறார். தேவனின் உதவியோடு, இந்தப் பொய்யான சுவிசேஷத்தை நாம் இப்போது விளக்கிக்காட்ட அல்லது அம்பலப்படுத்த முயற்சிப்போம்.

சாத்தானின் சுவிசேஷம் புரட்சிகரமான கொள்கைகளைக் கொண்டதோ அல்லது அராஜகவாதத் திட்டமோ அல்ல. இது போரையோ சண்டையையோ வளர்ப்பதில்லை; மாறாக, ஒற்றுமையையும் சமாதானத்தையும் குறிக்கோளாகக் கொண்டது. இது தாயை மகளுக்கு விரோதமாகவும், தகப்பனை மகனுக்கு விரோதமாகவும் பிரிப்பதில்லை; மாறாக, மனுக்குலத்தை ஒரு பெரிய "சகோதரத்துவமாக" (Brotherhood) கருதி சகோதர உணர்வை வளர்க்கிறது. இது சுபாவ மனிதனை (Natural man) கீழே தள்ளுவதில்லை; மாறாக, அவனை மேம்படுத்தவும் உயர்த்தவும் முயல்கிறது. இது கல்வியையும் பண்பாட்டையும் ஆதரிப்பதோடு, "நமக்குள் இருக்கும் சிறந்த பண்புகளை" வெளிக்கொணரத் தூண்டுகிறது. கிறிஸ்து இல்லாதது உணரப்படாதபடியும், தேவனின் தேவையே இல்லாதபடியும், இந்த உலகத்தை ஒரு வசதியான, இன்பகரமான வாழ்விடமாக மாற்றுவதே இதன் நோக்கம். மனிதனை இவ்வுலகக் காரியங்களில் மூழ்கடித்து, வரப்போகும் உலகத்தைக் குறித்துச் சிந்திக்க அவனுக்கு நேரமோ, விருப்பமோ இல்லாதபடிச் செய்ய அது முயல்கிறது. இது சுய தியாகம், தர்மம் மற்றும் தயாள குணத்தைப் பரப்புகிறது; பிறர் நன்மைக்காக வாழவும், அனைவரிடமும் அன்பாக இருக்கவும் போதிக்கிறது. இது மாம்ச சிந்தைக்கு (Carnal mind) மிகவும் பிடித்தமானதாக இருப்பதால் மக்களிடையே பிரபலமாக உள்ளது. ஏனெனில், மனிதன் இயற்கையிலேயே வீழ்ச்சியடைந்தவன், தேவனுடைய ஜீவனுக்கு அந்நியனானவன், அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்தவன், அவனது ஒரே நம்பிக்கை "மறுபடியும் பிறப்பதில்" (Born again) மட்டுமே உள்ளது எனும் அடிப்படை உண்மைகளை இச்சுவிசேஷம் புறக்கணிக்கிறது.

கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு நேர்மாறாக, சாத்தானின் சுவிசேஷம் கிரியைகளினால் உண்டாகும் இரட்சிப்பைப் போதிக்கிறது. மனிதனின் நற்செயல்களின் அடிப்படையில் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படலாம் என்று இது கற்பிக்கிறது. "நல்லவனாக இரு, நன்மை செய்" என்பதே இதன் தாரக மந்திரம்; ஆனால் மாம்சத்தில் நன்மை ஏதும் வாசம் பண்ணுவதில்லை என்பதை இது அறியத் தவறிவிட்டது. இது நற்பண்புகளினால் இரட்சிப்பு உண்டாகும் என்று அறிவிக்கிறது; ஆனால் தேவனுடைய வார்த்தையின் வரிசைமுறையோ, இரட்சிப்பின் கனியாகவே நற்பண்புகள் உருவாகும் என்பதாகும். இந்தத் தவறான சுவிசேஷத்தின் கிளைகளும் அமைப்புகளும் பலவிதம். மதுவிலக்கு இயக்கங்கள், சீர்திருத்த இயக்கங்கள், "கிறிஸ்தவ சமூகக் கழகங்கள்", பண்பாட்டுக் கலாச்சார அமைப்புகள், "சமாதான மாநாடுகள்" போன்றவை அனைத்தும் (ஒருவேளை அறியாமலேயே) சாத்தானின் இந்தச் சுவிசேஷத்தை—அதாவது கிரியைகளினால் இரட்சிப்பு என்பதை—அறிவிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. கிறிஸ்துவுக்குப் பதிலாக 'உறுதிமொழி அட்டை' (Pledge-card) வைக்கப்படுகிறது; தனிப்பட்ட மறுபிறப்புக்குப் பதிலாகச் சமூகத் தூய்மை வைக்கப்படுகிறது; உபதேசம் மற்றும் தேவபக்திக்குப் பதிலாக அரசியல் மற்றும் தத்துவங்கள் வைக்கப்படுகின்றன. கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய மனிதனை சிருஷ்டிப்பதற்குப் பதிலாக, பழைய மனிதனைப் பண்படுத்துவதே நடைமுறைக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. "சமாதானப் பிரபு" (Prince of Peace) இல்லாமல் உலகளாவிய சமாதானத்தை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சாத்தானின் அப்போஸ்தலர்கள் மதுக்கடை நடத்துபவர்களோ அல்லது பாலியல் தொழில் தரகர்களோ அல்ல; அவர்களில் பெரும்பாலோர் அபிஷேகம் பண்ணப்பட்ட போதகர்களே (Ordained ministers). நவீனப் பிரசங்க மேடைகளை ஆக்கிரமித்துள்ள ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை சத்தியங்களைப் போதிப்பதில்லை; அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகி, கட்டுக்கதைகளுக்குச் செவிகொடுக்கிறார்கள். பாவத்தின் பயங்கரத்தை வெளிப்படுத்தி, அதன் நித்திய விளைவுகளை எடுத்துரைப்பதற்குப் பதிலாக, பாவம் என்பது வெறும் அறியாமை அல்லது நன்மை இல்லாத நிலை என்று கூறி அதை அற்பமாக்குகிறார்கள். "வரப்போகும் கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ளுங்கள்" என்று கேட்பவர்களை எச்சரிப்பதற்குப் பதிலாக, தேவன் மிகவும் அன்பானவர், இரக்கமுள்ளவர், அதனால் அவர் தம்முடைய படைப்புகளில் யாரையும் நித்திய நரகத்திற்கு அனுப்பமாட்டார் என்று கூறி தேவனைப் பொய்யராக்குகிறார்கள். "இரத்தம் சிந்துதலில்லாமல் மன்னிப்பு இல்லை" என்று அறிவிப்பதற்குப் பதிலாக, அவர்கள் கிறிஸ்துவை ஒரு சிறந்த முன்மாதிரியாக மட்டுமே காட்டி, "அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்" என்று அறிவுறுத்துகிறார்கள். இவர்களைக் குறித்து வேதம் சொல்லுகிறது: "தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்" (ரோமர் 10:3). அவர்களுடைய செய்தி கேட்பதற்கு மிகவும் ஏற்கத்தக்கதாகவும், நோக்கம் பாராட்டுக்குரியதாகவும் தோன்றலாம். ஆனால் இவர்களைக் குறித்தே வேதம் எச்சரிக்கிறது: "அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்" (2 கொரிந்தியர் 11:13-15).

இன்று நூற்றுக்கணக்கான சபைகளில் தேவனின் முழுமையான ஆலோசனையை விசுவாசத்துடன் அறிவிக்கும் தலைவர்களும், அவருடைய இரட்சிப்பின் வழியைத் தெளிவாக விளக்கும் போதகர்களும் இல்லை. அதுமட்டுமின்றி, அச்சபைகளில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தாங்களாகவே சத்தியத்தைக் கற்றுக்கொள்வது அரிது என்கிற உண்மையையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். குடும்பங்களில் "குடும்ப பலிபீடம்" (Family altar) அல்லது வேதம் வாசித்து ஜெபிக்கும் பழக்கம், பெயரளவிலான கிறிஸ்தவர்களின் வீடுகளில் கூட, கடந்த கால விஷயமாகிவிட்டது. வேதாகமம் பிரசங்க மேடையில் விளக்கப்படுவதில்லை, சபையிலும் வாசிக்கப்படுவதில்லை. இந்த அவசரயுகத்தின் தேவைகள் மிக அதிகமாக இருப்பதால், திரளான ஜனங்களுக்கு தேவனைச் சந்திக்கத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள நேரமோ, விருப்பமோ இல்லை. எனவே, வேதத்தைத் தாங்களே ஆராய்ந்து பார்க்கச் சோம்பல்பட்டு இருக்கும் பெரும்பான்மையான மக்கள், தங்களுக்காக வேதாராய்ச்சியைச் செய்யும்படி தாங்கள் சம்பளம் கொடுக்கும் பிரசங்கிமார்களின் தயவை நாடியிருக்கிறார்கள்; ஆனால் அந்தப் பிரசங்கிமார்களோ தேவனுடைய வார்த்தையைப் போதிக்காமல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பிரசங்கித்துத் தங்கள் பொறுப்பைத் தவறவிடுகிறார்கள்.

