"கால்வினிசம்" என்று சிலரால் கேலியாக அழைக்கப்படுவதும், "தேவனின் இறையாண்மையை" (தேவனின் சர்வ வல்லமையை) உயர்த்துகிறதுமான வேதப்பூர்வமான கோட்பாட்டை, சில குழுவினர் தவறான புரிதலோடு மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டுவதை நான் கவனித்தேன். வேதம் போதிக்கும் சத்தியங்களுக்கு எதிராக, தவறான புரிதலோடு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது திருச்சபைக்குப் புதியதல்ல. உதாரணமாக, “ஜென்மபாவம்” என்ற உபதேசத்திலும், "பிள்ளைகள் பிறக்கும்போதே பாவ சுபாவத்தோடு பிறக்கிறார்கள் என்றால், அவர்களை அப்படிப் பிறக்க வைப்பவர் யார்? எனவே அதற்கு தேவன்தான் பொறுப்பு" என்ற தவறான வாதத்தை முன்வைத்து, இக்கோட்பாட்டைப் பிரசங்கிப்பவர்களை விமர்சிக்கிறார்கள்.
இனி நாம் தலைப்புக்குள் வருவோம். தேவனின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டவர்கள், இந்தப் படைப்பில் உள்ள அனைத்தும் தேவனின் சித்தப்படியே நடைபெறுகின்றன என்று போதிக்கிறார்கள். அந்தப் போதனையை உறுதிப்படுத்தும் சில வேதப்பகுதிகளைப் பாருங்கள்:
-
(எபேசியர் 1:11) “...தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே...”
-
(தானியேல் 4:35) “அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்...”
-
(நீதிமொழிகள் 19:21) “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.”
-
(நீதிமொழிகள் 21:1) “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.”
-
(நீதிமொழிகள் 20:24) “கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?”
-
(புலம்பல் 3:37,38) “ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?”
-
(ரோமர் 11:36) “சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.”
-
(சங்கீதம் 115:3) “நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.”
-
(ஏசாயா 45:7) “ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.”
-
(சங்கீதம் 119:91) “உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.”
இவ்வசனங்கள் அனைத்தும் தேவனின் இறையாண்மைக்குத் தெளிவான சான்றுகளாகும். ஆனால் சிலர், "இவ்வசனங்களின் அடிப்படையிலான போதனையானது, தேவனே மனிதர்களின் பாவத்தைத் தீர்மானிக்கிறார் என்றும், தேவனே பாவத்திற்குக் காரணர் என்றும் சித்தரிக்கிறது. இதனால் 'கால்வினிசம்' என்ற கோட்பாடு தேவனையே பாவத்தின் கர்த்தாவாகக் காட்டுகிறது" என்று வாதிடுகின்றனர். பரிசுத்த வேதாகமம் தேவன் இறையாண்மையுள்ளவர் என்றும், அதேவேளையில் அவர் பரிசுத்தமானவர் என்றும் போதிக்கிறது. இவற்றை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளாமல், மனித தர்க்கத்தைக் கொண்டு இரண்டையும் சமநிலைப்படுத்த முயன்றால், இத்தகைய தவறான புரிதல்களே விளையும்.