நீதிமொழிகள் 14:12-ல் நாம் வாசிக்கிறோம்: "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்." இந்த "மரணத்திற்கு" இட்டுச் செல்லும் வழியே பிசாசின் மாயை—அதாவது சாத்தானின் சுவிசேஷம். இது மனித முயற்சிகளால் அடையும் இரட்சிப்பாகும். இது "சரியானதாகத் தோன்றும்" ஒரு வழி; அதாவது, இது சுபாவ மனிதனுக்குப் பிடிக்கும் வகையில் நயமான வார்த்தைகளால் முன்வைக்கப்படுகிறது. இது மிகவும் தந்திரமாகவும், கவர்ச்சிகரமாகவும் சொல்லப்படுவதால், கேட்பவர்களின் புத்திக்கு இது சரியானதாகப் படுகிறது. இது மதச்சார்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாலும், (தனக்குத் தேவைப்படும்போது மட்டும்) வேத வசனங்களை மேற்கோள் காட்டுவதாலும், உயர்ந்த இலட்சியங்களை மனிதர்களுக்கு முன் வைப்பதாலும், இறையியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களால் பிரசங்கிக்கப்படுவதாலும், எண்ணற்ற மக்கள் இதனால் கவரப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள்.

ஒரு கள்ள நோட்டு அடிப்பவனின் வெற்றி, அந்தக் கள்ள நோட்டு உண்மையான நோட்டை எந்த அளவுக்கு ஒத்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. 'துர் உபதேசம்' (Heresy) என்பது சத்தியத்தை முழுமையாக மறுப்பது அல்ல, மாறாக அதைத் திரித்துக் கூறுவதாகும். அதனால்தான் முழுப் பொய்யை விட, பாதியளவு பொய் கலந்த உண்மை மிகவும் ஆபத்தானது. பொய்களின் பிதாவாகிய சாத்தான் பிரசங்க மேடையில் ஏறும்போது, கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைகளைத் தட்டையாக மறுப்பதில்லை; மாறாக, அவற்றை மேலோட்டமாக ஏற்றுக்கொண்டு, பின்னர் அதற்குத் தவறான விளக்கத்தையும், பொய்யான பயன்பாட்டையும் கொடுக்கிறான். உதாரணமாக: அவன் ஒரு உயிருள்ள தேவன் இருக்கிறார் என்பதை மறுக்கும் அளவுக்கு முட்டாள் அல்ல; அவர் இருப்பதை ஏற்றுக்கொண்டு, அவருடைய குணாதிசயங்களைப் பற்றித் தவறான விளக்கத்தைக் கொடுக்கிறான். தேவன் எல்லா மனிதர்களுக்கும் "ஆவிக்குரிய பிதா" என்று அவன் அறிவிக்கிறான்; ஆனால் வேதமோ, "கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால்" மட்டுமே நாம் தேவனுடைய புத்திரராயிருக்கிறோம் என்றும் (கலாத்தியர் 3:26), "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" என்றும் தெளிவாகக் கூறுகிறது (யோவான் 1:12).

மேலும், தேவன் மிகவும் இரக்கமுள்ளவர், அவர் மனித இனத்தில் யாரையும் நரகத்திற்கு அனுப்பமாட்டார் என்று சாத்தான் கூறுகிறான்; ஆனால் தேவனோ, "ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாய்க் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்" என்று சொல்லியிருக்கிறார் (வெளிப்படுத்தல் 20:15). மீண்டும், மனித வரலாற்றின் மைய நாயகரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் புறக்கணிக்கும் அளவுக்குச் சாத்தான் முட்டாள் அல்ல; மாறாக, அவரே இதுவரை வாழ்ந்ததிலேயே சிறந்த மனிதர் என்று அவனது சுவிசேஷம் ஒப்புக்கொள்கிறது. அவருடைய கருணைச் செயல்கள், இரக்கத்தின் பணிகள், குணத்தின் அழகு மற்றும் போதனைகளின் மேன்மை ஆகியவை முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அவருடைய வாழ்க்கை புகழப்படுகிறது, ஆனால் அவருடைய "பதிலீடான மரணம்" (Vicarious Death) புறக்கணிக்கப்படுகிறது; சிலுவையின் மிக முக்கியமான பரிகார வேலை ஒருபோதும் குறிப்பிடப்படுவதில்லை. அவர் கல்லறையிலிருந்து சரீரத்தோடு உயிர்த்தெழுந்தது ஒரு மூடநம்பிக்கை என்று கருதப்படுகிறது. இது ஒரு "இரத்தமற்ற சுவிசேஷம்" (Bloodless gospel), இது "சிலுவையற்ற கிறிஸ்துவை" (Crossless Christ) முன்வைக்கிறது. இங்கே கிறிஸ்து மாம்சத்தில் வந்த தேவனாக ஏற்றுக்கொள்ளப்படாமல், வெறுமனே ஒரு சிறந்த மனிதராக (Ideal Man) மட்டுமே பார்க்கப்படுகிறார்.

2 கொரிந்தியர் 4:3,4 வசனங்கள் நமது தற்போதைய கருப்பொருளின் மீது மிகுந்த வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன: "எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் (சாத்தான்) அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஒளியை மறைப்பதன் மூலம் அவன் அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்குகிறான்; தனது சொந்த சுவிசேஷத்தை அதற்குப் பதிலீடாக வைப்பதன் மூலம் இதைச் செய்கிறான். "உலகம் அனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும்" (வெளிப்படுத்தல் 12:9) அவன் அழைக்கப்படுவது பொருத்தமே. மனிதனுக்குள் இருக்கும் "சிறந்ததை" வெளிக்கொண்டு வாருங்கள் என்று கேட்பதன் மூலமும், "உன்னதமான வாழ்க்கையை வாழுங்கள்" என்று அறிவுறுத்துவதன் மூலமும், பல்வேறு கருத்துக்களைக் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய ஒரு பொதுவான மேடையை அவன் அமைத்துக் கொடுக்கிறான்.