ஏனெனில், மனித தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பல ஆழமான சத்தியங்களை வேதத்தில் நாம் காண்கிறோம். உதாரணமாக, திரித்துவக் கோட்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். வேதாகமம் தேவன் ஒருவரே என்று போதிக்கிறது; அதேவேளையில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று நபர்களும் சமத்துவமானவர்கள் என்பதையும் கற்பிப்பதன் மூலம் அந்தத் தெய்வீகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சத்தை மனித தர்க்கத்தால் (நம்முடைய வரையறுக்கப்பட்ட அறிவால்) முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் சிலர் இந்தத் திரித்துவக் கோட்பாட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு, ஒரே தேவனுக்குள் மூன்று பகுதிகள் என்றோ, ஒரே தேவன் மூன்று வடிவங்களில் வெளிப்படுகிறார் என்றோ, அல்லது மூன்று தேவர்கள் இருக்கிறார்கள் என்றோ பல தவறான உபதேசங்களைத் திருச்சபையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
“கால்வினிச” கோட்பாட்டை எதிர்க்கும் சில குழுக்கள் கூறுவதுபோல, மனிதன் தேவனின் நிர்ணயம் இல்லாமலேயே தன் சொந்த விருப்பப்படி (Free Will) பாவம் செய்கிறான் என்று வைத்துக்கொண்டாலும், அவர்களும் தேவனையே பாவத்திற்குக் காரணராகக் காட்டுகிறார்கள். அது எப்படியென்று பாருங்கள்:
மனிதனுக்குச் சுயாதீனத்தை (Free Will) அருளியவர் யார்? தேவன் அல்லவா! மனிதன் தனக்குக் கொடுக்கப்பட்ட அந்தச் சுதந்திரத்தின் மூலம் பாவம் செய்வான் (கட்டளையை மீறுவான்) என்பதை அவர் முன்கூட்டியே அறிந்திருந்தார். அதெல்லாம் தெரிந்திருந்தும், மனிதனுக்கு அந்தச் சுயாதீனத்தைக் கொடுத்தார் என்றால், மனிதன் பாவம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் யார்? இந்த வாதத்தின்படியும், மனிதனுக்குச் சுதந்திரம் தந்த தேவன்தானே இந்தப் படைப்பில் மனிதன் பாவம் செய்யக் காரணராகிறார்!
மனித உரிமைகளை மதிக்கும் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் உள்ள நாடுகளில் கூட, ஒருவர் குற்றம் செய்யப்போவதாகக் காவல்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தால், அந்த நபரைத் தடுத்துக் காவலில் வைப்பார்கள். தேவன் ஏன் அவ்வாறு செய்யவில்லை? மேலும், இந்தச் ‘சுயாதீனக் கோட்பாடு’ (Absolute Free Will) மிகவும் முரண்பாடானது. எவ்வாறெனில், இதில் தேவன் ஒரு மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரத்தைத் தக்கவைக்க, மற்றொருவரின் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, ஒரு மனிதன் இன்னொருவனைக் கொல்ல முற்படுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அங்கே கொல்ல வருபவன் சுதந்திரமானவன்; அதனால் தேவன் அவனைத் தடுப்பதில்லை. ஆனால் கொல்லப்படும் நபருக்கும் சுதந்திரம் இருக்கிறது; அந்தச் சுதந்திரத்தின் அடிப்படையில் அவன் வாழ விரும்புகிறான். ஆனால் அது அவனால் முடிவதில்லை. இந்தச் செயல் ஒருவருடைய சுதந்திரத்தைத் தக்கவைப்பதற்காக இன்னொருவரின் சுதந்திரத்தைப் பறிப்பது அல்லவா?
ஒருவேளை தேவனின் நிர்ணயம் இல்லாமல், இந்தப் படைப்பில் பாவம் நுழைந்து ஆட்சி செய்யமுடியும் என்று யாராவது நினைத்தால், அவர்கள் பாவத்தைவிடத் தேவன் வல்லமை குறைந்தவர் என்று அறிவிப்பதாகவே அது அமையும். ஏனென்றால்:
-
தேவனின் சர்வ வல்லமையையும் மீறி பாவம் இந்த உலகில் நுழைந்து, ஆதாம், ஏவாள் மற்றும் அனைத்து மனித குலத்தையும் தேவனிடமிருந்து தூரப்படுத்தியது என்று வைத்துக்கொண்டால், இந்தப் படைப்பில் தேவனை மிஞ்சுவது எதுவோ, அதுவே தேவனைவிடச் சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஆனால் அது சாத்தியமற்றது என்று வேதாகமம் கூறுகிறது. “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு” (ஆதியாகமம் 17:1), “இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்” (ரோமர் 9:5). மேலும், வெளிப்படுத்துதல் 4:8, 19:15 மற்றும் சங்கீதம் 119:91 போன்ற வசனங்கள் அவருடைய சர்வ வல்லமையையும் ஆளுகையையும் பறைசாற்றுகின்றன.