மீண்டும் நீதிமொழிகள் 14:12-ஐ நினைவுகூருவோம்: "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்." நரகத்திற்கான பாதை நல் எண்ணங்களால் (Good intentions) போடப்பட்டுள்ளது என்று சொல்லப்படுவதுண்டு, அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. அக்கினிக் கடலில் அநேகர் இருப்பார்கள்—அவர்கள் வாழ்க்கையை நல்ல நோக்கத்துடனும், நேர்மையான தீர்மானத்துடனும், உயர்ந்த இலட்சியங்களுடனும் தொடங்கியவர்கள்; தங்கள் வியாபாரத்தில் நியாயமாகவும், தங்கள் வழிகளில் தர்மசிந்தையுடனும் இருந்தவர்கள்; தங்கள் உத்தமத்தைக் குறித்துப் பெருமை பாராட்டியவர்கள், ஆனால் தங்கள் சொந்த நீதியின் மூலம் தேவனுக்கு முன்பாகத் தங்களை நியாயப்படுத்த முயன்றவர்கள்; ஒழுக்கமுள்ளவர்கள், கருணை மற்றும் பெருந்தன்மை கொண்டவர்கள்; ஆனால் தங்களை ஒருபோதும் குற்றவாளிகளாகவோ, கெட்டுப்போனவர்களாகவோ, நரகத்திற்குப் பாத்திரராகவோ, தங்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை உணராதவர்களாகவோ இருந்தவர்கள். இத்தகைய வழியே "செம்மையாய்த் தோன்றும்" வழி. இதுவே மாம்ச சிந்தைக்கு ஏற்ற வழியாகவும், இன்று ஏமாற்றப்பட்ட திரளான மக்களுக்கு உகந்த வழியாகவும் இருக்கிறது. பிசாசின் மாயை என்னவென்றால், நாம் நமது சொந்தக் கிரியைகளால் இரட்சிக்கப்படலாம், நமது சொந்தச் செயல்களால் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படலாம் என்பதாகும். ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையில், "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்... ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8,9) என்றும், "நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே... நம்மை இரட்சித்தார்" (தீத்து 3:5) என்றும் கூறுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்தார். அவர் ஒரு சாதாரணப் போதகராகவும் (Lay preacher), ஆர்வமுள்ள "கிறிஸ்தவ ஊழியராகவும்" இருந்தார். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுப் பிரசங்கத்திலும் மதப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவர் பயன்படுத்திய சில சொற்றொடர்களிலிருந்து, அவர் உண்மையிலேயே "மறுபடியும் பிறந்த" (Born again) மனிதர்தானா என்று எனக்குச் சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரிக்கத் தொடங்கியபோது, அவருக்கு வேதத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதும், பாவிகளுக்காகக் கிறிஸ்து செய்த பரிகார வேலையைப் பற்றித் தெளிவற்ற புரிதலே அவருக்கு இருந்தது என்பதும் தெரியவந்தது. சிறிது காலம் இரட்சிப்பின் வழியை எளிமையாகவும், அவரைத் தனிப்பட்ட விதத்தில் தாக்காதவாறும் எடுத்துரைத்தோம். அவர் இன்னும் இரட்சிக்கப்படாமல் இருந்தால், தேவன் அவருக்குத் தேவையான இரட்சகரை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில், அவருக்காக தேவனுடைய வார்த்தையைத் தாமாகவே படிக்கும்படி அவரை ஊக்கப்படுத்தினோம்.

எங்கள் மகிழ்ச்சிக்கேதுவாக, ஏழு வருடங்களாக சுவிசேஷத்தைப் (?) பிரசங்கித்துக் கொண்டிருந்த அவர், ஒரு நாள் இரவு எங்களிடம் வந்து, முந்தின இரவில்தான் தான் கிறிஸ்துவைக் கண்டுகொண்டதாக அறிக்கையிட்டார். அவர் (தனது சொந்த வார்த்தைகளில்) தான் இதுவரை "கிறிஸ்துவின் கொள்கைகளையே" (Christ ideal) முன்வைத்ததாகவும், ஆனால் சிலுவையின் கிறிஸ்துவை (Christ of the Cross) முன்வைக்கவில்லை என்றும் ஒப்புக்கொண்டார். இந்தப் போதகரைப் போலவே ஆயிரக்கணக்கானோர் இருப்பதாக நான் நம்புகிறேன். அவர்கள் ஞாயிறு பள்ளியில் (Sunday School) வளர்க்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றிப் போதிக்கப்படுகிறார்கள்; அவருடைய வரலாற்றுத் தன்மையை நம்புகிறார்கள்; அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க அவ்வப்போது முயற்சி செய்கிறார்கள்; அதுவே தங்கள் இரட்சிப்புக்குப் போதுமானது என்றும் நினைக்கிறார்கள். இவர்கள் வாலிப வயதை அடைந்து உலகிற்குச் செல்லும்போது, நாத்திகர்கள் மற்றும் அவிசுவாசிகளின் தாக்குதல்களைச் சந்திக்கிறார்கள்; நாசரேத்தனாகிய இயேசு என்ற நபர் ஒருபோதும் வாழ்ந்ததில்லை என்று அவர்கள் கூறும்போது இவர்கள் குழம்புகிறார்கள். ஆனாலும், சிறுவயது பதிவுகளை எளிதில் அழிக்க முடியாது என்பதால், "நான் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்" என்ற தங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள்.