-
ஆதாமுக்குள்ளும் ஏவாளுக்குள்ளும் பாவம் தேவனுடைய விருப்பத்திற்கு மாறாக நுழைந்திருந்தாலோ, அல்லது அது மனிதகுலம் முழுவதும் பரவியிருந்தும் தேவனால் அதைத் தடுக்க முடியவில்லை என்றாலோ, அவர் தனது படைப்பில் தனக்குச் சித்தமில்லாத காரியம் நடக்கும்போது அதைத் தடுக்க இயலாதவர் என்றாகிவிடுவார். தீர்ப்பு நாளில் பாவத்தை உலகத்திலிருந்து நீக்க அவர் நினைத்தாலும், அதுவரை உள்ள அந்தப் பாவத்தின் விளைவுகள் என்னவாகும்?
தேவனைப் பாவத்தைவிடச் சக்தியற்றவராகச் சித்தரிக்கும் பரிதாபகரமான போதனையை நாங்கள் நம்பவில்லை; தேவனை இயலாமைக்குள் உள்ளாக்கும் மோசமான போதனையையும் நாங்கள் ஏற்பதில்லை. வேத வாக்கியத்தின்படி தேவன் இறையாண்மையுள்ளவர் என்றும், சர்வ வல்லமையுள்ளவர் என்றும், நம்மால் கற்பனை செய்ய முடியாத அவருடைய இரகசிய சித்தம் எதுவோ, அதுவே பாவம் உலகில் இருக்க அனுமதித்தது என்றும் நாங்கள் விசுவாசித்துப் போதிக்கிறோம். எல்லையற்ற தேவனின் சித்தம் என்னவென்பதை, எல்லைக்குட்பட்ட நம்மால் முழுமையாக கிரகிக்க முடியாது. ஏனென்றால்:
-
நாம் எல்லைக்கு உட்பட்டவர்கள்.
-
வேத வசனம் அதை இரகசியமாக வைத்திருக்கிறது; அதை நமக்கு முழுமையாக விளக்கவில்லை.
(உபாகமம் 29:29) “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ... நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” அதனால்தான் யோபு, "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” (யோபு 42:2) என்று கூறுகிறார். ஏசாயா 46:10-ல், “என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளை எல்லாம் செய்வேன்” என்று கர்த்தர் உரைக்கிறார்.
இதில் வியப்பு என்னவென்றால், ‘சுயாதீனக் கோட்பாட்டை’ (Free Will) விசுவாசிப்பவர்கள், தேவனின் எதிர்கால ஞானத்தைக் (Foreknowledge) குறித்து அதிகமாகப் பேசுவார்கள். அவருடைய முன்னறிவின் திறனால் அனைத்தையும் பார்த்தார் என்பார்கள். தேவன் சிருஷ்டியை உருவாக்கும் முன்பே மனிதனுடைய வீழ்ச்சியைப் பார்த்தாரா என்று அவர்களிடம் கேட்டால், “பார்த்தார்” என்பார்கள். அந்த வீழ்ச்சிக்குத் தேவன் அனுமதித்தாரா என்று கேட்டால், “ஆம்! அனுமதித்தார்” என்பார்கள். தேவன் நோக்கமில்லாமல் எதையும் செய்வதில்லை. அந்த நோக்கம் அவருக்கு அவ்வப்போது தோன்றுமா? அல்லது அது அநாதி (நித்திய) சித்தமா? சில மார்க்கங்களில் சொல்லப்படும் கடவுளைப் போல, தேவனுக்கு அவ்வப்போது சிறந்த யோசனைகள் தோன்றுமா? நாங்கள் இதுப்போன்றவைகளை நம்புவதில்லை.
எனவே, ‘தொலைநோக்கு ஞானம்’ அல்லது ‘முன்னறிவு’ என்பது அவர்கள் சொல்வது போல், நேரத்திற்கு முன்பே நடக்கப்போகும் ஒன்றை அறிவது மட்டுமல்ல. அப்படி உண்மையாக இருந்தால், அவருக்கு முன்பே தெரியாத விஷயங்களை அவர் புதிதாக "அறிகிறார்" என்று அர்த்தமாகும். இப்படியிருக்க, அவர் எப்படி எல்லாவற்றையும் அறிந்தவராக இருக்க முடியும்? எதிர்காலத்தை அறிந்து கற்றுக்கொள்பவர், பூரணமான தேவனாக இருக்க முடியாது. எனவே, அவரது எதிர்கால அறிவு என்பது அவரது முடிவு மற்றும் விருப்பமேயாகும். அவருடைய முடிவில்லாமல் எதுவும் எதிர்கால அறிவில் அவருக்குப் புதிதல்ல. தேவனைக் குறித்து வேதம் பயன்படுத்திய “முன்னறிவிப்பு” என்ற சொல்லை இந்த அர்த்தத்தில்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை நான் வார்த்தை ஜாலத்திற்காகச் சொல்லவில்லை; தேவன் அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் தீர்மானிப்பவர் என்று வேத வசனம் கூறுவதின் அடிப்படையிலேயே சொல்கிறேன்.
இதேபோல், புகழ்பெற்ற கிரேக்க அகராதிகள், லெக்சிகன்கள் மற்றும் UBS போன்றவை, “தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும்” (அப்போஸ்தலர் 2:23) மற்றும் “பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே” (1 பேதுரு 1:1,2) ஆகிய வசனங்களில் வரும் “முன்னறிவிப்பு” (Prognosis/προγνώσει) என்ற சொல்லுக்கு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட அறிவு என்றே பொருள் தருகின்றன. புதிய ஏற்பாட்டு கிரேக்க அறிஞர்களும் இதுவே சரியான பொருள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இப்படியாக, எல்லாமே அவருடைய முடிவு மற்றும் அனுமதியின்படியே நடக்கின்றன. ஆயினும், வேத வசனத்தின்படி தேவன் பாவத்திற்குக் காரணர் அல்ல. ஏனென்றால், அவர் பரிசுத்தர் என்பதை வேதம் மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது (லேவியராகமம் 11:44, சங்கீதம் 99:3,5,9). அதோடு கூட, அவர் இறையாண்மையுடன் எல்லாவற்றையும் விதித்தவர் என்றும், அவருடைய சித்தத்தின்படி தனது படைப்பில் அனைத்தையும் (பாவம் உட்பட) அனுமதித்தவர் என்றும் வேதம் நமக்குச் சொல்கிறது (எபேசியர் 1:11, தானியேல் 4:35). உதாரணமாக, நான் மேலே விளக்கியது போல், சாத்தான் தேவனின் அனுமதியின்றி ஏதேன் தோட்டத்தில் நுழைந்திருந்தால், அவருடைய சிருஷ்டியில் அவருடைய அனுமதியின்றி நுழையக்கூடிய சாத்தானே அவரைவிட வலிமை மிகுந்தவனாகக் கருதப்படுவான். எனவே, இந்த இரண்டையும் (தேவனின் இறையாண்மை மற்றும் மனிதப் பொறுப்பு) மனித தர்க்கத்துடன் சமநிலைப்படுத்த முடியாது. நீங்கள் சமநிலைப்படுத்த முயற்சித்தால் என்ன நடக்கும் என்பதற்குப் பின்வரும் உதாரணத்தைப் பாருங்கள்:
சங்கீதம் 5:4-6 வசனங்களில், “நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல... வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்” என்று சங்கீதக்காரன் கூறுகிறார். இப்போது மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள் (1 இராஜாக்கள் 22:19-23). அங்கே, தேவனிடமிருந்து அவரது அனுமதியுடன் ஆகாபைப் பொய் சொல்லவும், அவனை வீழ்ச்சியடையச் செய்யவும், ஒரு ஆவி தீர்க்கதரிசிகள் மூலம் வந்ததாக எழுதப்பட்டுள்ளது. “கர்த்தர் பொய்யின் ஆவியை... இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்” என்று வேதம் கூறுகிறது.