இருப்பினும், அவர்களுடைய விசுவாசத்தை ஆராயும்போது, அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி (about Him) பல விஷயங்களை நம்பினாலும், அவர்கள் உண்மையில் அவரை (in Him) விசுவாசிக்கவில்லை என்பது அடிக்கடி தெரியவருகிறது. அப்படிப்பட்ட ஒரு நபர் வாழ்ந்தார் என்று அவர்கள் தங்கள் அறிவினால்/மூளையினால் (Head) நம்புகிறார்கள் (இதை நம்புவதால் தாங்கள் இரட்சிக்கப்பட்டதாக எண்ணிக்கொள்கிறார்கள்); ஆனால் அவர்கள் ஒருபோதும் அவருக்கு எதிரான தங்கள் போராயுதங்களைக் கீழே போடவில்லை, அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை, தங்கள் முழு இருதயத்தோடு அவரை விசுவாசிக்கவில்லை. இதயம் அவரால் வெல்லப்படாமலும், வாழ்க்கை அவருக்கு அர்ப்பணிக்கப்படாமலும், கிறிஸ்துவின் நபரைப் பற்றிய ஒரு மரபுவழிக் கோட்பாட்டை வெறுமனே ஏற்றுக்கொள்வது, "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றும்" வழியின் மற்றொரு நிலையாகும்; ஆனால் அதன் முடிவு "மரண வழிகள்". வேறு விதமாகக் கூறினால், இது சாத்தானின் சுவிசேஷத்தின் மற்றொரு வடிவமாகும்.

இப்போது, நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? "செம்மையாய்த் தோன்றும்” ஆனால் மரணத்தில் முடியும் பாதையில் இருக்கிறீர்களா? அல்லது ஜீவனுக்கு இட்டுச் செல்லும் இடுக்கமான பாதையில் இருக்கிறீர்களா? மரணத்திற்கு இட்டுச் செல்லும் அந்த விசாலமான பாதையை நீங்கள் உண்மையாகவே கைவிட்டீர்களா? கிறிஸ்துவின் அன்பு, அவருக்குப் பிரியமில்லாத எல்லாவற்றின் மீதும் ஒரு வெறுப்பையும் நடுக்கத்தையும் உங்கள் இருதயத்தில் உண்டாக்கி உள்ளதா? அவர் உங்களை "அரசாள வேண்டும்" என்று நீங்கள் விரும்புகிறீர்களா? (லூக்கா 19:14). நீங்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவருடைய நீதியையும் இரத்தத்தையும் மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கிறீர்களா?

ஞானஸ்நானம் அல்லது "திடப்படுத்தல்" (Confirmation) போன்ற சடங்காச்சாரங்களில் நம்பிக்கை கொண்டவர்கள்; அது ஒரு கௌரவமான அடையாளம் என்பதற்காக மதத்தைப் பின்பற்றுபவர்கள்; அது நாகரீகம் என்பதற்காகச் சபைக்குச் செல்பவர்கள்; ஏதோ ஒரு சபைப் பிரிவில் இணைவதால் தாங்கள் கிறிஸ்தவர்களாகிவிடுவோம் என்று நினைப்பவர்கள்—இவர்கள் அனைவரும் "மரணத்தில் முடிவடையும்" வழியில் இருக்கிறார்கள்; அது ஆவிக்குரிய மற்றும் நித்திய மரணம். நமது நோக்கங்கள் எவ்வளவு தூய்மையானதாக இருந்தாலும், எவ்வளவு உன்னதமானதாக இருந்தாலும், நமது முயற்சிகள் எவ்வளவு உண்மையானதாக இருந்தாலும், நாம் தேவனுடைய குமாரனை ஏற்றுக்கொள்ளாத வரை, தேவனும் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

சாத்தானுடைய சுவிசேஷத்தின் இன்னும் தந்திரமான வடிவம் என்னவென்றால், பிரசங்கிகளைக் கொண்டு கிறிஸ்துவின் பரிகார பலியைப் பிரசங்கிக்க வைப்பது, ஆனால் பின்னர், "தேவன் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பதெல்லாம் தம்முடைய குமாரனை விசுவாசிப்பது மட்டுமே" என்று மக்களை நம்ப வைப்பதாகும். இதன் மூலம், தங்கள் பாவத்தைக் குறித்து மனஸ்தாபப்படாத (Impenitent) ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டதாக நினைத்து ஏமாறுகிறார்கள். ஆனால் கிறிஸ்து, "நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்" (லூக்கா 13:3) என்று சொன்னார். "மனந்திரும்புதல்" என்பது பாவத்தை வெறுப்பதும், அதைக் குறித்து துக்கிப்பதும், அதிலிருந்து திரும்புவதுமாகும். இது பரிசுத்த ஆவியானவர் தேவனுக்கு முன்பாக இருதயத்தை நொறுங்குண்டு போகச் செய்வதன் விளைவாகும். நொறுங்குண்ட இருதயத்தைத் தவிர வேறு எவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சிப்புக்கேதுவாக விசுவாசிக்க முடியாது.