இந்தச் சூழ்நிலைகளை மனித தர்க்கத்துடன் நாம் எவ்வாறு சமநிலை செய்வது? மேலே நாம் பார்த்தபடி, அவர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்லவே? பொய்யர்களையும், பாசாங்குக்காரர்களையும் அவர் வெறுக்கிறாரே? அப்படியிருக்க, அவர் வெறுக்கும் பொய்யர்களையும் கொலைகாரர்களையும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றப் பயன்படுத்துகிறாரா? அவ்வாறு அனுமதிக்கப்படும்போது, அவர்களின் பொய்களிலும் அக்கிரமத்திலும் அவருக்கும் பங்குள்ளதா? நிச்சயமாக இல்லை! நாங்களோ, வேத வசனம் சொல்லும்படி எல்லாமே (சாத்தானும் கூட) அவருடைய சர்வ வல்லமை மற்றும் இறையாண்மையின் எல்லைக்குள் இயங்குகின்றன என்று விசுவாசிப்பதினால், இங்கு எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. (சங்கீதம் 119:91 - “சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்”).
வேத வசனம் சொல்லுவதுப் போல் பொய் பேசுபவர்களையும், மாய்மாலக்காரர்களையும் தேவன் வெறுக்கிறார்; ஏனெனில் அவர் பரிசுத்தமானவர். இருப்பினும், அப்படிப்பட்டவர்களையும் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற அனுமதித்துப் பயன்படுத்திக்கொள்கிறார். ஆனாலும், அவர்களுடைய பொய்களுக்கும் பாசாங்குத்தனத்திற்கும் தேவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை (பாவத்தின் பழி அவர்மீது சேராது). யோபுவை சோதிக்கும் போது சாத்தான் தேவனின் அனுமதியுடனே யோபுவிடம் சென்றான் என்பதை நாம் அறிவோம்.
அதேபோல், ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் இறப்பும் தேவனின் கைகளில் இருப்பதாக வேதம் போதிக்கிறது. இதை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இறை நம்பிக்கையுள்ள அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். எனவே ஒரு மனிதன் இவ்வுலகில் இறக்க வேண்டுமானால், அவன் இறப்பதைத் தேவன் முடிவு செய்திருக்க வேண்டும்.
-
(வெளிப்படுத்துதல் 1:18) “...மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.”
-
(சங்கீதம் 90:3) “நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர்.”
-
(1 சாமுவேல் 2:6) “கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்...”
வேதம் சொல்லும் இந்தச் சத்தியத்தை மனதில் கொண்டு, உலகில் நடக்கும் மனித மரணங்களைப் பார்ப்போம். ஒவ்வொரு நாளும் பலர் (குழந்தைகள் உட்பட) கொலை செய்யப்படுகிறார்கள்; சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படியானால், அனைவரின் மரணத்தையும் தீர்மானிக்கும் தேவன் கொலைகாரன் ஆவாரா? அனைத்துமே தேவனால் தீர்மானிக்கப்பட்டால், இந்தப் படைப்பில் நடக்கும் பாவத்திற்கும் அவரே பொறுப்பாளி என்பதும், "தேவனின் இறையாண்மை" என்று நாங்கள் போதிப்பதை விமர்சிப்பவர்களின் கருத்துப்படியும், தேவனே கொலைகாரனாக இருக்க வேண்டும். ஆனால் வேதம் தெளிவாகக் கூறுகிறது, கொலைபாதகரும் பொய்யரும் அக்கினிக்கடலிலே பங்கடைவார்கள் (வெளிப்படுத்துதல் 21:8). வேத வாக்கியங்களின்படி, அந்தக் கொலைகளைச் செய்தவர்களும், தற்கொலை செய்துகொள்பவர்களுமே அதற்குப் பொறுப்பாளிகள்; அவர்கள் தேவனின் முன்பாகக் குற்றவாளிகளாக நிற்கிறார்கள். ஏனென்றால், மனிதன் பாவம் செய்வதன் பின்னணியில் அவனுக்கென்று ஒரு சுய உள்நோக்கம் (Motive) உண்டு.
உதாரணமாக, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தேவனின் நிர்ணயம் (அப்போஸ்தலர் 2:23). ஆயினும், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் காரியோத்தும், அவருடன் கூட்டுச் சேர்ந்த யூதர்களும் அவருடைய மரணத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். ஏனென்றால், அவர்கள் அவ்வாறு செய்ததற்குக் காரணம் அவர்களுடைய பொல்லாத உள்நோக்கமே (பொருளாசை & பகை) (லூக்கா 6:16, 1 தெசலோனிக்கேயர் 2:15,16). பழைய ஏற்பாட்டில் யோசேப்பின் விஷயத்தில்கூட, அவன் எகிப்துக்குப் போவது தேவனின் நிர்ணயம். “நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ... அதை நன்மையாக முடியப்பண்ணினார்” (ஆதியாகமம் 50:20). ஆனால் அவனை அடிமையாக விற்ற சகோதரர்கள் அதில் குற்றவாளிகளே; ஏனென்றால், அவர்கள் பொறாமையின் காரணமாகவே அவ்வாறு செய்தார்கள். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் செய்யும் பாவத்திற்கு அவர்களின் சொந்த "நோக்கம்" உள்ளது; எனவேதான் அந்தப் பாவத்திற்கு அவர்களே பொறுப்பு. இதில் எந்த அநீதியும் இல்லை.
நான் தொடக்கத்தில் கூறியது போல், தேவனின் இறையாண்மையையும் மனிதப் பொறுப்பையும் பற்றிய முழுமையான புரிதல், நமக்கிருக்கும் குறுகிய அறிவிற்கும் மனித தர்க்கத்திற்கும் எட்டாதது. ஆனால் இது வேதம் சொல்லுகிற சத்தியம்; எனவே இதை விசுவாசிக்க வேண்டும்.
அதனால்தான், நாங்கள் இந்த விஷயத்தில் தேவனுடைய வார்த்தை எந்த அளவிற்குச் சொல்லுகிறதோ, அவைகளை மட்டும் எடுத்துரைத்துச் சத்தியத்தை அறிந்துகொள்ளுமாறு விமர்சிப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஆனால் அவர்களில் சிலரோ, “சசேமிரா” (முடியவே முடியாது) என்றோ, “ஜான் பைபர் அப்படிச் சொன்னார், ஜான் கால்வின் இப்படிச் சொன்னார்” என்றோ கூறி, தங்களின் வாதங்களை முன்னிறுத்தி, நாங்கள் தேவனைப் பாவத்தின் காரணராகக் காட்டுகிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவர்களின் ‘சுயசித்தக் கோட்பாட்டின்’ (Free Will) மூலமாகத் தேவனைப் பாவத்தின் காரணராகவும், கொலைகாரராகவும் காட்டுவது அவர்களே தவிர, நாங்கள் அல்ல.
சர்வவல்லமையுள்ள தேவனின் இறையாண்மை (ஆர்தர் டபிள்யூ பிங்க்)
படைப்பில் தேவனின் இறையாண்மை
தேவனின் இறையாண்மை மற்றும் பிரார்த்தனை