மேலும், கிறிஸ்துவைத் தங்கள் "ஆண்டவராக" (Lord) ஏற்றுக்கொள்ளாத ஆயிரக்கணக்கானோர், அவரைத் தங்கள் “தனிப்பட்ட இரட்சகராக" ஏற்றுக்கொண்டோம் என்று நினைத்து ஏமாற்றப்படுகிறார்கள். தேவனுடைய குமாரன் தம் மக்களை அவர்களுடைய பாவத்தில் (in their sin) வைத்து இரட்சிக்க வரவில்லை, மாறாக "அவர்களுடைய பாவங்களிலிருந்து" (from their sins) இரட்சிக்க வந்தார் (மத்தேயு 1:21). பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவது என்பது, தேவனின் அதிகாரத்தைப் புறக்கணிப்பதிலிருந்தும் அவமதிப்பதிலிருந்தும் விடுதலையாவதாகும்; சுய விருப்பம் மற்றும் சுய இன்பம் நாடும் போக்கைக் கைவிடுவதாகும்; அது "நம் வழியைக் கைவிடுவது" (ஏசாயா 55:7). அது தேவனின் அதிகாரத்திற்குச் சரணடைவது, அவருடைய ஆட்சிக்கு அடிபணிவது, அவரால் ஆளப்படுவதற்கு நம்மை ஒப்படைப்பது. கிறிஸ்துவின் "நுகத்தை" ஒருபோதும் தன்மீது ஏற்றுக்கொள்ளாதவர், உண்மையாகவும் கருத்தாகவும் வாழ்க்கையின் அனைத்து விவரங்களிலும் அவரைப் பிரியப்படுத்த முயலாதவர், ஆனாலும் தான் "கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட வேலையில் இளைப்பாறுகிறேன்" என்று கருதுபவர், பிசாசினால் ஏமாற்றப்பட்டவரே.

மத்தேயு 7-ம் அதிகாரத்தில், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கும் சாத்தானின் போலி சுவிசேஷத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டும் இரண்டு பகுதிகள் உள்ளன. முதலாவது, மத்தேயு 7:13,14: "இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்." இரண்டாவது, மத்தேயு 7:22,23: "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்."

அன்பான வாசகரே, கிறிஸ்துவின் பெயரால் ஊழியம் செய்வதும், அவருடைய பெயரில் பிரசங்கிப்பதும் கூட சாத்தியமே; உலகம் நம்மை அறிந்திருக்கலாம், திருச்சபை நம்மை அறிந்திருக்கலாம், ஆனாலும் கர்த்தர் நம்மை அறியாதிருக்கக்கூடும்! எனவே, நாம் உண்மையில் எங்கே இருக்கிறோம் என்பதைக் கண்டறிவது எவ்வளவு அவசியம்! நாம் விசுவாசத்தில் இருக்கிறோமா என்று நம்மை நாமே சோதித்தறிய வேண்டும்; தேவனுடைய வார்த்தையின் மூலம் நம்மை அளந்து பார்த்து, நமது தந்திரமான எதிரியால் நாம் ஏமாற்றப்படுகிறோமா என்று பார்க்க வேண்டும்; நமது வீட்டை மணலின் மீதா அல்லது கிறிஸ்து இயேசு என்கிற கன்மலையின் மீதா கட்டியிருக்கிறோம் என்பதைக் கண்டறிய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களை ஆராய்ந்து, நம்முடைய சுயசித்தத்தை உடைத்து, தேவனுக்கு எதிரான நமது பகையை அழித்து, ஆழ்ந்த மற்றும் உண்மையான மனந்திரும்புதலை நம்மில் உருவாக்கி, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டிக்கு நேராக நம் பார்வையைத் திருப்புவாராக.